Skip to content
Home » அரளிப்பூ 20

அரளிப்பூ 20

எம்எல்ஏ, “என் பிஏ சில டீடெயில்ஸ் எல்லாம் தருவாரு… நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல… எல்லாத்தையும் கன கச்சிதமா செஞ்சி முடிக்கிற… இதுல எங்கேயும் என் பேரு அடிபடக்கூடாது… என்ன புரிஞ்சிதா?” என்று கேட்டார்.

சிறு யோசனையுடனே இளமாறன் ஏதோ பேச போக அதற்குள்ளே கந்தசாமி, “தலைவரே… நீங்க நினைச்சா உங்க ஆளுங்கள வச்சே இல்லன்னா மீடியாவ வச்சே இந்த பிரச்சனையை அடிச்சு துவைச்சி துவம்சம் பண்ணிடலாமே… அத விட்டுட்டு இப்படி எங்கள தனியா அழைச்சி இந்த வேலை எல்லாம் எதுக்கு தலைவரே?” என்று அவருக்கு எழுந்த சந்தேகத்தை கேட்டார்.

எம்எல்ஏவும், “சில விஷயங்கள் எல்லாம் அப்படி தான்… இது எல்லாம் அரசியல் விளையாட்டு… இத எல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது… அதனால அதிகம் யோசிக்காம நான் சொன்ன வேலையை சரியா செஞ்சி முடிங்க… உங்கள நான் கவனிக்கிற விதத்துல நல்லா கவனிக்கிறேன்…” என்றார்.

ஓரளவுக்கு புரிந்து கொண்ட இளமாறனும், “அது எல்லாம் ஒன்னும் வேணாம் தலைவரே… நீங்க சொன்ன வேலைய கன கச்சிதம்மா உங்களுக்காக நான் செஞ்சி முடிக்கிறேன்… அப்பறம் ஒரே ஒரு வேண்டுகோள்…” என்று கேட்க அவரும் என்ன கேட்க போகிறான் என்று இளமாறனை பார்த்தார்.

அவனும், “தலைவரே… ஸ்டேஷன்ல ஏதாவது கேஸ் அகப்பட்டாலோ ஏதாவது பிரச்சனை வந்தாலோ உங்க கட்சி ஆளுங்கன்னு சொல்லி கிட்டு சிபாரிசுக்குன்னு உங்க பேர பயன்படுத்தி கிட்டு யாரும் வராம இருக்க நீங்க கொஞ்சம் உதவணும் தலைவர்… இப்ப எல்லாம் நிறைய கேஸ்ல உங்க பேர சொல்றாங்க தலைவரே… நான் அவரோட சொந்தக்காரன்… நான் உங்க கட்சி சேர்ந்தவன்… அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லிட்டு ரொம்ப பண்ணுறாங்க… என்னால நிறைய கேஸ்ச மூட முடியாம பெண்டிங்லையே வச்சிருக்கேன்… அதுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க தலைவரே…” என்று இளமாறன் கூறும் போதே புரிந்து கொண்டார்.

ஆனால் அது எப்படி தன் உறவுகளிடமோ தன் தொண்டர்களிடமோ தனது கட்சிக்காரர்களிடமோ தனது பெயரை பயன்படுத்த கூடாது என்று கூற இயலும்? என்றே நினைத்தவர், “இதோ பாரு தம்பி… என்னால என் தொண்டர்கள் கிட்டையும் என் கட்சிக்காரர்கள் கிட்டையும் இத பண்ணுங்க அத பண்ணாதீங்கன்னு அதுவும் என் பேர பயன் படுத்தாதீங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது… அப்படி சொன்னா அவங்களுக்கு எதிரா நான் போர மாதிரி இருக்கும்… அது என் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது இல்ல… ஒருவேளை அப்படி உங்க கிட்ட என் ஆளுங்க வந்தாங்க அப்படின்னா நான் வேணும்ன்னா எது சரியோ எது நேர்மையோ அந்த பக்கம் இருக்கிறேன்… அதாவது உங்க பக்கம் இருக்குறேன்… அதே நேரம் நீங்களும் எனக்கு எதிரா போகாம செயல்படுங்க…” என்றார்.

ஓரளவு கந்தசாமிக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

ஆனால் இளமாறனுக்கு இதுக்கு பருத்தி மூட்டை குடோன் உள்ளேயே இருக்கலாமே என்றே தோன்றியது… இருந்தாலும் ஓரளவுக்கு என் பக்கம் இருப்பேன் என்றாரே அதுவரைக்கும் பார்ப்போம் என்றே நினைத்து கொண்டு, “நன்றி தலைவரே… இந்த பிரட்ச்சனைய நான் பார்த்துக்கிறேன் தலைவரே…” என்று கூற அவரும், “மறக்காம நான் சொன்ன வேலைய நல்ல படியா முடி… உன் கைல தான் என்னோட அடுத்த ஐந்து வருட அரசியல் வாழ்க்கையே இருக்கு…” என்றார்.

இளமாறனும், “கண்டிப்பா நான் இந்த வேலைய நல்ல படியா முடிக்கிறேன் தலைவரே…” என்று கூறியே இளமாறன் வெளியே வர அவனின் கரத்தில் ஒரு துண்டு சீட்டினை பிஏ யாரும் பார்க்காதவாறு திணித்தார்.

அவனும் வாங்கி கொண்டு செல்ல அந்த பிஏ கந்தசாமியின் செவியில் மட்டும், “நடக்கிறத அப்பைக்கு அப்ப எனக்கு இன்பர்மேஷன் கொடுத்து கிட்டு இரு… உன் நம்பருக்கு மிஸ்டு கால் குடுத்து இருக்கேன்… என் நம்பர சேவ் பண்ணிக்க…” என்று கூற கந்தசாமியும் தலையசைத்தே இளமாறன் பின் ஓடினார்.

பைக்கில் சென்று கொண்டு இருக்கும் பொழுது கந்தசாமி, “மாப்ள… இந்த பிரச்சனை நமக்கு தேவையா? தேவையில்லாம இதுல நம்ம தலையிட்டு இதுல நம்ம இருக்குறோம்ன்னு யாருக்காவது ஏன் எதிரி கட்சிக்காரங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்… நம்ப வேலைக்கு உயிருக்குன்னு ஆபத்தா போனாலும் போயிடும் டா… இத நம்ப கண்டும் காணாம இருந்துக்கலாம்… அது தான் நல்லது மாப்ள…” என்று கூற எதுவும் பேசாமலே வந்த இளமாறம் டீ கடை ஒன்றின் முன் பைக்கை நிறுத்தினான்.

கந்தசாமிக்கு சிறிது கலவரமாக தான் இருந்தது… ஏனெனில் அவனின் அமைதியே எப்படியும் இந்த விஷயத்தை செய்ய தான் போகிறேன் என்று சொல்லாமல் சொன்னது.

ஆகையால் அமைதியாக கந்தசாமியும் இளமாறன் நீட்டிய டீவை வாங்கி கொள்ள இளமாறன் நாட்டையும் உடலையும் கெடுக்க கூடிய ஒன்றான காற்றை மாசுபடுத்துவதை தனது ஆறாம் விரலாக தனது விரல்களுக்கு இடையில் இணைத்து அதை பத்த வைத்து இதழில் வைத்தான்.

ஏனோ கல்லூரி காலங்களில் அதை ஸ்டைலாகவும் பெண்கள் அதனைப் பார்த்து இரசிக்கிறார்கள் என்று ஒரு வித இரசனையுடன் பிடித்து போயி தான் பிடிக்க ஆரம்பித்தான்… அதன் பின் தினமும் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்று உணவு போல் அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது இளமாறனுக்கு.

ஆகையால் அதை தொடர்ந்தான்… ஆனால் என்ன பண்ண? தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா? அப்படி தான் ஒரு முறை இவன் இவ்வாறு டீக்கடையில் நின்று குடித்துக் கொண்டிருப்பதை அவனின் தந்தை பசுபதி பார்த்து விட அவர் பார்த்ததை இவனும் பார்த்து விட இருவரின் பார்வையும் நேர் கோட்டில் ஓரிரு விநாடிகள் நின்றதும் தலை குனிந்தவன் அன்றே நிறுத்தி விட்டான்.

இருந்தாலும் எப்போதாவது அதாவது அதிகப்படியான குழப்பத்தில் இருக்கும் போது இத செய்யலாமா? வேணாமா? என்று அவன் யோசிக்கும் நேரங்களில் மட்டும் ஒன்றே ஒன்றை மட்டும் இப்படி எடுத்து கொள்வான்… முழுவதும் குடித்து முடித்து விட்டு வாயையும் கொப்பளித்து ஒரு டீயும் குடித்துவிட்டு பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

அவனின் பின்னாடியே ஏறி அமர்ந்த கந்தசாமி, “ம்… அப்போ நம்ப காரப்பட்டி போக போறோம்மா?” என்றார்… இளமாறனும் சிறு புன்னகையை மட்டும் சிந்திக்க கொண்டு பைக்கின் வேகத்தை கூட்டினான்.

ஊரின் உள்ளே வரும் போதே பைக்கை நிறுத்தி எப்போதும் பைக்கின் பெட்டியில் வைத்து இருக்கும் மாற்று உடையை எடுத்து இருவரும் மாத்தி கொண்டனர்.

அப்போது, “மாப்ள… ஒன்னு கவனிச்சியா? இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு வீரமா இருக்குங்க பார்த்தியா… கடைத்தெருவுல என்னடான்னா…” என்றதுமே சட்டை பட்டன்னை போட்டு கொண்டு இருந்த இளமாறனின் நினைவில் இயலினி தான் வந்தாள்.

ஆனால் கந்தசாமி சொன்ன விதத்தில் அவரை முறைக்க உடனே அவரும், “சரி… சரி விடு… இப்போ எதுக்கு இப்படி என்னைய முறைக்கிற? உள்ளத தானே சொன்னேன்…” என்றார்.

பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டே, “அப்படி என்ன நீ உள்ளத சொல்ற?” என்று கேட்க

ஏதோ நாம் கூறுவதைக் கேட்கும் ஆவலில் தான் கேட்கிறான் என்று நினைத்துக் கொண்ட கந்தசாமியும் ஆர்வமாக, “ஆமாம் மாப்ள… நீயே நல்லா யோசிச்சி பாரேன்… அன்னைக்கு அப்படி தான் கேஸ் விஷயம்மா மப்ட்டில போனப்ப ஒரு பொண்ணு கிட்ட அடிவாங்குன… அதே மாதிரியே இன்னைக்கும் நம்ப மப்ட்டில தான்…” என்று கூறும் போதே பைக்கை ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டான் இளமாறன்.

அதை கண்ட கந்தசாமி, “டேய்… மாப்பிள்ளை… மாப்பிள்ளை… நான் இன்னம் ஏறல டா… எனக்கு என்னமோ இந்த வாரம் ஃபுல்லா நீனு யாரு கையிலயாவது அடி வாங்கிக்கிட்டே தான் இருக்க போறேன்னு தான் தோனிக்கிட்டே இருக்கு… அத சொன்னா நீ என்னைய இப்படி நட்டாத்துல இறக்கிவிட்டு போறியே டா… டேய் மாப்பு… நான் உன் அக்காவோட ஒத்த ரோசா டா… என்னைய இப்படி விட்டுடாத டா… இதுக்கு மேல நான் வாய தொறக்கவே இல்லடா… பைக்க நிறுத்து டா மாப்பு…” என்றே ஓடி வந்தவர் பைக் சிறிது பொறுமையாக போவது போல் இருக்க உடனே தாவி பைக்கில் ஏறி உக்காந்ததும்

“ஐயோ… எருமை பொறுமையா போயேன் டா… வலிக்குது டா…” என்று தனது கால்களுக்கு இடையில் கையை வைத்து தேய்க்க, “ஒழுங்கா வாய மூடிக்கிட்டு வா… அதை விட்டுட்டு எதையாவது உளறிக்கிட்டு வந்த… மாமன்னு கூட பார்க்க மாட்டேன்…” என்றே முணு முணுத்துக்கொண்டு வந்தவன் முன் ஒரு பெண் பைக்கை தள்ளி கொண்டு போவது விழுந்தது.

திடீரென இளமாறனின் பைக் ஸ்லோவானதை உணர்ந்ததும் கந்தசாமி, “பரவாயில்லையே மாப்ள… மாமன் சொன்ன வேகத்துல பொறுமையாக்கிட்ட… மாமா மேல அவ்வளவு பாசமா… இருக்காதா பின்ன…” என்று பேச பேச பதில் எதுவும் வரவில்லை என்றதும், “என்னடா இது பதில் எதுவும் வரல… நம்ப மாப்பு இப்படி எல்லாம் இல்லையே… அதோட வண்டி ஏன் இப்படி வளைஞ்சி நெளிஞ்சி போகுது…” என்றே இளமாறனின் தோளிற்கு மேல் எக்கி முன்னே பார்த்தவர் அப்படியே அதிர்ந்தார்.

பின்ன அவர் நினைத்தது போலவே அவரின் மாப்புக்கு ஆப்பு வைக்கிற ஆளுல போயி கிட்டு இருக்கு.

6 thoughts on “அரளிப்பூ 20”

  1. CRVS2797

    யாரு இதழினி தானே அது..? அவளை பார்த்தா மட்டும் தானே இவனோட பைக்கும் தடுமாறும். இவனும் தடுமாறுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *