Skip to content
Home » பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 16-20 அத்தியாயங்கள்

16. மதுராந்தகத் தேவர்


     இந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, – பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை – நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.

     மதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.

     தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.

     கண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-

     “வெங்கோல் வேந்தன் தென்னன்நாடும்
          ஈழமும் கொண்ட திறல்
     செங்கோற்சோழன் கோழிவேந்தன்
          செம்பியன் பொன்னணிந்த
     அங்கோல்வளையார் பாடியாடும்
          மணி தில்லையம்பலத்துள்
     எங்கோல் ஈசன் எம்பிறையை என்று
          கொல் எய்துவதே!”
என்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

     “சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக்
     காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
     ஆராவின் சொல் கண்டராதித்தன் அருந் தமிழ் மாலைவல்லார்
     பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே!”
     கண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.

     தமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.

     ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா? ஆதலின் ஏன் தான் உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

     இவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்?

     ஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.

     இப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.

17. திருநாரையூர் நம்பி


     மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு முதலான, வீரர்கள் வாழும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. பிறகு கடை வீதிகள், குடிமக்கள் வாழும் பகுதிகள், ஆலயங்கள், ஆலயங்களைச் சூழ்ந்திருந்த சந்நிதித் தெருக்கள் முதலியவற்றின் வழியாகச் சென்றது. ஆங்காங்கு ஒரு சிலர் வீட்டு வாசல்களில் நின்று பார்த்தார்கள். ஆனால் மக்களிடையே எவ்வித உற்சாகமும் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். முதன்முறை அவன் இந்நகருக்குள் வந்திருந்த போது நகரம் கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இப்போது வீதிகள் ஜன சூனியமாயிருந்தன. பழையாறை பாழடைந்த நகரமோ என்று சொல்லும்படி இருந்தது. மதுராந்தகத் தேவர் மீது பழையாறை மக்கள் அவ்வளவாக விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. வந்தியத்தேவனுக்கு இது ஒரு விதத்தில் சௌகரியமாயிருந்தது. தன் முகம் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்க்கும்படி நேரவும் அதனால் தொல்லை ஏற்படவும் இடமில்லையல்லவா?

     இவர்கள் சோழ மன்னர்களின் புராதன அரண்மனை வீதியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு பக்கமிருந்து பெரியதோர் ஊர்வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அந்த ஊர்வலத்தின் மத்தியில் திறந்த பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்தவர் யாரென்பது நன்கு தெரியவில்லையாயினும் யாரோ சிவனடியார் என்றும் இளம் பிராயத்தினர் என்றும் தோன்றியது. சிவிகைக்கு முன்னும் பின்னும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள்.

     இடையிடையே “திருச்சிற்றம்பலம்” “ஹரஹரமகாதேவா!” என்ற கோஷங்களுடன் “திருநாரையூர் நம்பி வாழ்க!” “பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க!” என்ற கோஷங்களும் எழுந்து வானை அளாவின.

     மதுராந்தகர் அந்த ஊர்வலத்தை அசூயை கொண்ட கண்களினாலேயே பார்த்தார். பக்கத்திலிருந்து வீரனைப் பார்த்து ஏதோ கேட்டார். “ஆம்; பல்லக்கிலே வருகிறவர்தான் திருநாரையூர் நம்பி!” என்று அவன் மறுமொழி கூறினான்.

     “இருந்தாலும் என்ன தடபுடல்! இந்த ஊரில் நம்மை யாரும் கேட்பாரைக் காணோம்! இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே?” என்றார் மதுராந்தகத் தேவர்.

     அந்த ஊர்வலம் இவர்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்திலேயே சென்றது. ஆயினும் பல்லக்கின் அருகில் வந்தவர்களில் ஒருவர், முன்னொரு சமயம் கொள்ளிட நதியைப் படகிலே தாண்டியபோது ஆழ்வார்க்கடியானோடு சண்டையிட்ட வீரசைவர் என்று வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.

     மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார். யாரையோ வரவேற்பதற்கு ஆயத்தமாக அவர் காத்திருந்ததாய்த் தோன்றியது. மதுராந்தகர் ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். “மகனே! நல்ல தருணத்தில் வந்து விட்டாய்! திருநாரையூர் நம்பி வந்து கொண்டிருக்கிறார். அவசியமானால் சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்!” என்று கூறினார்.

     மதுராந்தகரின் முகம் பொலிவு இழந்ததை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். பாவம்! தம்மை வரவேற்பதற்காகவே பெரிய பிராட்டி அரண்மனை வாசலில் காத்திருந்ததாக மதுராந்தகர் எண்ணியிருந்தார் போலும். என்ன ஏமாற்றம்? பல்லக்கிலே பின்னால் ஊர்வலமாக வரும் சிவனடியாரை வரவேற்பதற்குத்தான் அவர் காத்திருந்தார் என்று தெரிந்ததும் மதுராந்தகருக்கு, நாளைக்குச் சோழ சிம்மாசனத்தில் ஏறலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு, – மிக்க ஏமாற்றமாயிருப்பது இயல்புதானே?

     அரண்மனையில் மதுராந்தகருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள். மதுராந்தகர் உடை மாற்றுதல் முதலிய காரியங்களைச் சாவகாசமாகவே செய்து கொண்டிருந்தார். சபாமண்டபத்துக்குப் போக அவ்வளவாக ஆர்வம் கொண்டிருந்ததாய்த் தெரியவில்லை. அன்னையிடமிருந்து ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தனர். கடைசியாக மதுராந்தகர் புறப்பட்டார். புறப்பட்டபோது, “அந்த நிமித்தக்காரன் எங்கே?” என்று வினவினார். அவருடன் சபாமண்டபத்துக்குப் போகத் துடிதுடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், “இதோ ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். அவனையும் இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு மதுராந்தகர் சபாமண்டபம் போய்ச் சேர்ந்தார்.

     மண்டபத்தில் ஏற்கனவே சபை கூடியிருந்தது. ஒரு பக்கத்தில் செம்பியன் மாதேவியும், குந்தவைப் பிராட்டியும், மற்றும் சில அரண்மனைப் பெண்களும் வீற்றிருந்தார்கள். சபையில் நடுநாயகமாகப் போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவர் இளம் பிராயத்தவர். விபூதி ருத்ராட்சதாரி, அவருடைய திருமுகம் களையுடன் பொலிந்தது. அவர் எதிரில் ஓலைச் சுவடிகள் சில கிடந்தன. கையிலும் ஓர் ஓலைச் சுவடியை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் விபூதி ருத்ராட்சதாரியான பெரியவர் ஒருவர் பரவசமாக நின்றார். இன்னும் சபாமண்டபத்தில் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள். இளைஞர் பல்லக்கில் வந்தவர்தான் என்பதையும், பக்கத்திலே நின்றவர் முன்னொரு தடவை தான் கொள்ளிடத்துப் படகில் பார்த்தவர் என்பதையும் வந்தியத்தேவன் கண்டு கொண்டான். அவனுடைய கண்கள் சபா மண்டபத்தில் அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றாலும், கடைசியில் பெரிய பிராட்டிக்கு அருகில் வீற்றிருந்த குந்தவையின் திருமுகத்திலேயே வந்து நின்றன. குந்தவை தேவியின் கண்களோ முதல் முறை அவனைப் பார்த்ததும் வியப்புக்கு அறிகுறியைக் காட்டின. பிறகு அவன் பக்கம் இளவரசியின் கண்கள் திரும்பியதாகவே தெரியவில்லை. தன்னை ஒரு வேளை தெரிந்து கொள்ளவில்லையோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று.

     மதுராந்தகர் சபா மண்டபத்தில் பிரவேசித்ததும் பெண்மணிகளை தவிர மற்றவர்கள் எழுந்து மரியாதை செய்தார்கள். மதுராந்தகர் தம் பீடத்தில் அமர்ந்ததும் மற்றவர்களும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். செம்பியன் மாதேவி மதுராந்தகரைப் பார்த்து, “குமாரா! இந்த இளம்நம்பி திருநாரையூரைச் சேர்ந்தவர். அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர். இதுவரையில் யாருக்கும் கிடைக்காத தேவாரப் பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. முன்னொரு காலத்தில் நமது சோழ குலத்தில் உதித்த மங்கையர்க்கரசியர் பாண்டிமா நாட்டின் மகாராணியாக விளங்கினார். அவருடைய அழைப்புக்கிணங்கி ஆளுடைய பிள்ளையார் ஞானசம்பந்தர் மதுரைமா நகருக்குச் சென்றார். அங்கே சமணர்களை வாதப் போரில் வென்றார். அச்சமயம் மதுரைமாநகரில் சம்பந்த சுவாமி பாடிய பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தப் பதிகங்களில் நமது சோழகுலத்து மாதரசியைப் பற்றியும் சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களைக் கேட்கும் போது எனக்கு உடல் பூரித்துப் பரவசமாகிறது. உன் தந்தை இருந்து கேட்டிருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியடைந்திருப்பார், நீயாவது கேள்!” என்று சொன்னார்.

     மதுராந்தகர், “கேட்கிறேன், தாயே! பதிகத்தை ஆரம்பிக்கட்டும்” என்றார். ஆனால் அவருடைய முகம் அவ்வளவாக மலர்ந்திருக்கவில்லை. அவருடைய உள்ளம் வேறு எங்கேயோ இருந்தது. திருநீறு, ருத்ராட்சம் அணிந்த சாதாரணச் சிறுவன் ஒருவனைப் பெரியதொரு பீடத்தில் நடுநாயகமாக அமர்த்தித் தடபுடல் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்னையைத் திருப்தி செய்வதற்காகப் பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.

     பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி தம் கையிலிருந்த ஓலைச் சுவடியிருந்து படிக்கத் தொடங்கினார். ஞானசம்பந்தர் மதுரை மாநகரைப் பார்த்ததும், “சிவபக்திச் செல்வத்திற் சிறந்த மங்கையர்க்கரசியார் வாழும் பதி அல்லவா இது?” என்று வியந்து பாடிய பதிகங்களை முதலில் அவர் பாடினார்.

     “மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை
          வரிவளைக் கைம் மடமானிப்
     பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
          பணிசெய்து நாடொரும் பரவப்
     பொங்கழலுருவன் பூத நாயகனால்
          வேதமும் பொருள்களும் அருளி
     அங்கயர்க்கண்ணி தண்ணொடும் அமர்ந்த
          ஆலவாயாவதும் இதுவே!”

     “மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும்
          மணிமுடிச் சோழன்றன் மகளாம்
     பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
          பாங்கினாற் பணி செய்து பரவ
     விண்ணுளோர் இருவர் கீழொடுமேலும்
          அளப்பரிதாம் வகை நின்ற
     அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற
     ஆலவாயாவதும் இதுவே!”
என்னும் பாடல்களைக் கேட்டபோது செம்பியன் மாதேவியின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. அத்தகைய மங்கையர்க்கரசியைப் பெற்ற குலத்தில் தாமும் வாழ்க்கைப்பட்டு, மகாராணியாக வாழ்ந்திருக்கக் கொடுத்து வைத்திருந்த பூர்வ ஜன்ம பாக்கியத்தை எண்ணி எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்தார்.

     மதுராந்தகருக்கோ மேற்கூறிய பாடல்களில் ‘மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் மணி முடிச் சோழன்’ என்னும் வரி மட்டுமே மனத்தில் பதிந்தது. அத்தகையப் புராதனப் பெருமை வாய்ந்த சோழர் குலத்து மணிமகுடம் தன் சிரசை அலங்கரிக்க வேண்டியதிருக்க, இன்னொருவர் அதை அபகரித்துக் கொண்டிருப்பதை நினைத்தபோது அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று.

     சம்பந்தர் மங்கையர்க்கரசியாரைப் போய்ப் பார்க்கிறார். பாண்டிமாதேவி அந்தப் பாலகரைப் பார்த்து, “ஐயோ! இந்த இளம் பிள்ளை எங்கே? பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே? இந்தப் பிள்ளை அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும்?” என்று கவலையுறுகிறார். அதையறிந்த சம்பந்தர் பாண்டிமாதேவியைப் பார்த்துச் சொல்லுகிறார்.

     “மானினேர் விழி மாதராய் வழுதிக்கு
          மாபெருந்தேவி கேள்!
     பானல்வாயொரு பாலன் ஈங்கிவன்
          என்று நீ பரிவெய் திடேல்!
     ஆனை மாமலை யாதியாய
          இடங்களிற் பல அல்லல் சேர்
     ஈனர்கட் கெளியேன் அலேன்திரு
          ஆலவாயரன் நிற்கவே!”
என்ற பதிகத்தைத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய போது செம்பியன் மாதேவி தம்மையே மங்கையர்க்கரசியாகவும், பதிகம் பாடிய நம்பியையே ஞான சம்பந்தராகவும் பாவனை செய்து கொண்டு இந்த உலக நினைவையே மறந்து மனம் பூரித்தார்.

     மதுராந்தகத் தேவரோ, “ஆம் நான் இளம் பிராயத்துச் சிறுபிள்ளைதான்! ஆனால் திருக்கோவலூர் மலையமானுக்கும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கும், அவர்களுடைய ஆதரவைப் பெற்ற சுந்தர சோழரின் புதல்வர்களுக்கும் அஞ்சி விட மாட்டேன். சம்பந்தருக்கு ஆலவாயரன் அருள் இருந்தது போல் எனக்கும் பழுவேட்டரையர் உதவி இருந்தது!” என்று எண்ணிக் கொண்டார்.

     வந்தியத்தேவனுடைய செவிகளில் பாடல் ஒன்றும் புகவேயில்லை. அவனுடைய கண்களும் கருத்தும் குந்தவை தேவியிடமே முழுவதும் ஈடுபட்டிருந்தன. இளைய பிராட்டி ஒருகால் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லையா, தெரிந்து கொண்டும் பாராமுகமா, அல்லது தன்னிடம் ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றி விட்டு வந்து உடனே சொல்லவில்லை என்ற கோபமா? என்று இப்படி அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அத்துடன் இளையபிராட்டியைத் தனிமையில் எப்படிச் சந்திப்பது, சந்தித்துச் செய்தியை எப்படிச் சொல்லுவது என்றும் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான்.

     பாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் வந்திருந்த பெரியவரைப் பார்த்து, “ஐயா இந்த இளம்பிள்ளையைப் பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் பதிகங்களைச் சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தர மூர்த்தியின் பாடல்களையும் தனித்தனியாகத் தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும். இது என் கணவருடைய விருப்பம். அதை என் வாழ்நாளில் நிறைவேற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நீங்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு வேண்டிய சிவிகைகள், ஆட்கள், பரிவார சாதனங்கள், எல்லாம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியின் அநுமதியைக் கோரி என் குமாரனிடமே செய்தி சொல்லி அனுப்புகிறேன்!” என்றார். அச்சபையில் அப்போது எழுந்த கோலாகலமான கோஷங்கள் மதுராந்தகரின் செவிகளுக்கு நாராசமாயிருந்தன.

18. நிமித்தக்காரன்


     நம்பியாண்டார் நம்பியை வரவேற்பதற்காகக் கூடியிருந்த சபை கலையும் சமயத்தில் பெரிய மகாராணி தம் செல்வக் குமாரனிடம், “மகனே! நான் இவர்களை அரண்மனை வாசல் வரையில் சென்று வழியனுப்பி விட்டு வருகிறேன். அதற்குள் நீ உன் இருப்பிடம் சென்று சிரமபரிகாரம் செய்து கொண்டு திரும்பி வா! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!” என்றார்.

     “ஆகட்டும், தாயே” என்று சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு வந்துவிடவேண்டும்; அல்லது கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜாங்க பொக்கிஷத்தையே இவர் சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்?

     மறுபடியும் பெரிய மகாராணிக்கு மகனிடம் ஏதோ அந்தரங்கம் பேசவேண்டுமாம்! என்ன அந்தரங்கத்தைச் சொல்லப் போகிறாரோ, தெரியவில்லை! அஷ்டாங்க யோகம், இயம, நியம நிதித்தியாசனம் ஆகியவற்றைக் குறித்து ஒருவேளை பேச ஆரம்பித்து விடுவார். கண்களின் பார்வையை மூக்கு நுனியில் செலுத்திக் குண்டலினியை மேல் நோக்கிக் கொண்டு வருவதினால் அறுபத்து நாலு கலைகளையும் கல்லாமல் கற்கும் முறையைப் பற்றி ஒருவேளை உபதேசிக்க ஆரம்பித்து விடுவார்! அல்லது நடராஜருடைய ஆனந்தக் கூத்தின் உட்பொருளைக் குறித்தும் அவருடைய சடா மகுடம் எதைக் குறிக்கிறது, அவர் அணிந்திருக்கும் பிறை எதைக் குறிக்கிறது என்பவை குறித்தும் சொல்ல ஆரம்பித்துவிடுவார் இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லித்தான் நம்மை உலகம் அரைப்பைத்தியம் என்று பரிகசிக்கும்படியான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். அம்மாதிரிப் பேச்சுகளுக்கு இனிமேல் இடம் கொடுக்கக்கூடாது. அவர் பேசித்தான் தீருவேன் என்றாலும், நாம் காதிலே வாங்கிக் கொள்ளக்கூடாது…

     இருக்கட்டும்! அன்னை மீண்டும் கூப்பிட்டு அனுப்புவதற்குள் அந்த நிமித்தக்காரனிடம் பேசியாக வேண்டும். யாருமே அறிந்திருக்க முடியாத இரண்டு மர்மமான செய்திகளை அவன் எப்படி அறிந்து கொண்டான்? அதை நினைத்துப் பார்த்தால் ஒரே வியப்பாக அல்லவா இருக்கிறது! அதிசயமான சக்தி அவனிடம் ஏதோ இருக்கவேண்டும். சென்று போன நிகழ்ச்சிகளை அறிந்து கூறியது போல் வருங்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் அவனால் கூற முடியுமா? – அவனையே கேட்டுப் பார்த்து விடலாம்.

     சபையிலிருந்து தாம் புறப்படும் சமயத்தில் நிமித்தக்காரன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கி நிற்பதை மதுராந்தகர் கவனித்தார். அவனைத் தம்முடன் வரும்படி சமிக்ஞையினால் கட்டளையிட்டார். வந்தியத்தேவனுடைய கண்கள் இளவரசியின் முகத்தைப் பார்க்கவும், நயன பாஷையினால் செய்தி உணர்த்தவும் ஆர்வம் கொண்டிருந்தன. ஆனால், இளவரசி மீண்டும் அவனைத் திரும்பிக்கூடப் பாராமல் பெரிய மகாராணியுடன் போய்விட்டாள்.

     இது என்ன? தன்னை இளவரசி அடியோடு மறந்து விட்டாரா? அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ ஆயிரமாயிரம் பேரை அவர் தினம் தினம் பார்த்து வருகிறார். ஒரு தடவை – இரண்டு தடவை பார்த்த தன்னுடைய முகம் அவர் மனத்தில் எவ்விதம் நினைவிருக்கும்? நான் பைத்தியக்காரன்; இரவும் பகலும் எத்தனை எத்தனையோ விபரீத சம்பவங்கள், அபாயங்களிடையிலும் இளவரசியின் திருமுகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். இளவரசி எதற்காக என்னை நினைத்திருக்க வேண்டும்? தேனீ தேனை விரும்பி மலரைச் சுற்றிச் சுற்றி வருகிறது. மலருக்குத் தேனீயைப் பற்றி என்ன கவலை? மலர் சூரியனைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருக்கிறது. குந்தவையின் முகமலரை விரியச்செய்யும் சூரியதேவன் யாரோ?

     ஆயினும் தன்னை எதற்காக அனுப்பினாரோ, அந்தச் செய்தியைத் தெரிந்து கொள்வதிலேகூட அவருக்கு ஆர்வம் இல்லாமலா போய்விடும்? தனக்கு முன்னாலே யாராவது வந்து சொல்லியிருப்பார்களோ? அது எப்படி முடியும்? இல்லை, இல்லை! அவர் ஏதோ கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்பதையும் அவர் முகம் நன்றாகக் காட்டியது. தன்னை அடையாளம் கண்டு கொள்ளாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அந்தரங்க ஓலை எடுத்துக்கொண்டு இலங்கை சென்ற தூதன், மதுராந்தகத் தேவரின் பரிவாரங்களில் ஒருவனாகச் சபைக்கு வந்தால் எப்படி அடையாளம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள முடியும்? ஆகா! இளவரசியைச் சந்தித்து அந்நகரில் நுழைவதற்குத் தான் கையாண்ட யுத்திகளைப்பற்றிச் சொல்லும் போது அவர் எவ்வளவு ஆச்சரியம் அடைவார்? ஆனால் சந்திப்பது எப்படி? செய்தி சொல்லி அனுப்புவது எப்படி?…

     “நிமித்தக்காரா! என்ன யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?” என்ற மதுராந்தகரின் குரலைக் கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டான். அதற்குள்ளே அவர்கள் அரண்மனையில் மதுராந்தகத் தேவருடைய தனி அறைக்கு வந்திருந்தார்கள்.

     அந்த நாளில் சோதிடர்கள், ஆரூடக்காரர்கள், ரேகை பார்த்துக் குறி சொல்வோர், நிமித்தக்காரர் என்று வருங்காலத்தைப் பற்றிச் சொல்வோர், பலர் இருந்தனர். சோதிடர்கள் ஜாதகம் பார்த்ததும், கிரகங்கள் நட்சத்திரங்களின் சஞ்சாரத்தைக் கணித்தும், ஜோதிடம் சொல்வார்கள். ஆரூடக்காரர்கள் தங்களிடம் வருவோர் பேசும் சொற்களைக் கொண்டும், ஆரூடம் கேட்கும் வேளையைக் கொண்டும், நூற்றெட்டில் ஓர் இலக்கம் சொல்லும்படி கேட்டும் சுபா சுபங்களைப் பற்றிப் பொதுப்படையாகச் சொல்லுவார்கள். ரேகை சாஸ்திரமோ அன்றைக்கு இருந்தபடியே இன்றைக்கும் இருந்து வருகிறது.

     நிமித்தக்காரர்கள் என்பவர்கள் ஞான திருஷ்டி படைத்த முனிபுங்கவர்களைப் போல் அகக் கண்ணினால் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். அவர்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு, அகக் கண்ணின் உதவியினால் முக்கால நிகழ்ச்சிகளையும் நேரில் பார்ப்பது போல் பார்த்து உரைப்பார்கள். சிலர் புறக் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து சொல்வார்கள்; இன்னும் சிலர் தீபப்பிழம்பை உற்று நோக்கிய வண்ணம் மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, நடந்துபோன, நடக்கப்போகிற நிகழ்ச்சிகளை அந்தத் தீபப் பிழம்பில் பார்த்துச் சொல்வார்கள். இன்னும் சிலருக்கு எதிர்ப்பட்டவர்களின் முகத்தைப் பார்க்கும் போதே அவர்களுடைய சென்றகால வரலாறும், வருங்கால வரலாறும் மனத்தில் தோன்றிவிடும் இத்தகைய அதிசய சக்திகள் படைத்தவர்களைத் தவிர காக்கை இடம் போயிற்றா வலம் போயிற்றா, என்பது முதலான வெளி நிகழ்ச்சிகளைக் கொண்டு சகுன பலன்களை உரைக்கும் சாதாரண நிமித்தக்காரர்களும் உண்டு.

     வந்தியத்தேவன் தன்னை “நிமித்தக்காரா!” என்று மதுராந்தகர் அழைத்ததும் திடுக்கிட்டான். இளவரசர் மேலும் தன்னை என்னென்ன கேள்விகள் கேட்பாரோ தெரியவில்லை. அவற்றுக்கெல்லாம் சாமர்த்தியமாகத் தக்க விடை கூறிச் சமாளித்துக் கொள்ளவேண்டும். கடவுளே! இங்கிருந்து, இவரிடமிருந்து தப்பித்துச் செல்வது எப்படி? இளவரசியைத் தனியாகச் சந்தித்துப் பேசுவது எப்படி?…

     “வேறு யோசனை ஒன்றுமில்லை, ஐயா! நான் நிமித்தக்காரானாயிருப்பதைக் காட்டிலும் இப்போது சபையில் பார்த்த பிள்ளையைப்போல் நாலு பதிகங்களைக் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! எனக்கும் எவ்வளவு உபசார மரியாதையெல்லாம் நடக்கும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்!” என்றான்.

     “யார் வேண்டாம் என்றார்கள்! நீயும் தேவாரத் திருப்பதிகம் கற்றுக் கொண்டு பாடுவது தானே!”

     “இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத் தானே நடக்கும் இளவரசே! வீண் ஆசைப்பட்டு என்ன பயன்?”

     “பதிகம் பாடிய அந்தப் பிள்ளையைப்பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது? அவனுடைய யோகம்…”

     “மிக உயர்ந்த யோகம். சிவ யோகமும், இராஜயோகமும் கலந்தது. மன்னர்களும், மகாராணிகளும் அந்தப் பிள்ளைக்கு மரியாதை செய்வார்கள். மகான்களுடைய பெயருடனே அவருடைய பெயரும் சேர்ந்து இப்பூவுலகத்தில் நெடுங்காலம் விளங்கும்”.

     வல்லவரையன் ஏதோ குருட்டாம் போக்காக இவ்விதம் கூறினான். ஆனால் மதுராந்தகருடைய மனத்தில் அவனுடைய வார்த்தைகள் பெருங்கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன.

     “என்னுடைய யோகம் எப்படி என்று சொல், பார்க்கலாம்!”

     “அவனுடைய யோகத்தைப் போலவே தங்கள் யோகமும் சிவயோகமும் இராஜ யோகமும் கலந்தது. ஆனால் இன்னும் மேன்மையானது!”

     “அப்பனே! கொஞ்சம் விவரமாகச் சொல், பார்க்கலாம்.”

     வல்லவரையன் என்ன சொல்வது என்று யோசிக்க அவகாசம் வேண்டினான். ஆகையால், “இப்படியெல்லாம் அவசரப்பட்டால் முடியுமா? விவரமாகச் சொல்ல வேண்டுமானால், தீபம் ஏற்றி, வைத்து அகிற் புகை போடச் சொல்லவேணும், தாங்களும் தீபத்துக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்ளவேணும் அப்போது வருங்கால நிகழ்ச்சிகளை நடக்கப் போகிறபடியே பார்த்துச் சொல்வேன்.”

     மதுராந்தகர் பரபரப்பு அடைந்து தீபம் ஏற்றி வைக்கும்படியும் அகிற் புகை போடும்படியும் கட்டளையிட்டார். தீபத்துக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மணைகளும் போடப்பட்டன. மதுராந்தகர் ஒரு மணையில் உட்கார்ந்த பின்னர் அவருக்கெதிரே வந்தியத்தேவனும் உட்கார்ந்தான்.

     கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பிறகு அவன் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டு ஆவேசம் வந்தவனைப் போல் நடித்தான். வெறியாட்டக்காரனைப் போல் அவன் உடல் நடுங்கிற்று.

     பின்னர், கண்களை அகலத் திறந்தான். எதிரில் இருந்த தீபத்தின் பிழம்பை உற்றுப் பார்க்கலானான். சற்று நேரம் பார்த்துவிட்டு மதுராந்தகத் தேவரை நோக்கி, “ஐயா! தங்களைப்பற்றி அலட்சியமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவேண்டும். தங்களுடைய யோகம் சாதாரண யோகம் அல்ல. அங்கே சபையில் உட்கார்ந்து பாட்டுப் படித்த பிள்ளையின் யோகத்துக்கும், தங்கள் யோகத்துக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை. அந்தப் பிள்ளையின் யோகம் அரசர்களின் ஆதரவினால் ஏற்படும் ராஜயோகம்; தங்களுடைய யோகத்தைப் பற்றி இந்தத் தீபத்திலே நான் காண்பது – ஆகா என்னையே பிரமிக்கச் செய்கிறது!” என்றான்.

     “அப்படி என்ன காண்கிறாய்? சொல்! சொல்!” என்றார் மதுராந்தகர்.

     “ஆகா! எப்படிச் சொல்வேன்? சொல்வதற்கு வார்த்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை! கண்ணுக்கெட்டிய தூரம் மணிமுடி தரித்த மன்னர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள். மந்திரிகளும், சாமந்தர்களும், அதிகாரிகளும் வரிசை வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அப்பால், முடிவில்லாத கடலைப்போல், சேனா வீரர்கள் அலைமோதிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்த வேல்களும், வாள்களும் மார்பில் தரித்த கவசங்களும் ஒளி வீசிக் கண்ணைப் பறிக்கின்றன. தூரத்திலுள்ள மாட மாளிகைகளின் மேல் ஜனங்கள் நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். கோட்டை கொத்தளங்கள் மீதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் நிற்கின்றனர். அவர்கள்…அவர்கள்…ஏதேதோ கோஷம் செய்கிறார்கள்!”

     “சொல், சொல்! மக்கள் என்ன கோஷமிடுகிறார்கள்?”

     “இளவரசே! பல்லாயிரம் மக்களின் கோஷமாகையால் நன்றாகக் கேட்கவில்லை. ‘சோழக் குலத் தோன்றல் வாழ்க! திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க! மன்னாதி மன்னர் வாழ்க!’ என்றெல்லாம் கோஷிப்பது போலத் தோன்றுகிறது.”

     “அப்புறம் என்ன?”

     “மக்கள் திரண்டு கூட்டம் கூட்டமாக முன்னேறி வருகிறார்கள். வேலும் வாளும் பிடித்த வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். சிறிது நேரம் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது.”

     “சரி, சரி! கூட்டம் எதற்காகக் கூடியிருக்கிறது? அதைச் சொல்!”

     “அதைத்தான் நானும் இப்போது பார்க்கப் போகிறேன். கூட்டத்தின் மத்தியில் புலிக்கொடி வானளாவிப் பறக்கிறது. அதற்குக் கீழே மீனக்கொடி, விற்கொடி, பனைக்கொடி சிங்கக்கொடி, ரிஷபக்கொடி, பன்றிக்கொடி ஆகியவை தாழ்வாகப் பறக்கின்றன. மயன் மாளிகையைப் போன்ற சபாமண்டபத்தின் நடுவிலே நவரத்தின கசிதமான தங்கச் சிங்காதனம் போட்டிருக்கிறது. அருகில் ஒரு பீடத்தில் கோடி சூரியப் பிரகாசமான வைர வைடூரியங்கள் பதித்த மணிமகுடம் ஒன்று வைத்திருக்கிறது. சிங்காதனத்துக்கு மேலே தண் மதியின் வெண்ணிலாவையொத்த குளிர்ச்சி பொருந்திய வெண் கொற்றக்குடை விரிந்து கவிந்திருக்கின்றன. தேவ கன்னியரைப் போன்ற பெண்கள் கைகளில் வெண்சாமரங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். பற்பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வந்த தண்ணீருடன் பொற்குடங்கள் வரிசையாக வைத்திருக்கின்றன. இளவரசே! பட்டாபிஷேகத்திற்கு எல்லாம் ஆயத்தமாகி விட்டன!…”

     “யாருக்குப் பட்டாபிஷேகம்? அதைச் சொல், அப்பனே” என்றார் மதுராந்தகர்.

     “இதோ அதுவும் தெரிந்துவிடும். சபாமண்டபத்தின் பிரதான வாசற்கதவு திறக்கிறது. பலவகைக் கட்டியம் கூறிக் கொண்டு சிலர் உள்ளே வருகிறார்கள். வீரகம்பீரத் தோற்றமுடைய கிழவர் ஒருவர் வருகிறார். அவருடைய சகோதரர் போலக் காணப்படும் இன்னொருவர் வருகிறார். அவர்களுக்குப் பின்னால் மன்மதனை யொத்த சுந்தர ரூபமுடைய இராஜ குமாரர் ஒருவர் இதோ வருகிறார்.

     “அது யார்? யார்?”

     வந்தியத்தேவன் மதுராந்தகரை மறுமுறை உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் தீபத்தை நோக்கினான்.

     “ஐயா! தங்களைப் போலவே அவர் இருக்கிறார்! தங்களைப் போல என்ன? தாங்களே தான்! முன்னால் வந்த இருவரும் தங்களைச் சிம்மாசனத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். ‘ஜய விஜயீபவா!’ என்ற கோஷம் சமுத்திர கோஷத்தைப் போல் எழுகிறது. தங்கள் மீது நூறு நூறு கரங்கள் மலர்களையும், மணிகளையும், மஞ்சள் நிறத் தானியங்களையும் தூவுகின்றன. இதோ, தாங்கள் சிங்காதனத்தை நெருங்கி விட்டீர்கள்! அடாடா! இது என்ன? சகுனத் தடை போல் யார் குறுக்கே வருகிறது? தலைவிரி கோலமாக ஒரு ஸ்திரீ குறுக்கே வந்து, தங்களுக்கும் சிம்மாசனத்துக்கும் நடுவில் நிற்கிறாள். ‘வேண்டாம்!’ என்று தங்களைத் தடை செய்கிறாள் தாங்கள் அந்த ஸ்திரீயைத் தள்ளுகிறீர்கள்!… அடாடா! இது என்ன, நல்ல சமயத்தில் இப்படிப் புகை வந்து மூடிக்கொள்கிறது? ஒன்றும் தெரியவில்லையே?….”

     “பார்! பார்! நன்றாக உற்றுப் பார்! அப்புறம் என்ன நடக்கிறது?”

     “இளவரசே! மன்னிக்க வேண்டும்! பெரும் புகைப் படலம் வந்து எல்லாவற்றையும் மறைத்து விட்டது!…”

     “பார், அப்பனே பார்! அந்த ஸ்திரீ யார் என்றாவது பார்! அவளை நீ முன்னம் பார்த்திருக்கிறாயா?”

     “இளவரசே! அந்த மாதரசியும் மறைந்துவிட்டாள், தாங்களும் மறைந்து விட்டீர்கள். சபை, சிம்மாசனம், கிரீடம், எல்லாம் மறைந்து விட்டன. இந்த அரண்மனையில் மந்திர சக்தி உள்ளவர்கள் யாரோ இருக்கவேண்டும்! வேண்டுமென்றே மந்திரம் போட்டுத் தடுத்துவிட்டதாகக் காண்கிறது. ஐயோ! என் முகமெல்லாம் பற்றி எரிவது போல் தகிக்கிறது!…”

     இவ்விதம் கூறி வந்தியத்தேவன் தன் கரங்களினால் முகத்தை மூடிக்கொண்டான். அப்படியே சிறிது நேரம் இருந்துவிட்டு கண்களைத் திறந்து பார்த்தான்.

     மதுராந்தகத் தேவருடைய உடம்பின் நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டிருந்தன. அவருடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. கண்கள், எரியும் தணல்களைப் போலப் பிரகாசித்தன. வந்தியத்தேவனுக்குச் சிறிது பயமாகவே போய்விட்டது. இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு அதிகமாகக் கிளப்பிவிட்டு விட்டோ மோ என்று பயந்து போனான்.

     “மறுபடியும் பார்! நன்றாகப் பார்த்துச் சொல்!” என்றார் மதுராந்தகர்.

     “இளவரசே! அதில் பயனில்லை! ஒரு தடவை மறைந்த காட்சி மறுபடியும் உடனே வராது. சில நாள் கழிந்த பிறகுதான் வரும். தீபத்தைப் பார்த்து, வேண்டுமானால் வேறு ஏதாவது காட்சி தெரிந்தால் சொல்லுகிறேன்.”

     “சொல், சொல்! என்ன காட்சி புலப்பட்டாலும் சொல்!”

     “ஜனங்கள் ஒரே குழப்பமாயிருக்கிறார்கள். துக்கமாயும், கோபமாயும் இருக்கிறார்கள். தூதன் ஒருவன் வந்து அவர்களிடம் ஏதோ செய்தி சொல்கிறான். இராஜ குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் கடலில் முழுகிவிட்டதாகச் சொல்லுகிறான்.”

     “ஐயோ! பாவம்! அந்தத் தூதனை ஜனங்கள் அடிக்கப் போகிறார்கள். இளவரசே! அம்மாதிரி ஏதாவது நேர்ந்தால் தாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனங்கள் மத்தியில் செல்ல வேண்டாம்! சென்றாலும் ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்!”

     “கடலில் முழுகியது யார் என்று பெயர் சொல்லவில்லையா?”

     “கூச்சலிலும் குழப்பத்திலும் பெயர் காதில் விழவில்லை. அந்தக் காட்சி மறைந்துவிட்டது.”

     “இப்போது, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளை அணிந்த ஒரு பயங்கரமான கூட்டம் என் கண்முன் தெரிகிறது. காபாலிகர்கள் காலாமுகர்கள் போல் தோன்றுகிறார்கள். அவர்களில் ஒருவன், கையில் ஒரு பயங்கரமான அரிவாளை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரில் பலி பீடம் ஒன்று இருக்கிறது. இளவரசே! இங்கேயும் இராஜகுமாரர் ஒருவர் வருகிறார். காலாமுகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளம் அடிக்கிறார்கள். ஐயோ! தப்பித் தவறிக்கூடத் தாங்கள் அப்படிப்பட்ட கூட்டத்தின் மத்தியில் போகவேண்டாம்!…”

     இதைக் கேட்டதும் மதுராந்தகருடைய முகத்தில் வியர்வை துளித்தது; அவர் உடம்பு நடுங்கியது. வந்தியத்தேவன் அதைக் கவனித்துக் கொண்டான். பின்னர், ‘இளவரசே! மேலே ஒன்றும் எனக்குத் தெரியவில்லை, மன்னிக்க வேண்டும். என் தலை சுற்றுகிறது; கண் இருளுகிறது. யாரோ மந்திரம் போட்டுத் தடை செய்கிறார்கள். இன்னொரு சமயம் இன்னொரு இடத்தில் பார்த்துச் சொல்கிறேன்!” என்று கூறித் தன் தலையைக் கையால் பிடித்துக் கொண்டான்.

     அச்சமயத்தில் அரண்மனைச் சேவகன் ஒருவன் வந்து, பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசரை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். மதுராந்தகர் தம் உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தையெல்லாம் அன்னையின்மீது கொட்டிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்.

     “ஐயா! தலைவலி பொறுக்க முடியவில்லை. அரண்மனைக்கு வெளியே சென்று இந்த நகரைக் கொஞ்சம் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்!” என்று வந்தியத்தேவன் அவரிடம் கூறி அனுமதி பெற்றுக் கொண்டான்.

     பழையாறை மருத்துவர் மகன், பினாகபாணி பண்டிதனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய ரஸம் ஏற்பட்டிருந்தது. சில நாளைக்கு முன்பு வரையில் அவன் தந்தையிடம் மருந்து சாஸ்திரம் கற்றுக் கொள்வதுடன் திருப்தியடைந்தான். கோடிக்கரைப் பிரயாணத்தின்போது, வந்தியத்தேவன் வெளி உலகத்தைப் பற்றிப் பல விஷயங்களை அவனுக்குக் கூறினான். அத்துடன் மட்டும் அவன் நிறுத்தவில்லை. புதிதாகக் காதல் வலையில் விழுந்தவர்களுக்கு அதைப் பற்றி யாரிடமாவது பேசத் தோன்றுவது இயல்பு. வைத்தியர் மகன் முதல் தர அசடு என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன் அவனிடம் பெண்களிடம் காதல் கொள்வதைப் பற்றிய அபாயங்களைப் பற்றிப் பேசலானான். நான், ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு, அதன் பயனாக அனுபவித்துவரும் இன்ப துன்பங்களைப் பற்றியும் கூறினான்.

     வைத்தியர் மகன் பினாகபாணி இந்தப் பேச்சுக்களை முதலில் அவ்வளவாக ரஸிக்கவில்லை. சிறிது சிறிது சிறிதாக அவன் மனம் மாறியது. வந்தியத்தேவனிடம் விவரமில்லாத அசூயையும், ஆத்திரமும் ஏற்பட்டன. அவனுடைய மனத்தைக் கவர்ந்த மங்கையின் ஊர், பெயர் என்ன என்று கேட்டான். வந்தியத்தேவன் சொல்ல மறுத்து விட்டான். அதனால் பினாகபாணியின் கோபம் அதிகமாயிற்று. கோடிக்கரை போய்ச் சேருவதற்குள் வந்தியத்தேவனை வைத்தியரின் மகன் தன்னுடைய சத்துருவாகவே கருதத் தொடங்கிவிட்டான்.

     அவன் மனத்திற்குள் புதைத்து கொண்டிருந்த தீ பூங்குழலியைப் பார்த்ததும் கொழுந்துவிடத் தொடங்கியது. பூங்குழலி அவனை மறுதளித்ததுடன் பரிகாசமும் செய்தாள். அவள் தன்னைக் காட்டிலும் வந்தியத்தேவனை அதிகம் மதிக்கிறாள் என்று தெரிய வந்ததும் பினாகபாணியின் பைத்தியம் முற்றி விட்டது. வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வீரர்களிடம் அவனைக் காட்டிக்கொடுக்கவும் துணிந்தான்.

     பழுவேட்டரையரின் ஆட்கள் வந்தியத்தேவனைப் பிடிக்க முடியாமல் பினாகபாணியைப் பிடித்துக் கொண்டு தஞ்சை சென்றார்கள். சிறிது நேரம் அவன் பாதாளச் சிறையில் வசிக்கும்படி நேர்ந்தது. இதனாலெல்லாம் அவனுக்கு முன்னமே வந்தியத்தேவனிடம் உண்டாகியிருந்த கோபம் மேலும் வளர்ந்தது.

     இளவரசி குந்தவை அவனைப் பார்த்துப் பேசி விடுதலை செய்வதற்காகப் பாதாளச் சிறைக்குப் போவதற்கு முன்னாலேயே அவன் விடுதலையாகியிருந்ததைக் கண்டோ ம். விடுதலை செய்தவள் பழுவூர் இளையராணி நந்தினிதான். தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் தஞ்சை அரண்மனையிலிருந்து தப்பிச் சென்றது பற்றி நந்தினி கோபமும், சந்தேகமும் கொண்டிருந்தாள். அவன் பழையாறை சென்று, பிறகு ஈழநாட்டுக்குத் தப்பிச் சென்றதை அறிந்த பிறகு அவளுடைய சந்தேகம் அதிகமாயிற்று. எப்படியும் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி வந்து, இளவரசி குந்தவையைப் பார்க்க முயல்வான் என்று ஊகித்தாள். அப்போது அவனைக் கண்டுபிடித்துச் செய்தி அனுப்பப் பழையாறையில் தனக்கு நம்பகமான ஆள் ஒருவன் வேண்டும் என்று தீவிரமாக எண்ணினாள்.

     வைத்தியர் மகன் பினாகபாணியைப் பார்த்துப் பேசிய பிறகு அவன் அந்த வேலைக்குச் சரியான ஆள் என்று முடிவு செய்தாள். அவனிடம் அந்தப் பெரிய பொறுப்பை ஒப்புவித்தாள்.

     “உனக்குத் துரோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றவன் சீக்கிரத்தில் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி வருவான். நீ கண்ணும் கருத்துமாகப் பார்த்திருந்து, அவன் எங்கெங்கே போகிறான், என்னென்ன செய்கிறான், என்பதைக் கவனித்து எனக்கு உடனே சொல்லி அனுப்ப வேண்டும். அவ்விதம் செய்தால் உனக்கு வேண்டிய வெகுமதிகளை அளிப்பேன்” என்றாள்.

     பின்னர் சின்னப் பழுவேட்டரையரும் அவனை அழைத்து வந்தியத்தேவனைப் பற்றிக் கட்டளை இட்டார். “அந்த இராஜத்துரோகி திரும்பி வரும்போது, அவனைப் பிடித்துக் கொடுத்தால் உன்னை நமது ஒற்றர் படையில் சேர்த்துப் பெரிய அதிகாரியாக்கி விடுவேன்” என்று அவனுக்கு ஆசை காட்டியிருந்தார்.

     அது முதல் பினாகபாணி மருத்துவத் தொழிலில் பற்றை இழந்துவிட்டான். ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டே பழையாறை நகரின் வீதிகளில் ஓயாமல் அலைந்து கொண்டிருந்தான். திடீர் திடீரென்று அவனுக்குச் சந்தேகம் உதித்துவிடும். வீதியில் போகிறவர்களின் அருகில் ஓடிச்சென்று முகத்தை உற்றுப் பார்ப்பான். “இவன் இல்லை!” என்று முணுமுணுத்துக் கொண்டே அப்பால் செல்வான். இதைப் பார்த்த பலரும் வைத்தியர் மகனுக்குச் சித்தப்பிரமை பிடித்து விட்டதென்று எண்ணத் தொடங்கினார்கள்.

     ஆயினும், பினாகபாணி தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. மதுராந்தகத்தேவரும், அவருடைய பரிவாரங்களும் பழையாறைக்குள் பிரவேசித்தபோது பினாகபாணி அவர்களை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை. அவர்களில் வந்தியத்தேவன் இருக்கக்கூடுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. திருநாரையூர் நம்பியின் பல்லக்கைச் சூழ்ந்திருந்த பெருங்கூட்டத்திலே அவன் சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, சற்றுத்தூரத்தில் மதுராந்தகருடைய பரிவாரம் போவது தெரிந்தது. மதுராந்தகருக்கு அருகில் குதிரை மேலிருந்தவன் ஒரு தடவை திரும்பிப் பார்த்தபோது பினாகபாணிக்கு ஐயம் உதித்தது. ஆனால் அவன் விரைவாகச் சென்று அரண்மனையில் புகுத்துவிட்டபடியால் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடியவில்லை.

19. சமயசஞ்சீவி


     நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான்.

     இளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வெளியில் வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை நெருங்கி வந்து, “அப்பனே! நீ யார்?” என்று கேட்டான்.

     வந்தியத்தேவன் பினாகபாணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “என்ன கேட்டாய்?”

     “நீ யார் என்று கேட்டேன்” என்றான்.

     “நான் யார் என்றா கேட்கிறாய்? எந்த நானைக் கேட்கிறாய்? மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த உடம்பைக் கேட்கிறாயா? உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா? ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா? அப்பனே! இது என்ன கேள்வி? நீயும் இல்லை, நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம்! உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்!” என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரை மேல் தாவி ஏறினான். குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான்.

     ஆனால் வைத்தியர் மகன் அவ்வளவு எளிதில் ஏமாந்து போகிறவனா? அவனது சந்தேகம் இப்போது நிச்சயமாகி விட்டது. நகர்க் காவல் அதிகாரியிடம் சென்று செய்தியைத் தெரிவித்தான். அதிகாரி அனுப்பிய இரண்டு காவல் வீரர்களை அழைத்துக் கொண்டு அவனும் ஊரைச் சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே வந்தியத்தேவனை ஒரு நாற்சந்தியில் சந்தித்தான்.

     “இவன்தான் ஒற்றன்! இவனைச் சிறைப்பிடியுங்கள்!” என்று கூவினான்.

     “என்னடா, அப்பா! உனக்குப் பைத்தியமா?” என்றான் வல்லவரையன்.

     “யாரைப் பைத்தியமா, என்று கேட்கிறாய்? இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, ஆத்மாவையா! பரமாத்மாவையா! அல்லது பசு, பதி, பாசத்தையா?” என்று கூறினான் வைத்தியர் மகன் பினாகபாணி.

     “நீ இப்பொழுது உளறுவதிலிருந்தே நீ பைத்தியம் என்று தெரிகிறதே!”

     “நான் பைத்தியம் இல்லை; உன்னோடு கோடிக்கரை வரையில் வந்த வைத்தியன்! காவலர்களே! தஞ்சாவூர்க் கோட்டையிலிருந்து தப்பி, இலங்கைக்கு ஓடிய ஒற்றன் இவன்தான்! உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள்!”

     காவலர்கள் வல்லவரையனை நோக்கி நெருங்கினார்கள். “ஜாக்கிரதை! இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள்! நான் இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன்!” என்று கூறினான் வந்தியத்தேவன்.

     “இல்லை இல்லை! இவன் பெரும் பொய்யன். இவனை உடனே சிறைப்படுத்துங்கள்!” என்று வைத்தியர் மகன் வாய்விட்டுக் கூவினான்.

     இதற்குள் அவர்களைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் சிலர் வந்தியதேவனுடைய கட்சி பேசினார்கள்; சில வைத்தியர் மகனின் கட்சி பேசினார்கள்.

     “இவனைப் பார்த்தால் நிமித்தக்காரனாகத் தோன்றவில்லை” என்றான் ஒருவன்.

     “ஒற்றனாகவும் தோன்றவில்லையே” என்றான் இன்னொருவன்.

     “நிமித்தக்காரன் இவ்வளவு சிறு பிராயத்தனாயிருக்க முடியுமா?”

     “ஏன் முடியாது? ஒற்றன் குதிரை மேலேறி வீதியில் பகிரங்கமாகப் போவானா?”

     “நிமித்தக்காரன் எதற்காக உடைவாள் தரித்திருக்கிறான்?”

     “ஒற்றன் என்றால் யாருடைய ஒற்றன் பழையாறையில் என்ன வேவு பார்ப்பதற்காக வருகிறான்?”

     இதற்கிடையில் பினாகபாணி, “அவனைச் சிறைப்பிடியுங்கள்! உடனே சிறைப்பிடியுங்கள்! பழுவேட்டரையருடைய கட்டளை!” என்று கத்தினான்.

     பழுவேட்டரையர் என்ற பெயரைக் கேட்டது, அங்கே கூடியிருந்தவர்கள் பலருக்கு வந்தியத்தேவன் மேல் அனுதாபம் உண்டாகிவிட்டது. அவனை எப்படியாவது தப்புவிக்க வழி உண்டா என்று பார்த்தார்கள்.

     இதற்கிடையில் ஆழ்வார்க்கடியான் அந்தக் கூட்டத்தின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். “இளவரசோடு வந்த நிமித்தக்காரன் இங்கே இருக்கிறானா?” என்று கூவினான்.

     “இல்லை; இவன் ஒற்றன்” என்று பினாகபாணி கூச்சலிட்டான்.

     “இதென்ன வம்பு? நீ மதுராந்தகத் தேவருடன் வந்த நிமித்தக்காரனாயிருந்தால் என்னுடன் வா! உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     வந்தியத்தேவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது. “அந்த நிமித்தக்காரன் நான்தான்! இதோ வருகிறேன்” என்றான்.

     “வீடாதீர்கள்! ஒற்றனை விட்டு விடாதீர்கள்!” என்று வைத்தியர் மகன் பினாகபாணி கத்தினான்.”

     ஆழ்வார்க்கடியான், “நீ நிமித்தக்காரன்தானா என்பதை நிரூபித்து விடு! அப்படியானால்தான் என்னுடன் வரலாம்!” என்று கூறிக்கொண்டே கண்ணால் சமிக்ஞை செய்தான்.

     “என்னவிதமாக நிரூபிக்கச் சொல்கிறாய்?” என்று வந்தியத்தேவன் அவசரத்துடன் கேட்டான்.

     “அதோ இரண்டு குதிரைகள் வேகமாக வருகின்றனவல்லவா? அவற்றின் மீது வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல்!”

     குதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு, “ஓ சொல்கிறேன், இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து நேர்ந்திருக்கிறது! அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள்!” என்றான் வந்தியத்தேவன்.

     இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் குதிரைகள் ஜனக்கூட்டத்தை நெருங்கிவிட்டன. ஜனங்கள் மேலே போக வழிவிடாதபடியால் குதிரைகள் நின்றன.

     “நீங்கள் தூதர்கள் போலிருக்கிறது, என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள்?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

     “ஆம் நாங்கள் தூதர்கள்தான்! துக்கச் செய்தி கொண்டு வருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் ஏறி வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாம். இளவரசர் யாரையோ காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து மூழ்கிப் போய்விட்டாராம்!”

     குதிரை மீது வந்தவர்களில் ஒருவன் இவ்வாறு கூறியதும் அந்த ஜனக்கூட்டத்தில் “ஐயோ! ஐயகோ!” என்ற பரிதாபக் குரல்கள் நெஞ்சைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் எழுந்தன. எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்களும் வந்தார்களோ, தெரியாது. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆண்களும், பெண்களும், வயோதிகளும், சிறுவர் சிறுமிகளும் அந்தத் தூதர்களைப் பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டார்கள். பலர், அவர்களைப் பல கேள்விகள் கேட்டார்கள்; பலர் அழுது புலம்பினார்கள்.

     பழுவேட்டரையர்கள் அருள்மொழிவர்மரை விரும்பவில்லையென்பது அந்நகர மக்களில் பலருக்கு ஏற்கனவே தெரியும். இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் ஈழத்துக்குள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பிரஸ்தாபமும் அவர்கள் காதுக்கு எட்டியிருந்தது எனவே, கூட்டத்தில் பலர் பழுவேட்டரையர்களைப் பற்றி முதலில் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பிறகு உரத்த குரலில் சபிக்கவும் தொடங்கினார்கள். “பழுவேட்டரையர்கள் வேண்டுமென்றே இளவரசரைக் கடலில் மூழ்கடித்துக் கொன்றிருக்க வேண்டும்!” என்றும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த ஜனக் கூட்டத்தார் பேசிக்கொண்ட சத்தமும், அவர்கள் புலம்பிய சத்தமும், பழுவேட்டரையர்களைச் சபித்த சத்தமும் சேர்த்துச் சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல் எழுந்தது.

     இந்தக் கூட்டத்துக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட தஞ்சாவூர்த் தூதர்கள், மேலே அரண்மனைக்குப் போக முடியாமல் தவித்தார்கள். ஜனங்களை விலக்கிக் கொண்டு போக அவர்கள் முயன்றும் பலிக்கவில்லை. “எப்படி?” “எங்கே?” “என்றைக்கு?” “நிச்சயமாகவா?” என்றெல்லாம் ஜனங்கள் அத்தூதர்களைக் கேட்ட வண்ணம் மேலே போக முடியாதபடி தடை செய்தார்கள்.

     வைத்தியர் மகனுடன் வந்திருந்த காவலர்களைப் பார்த்து ஆழ்வார்க்கடியான், “நீங்கள் ஏன் சும்மா நிற்கிறீர்கள்? கூட்டத்தை விலக்கித் தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்றான். காவலர்களும் மேற்படி செய்தி கேட்டுக் கதி கலங்கிப் போயிருந்தார்கள். அவர்கள் இப்போது முன்வந்து தூதர்களுக்கு வழி விலக்கிக் கொடுக்க முயன்றார்கள். தூதர்கள் சிறிது சிறிதாக அரண்மனையை நோக்கி முன்னேறினார்கள். ஜனக் கூட்டமும் அவர்களை விடாமல் தொடர்ந்து சென்றது. மேலும் மேலும் ஜனங்களின் கூட்டம் பெருகிக் கொண்டும் வந்தது.

     அவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தில், ஒரே மனதாக இளவரசர் அருள்மொழிவர்மரின் கதியை நினைத்துக் கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்த அக்கூட்டத்தில், ஒரே ஒரு பிராணி மட்டும், “ஐயோ! இது ஏதோ சூழ்ச்சி! ஒற்றனைத் தப்பித்துவிடச் சூழ்ச்சி!” என்று அலறிக் கொண்டிருந்தது. அவ்வாறு அலறிய வைத்தியர் மகனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கூக்குரல் யாருடைய செவியிலும் ஏறவில்லை. மாநதியின் பெருவெள்ளம் அதில் விழுந்து விட்ட சிறு துரும்பை அடித்துக் கொண்டு போவதுபோல் அந்தப் பெரும் ஜனக் கூட்டம் வைத்தியர் மகனையும் தள்ளிக்கொண்டு முன்னே சென்றது.

     ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியபோதே வந்தியத்தேவன் குதிரை மேலிருந்து இறங்கிவிட்டான். கூட்டம் நகரத் தொடங்கியபோது, ஆழ்வார்க்கடியான் அவன் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டான். “குதிரையை விட்டுவிடு! பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா!” என்று அவன் காதோடு சொன்னான்.

     “அப்பனே! சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தாய்! இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது!” என்றான் வல்லவரையன்.

     “இதுதான் உன் தொழில் ஆயிற்றே? நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது!” என்று எகத்தாளம் செய்தான் ஆழ்வார்க்கடியான்.

     இருவரும் ஜனக்கூட்டம் அவர்களைத் தள்ளிக் கொண்டு போகாத வண்ணம் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் போனபிறகு வந்தியத்தேவனுடைய கையை ஆழ்வார்க்கடியான் பற்றிக்கொண்டு வேறு திசையாக அவனை அழைத்துச் சென்றான். அரண்மனைகள் இருந்த வீதியில் முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் பூட்டிக் கிடந்த கோடி வீட்டில் அவர்கள் புகுந்தார்கள். கொல்லைப்புறத்தில் இருந்த நந்தவனத்தில் பிரவேசித்துக் கொடி வழிகளில் நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீல நிற ஓடை தெரிந்தது? அதில் ஒரு ஓடம் மிதந்தது. ஓடத்தில் ஒரு மாதரசி இருந்தாள். அவளைக் கண்டதும் வந்தியத்தேவனுடைய உள்ளம் துள்ளிக் குதித்தது.

20. தாயும் மகனும்


     அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற் சிறந்த அந்த மூதாட்டியின் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் மதுராந்தகனும் அன்னையிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தான். இப்போது அந்தப் பக்தி, கோப வெறியாக மாறிப் போயிருந்தது. பெற்ற மகனுக்குத் துரோகம் செய்து, தாயாதிகளின் கட்சி பேசிய தாயைப்பற்றிக் கதைகளிலே கூடக் கேட்டதில்லையே! தனக்கு இப்படிப்பட்ட அன்னையா வந்து வாய்க்கவேண்டும்?… இதை நினைக்க நினைக்க அவன் உள்ளத்திலிருந்த அன்பு அத்தனையும் துவேஷமாகவே மாறி நாளடைவில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்தது.

     அபூர்வமான சாந்தம் குடிகொண்ட அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அவனுடைய கோபம் தணிந்தது. பழைய வழக்கத்தை அனுசரித்து நமஸ்கரித்து எழுந்து நின்றான். “சிவபக்திச் செல்வம் பெருகி வளரட்டும்!” என்று மகாராணி ஆசி கூறி, அவனை ஆசனத்தில் உட்காரச் செய்தார். அந்த ஆசீர்வாதம் மதுராந்தகனுடைய மனத்தில் அம்பைப் போல் தைத்தது.

     “மதுராந்தகா! என் மருமகள் சுகமா? உன் மாமனார் வீட்டிலும், தனாதிகாரியின் வீட்டிலும் எல்லோரும் சௌக்கியமா?” என்று அன்னை கேட்டார்.

     “எல்லாரும் சௌக்கியமாகவே இருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை?” என்று குமாரன் முணுமுணுத்தான்.

     “தஞ்சையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீ சக்கரவர்த்தியைப் பார்த்தாயா? அவருடைய உடல் நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது?” என்று மகாராணி கேட்டார்.

     “பார்த்து விடை பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டேன். சக்கரவர்த்தியின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்துதான் வருகிறது. உடல் வேதனையைக் காட்டிலும் மனவேதனை அவருக்கு அதிகமாயிருக்கிறது” என்றான் மதுராந்தகன்.

     “அது என்ன, குழந்தாய்? சக்கரவர்த்தி மன வேதனைப்படும்படியாக என்ன நேர்ந்தது?”

     “குற்றம் செய்தவர்கள், – அநீதி செய்தவர்கள்… பிறர் உடைமையைப் பறித்து அனுபவிக்கிறவர்கள் – மனவேதனை கொள்வது இயல்புதானே?”

     “இது என்ன சொல்கிறாய்? சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் – அநீதி – செய்துவிட்டார்?”

     “வேறு என்ன செய்யவேண்டும்? நான் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவர் இத்தனை வருஷங்களாக அமர்ந்திருப்பது போதாதா? அது குற்றம் இல்லையா? அநீதி இல்லையா?”

     “குழந்தாய்! பால்போலத் தூய்மையாக இருந்த உன் உள்ளத்தில் இந்த விஷம் எப்படி வந்தது? யார் உனக்குத் துர்ப்போதனை செய்து கெடுத்துவிட்டார்கள்?” என்று இரக்கமான குரலில் அன்னை கேட்டார்.

     “எனக்கு ஒருவரும் துர்ப்போதனை செய்து கெடுக்கவில்லை. தங்கள் மகனை அவ்வளவு நிர்மூடனாக ஏன் கருதுகிறீர்கள்? எனக்குச் சுய அறிவே கிடையாது என்பது தங்கள் எண்ணமா?”

     “எத்தனை அறிவாளிகளாயிருந்தாலும், துர்ப்போதனையினால் மனம் கெடுவது உண்டு. கரைப்பவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும் அல்லவா? கூனியின் துர்ப்போதனையினால் கைகேயியின் மனம் கெட்டுப் போகவில்லையா?”

     “பெண்களின் மனத்தை அப்படித் துர்ப்போதனையினால் கெடுத்துவிடலாம் என்பதை நானும் தெரிந்து கொண்டுதானிருக்கிறேன்!”

     “மதுராந்தகா! யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறாய்?”

     “தாயே! என்னை, எதற்காக அழைத்தீர்கள். அதைச் சொல்லுங்கள்!”

     “சற்றுமுன் நடந்த வைபவத்தில் நீ பிரசன்னமாய் இருந்தாய் அல்லவா?”

     “இருந்தேன், யாரோ வழியோடு போகிற சிறுவனைப் பல்லக்கிலேற்றி அழைத்து வரச்செய்தீர்கள். சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து உபசரித்தீர்கள். அவன் தலை கால் தெரியாத கர்வம் கொண்டிருப்பான்…”

     “ஐயோ! அப்படி அபசாரமாய்ப் பேசாதே, குழந்தாய். வந்திருந்தவர் வயதில் வாலிபரானாலும், சிவஞான பரிபக்குவம் அடைந்த மகான்….”

     “அவர் மகானாகவேயிருக்கட்டும், நான் குறைத்துப் பேசினால் அவருடைய பெருமை குறைந்துவிடாதல்லவா? அந்த மகானுக்குத் தாங்கள் இராஜரீக மரியாதைகள் செய்ததையும் நான் ஆட்சேபிக்கவில்லை. என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள்!”

     செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். பிறகு கூறினார்:- “உன்னுடைய குணத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் எனக்குப் பிரமிப்பை உண்டாக்குகிறது. பழுவேட்டரையர் மாளிகையில் இரண்டு வருஷ வாசம் இப்படி உன்னை மாற்றிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. போனால் போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்ய வேண்டும். உன் தந்தைக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற என்னாலியன்ற வரையில் முயலவேண்டும் மகனே! உன்னை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், என்னுடைய கதையை, – நான் உன் தந்தையை மணந்த வரலாற்றைக் கூறவேண்டும். சற்றுப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிரு!”

     மதுராந்தகன் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போவதற்கு அறிகுறியாகக் கால்களை மண்டி போட்டுக் கொண்டு, கைகளைப் பீடத்தில் நன்றாய் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான்.

     “நான் பிறந்த ஊராகிய மழபாடிக்கு நீ குழந்தையாயிருந்தபோது இரண்டொரு தடவை வந்திருக்கிறாய்; அந்த ஊரில் உள்ள சிவபெருமான் ஆலயத்தையும் பார்த்திருக்கிறாய். கோச்செங்கட் சோழ மன்னர் சிவாலயம் எடுப்பித்த அறுபத்து நாலு ஸ்தலங்களில் அதுவும் ஒன்று எனப் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னுடைய பாட்டனார், என்னுடைய தந்தை, மழபாடியில் பெரிய குடித்தனக்காரர். எங்கள் குலம் தொன்மையானது. ஒரு காலத்தில் மழவரையர்கள் செல்வாக்குப் பெற்ற சிற்றரசர்களாயிருந்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் நடந்த யுத்தங்களில் பாண்டியர்களோடு சேர்ந்திருந்தார்கள். அதனால் சோழர்கள் வெற்றி பெற்ற பிறகு மழவரையர்களின் செல்வாக்குக் குன்றியிருந்தது. சிறு பெண்ணாயிருந்தபோது அதைப்பற்றியெல்லாம் நான் குறைப்படவில்லை. என் உள்ளம் மழபாடி ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமான் மீது சென்றிருந்தது. மழபாடியின் சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றை ஒரு பெரியவர் நான் குழந்தையாயிருந்தபோது எனக்குச் சொன்னார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது சீடர்களுடனே எங்களூர்ப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார். மழபாடி சிவாலயத்தைச் சுற்றிச் செழித்து வளர்ந்து கொத்துக் கொத்தாகப் பூத்துக்குலுங்கிய கொன்னை மரங்கள் ஆலயத்தை மறைத்திருந்தனவாம். ஆகையால் கோயிலைக் கவனியாமல் சுந்தரர் சென்றாராம். ‘சுந்தரம், என்னை மறந்தாயோ!’- என்ற குரல் அவர் காதில் கேட்டதாம். சுந்தரர் சுற்றும் முற்றும் பார்த்து ‘யாராவது ஏதேனும் சொன்னீர்களா?’ என்று கேட்டாராம். சீடர்கள், ‘இல்லை’ என்றார்களாம். தங்கள் காதில் குரல் எதுவும் கேட்கவில்லை என்றும் சொன்னார்களாம். சுந்தரர் உடனே அருகில் ஏதாவது ஆலயம் மறைந்திருக்கிறதா என்று விசாரித்தாராம். கொன்னை மரங்களுக்கிடையில் மறைந்திருந்த மழபாடித் திருக்கோயிலைக் கண்டுபிடித்து, ஓடி வந்து இறைவன் சன்னதியில் “பொன்னார் மேனியனே!” என்ற பதிகத்தைப் பாடினாராம்.

     இந்த வரலாற்றைக் கேட்டது முதற்கொண்டு,

     மன்னே! மாமணியே!
          மழபாடியுள் மாணிக்கமே!
     அன்னே உன்னையல்லால்
          இனி யாரை நினைக்கேனே!
என்ற வரிகள் என் மனத்தில் பதிந்துவிட்டன. கோவிலுக்கு அடிக்கடி போவேன். நடராஜ மூர்த்தியின் முன்னால் நின்று அந்த வரிகளை ஓயாது சொல்லுவேன். நாளாக ஆக, என் உள்ளத்தில் மழபாடி இறைவர் குடிகொண்டுவிட்டார். சிவபெருமானையே நான் மணந்துகொள்ளப் போவதாக மனக்கோட்டை கட்டினேன். என்னை நான் உமையாகவும், பார்வதியாகவும், தாட்சாயணியாகவும் எண்ணிக்கொள்வேன். அவர்கள் சிவபெருமானைப் பதியாக அடைவதற்குத் தவம் செய்ததுபோல நானும் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்வேன். யாராவது என் கலியாணத்தைப் பற்றிய பேச்சு எடுத்தால் வெறுப்பு அடைவேன். இவ்விதம் என் குழந்தைப் பருவம் சென்றது. மங்கைப் பருவத்தை அடைந்தபோது என் உள்ளம் சிவபெருமானுடைய பக்தியில் முன்னைவிட அதிகமாக ஈடுபட்டது. வீட்டாரும், ஊராரும் என்னைப் ‘பிச்சி’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவேயில்லை. வீட்டில் உண்டு உறங்கிய நேரம் போக மிச்சப் பொழுதையெல்லாம் கோவிலிலேயே கழித்தேன். பூஜைக்குரிய மலர்களைப் பறித்து விதம்விதமான மாலைகளைத் தொடுத்து, நடராஜப் பெருமானுக்கு அணியச்செய்து பார்த்து மகிழ்வேன்! நெடுநேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். இவ்விதம் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் இறைவனையே தியானித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கலகலவென்று சத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். என் எதிரே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் முன்னால் நின்ற ஒருவர் மீதுதான் என் கண்களும் கருத்தும் சென்றன. நான் மனத்தில் தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமான், தாமே தம் பரிவாரங்களுடன் என்னை ஆட்கொள்ள வந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டேன். எழுந்து நின்று தலைகுனிந்து வணங்கி நின்றேன். எண் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பொழிந்தது. இதை அவர் கவனித்து இருக்கவேண்டும்.

     ‘இந்த பெண் யார்? இவள் ஏன் கண்ணீர்விட்டு அழுகிறாள்?’ என்று ஒரு குரல் கேட்டது.

     அதற்கு என் தந்தையின் குரல், ‘இவள் என் மகள். பிஞ்சிலே பழுத்தவளைப் போல் இவளுக்கு இப்போது சிவபக்தி வந்துவிட்டது. ஓயாமல் இப்படிக் கோவிலில் வந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பதிகம் பாடுவதும், கண்ணீர் விடுவதுமாயிருக்கிறாள்!’ என்று கூறிய மறுமொழி என் காதில் விழுந்தது.

     மறுபடி நான் நிமிர்ந்து பார்த்த போது, முன்னால் நின்றவர் சிவபெருமான் இல்லையென்றும், யாரோ அரச குலத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு அவமானம் தாங்கவில்லை. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வீட்டை அடைந்தேன். ஆனால் என்னை ஆட்கொண்டவர் என்னை விடவில்லை. என் தந்தையுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார். மகனே! அவர்தான் என் கணவரும், உன் அருமைத் தந்தையுமாகிய கண்டராதித்த தேவர்!”

     இவ்விதம் கூறிவிட்டுப் பெரிய மகாராணி சிறிது நிறுத்தினார். பழைய நினைவுகள் அவருடைய கண்களில் மீண்டும் கண்ணீர்த் துளிகளை வருவித்தன. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் கூறினார்:-

     “பிறகு உன் தந்தையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் சிறிது காலத்துக்கு முன்புதான் சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்குப் பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகி விட்டார். மறுபடி கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் மணம்புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது. என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். நானோ சிவபெருமானே மனித உருவங்கொண்டு என்னை ஆட்கொள்ள வந்திருப்பதாக எண்ணிப் பரவசம் கொண்டிருந்தேன். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன். எங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அதன் பயனாக உன் பாட்டனார் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து ‘மழவரையர்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார்…”

     “மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஓர் முக்கியம் காரணம் இருந்தது. குழந்தாய்! இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை. ஆயினும், அத்தகைய அவசியம் நேர்ந்து விட்டதனால் சொல்லுகிறேன். கொஞ்சம் செவி கொடுத்துக் கவனமாகக் கேள்!” இவ்விதம் செம்பியன்மாதேவி கூறி மீண்டும் ஒரு நெடுமூச்சு விட்டார். மதுராந்தகனும் முன்னைக்காட்டிலும் அதிகச் சிரத்தையுடன் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

கல்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *