Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-24

மனதில் விழுந்த விதையே-24

அத்தியாயம்-24

Thank you for reading this post, don't forget to subscribe!

    ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர்.

  சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர்.

   அதன் பொருட்டு நான்கு பேரில் முதல் ஜோடியாக கரம் பற்றியபடி ஆதேஷ் சஹானா நின்றிருந்தனர்.

   சுகுமார்-பவானி மற்றும் சஹானா அக்கா பைரவி மற்றும் அவள் கணவர் சிவா அவர்களின் குட்டி குழந்தை மான்யா என்று திருமணத்தை வண்ணமயமாக்கினார்கள் சஹானா வீட்டு ஆட்கள்.

   வேதாந்த் சாக்ஷியின் இரு குடும்பத்தினரும் பேசி மகிழ்ந்தார்கள்.

குருபிரசாத்-விக்னேஷ்வரன் மற்றும் ராதிகா-பத்மா இந்த இடைப்பட்ட நாட்களில் நன்றாக பழகி இருவீட்டு ஆட்களும் ஒரு குடும்பமாக மாறியிருந்தனர். திருமணம் ஆகாமலே வேதாந்த் மாப்பிள்ளை என்ற அடைமொழிக்குள் திரிந்தான். 

மிருதுளா, மென்பனி என்று திருமணத்தில் ஓடியாடி வேலையில் களைத்தனர். மணப்பெண் தோழியாக மாறி மாறி பொறுப்பாக தோழியை கவனித்தனர்.

  வேதாந்த் அண்ணன் நிஷாந்த் அவள் மனைவி யமுனா புதுமண தம்பதியாக வந்தனர்.

  மிருதுளாவின் தம்பி மதன் மட்டும் அவள் சார்பில் தலைகாட்ட வந்தான். 

     மென்பனி அண்ணா கார்த்திக் அண்ணி ரஞ்சனி எல்லாம் வந்து போட்டோ எடுத்து சாப்பிட்டு அவர்கள் காரில் பறந்துவிட்டார்கள்.

   ஆதேஷின் அண்ணன் விமல், அண்ணி ஆர்த்தி வந்தவர்களை கவனிக்கவே நேரம் சரியாக அமைந்தது.

    அம்ரிஷ் பெங்களூரில் சூட்டிங் என்பதால் நள்ளிரவு நிச்சயம் புகைப்படம் எடுக்க கலந்து கொள்வதாக வாக்குதந்தான்.

  ஆதேஷ் மூலமாக சஹானாவுக்கு அம்ரிஷ் வருவது அறிந்து, மிருதுளா இருக்கும் போது அதனை மற்ற தோழிக்கு தெரிவித்தாள். கமுக்கமாய் மிருதுளா செவிக்குள் ஏற்றி கொண்டாளே தவிர, அம்ரிஷ் வருவதை எதிர்பாராதவளாக நடிகனுக்கு ஏற்ற நடிகையாக மாறினாள்.
  
   அப்படியிருந்தும் கண்கள் பரபரத்தது. என்னயிருந்தாலும் அவன் முதன் முதலில் காரில்  கையால் வாயை அடைத்து ‘கத்தாதே’ என்று அதட்டியது, இஷாவின் பேட்டி கேட்டு ஆவேசம் அடைந்தது, பின்னர் சோர்வுற்று தனியாக அமர்ந்து தன்னிடம் அம்ரிஷ் அவன் மனபாரத்தை இறக்கி வைத்த தருணங்கள், எல்லாம் காதலை தாண்டி பொக்கிஷமாய் பதிந்தது.

     இஷாவை உடனே மறந்து தன்னை நாடினான் என்று குற்றம் சுமத்திடவும் இயலாது. இஷா ஆண்மை அற்றவன் என்று பேட்டி அளித்து அம்ரிஷை காயப்படுத்திய போதும் போனில் வால்பேப்பரில் அவள் புகைப்படத்தை கூட மாற்றாமல் இருந்தான். இதில் தன் கையை பிடித்து இஷா என்று ஜெபித்தான்.

   அம்ரிஷிற்கு அன்பு தேவைப்படும் போது, தான் முன்னே வந்ததும் அவனுக்குள் நேசம் பிறக்க தன்னிடமே அன்பை எதிர்பார்த்திருக்கின்றான்.

   அன்பு காதலாக கனிந்து, தான் சாக தான் மலையுச்சியில் சென்றதாக நினைத்து, காலில் செருப்பு கூடயின்றி, ஓடிவந்து காப்பாற்றி, தேகமெங்கும் கற்கள் குத்தி காயம் கொண்டான் அன்று.

   அதெல்லாம் உண்மையான நேசம் என்று மனதிற்கு புரிபட்டாலும் பயம் சூழ்ந்திருந்தது.

  நடிகன் என்றாவது வெள்ளிதிரையில் நடிப்பது போல நிஜவாழ்விலும் நடித்துவிட்டால்?

ஏமாற்றமே பழகிய தனக்கு, எஞ்சிய ஒரே உறவாக வருபவனும் ஏமாற்றத்தை பரிசளித்து விட்டால்?  அந்த பயம் இதயத்தை தாக்கி மூளையை மழுங்க வைத்தது.

  முட்டாள்தனமாக தனக்கு தெரிந்த ஆண்களோடு அம்ரிஷை ஒப்புமைப்படுத்திட, முதலில் கண்ணுக்கு முன் வந்தது தந்தையே.

  தந்தையை போல அம்ரிஷ் என்றால்? என்ற அச்சம் வெகுவாய் அடுத்த கட்ட நேசத்தை துளிர்க்கவிடவில்லை.

      சாக்ஷியிடம் அடிக்கடி பத்மா ஆன்ட்டி அம்ரிஷை புகழவும், ஒரு கட்டத்தில் தந்தையை தவிர்த்து பார்க்க ஆரம்பித்தப்பின் முழு ஒளிவெளிச்சம் கிடைக்கப் பெற்றவளாக அறிவு தெளிந்தது.

   ஆனால் அவனாக வரப்போவதில்லை. தொந்தரவு தரமாட்டேன் என்று விலகியப்பின் தானாக மீண்டும் அவனை நாடி நேசத்தை பெற மனம் முரண்டியது.

   தனக்கு இந்த சுகமான காதல் வலியாவது எஞ்சியிருக்கட்டும். இப்படியே திரையில் அம்ரிஷை தரிசித்து காலம் தள்ளுவோம் என்று முடிவெடுத்தாள்.

     ஆதேஷ் திருமணத்திற்கு அம்ரிஷ் பெற்றோர் சத்யதேவன் சௌந்தர்யா வந்திருந்தார்கள். வேதாந்த்-சாக்ஷி பெற்றோரிடமும் மென்பனி, சாக்ஷியிடமும் அவர்கள் பேசி சிரித்து பழகினாலும் மிருதுளாவை தான்  கழுகுகண்களால் வட்டமிட்டனர்.

  இங்கு வந்ததே நேரில் மிருதுளாவை ஆசைதீர காண்பதற்கே.
    
   ஆதேஷ்-சஹானா திருமணம் சடுதியில் முடிவானது. அதுயென்னவோ ஊரிலிருந்து சஹானா பெற்றோர் சுகுமார்-பவானி வந்ததும் வராததுமாக திருமண வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
 
   அதன் பொருட்டு அம்ரிஷை பல மாதம் கழித்து, தோராயமாக பத்து மாதம் கழித்து நேரில் சந்திக்க போகின்றாள்.

   அம்ரிஷ் வரவுக்கு தான் மிருதுளாவின் மலர்கண்கள் தவமிருந்தது.

  மென்பனியோ வேதாந்திடம் “அவர் உங்களிடமாவது பேசினாரா?” என்று தமிழை பற்றி தயக்கமாய் கேட்டாள்.

   “இல்லை மென்பனி. எப்பவும் ஆறுமாசத்துக்கு பத்து தடவை கால் பண்ணுவான். இந்தமுறை ஆறுமாசம் தாண்டியும் போன் பண்ணலை. அவனை கான்டெக் பண்ணறது அவ்ளோ ஈஸியில்லை. அவனா தான் நம்மளை கான்டெக் பண்ண முடியும்.” என்று பேசியதும் மென்பனி கண்கள் பனித்தது.

   வேதாந்த் அவளை சமாதானம் செய்ய முயலும் முன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

   மண்டபத்தில் டி.ஜே சத்தம் நேரமாக நேரமாக அதிகரித்ததே தவிர குறையவில்லை.

   வேதாந்த் “நாம மட்டும் போய் போட்டோ எடுப்போம்” என்று அழைக்க, மென்பனி, மிருதுளா மறுத்து கொண்டிருந்தனர்.

  வேதாந்த் விடாமல் சாக்ஷி, மிருதுளா, மென்பனியை என்று விடாமல் அழைத்தான்.

   ஆதேஷ்-சஹானா ஒரு கட்டத்தில் கீழேயிறங்கி தோழிகளை மேடைக்கு இழுத்து வந்தார்கள்.

    இதயத்தில் பாரத்தோடு தோழிக்காக மலர்ந்த முகத்தோடு வந்தார்கள் மென்பனி, மிருதுளா.

   புகைப்படமெடுக்க மேடையேறவும்  நான்கு பவுன்சர்களோடு அம்ரிஷ் வந்தான்.

  மிருதுளா கண்கள் பிரகாசமின்றி தவித்தவை ஒளிப்பெற்றது. கூடுதலாக மென்பனி எதிர்பார்த்த தமிழும் வந்திருந்தான்.

   மேடையில் மிருதுளா நிம்மதியாக அம்ரிஷை பார்வையிட, மென்பனியோ பத்துமாதம் தமிழை காணாமல், அவன் கருத்தையும் காணாது தவித்தவள் மேடைக்கு ஏறும் படியில் தடதடவென இறங்கினாள்.

   தமிழை இன்று அவள் எதிர்பார்க்கவில்லையென்று தான் கூறவேண்டும். அதனால் அவன் வருகையை கண்டு ஓடியவள் யாரையும் பொருட்படுத்தாமல் கட்டிபிடித்து, கண்ணீரை பொழிய ஆரம்பித்தாள்.

   நண்பர்களும் தோழிகளும் கைதட்டியப்பின்னும் பிரியாமல் இருந்தாள். தமிழே மெதுவாக பிரித்து அவளை ஏறிட்டான்.

   “முதல்ல போட்டோ எடுத்திடுவோம் காய்ஸ்” என்று வேதாந்த் கூறவும் சரியென்று தோன்றியது.

   வேதாந்த் தமிழை பார்த்து “பயப்படாம வாடா.” என்று அழைத்து சென்றான்.

  வேதாந்த், தமிழ், அம்ரிஷ், ஆதேஷ், சஹானா, மென்பனி, மிருதுளா, சாக்ஷி என்று நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் என்று வரிசையாக முதலில் நின்றார்கள்.

  பின்னர் வேதாந்த் ஜோடியாக நிற்கும் முடிவோடு, “அம்ரிஷ் நீ அந்த பக்கம் போடா, மென்பனி சாக்ஷி இந்த பக்கம் வாங்க” என்று கோரிக்கை வைக்கவும், மென்பனி சாக்ஷி சட்டென தங்கள் ஜோடியோடு நிற்கும் ஆவலோடு வந்தார்கள்.

   வேதாந்த்-சாக்ஷி, மென்பனி-தமிழ், ஆதேஷ்-சஹானா, மிருதுளா-அம்ரிஷ் என்று ஜோடியாக நிற்க மிருதுளா இதயம் தடதடத்தது. இதயவோசை வேகமாய் துடிப்பது அவளுக்கே கேட்டது.

   வேதாந்திடம் சாக்ஷி “அடுத்து நம்ம கல்யாணமா?” என்று கேட்டாள். அடுத்து அவள் திருமணம் தான் பத்திரிக்கை அடிக்க கொடுத்திருந்தனர். பத்திரிக்கை வந்ததும் சுற்றம், நட்புக்கு போய் கொடுக்க வேண்டும்.
  அதை வைத்து அவள் கேட்க, மென்பனி இடைப்புகுந்து “நோ, நானும் தமிழும் கல்யாணம் பண்ணிக்க போறோம். என்ன தமிழ்? அடுத்து நீங்க கிளம்பும் போது திருமணமானவரா தான் போகணும். இந்த வீக் எண்ட் சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ் வச்சிக்கிட்டாலும் போதும்.” என்று அந்த நொடியே வெட்கம் விட்டு கோரிக்கை வைத்தாள்.

   பத்து மாதம் தமிழ் உயிரோடு இருக்கின்றானா? என்னவென்று அறியாது தவித்த பேதை உள்ளம். அவன் வந்து சேரவும் மணந்தப்பின்னே அவனை வழியனுப்ப முடிவெடுத்தாள்.

  தமிழோ எதுவும் வாய்திறக்கவில்லை. “பிறகு பேசலாம்” என்று முற்றுப்புள்ளி வைத்தான்.

   ஆதேஷ் தான் “இந்த கேங்க்ல முதல்ல மனசை துறந்தது. முதல்ல லவ் சொன்னது. இப்ப முதல்ல காதலிச்ச பொண்ணை கட்டிக்கிட்டது. எல்லாமே நான் தான்” என்று வெற்றி மிதப்பில் கூறினான்.

   “டேய் நீ என்ன வேலை பண்ணின? சஹானா வீட்ல அவசரமா வந்ததும் வராததும் கல்யாணம் பண்ணறாங்க?” என்று வேதாந்த் கேட்கவும், சஹானா சிரித்துவிட்டாள்.
    
   அம்ரிஷோ “மச்சி முதல்ல கல்யாணம் பண்ணின ஓகே. முதல்லயே மத்ததை முடிச்சிட்டியா?” என்று சட்டையை பிடித்து இழுத்து கிசுகிசுக்க, அம்ரிஷ் குரல் அருகேயிருந்த மிருதுளா செவிமடலில் உரசி, மனதில் சலனத்தை உருவாக்க நெளிந்தாள்.

    “எனக்கும் இந்த டவுட் இருக்கு சொல்லுடா.” என்று வேதாந்த் உலுக்க, சாக்ஷியும் மென்பனியும், “சஹானா?” என்று பல்லை கடித்து முறைக்க, “அடிப்பாவிகளா. நான் பச்சை குழந்தை என்னை சந்தேகப்படக்கூடாது.” என்று கூறினாள்.

“அப்படின்னா என்ன நடந்தது?” என்று விடாது கருப்பாய் பிடித்து கொண்டனர்.

   ஓரளவு மிட்நைட் நெருங்கும் சமயம் சுற்றத்தார் நட்புகள் வந்து சென்றப்பின் நெருங்கிய உறவுகள் தான் மண்டபத்தில் நடமாடினார்கள். ஏற்கனவே அம்ரிஷ், ஆதேஷ் நண்பர்கள் என்பது அந்த நெருங்கிய உறவுகளுக்கு தெரிந்ததால், அம்ரிஷ் வந்ததும் மேடைக்கு யாரும் ஏறவில்லை. பவுன்சரும் ஏறவிடாமல் தடுத்து விட்டனர். இதோடு நாளை புகைப்படம் எடுக்கலாமென்று புகைப்படக்காரரையும் அனுப்பிவிட்டு மேடையிலேயே சேரை போட்டு அரட்டையை துவங்கினார்கள்.  

    ஆதேஷ் தன் திருமணம் எவ்வாறு ஏற்கப்பட்டது என்ற கதையை விவரிக்க ஆரம்பித்தான்.

   “ஆக்சுவலி த்ரி மந்த்ஸ் ஃபிப்போர் ஒரு இன்டர்நேஷனல் காம்படேஷன்ல சஹானாவை சந்திச்சேன்டா. நானும் அவளும் வீட்டுக்கு திரும்ப மணி ஆறு ஆறரை இருக்கும்.

  நான் டின்னர் வெளியே போகலாமானு சஹானாவிடம் கேட்டேன். அவ வீட்ல சப்பாத்தி மாவுயிருக்கு உருளைகிழங்கு மசாலா செய்து ப்ரிட்ஜில வச்சிட்டேன். அது வேஸ்டாகிடும்னு ஃபீல் பண்ணினா. நானும் சரி சஹானா கையால சப்பாத்தியோ பூரியோ கிடைக்கும்னு ‘வீட்டுக்கு வரவானு கேட்டேன். சஹானா சட்டுனு வாங்கனு சொன்னா. அங்க போனேனா….” என்று ஆதேஷ் கூற, “டேய் மச்சான் மன்மதலீலை ஓட்டிட்டியா?” என்று அம்ரிஷ் கூறவும், மிருதுளா முறைக்க, ‘நீ யாரு என்னை முறைக்க என்பதாக அவளை தவிர்த்தான் அம்ரிஷ்.

      “ம்கூம். அப்படி நடந்தா அடுத்த வாரமே கல்யாணம் பண்ணிருப்பேனே. நான் சப்பாத்தி மாவு தேய்க்க, இவ பூரி சுட, இன்னொரு அடுப்புல மசாலா சூடுபடுத்த இப்படி தான்டா போச்சு. அந்த நேரமா பார்த்து சஹானா அம்மா பவானியும், அப்பா சுகுமாரும் ஸ்கைப்ல வந்துட்டாங்கடா.

   இவயென்ன பண்ணினா நான் இருப்பதை மறைக்காம அப்படியே வீடியோ கால் பேச, அவங்க அப்பா அம்மா ‘ஊர்லயில்லாத நேரம் ஒரு பையனோட தங்கியிருக்க? யாரு அவன்? என்ன பண்ணறான்? எப்படி பழக்கம்? எத்தனை வருஷம் பழக்கம்? இப்படி தான் நாங்க இல்லாதப்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வருவியா? உன்னை எப்படி வளர்த்தேன்னு அப்படியிப்படி லிஸ்ட் அடுக்கிட்டாங்க.

   ஒருவழியா அவங்களோட எக்ஸ்பிரஸ் வேகத்தை நிறுத்தி, புரிய வைக்க மணி பதினொன்னு ஆகிடுச்சு. பிறகு என்னோட அண்ணா விமல் அண்ணி ஆர்த்தி என்று அறிமுகத்தை கேட்டுட்டு, இனி இப்படி சந்திக்காதிங்க. கல்யாணம் பண்ணிடுங்கனு ஒரே அட்வைஸ். உனக்கே தெரியும் எங்க அண்ணா அண்ணி எப்படா என்னை எவளிடமாவது பிடிச்சி தள்ளிட்டு பொறுப்பு முடிய கையை கழுவலாம்னு இருந்தாங்க. தானா சஹானா பேமிலி வரவும் செட்டாகிடுச்சு.

இப்ப கல்யாணம் ஆகப்போகுது. அவ்ளோ தான்டா நடந்துச்சு. நீங்க நினைக்கிற மாதிரி 18+ எதுவும் ஓடலை.” என்று சோகமாய் விவரிக்கவும் “பச் இன்ட்ரஸ்ட் குறைச்சலா போச்சே” என்று அம்ரிஷ் சலிப்படைந்தான்.

   “உன் கல்யாணத்துல காரசாரமா மசாலாவை தூக்கி போடுடா. என் காதல் கைக்கூடியது போதும். எனக்கு இதே ஹாப்பி.” என்றுரைத்தான்.

  “மாப்பிள்ளை குடிக்க கூல்ட்ரிங்க்ஸ் வேண்டுமா?” என்று சஹானா அப்பா சுகுமார் ஆதேஷிடம் பாசமாய் கேட்க, “வேண்டும் மாமா. கொஞ்சமா ஐஸ் போட்டு” என்று நண்பர்களுக்கும் சேர்த்து கூறினான்.
  
   “ஒரு வழியா நாளைக்கு கல்யாணம் வச்சிட்ட” என்று வேதாந்த் கூறவும், அங்கே சிரிப்பலை பரவியது.

  தமிழ் மட்டும் ஏகத்துக்கு அமைதியாக தெரிய, மென்பனியே அவனிடம் பேச முன்வந்தாள்.

  “கதை படிச்சிங்களா? பதில் சொல்லவேயில்லை? நான் பாட்டுக்கு கல்யாணம் பத்தி பேசறேன்” என்று கேட்டாள்.
 
   “காதலை சொல்ல முடியாத சூழல் அப்ப. இப்ப காதலை ஏற்க முடியாத சுழல்ல இருக்கேன்” என்று மொட்டையாக கூறினான் தமிழ்.

    அவன் கூறவருவது புரிந்தும் புரியாமலும் குழப்ப, “என்னால உன்னை கல்யாணம் பண்ண முடியாது மென்பனி. நான் சகஜமா பேசியதை நீ காதல்னு எடுத்துக்கிட்ட” என்று மறுத்தான் தமிழ்.

“நமக்குள்ள காதல் இல்லையா? சகஜமா பிரெண்ட்லியா பேசினிங்களா?” என்று மென்பனி கோபமாக, “அவன் உன்னை விரும்பறான் மென்பனி.” என்று வேதாந்த் மொழிந்தான். தமிழோ “வேதாந்த் சும்மாயிரு” என்று அதட்டினான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “மனதில் விழுந்த விதையே-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *