Skip to content
Home » வெகுளாமை-31

வெகுளாமை-31

அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31

குறள்: 301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்

பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன?

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்: 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற

பலிக்காத இடத்தில்‌ (தன்னைவிட வறியவரிடத்தில்‌) சினம்‌ கொள்வது தீங்கு; பலிக்கும்‌ இடத்திலும்‌ (மெலியவரிடத்திலும்‌) சினத்தைவிடத்‌ தீயவை வேறில்லை.

குறள்: 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

யாரிடத்திலும்‌ சினங்‌ கொள்ளாமல்‌ அதை மறந்துவிட வேண்டும்‌; தீமையான விளைவுகள்‌ அந்தச்‌ சினத்தாலேயே ஏற்படும்‌.

குறள்: 304

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

முகமலர்ச்சியையும்‌ அகமகிழ்ச்சியையும்‌ கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப்‌ பகையானவை வேறு உள்ளனவோ?

குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன்‌ தன்னைத்தான்‌ காத்துக்கொள்வதானால்‌, சினம்‌ வாராமல்‌ காத்துக்கொள்ள வேண்டும்‌; காக்காவிட்டால்‌ சினம்‌ தன்னையே அழித்துவிடும்‌.

குறள்: 306

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

சினம்‌ என்னும்‌ சேர்ந்தவரை அழிக்கும்‌ நெருப்பு, ஒருவனுக்கு இனம்‌ என்னும்‌ இன்பத்‌ தெப்பத்தையும்‌ சுட்டழிக்கும்‌.

குறள்: 307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

(தன்‌ வல்லமை புலப்படுத்தச்‌) சினத்தைப்‌ பொருளென்று கொண்டவன்‌ அழிதல்‌, நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல்‌ ஆகும்‌.

குறள்: 308

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

பல சுடர்களை உடைய பெருநெருப்பில்‌ தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன்‌ செய்தபோதிலும்‌, கூடுமானால்‌ அவன்மேல்‌ சினங்‌ கொள்ளாதிருத்தல்‌ நல்லது.

குறள்: 309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

ஒருவன்‌ தன்‌ மனத்தால்‌ சினத்தை எண்ணாதிருப்பானானால்‌, நினைத்த நன்மைகளை எல்லாம்‌ அவன்‌ ஒருங்கே பெறுவான்‌.

குறள்: 310

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

சினத்தில்‌ அளவுகடந்து சென்றவர்‌ இறந்தவரைப்‌ போன்றவர்‌; சினத்தை அடியோடு துறந்தவர்‌ துறந்தவர்க்கு ஒப்பாவார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *