Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-3

உயிரில் உறைந்தவள் நீயடி-3

அத்தியாயம்-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நாயகி ஜீவிதா தந்தை முன் சோகமாய் வீற்றிருந்தாள். இதே மற்ற நேரமென்றால் முகத்தில் ஒரு மலர்ச்சி தெய்வீகம் குடி கொண்டிருக்கும். இன்றும் தெய்வீக முகம் உண்டு ஆனால் மலர்ச்சி? முதுகலை படிக்க நிற்கும் பறவையின் சிறகை ஒடித்துத் திருமணம் என்ற பந்தத்தில் அவளுக்குப் பிடிக்காமல் தள்ள பார்க்கின்றார்கள்.

கதிரவன் ரேகா இருவரும் மகள் பாதத்தில் சரணடைந்தது போலக் கண்ணீரில் உரைத்தனர்.

வினிதாவின் கடிதமும், தட்சிணாமூர்த்தி வீட்டில் நடந்தவையும் உரைத்து விட்டு ஜீவிதாவின் பதிலை யாசகமாய்க் கேட்டு நின்றனர்.

“என்னப்பா… இது.. அக்கா இல்லைன்னா நானா? அநியாயம் இது. அவ இல்லாம நாம கஷ்டத்துல இருப்போம். இந்த நேரத்தில் கல்யாணாமா?” என்று கேட்டாள்.

“நாம பதில் சொல்லுற நிலையில் இல்லைடா. சம்மதம் சொல்லுற இடத்துல இருக்கும்.

இல்லை… எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை, கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா நானும் உங்க அம்மாவும் தற்கொலை செய்வதைத் தவிர வேற வழியில்லை.

ஏற்கனவே உங்கம்மாவும் நானும் காதலிச்சுக் கல்யாணம் செய்ததில், குடும்ப உறவு உடைந்திடுச்சு. எனக்குன்னு இருந்த அப்பா அம்மா உறவும் மண்ணுக்குள் போயாச்சு. கூடப் பிறந்தவங்க என்று எனக்கு யாருமில்லை. உங்க அம்மாவுக்கு அண்ணன் உறவு மட்டும் தான். இப்ப இந்தக் கல்யாணத்தை மறுத்தா எந்தச் சொந்தமும் நமக்கு இல்லை.

அதோட ஊரும் அம்மா போலப் பிள்ளைனு பேசுது.

இந்தச் சம்பந்தத்தை விட்டா, வேற வாய்ப்பும் உனக்கு அமையுமான்னு சந்தேகம் தான்‌.

இல்லைன்னா நீயும் யாரையாவது விரும்பறியா?” என்று நெஞ்சை பிடித்துப் பேசவும் ஜீவிதாவிற்கு மறுக்கும் வாய்ப்பே இல்லை.

“என்னை ஏன் இப்படிக் கஷ்டப்படுத்தறிங்க. நான் யாரையும் விரும்பலை.

உங்களுக்கு வேற வழியேயில்லைன்னு சொல்லிட்டு, ஏன் என்னிடம் சம்மதம் கேட்கறிங்க? ஆட்டை கேட்டா பலி கொடுப்பாங்க. என்னவோ பண்ணுங்க. நான் யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்றவள் இமை மூட, விழி நீர் கன்னத்தில் இறங்கியது. முட்டி கட்டி அழுதவளை தடுக்கவில்லை. ஏதேனும் பேச கல்யாணத்தை மறுத்திட போகின்றாளோ என்று அஞ்சினார்கள்‌.

யுகேந்திரனின் தந்தையும் தனது மச்சானுமான தட்சிணாமூர்த்திக்கு உடனடியாகப் போனில் அழைத்தார் கதிரவன்‌.

இரவு நிசப்தமாக இருக்க உணவு மேஜையில் அலைப்பேசி ஒலி ஒலித்தது.

தட்சிணாமூர்த்தி அலைபேசியை எடுத்ததும், “மச்சான் ஜீவிதா கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டா. ஏற்கனவே குறிச்ச தேதியில், குறித்த முகூர்த்தத்தில் இந்தக் கல்யாணத்தை நடத்திடலாம்” என்றார் கதிரவன்.

தட்சிணாமூர்த்தி அலைபேசியினை நயமாய் மூடி யுகேந்ததிரனிடம் அதனைக் கூற, ”நான் பேசணும்னு சொல்லுங்கப்பா” என்றான்.‌

“ஆஹ்… மாப்பிள்ளை. யுகேந்திரன் உங்க கூடப் பேசணுமாம்” என்றார்.

சற்று திகிலோடு தான் “மாப்பிள்ளையிடம் கொடுங்க மச்சான்” என்றார்.

போன் கை மாறியது “ஆஹ்… மாமா, பெரிசா ஒன்னுமில்லை… உங்க இளைய பொண்ணு கூடயிருக்கா? நான் அவளிடம் எங்க கல்யாணம் ஃபோர்ஸ் பண்ணி பண்ணலையேனு ஒருக்கா கேட்டுக்கறேன்.

ஏன்னா… உங்க பெரிய பொண்ணு வினிதாவும் கல்யாணத்துக்குத் தலையாட்டி தான் இப்ப ஆள் எங்குட்டோ ஓடிட்டா. இவங்களுக்கு ஏதாவது அபிப்ராயம் இருக்கா? இல்லை மனபூர்வமா தான் என்னைக் கட்டிக்கறாங்களான்னு கேட்டுக்கறேன். நாளைய பின்ன மணமேடையில் இருக்கறது நான் தானே? அந்த நேரம் பிடிக்கலை என்று பேசி எழுந்து போயிட்டா? அவமானம், அடி, அசிங்கம் எனக்குத் தானே.” என்றான்.‌

கதிரவனுக்கு இறந்த மனதை கத்தியால் கீறிக் கொண்டே இருப்பதாகத் தோன்றியது‌. ஆனால் யுகேந்திரனோ “மன்னிச்சிடுங்க மாமா என்னடா வலியில் இருக்கோம் இவன் நோண்டிட்டே இருக்கேன்னு நினைக்காதிங்க. சூடுப்பட்ட பூனை நான். அதனால் தான் இந்த விலாவரியா கேட்டுக்கறது. ஆயிரங்காலத்து பயிர் பாருங்க. சேர்ந்து வாழறது நாங்க” என்றதும் கதிரவன் நெஞ்சை தடவி, “ஜீவிதாவிடமே கொடுக்கறேன் மாப்பிள்ளை நீங்களே கேளுங்க” என்றவர் சின்ன மகளை அழைத்தார்.

“ஜீவிதா.. சம்பந்தி வீட்ல பேசினேன். அக்காவுக்குக் குறித்த தேதில உனக்கும் மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டேன். எதுக்கும் உன்‌ அபிப்ராயத்தை மாப்பிள்ளை உன்னிடமே கேட்கணும்னு சொல்றார்” என்று போனை கொடுக்க, “நான்‌ தான் உங்களிடம் பதில் சொல்லிட்டேனேப்பா” என்றாள்.

யுகேந்திரன் காதில் ஜீவிதாவின் கீச்சு குரல் விழுந்தது.

”அவரிடம் ஒரு வார்த்தை நீயா சொல்லிடும்மா” என்றதும் ஜீவிதா போனை வாங்க கையை நீட்டினாள்.

“மாப்பிள்ளை சின்னப் பொண்ணிடம் போனை தர்றேன்” என்றார் கதிரவன்.

“கொடுங்க மாமா” என்றான் யுகேந்திரன்.

“ஹ..லோ.” என்றதும், “உங்க அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை நான்‌. என் பெயர் யுகேந்திரன். உங்க மாமா மகன். இதெல்லாம் ஆல்ரெடி உனக்குத் தெரியும்.

அவ ஓடி போனதால சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு எங்க வீட்ல உன்னைக் கல்யாணம் பண்ண கேட்டது. உனக்கு இஷ்டமில்லைன்னா இப்பவே சொல்லிடலாம். உங்கக்கா மாதிரி எதுவும் பண்ணிடமாட்டியே. எதுக்கும் ஒரு தடவை சொல்லிட்டா நல்லது.” என்று கேட்டான்.

இப்படியா ஒரு பெண்ணை மணக்க கேட்பது? கூர்வாளால் குத்திகுத்தி வலிக்குதா வலிக்குதா என்று கேட்பது?

ஏற்கனவே தாய் தந்தையருக்கு அக்கா செய்த செயலால் அவமானம். இதில் அடிக்கடி நினைவுப்படுத்தி நெருப்பு கனலை கக்குவதா?

“ஹலோ லைன்ல இல்லையா? இப்பவே பதில் சொல்ல பிடிக்காம ஓடி போயிட்டியா?” என்றதும், “நான் எங்கயும் ஓடி ஒளியலை. எங்கப்பாவுக்காக இந்தக் கல்யாணத்தை எப்ப வச்சாலும் கழுத்தை நீட்டி தலைக்குனிந்து வாங்கிப்பேன். நீங்க கவலைப்பட வேண்டாம். உங்க கல்யாணம் நடக்கும்.” என்றாள். இந்த நிலையிலும் சற்றுக் கடுகடுப்பை காட்டினாள்‌

“ரோஷமா… அதெல்லாம் நீ காட்டக்கூடாது. மணமகன் இடத்துலே இருந்து வலி அசிங்கம் அனுபவிக்கற நான் ஆயிரம் விதத்துல கேட்டுத் தெளிவுப் பெறுவது எனக்கும், என் குடும்ப மானத்துக்கு நல்லது.” என்று யுகேந்திரன் ஜம்பமாய்ப் பேசவும், ஜீவிதாவுக்குக் கண்கள் கலங்கியது.

ஒரு சின்னப் பெண் என்றும் கூடப் பாராமல் தன்னிடம் இப்படிப் பேசுகின்றானே. தாய் தந்தையினரிடம் எப்படிப் பேசி வதைத்தானோ? அதனால் தான் தந்தை தனக்கு இப்படி இக்கட்டுக் கொடுப்பதாக யூகித்தாள்.

“மச்சான் இங்க நாங்களும் வலியை அனுபவிக்கறோம். சும்மா இல்லை அப்பா சாகற மனநிலையில் பேசறார்.

உங்களைக் கட்டிக்க அப்பா கேட்டார். எனக்கு எந்த மறுப்பும் இல்லை. நான் ஓடிப்போக மாட்டேன். என்‌ மனசுல யாருமில்லை. நீங்க தைரியமா கல்யாண வேலையைக் கவனிங்க” என்றாள் ஜீவிதா மூக்குறிந்தபடி.

மச்சான் என்றதிலேயே இதய நோயாளியாக மாறியது போல நின்றான்.‌‌

‘மச்சானா? அத்தை மகளுக்கு யுகேந்திரன் மச்சான் தானே? அப்படி என்றாலும் இதுவரை இப்படி யாரும் அழைக்காததால் மௌனமாகி “நான் வைக்கிறேன்.” என்று எதிர்வாதம் புரியாமல் அணைத்து விட்டான்.

‘சாகற மனநிலையில் இருப்பதாகச் சொல்லியும், மனதை தேற்றும் விதமாக எதுவும் பேசாமல் வைக்கறேன்னு போனை துண்டிக்கின்றார். இப்படித் தான் ஜீவிதாவுக்குத் தோன்றியது.

மற்றபடி யுகேந்திரன் எல்லாம் அமைதியாகப் பின் வாங்கும் நபரா? என்று யோசிக்கவேயில்லை.

அவளை யோசிக்க வைக்காமல் காலமும் மழுங்கடித்தது.

கதிரவன் ஜீவிதாவின் படிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டார். ஒரு டிகிரி முடித்ததால் அதுவே போதுமென்றார். வீட்டை தாண்டி ஜீவிதாவை எட்டு எடுக்க விடவில்லை. எப்பவும் கண் கொத்தி பாம்பாகக் கதிரவன் மாறியது ஜீவிதாவிற்குக் கவலையை உகுத்தியது. ஆனால் ஒரு வீட்டில் ஒரு பெண் ஓடி போனால், அவ்வீட்டில் இருக்கும் மற்ற இளம்பெண்ணுக்கு தான் அதிகபடியான கட்டளையில் தள்ளுவார்கள்.

நாளும் கிழமையும் விரைவு ரயிலில் பயணம் செய்வது போல் வேகம் பிடித்தது.

இதோ மாப்பிள்ளை முறுக்கோடு யுகேந்திரன் அக்னி முன் மந்திரம் உச்சரித்து, கர்ம சிரத்தையாக வீற்றிருந்தான்.

அந்த அக்னியையே கண்சிமிட்டாமல் ஜீவிதா பார்வையிட்டாள்.

ஆயிரம் கனவுகள் கண்டியிருந்தாள், அக்கா வினிதாவின் திருமணத்தில் அக்கா அருகே நின்று மச்சினிச்சியாக வம்பளந்து மச்சான் யுகேந்திரனை சீண்டி, அக்காவின் கன்னம் சிவக்க வைக்க வேண்டுமென்று.

எல்லாமே கானல் நீராக மாறியதில் கண்ணீர் திரண்டது.

கண்ணீரை உகுத்தினால் திருமணத்தைக் காண வந்தவர்கள், அக்கா ஓடிப்போயிட்டா, தங்கையைப் பிடிச்சி விருப்பமில்லாமல் மணந்திட நிர்பந்திக்கின்றனர் என்று கூறி அதை வைத்து யுகேந்திரன் மச்சானையோ, மாமா தட்சிணாமூர்த்தி, உமாதேவி அத்தையோ தனது அன்னை தந்தையைக் கடிந்து வார்த்தையை வீசினாலும் வீசுவார்கள்.

எதற்கும் சிரித்தாற் போல முகத்தை வைத்துக் கொள்ள நினைத்தாள். ஏற்கனவே ரேகா அறிவுரை என்று, பல மூட்டையைத் தலையில் போதும் போதுமென்ற அளவிற்கு ஏற்றிவிட்டார்கள். அதில் அதிகம் முகம் வாடாதே, சன்னமான சிரிப்பை வழங்கு, யார் வந்து அக்காவை பற்றிக் கேட்டாலும் பேச்சை நீட்டிக்காதே, தங்களையோ தங்கள் வளர்ப்பை குறை கூறினால் கூடச் செவிடாக அவ்விடத்தில் நின்று ஊமையாகிவிடு. கோபம் வந்து வார்த்தையை வீசிவிடாதே. எல்லா வலியும் அனுபவித்துப் பழகு. இத்யாதிகள்… அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதெல்லாம் நினைவாக வந்து போக, வெள்ளி தட்டில் தேங்காய் மீது மஞ்சள் குங்குமம், தாலி கயிற்றோடு பூ இணைந்திருக்க, வந்திருந்த அனைவரின் ஆசிர்வாதம் பெற்று, மேடைக்கு வந்து அவள் கவனத்தைக் கலைத்தது.

யுகேந்திரன் கைகளில் வந்தடைந்ததும் ஐயர் ‘கெட்டிமேளம் கெட்டிமேளமென்று’ என்று குரல் எழுப்ப, ஜீவிதா கழுத்தில் மூன்று முடிச்சிட்டுத் தன்னில் சரிபாதியாக ‘மனைவி’ என்ற பதவியை வழங்கினான்.

தலைக்குனிந்தபடி அவன் கட்டிய தாலியில் கண் பதித்தாள்.

லேசாக அழத்தோன்றியது.

கொஞ்ச நேரம் அழுதால் தேவலாமென இருந்தது. யுகேந்திரன் பார்வை அடிக்கடி தங்களைக் காணும் திருமணக் கூட்டத்தைக் கண்டும், அடிக்கண்ணால் அடிக்கடி ஜீவிதாவையும் ஏறிட்டதை, அவள் கண்டுக்கொண்டதால் சாமர்த்தியமாகக் கண்ணீரை பொழியாது திடமாய் வீற்றியிருந்தாள்.

உன்னை அழவைக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டியவன் போல, யுகேந்திரன் ஜீவிதாவிடம், “நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்கல்ல பாதிப் பேர், எங்க வீட்ல வேலை செய்யற பொன்னம்மாவிடம், உங்கக்கா யாரோட ஓடிப்போனா? எங்கப்போனா அதுயிதுன்னு கேள்விக் கேட்டு தொலைச்சிட்டாங்க. அவங்க தெரியலைனு ஒத்த வார்த்தை சொல்லி மழுப்பிட்டு இருப்பதா கேள்விப்பட்டேன்.

உங்கப்பா அம்மாவிடம் யாரும் கேட்கலையா? நல்லா சிரிச்சிட்டு நடமாடறாங்க. அவங்களால் எப்படிச் சிரிக்க முடியுது?” என்று அறியா சிறுவனாய் கேட்டான்.‌

“அக்காவை பத்தி வருத்தப்பட்டு முகம் வாடினா, என் கல்யாணத்துல சந்தோஷம் இல்லையான்னு நீங்க கேட்பிங்க மச்சான். அதுக்கு அப்பா அம்மா இந்தப் பெயரே வாங்கறது நல்லது. நிஜமாவே அக்கா ஓடிப்போயிட்டா. அதை மத்தவங்க சொல்லறப்ப கஷ்டமா தான் இருக்கும். அதுக்காக எங்க அக்காவை பத்தி பேசாதிங்கன்னு ஒவ்வொருத்தரிடம் கெஞ்ச முடியாதே.” என்றாள் ஜீவிதா.

ஊரில் இருக்கும் சொந்தம் பந்தம் நட்புக்களிடம் கூட என்னைப் பெற்றவர்கள் வார்த்தையால் வதைக்கபடட்டும். உங்களிடம் வதைப்படுவதை விடவா? என்று தான் ஜீவிதாவுக்குத் தோன்றியது.

அந்தளவு யுகேந்திரன், பேசும் நேரமெல்லாம் அவன் வார்த்தையில் குத்தல் இருப்பதை ஜீவிதா நன்கறிந்தாள்.

இத்தனைக்கும் மணக்க சம்மதமா என்று கேட்ட தினத்தில் பேசினான்.

அதன் பின் இன்று காலையிலிருந்து கூடவே வீற்றிருக்க அடிக்கடி வாழைப்பழத்தில் ஊசியேற்றும் விதமாக மாற்றிமாற்றிப் பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் வதைத்து பேசி, இவளை களைத்திட வைத்தான்.

அதன் காரணமாக யுகேந்திரன் பேச்சு சற்று அதிருப்தியை தந்தது.

பொறுமைக்குப் பூமாதேவியைச் சொல்வார்கள். சும்மாவா… பூமாதேவி எதையும் தாங்க வேண்டுமே. இங்கு ஜீவிதா அப்படித் தான் பொறுத்து நின்றாள்.

சம்பிரதாயமெனப் புகைப்படத்தில் நிற்க, உதட்டில் சிரிப்பும், அவள் முகத்தில் இடம்பெற, ”அண்ணி கொஞ்சம்கிட்ட அண்ணன்‌ பக்கத்துல தள்ளி நில்லுங்க” என்று புகைப்படக்காரர் கேமிராவை கையிலெடுத்தான்.

யுகேந்திரன் ஜீவிதாவின் கை புஜத்தில் அழுத்தம் கொடுத்து, “தனியா எங்க ஓடற. ஒவ்வொரு முறையும் சொல்லணுமா. கல்யாண போட்டோவில் தள்ளிதள்ளிப் போனா என்ன அர்த்தம்?

இதுக்கு முன்ன ஜீவிதா கதிரவனா நீ இருந்திருக்கலாம். அப்ப எப்படியோ இருந்து தொலை. இப்ப என் பொண்டாட்டி ஜீவிதா யுகேந்திரன்.‌ உங்கப்பாவை விட அதிக உரிமையுடையவன் நான் மட்டும் தான்” என்று பேசவும், யுகேந்திரன் பிடியில் முகம் சுணங்கினாள்.

அந்த நிமிடம் யுகேந்திரனின் செயல்கள் வாய் வார்த்தையால் சொல்லாமல் சொல்லியது. இந்தத் திருமணம் வினிதா ஓடிவிட்டதால், இவர் கோபத்தில் தன்னை மணம் முடித்துப் பழித்தீர்க்கும் ஆரம்பம் என்று.

பெற்றவர்கள் இருந்த பக்கம் திரும்பினாள், அவர்களோ இத்தனை நாளாக வினிதா விவகாரத்தில் வீட்டில் நடைப்பிணமாக நடமாடியவர்கள், ஏதோ தன் திருமணத்தில் உயிர்ப்போடு நிற்பதாகத் தோன்ற, யுகேந்திரன் மச்சானிடம் பொறுமையாக‌, அக்கா செய்த செயலுக்குத் தானும் தன் குடும்பமும் கஷ்டம் அனுபவிக்க வேண்டாமே, தங்கள் வாழ்வை இனிமையாய் எடுத்து சொல்வோமென எண்ணினாள்.

-தொடரும்.

3 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-3”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி…!
    எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அட.. என் லூசு மச்சான், கூறுகெட்ட மச்சான், அரைகுறை அறிவாளி மச்சான்….நீ இந்தளவுக்கு சேடிஸ்ட்டா இருந்திருக்க வேணாம் போ.
    அக்கா பண்ண தப்புக்கு தங்கச்சியை இந்தளவுக்கு உருட்டவேணாம் போ.
    இதைத்தான் கடைத்தேங்காயை எடுத்து, வழிபிள்ளையாருக்கு உடைச்சதுன்னு சொல்வாங்களோ..? எப்பா.. யுகேந்திரா, நீயும் வில்லன் தான், அதை நாங்களே ஒத்துக்கிறோம் ஓகே.
    போ டா, போ.. போய், போட்டோவுக்கு முறைச்சா மாதிரி போஸ் கொடு…
    அப்பத்தான் ஊரும் உலகமும்
    நீயும் வில்லன்தான்னு ஒத்துக்கும் போ.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!