அத்தியாயம்-10
Thank you for reading this post, don't forget to subscribe!சாதாரணமான மொட்டை மாடி படிக்கட்டுகள், கால்கள் அடுத்தடுத்த அடியை எடுத்து வைக்கும் போது மணற்மூட்டைகளை காலில் கட்டி, செங்குத்தான மலையில் ஏறுவது போல மிகவும் கடினமாக இருந்தது ஈஸ்வரனுக்கு.
பொண்ணு பார்த்தவளை மறுக்க எண்ணி வந்தவன், கமலியின் மாசு மருவற்ற சுடரிடும் முகத்தை கண்டு பிடித்தம் உருவாக, அவளது காதல் விவகாரம் அறிந்து உதவியாவது செய்வோமென எண்ணினான்.
ஆனால் கார்த்திகாவினால் கமலி காதலன் உயிர் பிழைப்பது அரிது என்றதும், சில நாளில் தன் காதலை ஏற்க வைத்திடும் முடிவில், அண்ணன் மகளுக்கு உதவுவதற்கு கமலியை நியமித்தான். பிடித்தம் உருவாகியவள் மீது பேரன்பு கொண்ட காதல் வளர்ந்து, அவளுக்காக பட்டுப்புடவை மோதிரமென்று வாங்கி வந்ததே சான்று. இரண்டு நாளில் மணக்க சம்மதம் கேட்டு கொடுக்க வாங்கியது.
ஆனால் கமலியின் காதலன் விஷ்ணு உயிர் பிழைத்து உரிமையாய் அவளருகே வந்து நின்று, தன் காதலை தொலைவில் எட்டி நிறுத்திடுவானென கனவிலும் நினைக்கவில்லை.
விஷ்ணு வேறு பட்டுபுடவை, மோதிரம் எல்லாம் பார்த்துவிட்டான்.
ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு நிசப்தத்தில் இரு ஆண்மகனும் சூரியன் மறையும் பக்கம் வெறித்தனர்.
மாலை வெயில் சிறிதளவு இருக்க, விஷ்ணு தான் பேச தயார்படுத்திக் கொண்டான்.
கமலிக்காக விஷ்ணு தான் மௌவுனத்தை உடைத்தான். “நான் உயிரோட திரும்பி வந்திருக்க கூடாது. ஆக்சிடென்ட்லயே உயிர் போயிருக்கணும், இல்லையா கோமாலயே இருந்து இறந்திருக்கணும்.
இப்படி உயிரோட நடமாடி உணர்வோட கலந்தவளின் நினைப்பு, ஞாபகம் மீட்டி, உங்க வாழ்க்கையில குறுக்கே வந்துட்டேன்.
எனக்கு இப்ப வேற ஆப்ஷன் இல்லை. என் கமலிக்காக உயிர் திரும்பி வந்திருக்கும் போது, அவளை நீங்க விரும்பறதும், நல்லா பார்த்துப்பிங்கன்னு நம்பியும் விட்டு போக முடியாது இல்லையா? அவயனக்கு காதலி மட்டுமில்லை என் மனைவியாச்சே. விட்டு கொடுக்குற முடிவுல நான் இல்லை. எனக்கு கமலினா உயிர்.
நீங்க விலகி போற முடிவுல இருப்பிங்க, இருந்தாலும் யாரையும் காயப்படுத்தாம முடிவடுங்க. உங்க வீட்டுல அவளோட அக்கா மாமா உறவு சிதைந்திடக்கூடாது. எனக்கு என் கமலியோட நிம்மதி சந்தோஷம் முக்கியம்.
கமலியை மறக்கறது கஷ்டம். ஆனா உங்க வீட்டு குழந்தைக்காகவாது மறந்து வேறொரு பொண்ணை மணக்க பாருங்க.
நான் பேச வேண்டியது அவ்ளோ தான். ஏதாவது நீங்க சொல்லணுமா?” என்று விஷ்ணு நிறுத்தி நிதானமாக பேசி ஈஸ்வரனையே கண்டான்.
கமலி விஷயத்தில், ஏன் தன் வாழ்நாளில் இந்தளவு மெதுவாக, நிதானமாக பேசியதில்லை. இதுவே முதல் முறை. காரணம் ஈஸ்வரனும் கமலியை உண்மையாக காதலிப்பதை புரிந்துக் கொண்டதன் விளைவு. அதற்கு சான்று ஈஸ்வரன் கண்கள் சூரியன் இருக்கும் திசையில் வெறித்திருக்க, கண்கள் கலங்கி நீரால் சூழ்ந்து பளபளப்பது விஷ்ணுவுக்கு தெரியாமல் இல்லை. ஈஸ்வரனுக்கு சற்று அவகாசம் தந்தான்.
தன் பேண்ட் பேக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து கலங்கிய கண்களை துடைத்தான் ஈஸ்வரன்.
“முதல் காதல் எல்லாருக்கும் ஸ்கூல், காலேஜ், இந்த காலகட்டத்துலயே வந்துடும். அதனால் முதல் காதல் அப்படியே பசுமையா, அதே நேரம் புனிதமான உணர்வா கடந்து காலவோட்டத்துல மறந்துடும்.
எப்ப நினைச்சாலும் ஸ்வீட் மெமரிஸா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
எனக்கான முதல் காதல் இப்படி இந்த வயசுல வந்து மறக்கணும்னு இருக்கு, கவலைப்படாதீங்க மறந்துடுவேன். இனிமையான வலியா என் உணர்வோடு இருக்கும். கொஞ்ச கால அவகாசம் தேவைப்படலாம்.
பை-தி-வே கமலியை நானும் சங்கடப்பட வைக்க மாட்டேன். எனக்கும் கமலியோட நிம்மதி, சந்தோஷம் முக்கியம்.
அவ அக்கா மாமாவிடம் நானே பேசறேன். அநேகமா அவங்க கமலியை கழிச்சு கட்டினா போதும்னு நினைக்கலை. அன்பா கமலியோட தேவையை பார்த்துப்பார்த்து செய்யறாங்க. அதனால் எப்படியும் உங்க காதலை ஆதரிப்பாங்க.
என்ன தெய்வானை பெரிம்மா தான் ஏதாவது பேசலாம். ஒரு திருமண என்றால் எல்லா உறவுகளும் மற்ற உறவுகளை இணைத்து மேலும் சொந்தம் அதிகரிக்க வைக்கணும். உறவுகள் கோபத்தால துண்டிச்சிக்க கூடாது, அதோட இரண்டு மனமும் இணையணும். அவங்களுக்கு அது புரிந்தா போதும்.
உங்களை கமலி கல்யாணம் செய்தா அவங்களோட அக்கா மாமா உறவுகள் சிதையாம ஏத்துப்பாங்க.
கடைசியா சொல்ல விரும்பறது. உங்க காதலி கமலியை, உங்க மனைவி கமலியை, தோழியா பார்க்கற தைரியம் வரும் வரை, இனி இங்க வரமாட்டேன். இங்க வருவதா இருந்தா கமலியை தோழியா பார்க்கற பக்குவம் வந்தப்பிறகு வருவேன் விஷ்ணு.” என்று ஈஸ்வரன் கிளம்புவதாக கீழே சென்றான்.
ரங்கநாதனோ கமலியை தன் மச்சினியாக பாராது, தங்கையாக பாவித்து தான் படிக்க உதவியது. நல்ல இடத்தில் கட்டி வைக்க ஆசைக்கொண்டார். தன் அன்னை தெய்வானையே நல்ல வரன் பார்க்க அகமகிழ்ந்தார்.
ஆனால் இப்படி கமலி காதலித்து குழப்பத்தில் தவிக்க விடுவாள் என்று ரங்கநாதன் நினைக்கவில்லை. ஏனோ மனம் ஈஸ்வரன் முடிவெடுத்தால் அதற்கு பிறகு பேசுவோமென இருந்தார்.
சுதாவும் கமலியும் ஹாலில் மேலே என்ன பேசினரோ என்று கலக்கமாய் வீற்றிருக்க ஈஸ்வரன் வரவும் கமலி வேகமாக எழுந்தாள்.
ஈஸ்வரனோ கமலியை ஏறிடாமல், “உங்க மாமாவிடம் நான் பேசறேன் கமலி. எனக்காக ஒரே ஒரு உதவி பண்ணுங்க. என் அண்ணன் பொண்ணு நந்தினியிடம் நீங்க இங்கிருந்து போவதை அவ பக்குவமா ஏத்துக்கற மாதிரி சொல்லிடுங்க. லைஃப் லாங்க் சித்தியா வரப்போவதா நினைச்சிருப்பா குழந்தை. இல்லை நீங்க கேர்டேக்கராவே திரும்பி போவதை பதமா சொல்லுங்க” என்றதும் கமலி மௌவுனமாய் நந்தினியிடம் சொல்வதாக தலையாட்டினாள். அவளது கண்கள் பனித்து ஈஸ்வரனுக்கு நன்றியை தெரிவித்தது.
அவளொன்றும் மணக்க போவதாக ஈஸ்வரனிடம் வாக்கு தரவில்லையே. அதனால் குழந்தை தன்னை தேடுவதை மட்டும் குறைத்திட இயலும் என நம்பினாள். ஈஸ்வரனிடம் கண்ணீரால் நன்றியை கூறிவிட்டு அக்காவை அணைத்து கொண்டாள். ஈஸ்வரனிடம் நேரிடையாக பேச நெஞ்சடைத்தது எனலாம்.
சுதாவோ ஈஸ்வரனை பார்த்து கையெடுத்து கும்பிட, ஈஸ்வரனும் பதிலுக்கு வணக்கம் வைத்து அறைக்குள் புகுந்தான்.
ரங்கநாதனும் ஈஸ்வரன் அறைக்குள் வர, “கல்யாண வேலைகளை பாருங்க அண்ணா. விஷ்ணு கமலி கல்யாணத்துல எந்த குறையும் வச்சிடாதிங்க.
அம்மாவை வச்சி தெய்வானை பெரிம்மாவிடம் பேசிடறேன். அவங்க கன்வின்ஸ் ஆனா எல்லாம் சரியாகிடும்.” என்றதும் ரங்கநாதனுமே கையை பிடித்து, “இந்த வீட்டு மருமகளா நினைச்சி தான் கமலியை இங்க தங்க வச்சது. இப்படி தலைகீழா மாறும்னு நினைக்கலை ஈஸ்வரன். என்னை மன்னிச்சிடுங்க” என்று அவருமே அவர் தரப்பில் மன்னிப்பு கேட்டார்.
திவ்யபாரதி வரவும் ரங்கநாதன் வெளியே இருப்பதாக தலைகுனிந்து அகன்றார்.
ஈஸ்வரன் தோளை தீண்டி, “அவ வேண்டாம் ஈஸ்வரன். அந்த பையனோட நெருக்கம், சொல்லாம சொல்லுது அந்த பொண்ணு மேல அவன் வச்சிருக்கற பாசத்தை. யாரோட காதலையும் பிரிச்சி வைக்கிற பாவம் நமக்கு வேண்டாம். நீ விட்டு கொடுத்து ஒதுங்குவது உன்னோட பிற்காலத்துக்கு நல்லதுயா.
உனக்கென்னயா குறைச்சல். நீ சம்மதிச்சா இன்னிக்கே தரகரிடம் ஆயிரம் வரன் முன்ன வைப்பார். நீயா தான் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிவச்சிட்டே போற. நாளைக்கே தரகரிடம் பொண்ணு போட்டோவை கேட்டா, வீடு தேடி ஆயிரம் வரன் வரும். அதுல ஒன்னை கல்யாணம் பண்ணு.
நந்தினியை நான் வளர்த்துக்கறேன். எனக்கு உடம்புல வலு இருக்கற வரை நந்தினியை நான் வளர்க்கறேன். முன்ன தான் பேச தயங்கி ஒடுங்கினா. இப்ப தான் கேர்டேக்கர் வந்த, நர்ஸ் பொண்ணு பேச வச்சிட்டாளே… நர்ஸ் பொண்ணு… கேர்டேக்கரா வந்தவ..” என்று கூறி அழுதார்.
கமலியை மகனின் மனதில் நுழைந்து, அவனால் எளிதில் அவளை இழக்க மனமின்றி, தவிக்க கண்டு அன்னை மனம் அழுதது.
ஈஸ்வரனோ “அம்மா… அழாதிங்க அம்மா. நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிக்கறேன். யாரையாவது பாருங்க. ப்ளிஸ் இதுக்காக அழாதிங்க. கமலியை மனசார வாழ்த்துங்க.” என்று தேற்றினான்.
கையோடு கையாக கமலிக்கென்று வாங்கிய புடவை நகையை பீரோவில் வைத்து மூட்டைக் கட்டினான்.
அன்றைய நாளில் ஈஸ்வரன் அனைவரையும் சாப்பிட வைத்தான்.
வசுந்தரா பாயாசம், கேசரி, அல்வா என்று வரிசையாய் செய்து கீழே கொண்டு வந்து கொடுக்க, திவ்யபாரதி மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.
தன் மகன் ஈஸ்வரனுக்காக திருமண சாப்பாட்டை அறிவிக்க எண்ணி இனிப்பை செய்ய தயாராக இருந்தவர். அனைத்தும் மாறிவிட்டதே.
ஈஸ்வரன் அடுத்த நாளே பணிக்கு செல்வதாக உரைத்து கிளம்பிவிட்டான்.
கமலியை அக்காவோடு செல்லாமல் நந்தினிக்காக இருந்து அவளிடம் பக்குவமாய் தான் காலம் முழுக்க சித்தியாக வரமுடியாதென்று உரைத்து விடுவதாக ஈஸ்வரன் வீட்டிலேயே இருந்தாள்.
திவ்யபாரதி மனப்பூர்வமாக இருக்க விடுவதால் சுதாவும் தங்கையின் நெற்றி முட்டி, “குழந்தைக்காக இருக்கியா? இல்லை உன்னோட விச்சுவுக்காக இங்க தங்கறியாடி” என்று கேட்க, “அக்கா நந்தினி பாப்பாவுக்காக தான். விச்சு படிக்க பெங்களூர் போயிடுவார்” என்று செல்ல சிணுங்கலாய் உதிர்த்தாள்.
ரங்கநாதன் மனைவி மகளை அழைத்து கிளம்பும் நேரம் விஷ்ணுவின் பெற்றவர்களிடம் வந்தார்.
“தம்பி ஏதோ வேலை கிடைச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னாராம். இந்த நான்கு மாசம் ஹாஸ்பிடல் வீடுன்னு இருந்திருப்பார். எக்ஸாம் எப்படி எழுதுவார்? அப்படியே எழுதினாலும் வேலை சட்டுனு கிடைக்காது. அதுவரை கமலி இங்க தான் இருக்கணுமா?” என்று தவறாய் பேசிடுவோமோ என்று பயந்து விசாரித்தார்.
“அதெல்லாம் எக்ஸாம்ல அரியர் வைக்காம எழுதிடுவேன். வேலை கிடைக்குமான்னு கலங்க வேண்டாம். பி.பி.ஏ கிரேட் வச்சி ஒரு சில இடத்துலே இப்பவே வேலைக்கு அப்ளிக்கேஷன் போட்டிருக்கேன்.
இந்த வேலை தான் போகணும்னு யோசிக்கறவனுக்கு தான் வேலை கிடைப்பது கஷ்டம். எந்த வேலையென்றாலும் ஸ்மார்டா மூவ் பண்ணினா சட்டுனு வேலை கிடைக்கும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க. கண்டிப்பா ஏதாவது சிங்கிள் டிகிரிக்கு உண்டான, ஒரு வேலையோட கமலியை கல்யாணம் பண்ண உங்களை தேடி நானே வருவேன். இட்ஸ் எ பிராமிஸ்” என்றான் விஷ்ணு.
ரங்கநாதன் -சுதா குழந்தை ஐஸூ மூவரும் புறப்படவும், விஷ்ணுவும் புறப்பட்டான்.
அவனது படிப்பு பாதியில் நிற்க கல்லூரிக்கு சென்றிட முடிவெடுத்தான்.
இளங்கோ வசுந்தரா, பைக்கும் காரும் தரவில்லை. மாறாக ஏசி பஸ்ஸில் பையனை செல்ல கட்டளையிட்டனர்.
அவர்களிடம் கமலியை பார்த்துக்க கூறி, காதலியிடம் தாய் தந்தையரை பார்த்துக்க கூறி விடைப்பெற்றான். இடையில் கார்த்திகாவை போனில் பிலுபிலுவென பிடித்து திட்டி தீர்த்தான். தன்னை கமலி மறக்க துபாம் போட்டு பேசியவளாயிற்றே.
இரண்டும் மல்லுக்கு நின்று போனில் சண்டையிட்டு கொண்டதை கன்னத்தில் கை வைத்து கமலி புலம்பினாள்.
விஷ்ணுவோ, “உனக்கு என்ன பாவம் செய்தேன். என்னை கமலியை பிரிக்கறதுல குறியா இருக்க?” என்று அதட்டினால், மறுபுறம் கார்த்திகாவோ, “இப்பவும் சொல்லறேன் டா. உன்னை விட ஈஸ்வரன் தௌசண்ட் டைம் பெஸ்ட். என்ன செய்ய, இந்த கமலி லூசு உன்னை விரும்பி தொலைச்சிட்டா” என்று அவளும் பதிலுக்கு விஷ்ணுவிடம் திருப்பி கொடுப்பாள்.
‘இதுங்க எதிரும் புதிருமா இருந்து என் உயிரை வாங்குதுங்க’ என்று கொட்டாவி விடுவாள் கமலி.
இங்கே திவ்யபாரதி வீட்டில் கமலி கொஞ்சம் கொஞ்சமாய், நந்தினியிடம், அவளது மௌவுனத்தை உடைத்து பேச வைக்கும் துணையாக கமலி வந்ததை தெரிவித்தாள்.
முதலில் குழந்தை நந்தினி “நீங்க சித்தப்பாவை கல்யாணம் செய்யப் போவதில்லையா சித்தி?” என்று கவலைமாய் கேட்டாள்.
“இல்லைடா குட்டி கல்யாணம் செய்வதாக இருந்தா முதல்லயே பண்ணியிருக்க மாட்டாரா. உனக்கு ஒரு கேர்டேக்கர் தேவைன்னு தான் சித்தப்பா என்னை சித்தினு அறிமுகப்படுத்தியது. மற்றபடி உனக்கு உண்மையான சித்தி வர கொஞ்சம் நாளெடுக்கும். அதோட நான் ஐஸூவோட அம்மா இருக்காங்களே. அவங்க உனக்கு பெரியம்மா இல்லையா. அவங்க தங்கை நான் உனக்கு சித்தி. அந்த உறவு முறையில் தான் நீ சித்தின்னு கூப்பிடறதும்.” என்று விளக்க, நந்தினிக்கு ‘ஆமால ஐஸூ அம்மாவை நான் இதுக்கு முன்னாவே பெரிம்மான்னு சொல்வேன்.
ஆனாலும் நீங்க எங்க ஈஸ்வரன் சித்தப்பாவை கல்யாணம் செய்யலாம்.” என்பாள் குழந்தை.
ஆனாலும் லேசான மாற்றம் விதைத்திட்ட திருப்தியில் பாடம் சொல்லி தரவும், நந்தினியை பராமரித்து வழிநடத்தவும் துணையாக இருந்தாள் கமலி.
அங்கு இருக்கும் நேரம் தரகர் கொண்டு வரும் புகைப்படத்தை பார்வையிடுவார் திவ்யபாரதி. அவர்களோடு கமலியும் ஈஸ்வரனுக்கு பெண் பார்க்கும் வேலையும் ஆரம்பித்தாள்.
திவ்யபாரதியோ “அடப்போம்மா… எந்த பொண்ணு போட்டோ அனுப்பினாலும் ஒரு ரியாக்ஷனும் தரமாட்டான்.” என்று சலிப்படைந்தார்.
தொடரும்.
Interesting😍