Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 18

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான். 

ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில் கைவைத்து அழுத்திக்கொண்டு எழுந்து சுற்றும் மற்றும் பார்த்தான். இது அவனது அறையல்ல. சற்று நேரம் கழித்து தான் நேற்று நடந்த ஒவ்வொன்றும் அவன் நினைவுகளில் வர, “சோனா” என்று சத்தமாக கத்திக் கொண்டு  வேகமாக எழுந்து குளியலறை கதவைத் திறந்தான்.

அங்கும் அவள் இல்லாது வெறுமையாக இருக்க, ஏதோ அவனுக்குள் ஒரு வெறுமை தோன்றுவதை போல் உணர்ந்தான். 

“எங்கே போனாய் சோனா?” என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அதன் பிறகு விடுதியின் ஊழியர்களை அழைத்து சோனாவை பற்றி விசாரிக்க, அவள் ரொம்ப ஹை ஃபை கால் கேர்ள்ஸ் சார் என்று தான் பதில் கிடைத்தது. சாதாரணமானவர்கள் எல்லாம் அவளை நேரடியாக நெருங்க முடியாது என்றும் தெரிந்தது. 

அவளை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சியில் இரண்டு நாட்கள் டெல்லியிலேயே சுற்றினான். அதற்குள் சென்னையில் அவனை வேலை அழைக்க, வேறு வழியில்லாமல் பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சென்னை நோக்கி வந்து விட்டான். 

“நான் கடைசியாக சோனாவிடன் இருந்தது தான். அதன் பிறகு வேறு எந்த பெண்ணையும் என்னால் தொட முடியவில்லை. அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டெல்லி சென்று அவளை தேட முயற்சி செய்தேன். ஆனால் பலன் தான் தோல்வி அடைந்தது. 

அதன் பிறகு என் வாழ்க்கையில் மாது இல்லாமல் புகையையும் மதுவையும் வைத்து  சோனாவை மறக்க முயற்சி செய்தேன். 

அதன் பலன் பூஜ்ஜியம் தான். அதன் பிறகு காமாட்சி அம்மாவை சந்தித்தேன்” என்று காமாட்சியை பற்றியும் கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இணைந்ததை பற்றியும் கூறினான். 

கதிரை சந்தித்ததை பற்றி கூறினான். “அவன் சென்னை வந்ததும் என்னிடம் பெர்மிஷன் கேட்டு நின்றது எதற்காக தெரியுமா?” என்று மாதவியை பார்த்தான். அவள் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க “விபச்சார ரெய்டுக்குத்தான்” என்றான். 

அவள் கண்கள் விரிய அவனைப் பார்க்க,  நான் அவனிடம் இது தேவை இல்லாத விஷயம் என்று எத்தனையோ தடவை சொன்னாலும், சொல்லும் பொழுது ஒவ்வொரு தடவையும், “என்னால் ஒரு பெண்ணையாவது காப்பாற்ற முடிந்தால் அதுவே எனக்கு மனதிருப்தி சார்” என்று தான் சொல்லுவான்.

அதன் பிறகு அவனைப் பற்றி முழுவதுமாக விசாரித்து தெரிந்து கொண்டேன். அவன் சோதனையில் கிடைக்கும் பெண்களை காப்பாற்றி, அவர்களின் நல்வாழ்வுக்கு வழி செய்து கொடுத்திருக்கிறான் என்று அவனைப் பற்றி தெரிந்ததும், என் கண் முன்னால் வந்தது சோனா தான். காக்கி உடை போட்டு கதிர் செய்யும் வேலையை, கலர் உடை போட்டு சோனா செய்து கொண்டிருக்கிறாள் என்று, நினைத்துக் கொள்வேன். 

கதிருக்கு என்னால் ஆன உதவிகளையும் செய்து கொடுத்தேன். அவனது வேலையில் மிகவும் நேர்மையாக இருப்பதால், அடிக்கடி இடம் மாற்றம் இருந்தது. ஆனால் அவன் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை அதனால் தான் இந்த வீட்டையே அவனுக்கு வாங்க வலியுறுத்தினேன். சொந்தமாக ஒரு இடம் இருந்தால், அங்கேயே நிரந்தரமாக இருப்பான் என்ற நம்பிக்கைதான்.  

ஒரு முறை சோதனைக்கு அனுமதி கேட்கும் பொழுது, நான் தேவை இல்லாமல் உன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறாய், என்று அவனிடம் கூறினேன். அப்பொழுதுதான் உன்னை சந்தித்து வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் உன்னை தேடித்தான் எல்லா தேடுதல் வேட்டைகளை நடத்தினான் என்று தெரிந்து கொண்டேன். உன்னை பார்த்ததுமே என் உள்ளம் குதூகலித்ததை நான் மட்டுமே அறிவேன் சோனா” என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். 

“உன்னை தீண்டிய பிறகு வேறு யாரையும் என்னால் தொட முடியாமல்  உனக்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன். நீ கிடைக்காவிட்டாலும் இப்படியே தான் இருந்திருப்பேனே தவிர, நிச்சயம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து  இருந்திருக்க மாட்டேன். அதை மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். இப்பொழுதும் நீ என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாய் என்றால், நான் திருமணம் முடிக்காமல் இருப்பேனே தவிர, வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வேன் என்று கனவில் நினைக்காதே. 

உனக்கு எப்போ என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது சொல். அதுவரை நான் காத்திருக்கிறேன் ஆனால் கல்யாணம் மட்டும் வேண்டாம் என்று சொல்லி விடாதே! பெண்பாவம் மட்டுமல்ல, ஆண்பாவமும் பொல்லாதது தான். ஞாபகம் வைத்துக் கொள்.  

அது மட்டுமல்ல நீ சீக்கிரம் திருமணம் முடித்தால்தான், கதிர் அவன் திருமண வாழ்க்கையை பற்றி யோசிப்பான். இல்லையென்றால் அவனும் தனியாகவே இருந்து விடுவேன் என்று தான் சொல்வான். நல்லா யோசனை செய்து முடிவெடு” என்று அவளை மறைமுகமாக மிரட்டி விட்டு, “டைனிங் டேபிள்ல உனக்கு சாப்பாடு இருக்கும்.  இப்பொழுது உடனே வந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல யோசித்து முடிவு எடுத்துவிட்டு வந்து கூட சாப்பிடலாம். நான் காலையில் வந்து பார்க்கும் பொழுது நீ சாப்பிட்டு இருக்க வேண்டும், அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு, கதவை திறக்கச் சென்றவன் அப்படியே திரும்பி “ஒன்னு சொல்ல மறந்துட்டேன். உன் தம்பியை கடத்தி இப்படி அடித்தவர்கள் யார் என்று தெரியுமா?” என்றான் அவள் தெரியாது என்று தலையை ஆட்ட, 

“***** கட்சி காரர்கள் தான். அவர்கள் தலைவனுக்கு நீ வேண்டுமாம்” என்றான் சாதாரணமாக. 

அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க, 

“நான் தெளிவா சொல்லிட்டு வந்துட்டேன். அவள் என் மனைவி என்று. வேண்டுமென்றால் உன் மனைவியை கொண்டு போய் அவனிடம் விடு” என்று இங்குள்ளவனிடம் சொல்லி இருக்கிறேன். அவன் கோபத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதற்காக எல்லாம் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீயே யோசித்து முடிவு எடுத்துக் கொள்” என்று ராகமாக சொல்லிவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்று கதவை மூடிவிட்டான். 

தேவராஜன் வெளியில் வரும் பொழுது காமாட்சி, கதிருக்கும் மாதவிக்கும் தேவையான இரவு உணவை மேஜையில் வைத்துக் கொண்டிருந்தார் “நீ இப்போ சாப்பிடுகிறாயா? தேவா” என்றார்.

“இல்லையம்மா கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன்” என்று காமாட்சியிடம் சொல்லிவிட்டு கதிரை பார்த்து “நீ இப்பொழுது சாப்பிடுகிறாயா? இல்லை உன் அறையில் வைத்து விடட்டுமா?” என்றான். 

“அக்கா என்ன சொன்னா? கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டாளா சார்?” என்றான். 

“உன் அக்கா கல்யாணத்திற்கு சம்மதிக்கிறாளோ இல்லையோ! நான் அவளை என் மனைவியாக மனதில் நினைத்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இனிமேல் இருக்காது. அதனால் சும்மா என்னை சார் என்று சொல்லாதே! ஒழுங்கா மாமா என்று சொல்ல வேண்டும். சரியா?” என்று அவன் முடியை செல்லமாக கலைத்து விட்டு, “சரி வா, அவள் எப்பொழுது வெளியே வருகிறாள் என்று தெரியாது. உன்னை உன் அறையில் விட்டுவிட்டு செல்கிறேன்” என்று அவனை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு அவனது அறையில் விட்டுவிட்டு, அவனுக்கு தேவையானவற்றையெல்லாம் அவனின் கையருகே எடுத்து வைத்துவிட்டு, ஃபோனை அவன் கையில் கொடுத்து, “எது வேண்டுமென்றாலும் எனக்கு ஃபோன் செய். நான் கதவை வெளியே பூட்டிவிட்டு செல்கிறேன்” என்று கூறி வெளியே வந்தான். 

காமாட்சி  மாதவியின் அறைக்கதவை பார்த்தபடி உட்கார்ந்திருக்க, அவரின் அருகில் வந்து அமர்ந்த தேவராஜன், “அம்மா அவளிடம் எல்லாம் சொல்லி இருக்கிறேன். நல்ல முடிவாக சொல்வாள் என்று நினைக்கிறேன். வாங்க நம்ம வீட்டுக்கு போவோம்” என்று அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்ததும்”அவள் என்னை கல்யாணம் செய்து கொள்வாள் அல்லவா? அம்மா” என்று ஏக்கமாக காமாட்சியிடம் கேட்டான். 

அவன் கேட்டதும் காமாட்சிக்கு கண்கள் கலங்கிவிட்டது. “உன்னை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? கண்ணா. உன்னை போல் ஒரு கணவன் கிடைக்க மாதவி நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நிச்சயம் அவள் உன்னை கட்டிக் கொள்ள சம்மதிப்பாள். கவலைப்படாதே!” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அழைத்து வந்தார். 

அதன்பிறகு தன் தம்பி தங்கைகள் உறங்கியதும் தன் பெற்றோரிடம் மாதவியைப் பற்றி முழுவதையும் கூறினான். 

தன் தந்தையை பார்த்து “உங்கள் மேல் உள்ள கோபத்தில் இல்லாத கெட்ட பழக்கத்தை எல்லாம் கற்றுக்கொண்டு இருந்தேன் அல்லவா? அப்படி இருக்கும் பொழுது, டெல்லியில் நான் சந்தித்த ஒருத்தி தான் மாதவி” என்று அன்று மாதவி அச்சிறுமியை காப்பாற்றியதை பற்றி கூறினான். 

மாதவியை அழைத்துக் கொண்டு கதிர் இங்கு வந்து பொழுதே அவளின் கதையை அரசல் புறசலாக தெரிந்திருந்த காமாட்சிக்கு, இன்று பெத்த தந்தையே அவளை கொண்டு போய், பாலும் கிணத்தில் தள்ளி இருக்கிறான் என்ற செய்தியில் அவரது நெஞ்சம் வெடிப்பது போல் வலித்தது. 

இப்படி கூட மனிதன் இருப்பானா? பெற்ற மகளையே கொண்டு போய் இப்படி செய்திருக்கிறானே என்று அவள் கண்கள் கலங்கி அழுதார். தன் தாயை தோளுடன் அனைத்து ஆறுதல் செய்த தேவராஜன், “என்றோ நடந்ததற்கு இன்று நீங்கள் ஏன் அம்மா அழுகுறீர்கள்?” என்று சொல்லி “இனிமேல் அவள் வாழ்க்கை நம்முடன் நலமாக இருக்கும். அதை மட்டும் நினைத்து மகிழ்ச்சி கொள்வோம்” என்றான். 

“ஆனாலும் உங்கள் மருமகள் லேசு பட்டவள் அல்ல! தான் பட்ட கஷ்டம் வேறு எந்த ஒரு பெண்ணிற்கும் வரக்கூடாது என்று அவளின் கண் முன் இதே போல் ஏதாவது அநீதி நடந்தால் உடனே அப்பெண்களை காப்பாற்ற முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள். 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? கதிர் தன் அக்காவை, அவனது அப்பா ஏதோ ஒருவனிடம் விற்று விட்டான் என்று தெரிந்ததிலிருந்து, போலீசாக சேர்ந்து தன் அக்காவை காப்பாற்ற வேண்டும் என்று சிறுவயதிலேயே முடிவெடுத்து இருக்கிறான். அப்படித்தான் அவன் வேலைக்குச் சேர்ந்த பிறகு எந்த ஊரிலும் இருந்தாலும் அந்த ஊரில் நடக்கும் விபச்சார விடுதியை சோதனை இட்டு, கட்டாயப்படுத்தி இருக்கும் பெண்களை எல்லாம் காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறான். 

உண்மையில் நான் கதிர் மாதவி பாசத்தில் மெய்சிலிர்க்கிறேன் அம்மா. இருவரும் பிரிந்து இருந்தாலும், இருவரது எண்ணங்களும் ஒன்று போல் இருந்திருக்கிறது பாருங்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல இருவருமே எத்தனையோ பெண்களை காப்பாற்றி இருக்கிறார்கள்” என்று உள்ளம் உருக பேசிக் கொண்டிருந்தான் தேவராஜன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

9 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 18”

  1. CRVS2797

    உண்மையிலேயே இந்த கதையில் வரும் தேவராஜன், இந்திரன், காமாட்சி, மாதவி, கதிர் இவர்கள் ஐவருமே மனிதருள் மாணிக்கம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *