Skip to content
Home » அரளிப்பூ 15

அரளிப்பூ 15

அன்றில் இருந்து சதாசிவம் தனக்கு இயலினி என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தது என்பதையே மறந்து விட்டார்… அதாவது கொஞ்சுவதற்கும் அன்பு காட்டுவதற்கும் நீ என் மகள் என்று கூறுவதற்கும் மட்டும் அவள் அவரின் மகள் அல்ல.

மற்ற நேரங்களில் அவள் ஏதேனும் ஒன்று செய்து அதனால் ஏதேனும் நடந்தால் அதை குறை கூறுவதற்கும் அதை வைத்து திட்டி தீர்ப்பதற்கும் மட்டும் இயலினியிடம் வந்து விடுவார்.

பதினைந்து வயது வரைக்கும் அழகோவியம்மானவள்… மலர்ந்த தாமரை முகத்தவள்… பார்ப்போர் அனைவரும் விரும்ப கூடிய மலர் போன்ற அவள்… அன்பையும் மகிழ்வையும் மட்டும்மே அவளை காண்போர்களுக்கு தர கூடிய மலரானவளை அன்று இந்த ஊரே சேர்ந்து அரளிப்பூவாக மாற்றி விட்டது.

மலரானவள் வார்த்தையில் விஷத்தை ஏற்றி விட்டது… அவளின் பார்வையில் எள்ளலும் நக்கலும் ததும்பி இருக்கும் படி செய்து விட்டது ஊரார்கள்… அந்த நிகழ்வின் பின்னும் அவள் என்னம்மோ மகிழ்வாக தான் இருந்தாள்… ஆனால் என்ன? அவளை சுற்றி உள்ளவர்கள் தான் எப்போது எதை சொல்லி விஷத்தை கக்வி விடுவாளோ என்று அரண்டது… அவளின் செயல்களை கண்டு இப்போது இவள் செய்த இந்த செயலால் என்ன வில்லங்கம் நம்ப எல்லாருக்கும் வர போகுதோ என்றே தான் எப்போதும் பயம் கொள்வார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.

ஏனோ அந்த வயதில் இயலினிக்கு படிப்பு என்றால் கொள்ளை இஷ்டம்… ஆகையால் அவள் படிப்பை விட சிறிதும் விரும்ப வில்லை… எப்படியாவது படித்து பேர் வாங்கி இந்த ஊரார்களின் முகத்தில் கரியை பூசி விட வேண்டும் என்று காலையிலேயே கிளம்பி பள்ளி கூடத்திற்கு சென்று விடுவாள்… அவள் அரசு பள்ளியிலேயே படித்த காரணத்தினால் அவள் மதிய உணவை பள்ளி கூடத்திலே உண்டு விடுவாள்.

மாலை நான்கு நான்கு அரைக்கு எல்லாம் பள்ளியில் இருந்து வீடு திரும்புபவள் கலைப்பறித்தல் பருத்தி எடுத்தால் இது போன்ற வேலைகளுக்கு எல்லாம் மாலையில் சென்று விடுவாள்… அவ்வாறு மாலையில் செல்லும் போது ஒரு நாளைக்கு ஆரம்பத்தில் எல்லாம் வெறும் முப்பது ரூபாய் தான் கிடைத்தது.

அந்த முப்பது ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்கி அதை கஞ்சாக வைத்து காலைக்கும் இரவுக்கும் உண்ணும் பழக்கத்தை அந்த வயதிலேயே செய்து கொண்டாள்… பிறரிடம் இனாமாக கை நீட்டி வாங்க கூடாது என்பதிலும் தீவிரம்மாக இருந்தாள்.

செல்லத்தாயி எவ்வளவோ கூறி விட்டார்… “என்னோடு வா… நம்ம போயி நம்ம வீட்டுல இருக்கலாம்… நான் உன்னைய பார்த்துக்கிறேன்… நீ எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற? நீ எதுக்கு இங்க இப்படி தங்கணும்? நீ எதுக்கு வேலைக்கு போற? படிக்கிற வேலைய மட்டும் பாரு… நான் இன்னம் உயிரோட தான்டி இருக்கேன்… என் கூட வா டி… நான் உன்னைய நல்லா பார்த்துப்பேன்… வா ஆத்தா…” என்று எல்லாம்

இரண்டு இரண்டு குச்சியை இடைவெளி விட்டு இரண்டு குச்சி கூம்பாக தாங்கி இருக்கும் படியாக வைத்து இரு கூம்பின் மீது விட்டம் போல் ஒரு குச்சியை வைத்து கூம்பாக இணைத்து இருக்கும் இரு குச்சிகளுக்கும் பக்க வாட்டில் விட்டம் போல் இரு பக்கமும் இரு குச்சிகளை வைத்து சன்னல் கயிறை கொண்டு கட்டினாள்.

அதன் மீது விசாலம் வம்படியாக தந்த படுதா இரண்டு போர்வைகளை கொண்டு கூடாரத்தை அமைத்து கொண்டு இருந்தவளிடம் கூறினார் செல்லத்தாயி.

அவளோ எதுவும் பேச வில்லை… அவள் செய்யும் வேலையவே செய்து கொண்டு இருந்தாள்… பேசி பேசி முடியாமல் போன செல்லத்தாயி பேத்தியை தனியே விட்டு விட்டு போக முடியாது என்று அவளுடனே தங்கி கொண்டார்.

பெண் பிள்ளை அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த பிரச்சினையால் தனியா வந்து விட்டதாக இருந்தும் அவளின் படிப்பில் எந்த குறையும் அவள் வைக்க வில்லை… நன்றாக படித்து நானூற்றி என்பத்தியெட்டு மதிப்பெண்களுக்கு மேல் அரசு பள்ளியிலேயே எடுத்தாள்.

அவளின் பெயர் புகைப்படங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் டிவியில் எல்லாம் வந்தது… பள்ளிகளே இயலினியை பெருமை படுத்தியது… அவளின் ஊர் பெயர்களை பெருமை படுத்தியது… அவளின் பெற்றோரின் பெயரையும் பெருமை படுத்தியது.

இறுதியாக இயலினியின் முன் வந்து செய்திக்காரர்கள் நின்று பேட்டி எடுக்கும் போது, “அரசு பள்ளியில் படித்து இந்த அளவுக்கு அதிக மதிப்பெண் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்… நீங்க இவ்வாறு மாவட்டத்திலே முதல் இடத்தை பிடித்தமைக்கு உங்களுக்கு உந்துகோலா இருந்தது யாரு? உங்கள ஊக்குவித்தது யாரு? மற்ற மாணவர்களுக்கு எல்லாம் நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?” என்று எல்லாம் கேள்விகள் கேட்டார்கள்.

இயலினியும் அழகாக, “என்னோட வெற்றிக்கும் நான் முதன்மையான மதிப்பெண்ணையும் பெற முழுக்க முழுக்க காரணம் நான் தான்… என் திறமை தான்… அத நானே எனக்கு பெருமையா சொல்லிப்பேன்… அதே நேரம் என்னைய ஊக்குவித்தது வேணும்ன்னா எங்க ஊர்கார கீழ் ஜாதி பையன் கிட்ட நான் சிரிச்சி பேசிட்டேன்னு சொல்லி என்னைய பஞ்சாயத்துல நிக்க வச்சி அடிச்சி அசிங்க அசிங்கம்மா பேசி என் ஊரும் ஊரில் உள்ள மக்களும் என்னைய ஊக்குவிச்சாங்க… அதே மாதிரியே என்னைய பெத்து வளர்த்து அதே ஊர் மக்கள் என்னைய தப்பா ஏதோ சொன்னாங்கன்னு அவங்க கௌரவமே போச்சின்னு என்னைய அனாதையா விட்டுட்டு போன என்னைய பெத்தவங்க என் வெற்றிக்கு என்னை ஊக்குவிச்சாங்க…” என்றே கூறியவளை அனைவருமே அதிர்ந்தே தான் பார்த்தனர்.

அதன் பின் என்ன இயலினியின் பெருமை செய்தியில் வரும் போது ஊர் பேர் பெற்றவர்கள் பேர் எல்லாம் வந்து பெருமை படுத்தி கொண்டு இருந்தது எல்லாம் இயலினியிடம் பேட்டி எடுத்ததும் ஊரையும் பெத்தவர்களையும் தூற்றவே ஆரம்பித்தது.

அன்று முதன் முதலாக ஊர் மற்றும் அவளின் பெற்றோர் தமிழ்நாடு முழுக்க அவமானம் பட்டது இயலினியால்… கூடவே அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடந்து இல்லாதவர்களை வறுமையில் உள்ளவர்களை காயப்படுத்துகிறார்கள் என்று கூறியே காரப்பட்டியில் பஞ்சாயத்து நடக்கவே கூடாது என்றும் அன்று பஞ்சாயத்தில் தலைவர்களாக உட்கார்ந்து இருந்தவர்கள் இயலினியின் மீது புகார் சொன்ன பேச்சியப்பன் கூடவே இயலினியை அடித்த சதாசிவம் எல்லாரின் மீதும் வழக்கு பதிந்து பத்து நாள் போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு என்று ஏறி இறங்க விட்டு விட்டாள்.

ஊரே அவள் மீது சினத்தைக் கொண்டது… ஆனால் அதை அவளின் முகத்திற்கு நேராக காட்ட வில்லை… ஏனெனில் பத்தாம் வகுப்பு பாதியில் தான் இந்த பஞ்சாயத்தே நடந்து அவளுக்கு இந்த தண்டனை கிடைத்தது… அடுத்த எட்டு மாதம் அமைதியாக இருந்து ஊரையே பலி வாங்கி விட்டாள்.

இருந்தும் அவர்கள் அத்துடனாவது விட்டு இருக்கலாம்… ஆனால் அவர்கள் என்ன பண்ணினார்கள்? இதுக்கு மேல இவள சும்மா விட கூடாது என்றே இவள் தங்கி இருக்கும் கூடாரத்திற்கு தீயை வைத்து விட்டனர்… அதற்கும் விடுவாளா இவள்… எப்படியும் இது போன்ற தாக்குதல் ஏதேனும் தனக்கு நடக்கும் என்று அறிந்தே இருந்தவள் சிறுக சிறுக அவள் சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில் விலை குறைந்த வீடியோ எடுக்கும் அளவுள்ள ஒரு போனை வாங்கியிருந்தாள்.

சரியாக அவர்கள் தீயை வைக்க வருவதில் இருந்து அவர்கள் வைப்பது வரைக்கும் அவள் வீடியோ எடுத்து அதை அழகாக இன்டர்நெட்டில் விட்டு விட்டாள்… முடிந்தது அவர்களையும் தூக்கி உள்ளே வைத்து கும்மு கும்முவென்று கும்மி விட்டனர் காவல் துறையினர்.

எப்போதுமே இது போன்ற ஒரு அநியாயமோ ஒரு தாக்குதலோ நடந்தால் அரசியல்வாதிகள் தாங்க மாட்டார்கள் அல்லவா? உடனே அவர்களுக்கு ஒரு நன்கொடையை தருகிறேன்… ஆறுதலாக பணம் தருகிறேன் அது இது என்று மீடியா உடன் வந்து கூறுவார்களே.

அது போலவே தான் வந்து சேர்ந்தார் அந்த மாவட்டத்தின் அரசியல்வாதி.

பாவம் அவரின் போராத காலம் இந்த இயலினியிடம் குப்பை கொட்டியே தீர வேண்டும் என்பது தான் விதி போல இயலினி இருக்கும் இடம் வந்து விட்டார் இரண்டு வருடத்தில் தேர்தல் வேறு வர போகின்றது… இந்த நேரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் உதவுவது வெற்றி பெற வழிவகுக்கும் என்று.

வந்தவர் இயலினி இருந்த இடத்தை எல்லாம் பார்த்து விட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு ஆறுதலாக பேசி விட்டு… மக்களிடம் இதற்கு மேல் இந்த பொண்ண யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று எச்சரிக்கையும் விட்டார்.

பின்பு இயலினியின் தோளில் கரத்தை போட அவள் அவரின் கரத்தை ஒரு முறை பார்த்து விட்டு சிறிது அவரை விட்டு விலகி நின்றாள்… உடனே அவர், “அய்யோ பாப்பா… நான் உனக்கு அப்பா மாதிரிம்மா…” என்று கூற

“இப்ப எல்லாம் பெத்த அப்பாவையே நம்ப முடியல சார்…” என்றாள்.

சரி… அந்த பெண்ணா முக்கியம்… நமக்கு ஓட்டு தான் முக்கியம்… அதற்கான வேலையை பார்ப்போம் என்றே மீடியாவை பார்த்து அருகே வரும் படி கண்ணசைக்க அவர்களும் ஓடி வந்து நின்றனர்.

அவர்கள் வந்ததும் அவரும், “நன்கு படித்த மாணவிக்கு இருக்க இடம் இல்லை என்று எவ்வளவு சிரம பட்டு வாழ்ந்து இருக்கிறாள்… அவள் தங்கியிருந்த இடத்தை பார்க்கும் போது என் மனமே அழுகிறது… கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வராத குறையாக நிற்கிறது… இதற்கு மேல் எனது ஆட்சியில் படிக்கும் பெண்களுக்கு இல்லை என்ற எதுவுமே இருக்கக் கூடாது… அவர்களின் தேவைகள் அனைத்தும் நிறை வேற்றப்பட வேண்டும்…” என்றவர்

கருணையாக இயலினியை பார்த்து அருகே வரும் படி கையசைக்க அவளும் வந்து அவரின் முன் நின்றாள்.

இயலினியை சுட்டி காட்டி, “என் பெண் வயதை ஒட்டியவள் தான் இந்த பெண்… இனி நீ எதற்கும் கவலை படாதம்மா… என் ஆட்சியில் உன்னைய போன்ற பெண்கள் எல்லாம் என் மகள் போல தான்… நீ தங்க நான் நல்ல ஒரு ஹாஸ்டலும் அதுக்கு ஆகும் செலவையும் என் கச்சியே பண்ணி தரும்… இது என்னுடைய அன்பளிப்பும்மா மறுக்காம வாங்கிக்கோம்மா…” என்று கூறி ஒரு செக்கை இயலினியின் முன் நீட்டினார்.

அதை வாங்காமல் அவர் நீட்டிய செக்கையே தான் இயலினி சிறிது நேரம் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் வாங்காததை கண்டு அவர், “என்ன ஆச்சிம்மா? வாங்கிக்கோ… இது உனக்கு தான்… உன் தேவைக்கு பயன்படுத்திக்கோ…” என்று அவர் கூற

“இல்ல சார்… எனக்கு இது எல்லாம் வேணாம்… எனக்கு இப்படி இனாமா வாங்குறது பிடிக்காது…” என்று கூறியே இயலினி அங்கு இருந்து நகர போனாள்.

என்னடா இது வம்பா போச்சி என்றே அவரும், “இது இனாம் எல்லாம் இல்லம்மா… எல்லாமே உங்களுக்கான பணம் தான்… எங்கள மாதிரி அரசியல்வாதிகள் எல்லாம் எதுக்கு இருக்காங்க? உங்களுக்கு சேவை செய்ய தான் இருக்கோம்… அதனால இதை இனாமா நினைக்காத… உன்னைய மாதிரி இருக்குற எல்லாரோட சிறப்பா அமைக்க வேண்டியதும் என் கடமை தான் ம்மா…” என்று கூற கூற இயலினியும் அவர் கூறியதையே தான் கவனித்தாள்.

4 thoughts on “அரளிப்பூ 15”

  1. CRVS2797

    அப்படின்னா…. ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயிருக்கே.

  2. Kalidevi

    Good iyal unnoda vairakiyam padipula kamichi sathichita ipo avangala ena pana mudinjithu. Intha arasiyal vathi vanthu etho prachanai pana poran pola iyal kitta nadakuma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *