Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12

மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12

பூஜா சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்வதியோ “என்னடி சொல்ற? நீ செழியனோட தம்பியவா லவ் பண்ண?”  என்று கேட்டார்.

“ஆமாம்மா… எட்டு வருஷமா நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்மா. அக்காவுக்கு செழியனோட கல்யாணம் முடிவானதும், நாங்க ரெண்டு பேருமே அவ்வளவு சந்தோஷப்பட்டோம். அவங்க கல்யாணத்தால எங்க காதல் விஷயம் சுலபம் ஆகிரும்ன்னு  நினைச்சோம். ஆனா அவங்க கல்யாணத்துனாலேயே எங்களால சேர முடியாம போயிருச்சும்மா…” என்று சொல்லி அழுத பூஜாவிற்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே பார்வதிக்கு தெரியவில்லை.

பார்வதியும் என்ன சொல்வது என்றே தெரியாமல் சில நொடி அமைதியாகவே நிற்க, சிறிது நேரம் யோசித்தவர் “இங்க பாரு பூஜா… அம்மா சொல்றேனு தப்பா எடுத்துக்காத. உன்னோட காதல் எல்லாமே உண்மைதான். நான் இல்லைன்னு சொல்லல. முதல் காதலை நம்மளால மறக்கவும் முடியாது. ஆனா இப்போ காலம் கடந்து போயிருச்சுடி…. உனக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆயிருச்சு. அப்படி இருக்கும்போது நீ இன்னும் அவனை பத்தி பேசிட்டு இருக்கிறது ரொம்ப தப்பு” என்று பார்வதி சொல்ல

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் பூஜாவோ அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள்.

“எங்க மேலயும் தப்பு இருக்குடி. அதையும் நானே ஒத்துக்கிறேன். பூர்ணாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணும் போதே அவகிட்ட அவளோட முடிவை நாங்கள் கேட்டு இருக்கணும். ஆனா கேட்கல. அதே தப்பை தான் உன்னோட விஷயத்துலையும்  பண்ணோம். இங்க எல்லா முடிவுமே பெண்களாலேயே எடுக்க முடியுறது இல்ல. அதே சமயம் பெண்கள் சொல்றதை யாரும் இங்க ஒரு பொருட்டா கூட மதிக்கிறது இல்லை. உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி கூட நான் உங்க அப்பா கிட்ட அவ்வளவு தூரம் சொன்னேன், பூஜாவுக்கு இந்த கல்யாணம்  வேண்டாம்ன்னு.  ஆனா உங்க அப்பா அம்மா சொல்றதை காது குடுத்து கூட கேட்கல. மாப்பிள்ளையை பார்த்தா கொஞ்சம்  நல்லவரா  தான் தெரியுது.  ஒரு அம்மாவா என்னால இதைத்தான் உனக்கு சொல்ல முடியும்” என்று பார்வதி சொன்னதும்

“நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்மா. என்னோட மனசுல இருக்குறத யார்கிட்டயாவது சொல்லி அழுதாவது என்னோட மனசுல இருக்க பாரம் குறையும்ன்னுதாம்மா உன்கிட்ட சொன்னேன். மத்தபடி எனக்கு கண்ணன் கூட தான் வாழனும்னு இப்போ எந்த ஆசையும் இல்லம்மா. எனக்கே தெரிஞ்சிருச்சு… காலம் கடந்து போயிடுச்சு…. எல்லாமே முடிஞ்சு போச்சு… இதுக்கு அப்புறம் போன நிமிஷம் திரும்ப வராதுன்னு எனக்கும் தெரியும். இப்போ உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் என் மனசு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்மா..” என்று சொல்லிய பூஜாவும் மூச்சை வேகமாக இழுத்து விட்டபடியே படுக்கையில் போய் உட்கார்ந்தாள்.

“சரிடி… போய் குளிச்சிட்டு வா…” என்று பார்வதி சொன்னதும்

“என்னோட மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. தயவு செய்து என்னை கட்டாயப்படுத்தாதீங்க. இப்போ இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவைதானாம்மா?” என்று பூஜாவும் உடைந்த குரலில் கேட்க

“ஏய் லூசு… உன்னோட முகத்தை பார்க்கவே சகிக்கல. அதனால தான் போய் குளிச்சிட்டு வர சொன்னேன். நீ என்ன சொல்றது? மாப்பிள்ளையே இப்போ இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவையில்லைன்னு உங்க அப்பா கிட்ட வந்து பேசிட்டு, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தங்கிக்கிறேன்ன்னு  கிளம்பி போயிட்டாரு” என்று பார்வதி சொன்னதும் அதை கேட்ட பூஜாவிற்க்கோ இது அதிர்ச்சியாக இருந்தது.

“என்னம்மா சொல்ற?” என்று பூஜா அதிர்ச்சியாக கேட்க

“ஆமாடி… அவரா தான் அப்பா கிட்ட வந்து உன்ன ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம். திடீர் கல்யாணம்னு சொன்னதே உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க சமயத்துல இந்த மாதிரி சடங்கு எல்லாம் தேவை இல்லைன்னு பேசினாரு. அவர் அப்படி பேசுறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கே இந்த கல்யாணம் நடந்ததுல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. ஆனா இப்போ மாப்பிள்ளை நல்லவரா இருப்பாருன்னு தோணுது. அதனால உன்னோட வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்டி. நீ எதுக்காகவும் தான் யாரையும் நினைச்சு வருத்தப்படாத… சரியா? போய் குளிச்சிட்டு வந்து நிம்மதியா தூங்கு. அம்மா எப்பவும் உன் கூட இருப்பேன். உனக்கு எந்த கஷ்டம்னாலும் அம்மா கிட்ட சொல்லு சரியா? இந்த நிமிஷம் கொஞ்சம் நிம்மதியா இரு.  நாளைக்கு காலைல எதுனாலும் பேசிக்கலாம்”  என்று சொல்லிய பார்வதியோ அந்த அறையை விட்டு கிளம்ப

“அம்மா. …  அப்போ நாளைக்கு தருண் வீட்டுக்கு…..” என்று பூஜாவோ எதையோ கேட்க வர

அவள் கேட்க வருவதின் அர்த்தம் புரிந்த பார்வதியோ “ஆமாடி… அதுதான முறை…. நாளைக்கு காலைல வந்து மாப்பிள்ளை பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு. ஆனாலும் நீ பயப்படாத. எனக்கு என்னமோ மாப்பிள உன்கிட்ட கன்னியம்மா தான் நடந்துருப்பாருன்னு தோணுது” என்று சொன்னதும்

அதற்கு மறுப்பு சொல்ல முடியாதவளாய் “அம்மா…. அப்போ இன்னைக்கு நைட்டு என்கூட தூங்குறியா?” என்று கேட்டாள்.

“சரிடி… கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு…. அதை முடிச்சுட்டு வரேன். நீயும் அதுக்குள்ள குளிச்சிட்டு வந்து தூங்கு” என்று சொல்லியவர் அந்த அறையை விட்டு கிளம்பினார்.

இரவு இரண்டு மணி ஆகியும் கண்ணன் இன்னும் அவனுடைய வீட்டிற்கு வரவில்லை.

மூன்று மணிக்கு கண்ணன் வீட்டுக்கு வந்த பூர்ணாவோ அதுவரையிலும் தூங்காமல் சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்.

உள்ளே வந்தவன் பூர்ணா சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு கண்டு கொள்ளாமல் அவனுடைய அறையை நோக்கி நடக்க,

“என்ன யாஷ்… சென்னை போன விஷயம் என்ன ஆச்சு? எதுவுமே சொல்ல மாட்றீங்க? எதுக்கு இப்படி நடந்துக்கிறீங்க? உங்களுக்கு நான் இப்போ இங்க இருக்கிறது தான் பிரச்சனை அப்படின்னா ஓப்பனாவே சொல்லிடுங்க. நான் இப்பவே கிளம்பி என்னோட வழிய பார்த்துட்டு போறேன். நீங்க தானே என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க? அப்படி இருந்தும் என்னை ஏதோ வேண்டா விருந்தாளியாவே பாக்குறீங்க. எனக்கு எதுவுமே புரியல” என்று பூர்ணாவோ வருத்தமாக செல்ல

பூர்ணா முதல் வார்த்தை பேசும் பொழுதே அதுவரை இயல்பாக இருந்த கண்ணனின் கோபம் தலைக்கேறியது.

கோபத்தில் தன் அருகில் இருந்த சேரை வேகமாக தன் கையால் அடித்தவன் “என்ன சொல்ல சொல்றீங்க? எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.  உங்களால தான் என்னோட வாழ்க்கையே இப்படி ஆயிடுச்சு.  இப்போ உங்களுக்கு சந்தோஷமா?” என்று கோபத்தில் கத்தினான் அவன்.

அவன் பேசுவது எதுவும் புரியாதவளோ “என்ன சொல்றீங்க? உங்க அண்ணனோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு  நான் தான் காரணம்னு சொல்றீங்க. அதை கூட நான் ஏத்துக்கிறேன்.  அதுக்கு  நான் தான் காரணம்.  என்னோட பக்கம் இருக்க ஒரே தப்பு அது தான்.  ஆனா இப்போ உங்களோட வாழ்க்கையும் என்னால தான்  இப்படி ஆகிருச்சுன்னு சொல்றீங்க. இது எந்த வகையில் நியாயம்?  கொஞ்சம் விட்டா உங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு ஏதாவது சின்ன பிரச்சனை வந்தா கூட அதுக்கு நான் தான் காரணம்ன்னு சொல்லுவீங்க போல” என்று பூர்ணாவும் இப்பொழுது பதிலுக்கு கோபமாக பேசினாள்.

அவளின் கோபத்தை பார்த்தவனுக்கு கோபம்  இன்னும் அதிகமாகியது.

“ஹோ… உங்களுக்கு கோபம் வேற வருதா? எல்லோரோட வாழ்க்கையையும் மொத்தமா அழிச்சுட்டு உங்களால எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது? முதல்ல எங்க அண்ணனோட வாழ்க்கையை கெடுத்து உங்க வாழ்க்கையையும் கெடுத்துடீங்க.  இப்போ உங்க கூட பொறந்த தங்கச்சி வாழ்க்கையும் கெடுத்து என்னோட வாழ்க்கையும் கெடுத்துட்டீங்கல்ல?”  என்று அவன் சொன்ன வார்த்தையில் பூர்ணா அதிர்ச்சியாகி தான் போனாள்.

“என்ன சொல்றீங்க யாஷ்? பூஜாவுக்கு என்ன ஆச்சு?” என்று அவளோ எதுவும் புரியாதவளாய் கேட்டாள்.

“இதுக்கு மேல என்ன ஆகணும்?  நீங்க பண்ண தப்புக்கு அவள் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கா” என்று கண்ணன் சொன்னதும்

“என்ன சொல்றீங்க? எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க. எனக்கு படபடன்னு இருக்கு. பூஜாவுக்கு என்ன ஆச்சு”  என்று கேட்டாள்.

“இதை விட  அவளுக்கு பெரிய தண்டனை என்ன வேணும்? இதுக்கு பூஜா செத்தே போயிருக்கலாம். இப்ப  அவள் மனசுல  அந்த அளவுக்கு வலியை அனுபவிச்சிட்டு இருப்பா.  என்னை எவ்வளவு லவ் பண்ண தெரியுமா? எட்டு வருஷமா என் மேல உயிரா இருந்தா. நான் கூட நிறைய முறை அவ கிட்ட செல்பிஷா நடந்து இருக்கேன். ஆனா அதை எல்லாம் அவள் அன்பா தான் திருப்பி கொடுத்திருக்கா…  ஆனா  நீங்க கல்யாணம் அன்னைக்கு ஓடி போனதுனால உங்க அப்பா அவளுக்கு அவசர கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு..  என் கண்ணு முன்னாடியே நான் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு கழுத்துல வேற ஒரு தன் தாலி கட்டுனான். உயிருக்கு உயிரா காதலிச்சவன் கண்ணு முன்னாடியே வேற ஒருத்தன் கையால தாலி கட்டுகிறது  அவளுக்கு எவ்வளவு பெரிய கொடுமையா இருந்திருக்கும்?  அந்த கொடுமையை என்னோட பூஜா அனுபவிச்சா. எல்லாம் உங்களால தான் உங்களால தான்”  என்று சொன்னவனும் அந்த அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி கீழே வீசி உடைத்து பைத்தியம் போல கதறி அழுக ஆரம்பித்தான்.

பூஜா, தன்  கழுத்தில் கண்ணன் கண் முன்னே  தாலி ஏறிய போது,  கண்ணனின் மனநிலையை பற்றி யோசித்து வருத்தப்பட்டதும்,  இப்போது கண்ணன், பூஜாவின் மனநிலை என்னவாக இருக்கும் என்று யோசித்து வருத்தப்படுவதும் இவர்களுக்குள்ளான காதலின் ஆழத்தையே காட்டுகிறது.

எவ்வளவு வருட காதலாக இருந்தால் என்ன? எத்தனை ஆழமான காதலாக இருந்தால் என்ன? இங்கே விதியின் முடிவே இறுதியானது.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *