அத்தியாயம்-6
Thank you for reading this post, don't forget to subscribe!இரண்டு நாளாக விஷ்ணு வீட்டை தாண்டி வெளியே வரவில்லை. விஷ்ணு பற்றி ஒன்றும் பாதியுமாக அறிந்த கமலிக்கு முழுமையாக தெரியாமல் திண்டாடினாள்.
நந்தினிக்கு இனிப்பு பிடிக்குமென்று குலோப்ஜாமூன் செய்து அதனை கொண்டு மேல் வீட்டில் கொடுப்பது போல், பார்க்க நினைத்தாள். உண்மையில் குலோப் ஜாமூனை விரும்பி சுவைப்பான் விஷ்ணு.
குழந்தையின் சாக்கில் விஷ்ணு வீட்டு ‘காலிங் பெல்’ அடித்து நின்றாள்.
வசுந்தரா வந்து கதவை திறந்து, “உள்ள வாம்மா” என அழைத்தார்.
“நந்தினிகுட்டி குலோப்ஜாமூன் சாப்பிட கேட்டா. வீட்ல செய்தேன் உங்களுக்கும் கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன் அம்மா” என்று கூறவும் வாங்கிக் கொண்டார்.
“அ…அவங்க இல்லையா. ஐ மீன் அங்கிள் அப்பறம் உங்க பையன்” என்று கேட்டு கண்களை சுழற்றினாள்.
“விஷ்ணு அப்பா ஹாஸ்பிடலுக்கு போயிருக்கார். விஷ்ணுவோட ரீசண்ட் மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க.
இரண்டு நாளா விஷ்ணுவுக்கு உடம்பு சரியில்லைம்மா. அவனா எழுந்து வரட்டும்னு நானும் காத்திருக்கேன்” என்று கூறியவரிடம், ‘நான் அவரை பார்க்கட்டுமா?’ என்று கேட்க தயங்கி இனிப்பை சுவைக்க கூறினாள்.
“ஜாமூன் என்றால் விஷ்ணுவுக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று அதனை எடுத்து விஷ்ணு அறைக்கு ஓடினார் வசுந்தரா.
இந்த வாய்ப்பு போனால் விச்சுவை காண முடியதென்று கமலி திவ்யபாரதியை பின் தொடர்ந்தாள்.
மெத்தையில் சோர்வாய் நெடுசாணாக படுத்திருக்க, கமலிக்கு திகைப்பு, “விஷ்ணு… விஷ்ணு கண்ணா.. உனக்கு பிடிச்ச ஜாமூனை கீழ் வீட்டு பொண்ணு கமலி கொடுத்தாடா. கொஞ்சம் போல சாப்பிடறியாடா கண்ணா? கண்ணை திறந்து பாருப்பா” என்றதும் இமைகள் உருண்டது.
“ஜாமூன்னா அவனுக்கு பிடிக்கும் அதான் மயக்கத்துல படுத்தாலும் கண்ணை கண்ணை உருட்டறான்” என்று வசுந்தரா பெருமை பேசி கண்ணீரை துடைத்தார்.
இல்லை ‘கமலி’ என்ற பெயரில் விஷ்ணு இமைகள் சுழல்கின்றதென்று காதலி அறிந்துக் கொண்டாள். அவளுக்கும் கண்கள் மடைத்திறந்தது போல கன்னத்தில் வழிய, அவசரமாய் வசுந்தரா பார்க்கும் முன் துடைத்தாள்.
“விஷ்ணு உனக்கு பிடிச்ச ஜாமூன்டா.” என்று எழுப்ப, அதே போல இருந்தான்.
கமலி என் பையனை எழுந்துக்க சொல்லும்மா. இவனை இப்படி பார்க்க கஷ்டமாயிருக்கு” என்றதும் விஷ்ணு நெற்றி சுருங்க, மனதாங்கல் அதிகமாகியது.
கமலி வாய் பொத்தி கலங்கியவளாக, வெளியே வந்து தேம்பினாள்.
‘என்னாச்சு விச்சு. ஏன்டா இப்படி இருக்க?’ என்று மனம் ரணமாய் கொன்றது.
கமலி வெளிவந்ததும் வசுந்தரா பின் தொடர்ந்து வந்து, “பாரு கமலி, எப்பவும் சும்மா படுத்திருக்க மாட்டான். இப்படி விதி படுக்க வைக்குது. அவனை பழையபடி எழுந்துக்க சொல்லு. கமலி” என்று தேம்பினார். வசுந்தரா நிதானமாக இருந்திருந்தால் கமலியின் செய்கைகளை கண்டு சந்தேகித்து இருப்பார். ஆனால் வசுந்தராவோ மகனின் உடல்நிலை காரணமாக எதையும் கவனிக்காமல் பிதற்றினார்.
விஷ்ணு அறைவரை அன்னையின் குரல் கேட்க அவன் மனம் ‘கமலி’ என்ற பெயரில், நினைவோடு சிக்கினான். இமைகள் உருண்டு கொண்டு திரிவதை யாரேனும் அருகேயிருந்தால் கண்டிருக்கலாம்.
மெதுவாக அழுகையை அடக்கி வசுந்தரா தோளை தீண்டி, “ஆன்ட்டி உங்க பையனுக்கு என்னாச்சு?” என்று வார்த்தைக்கு வலிக்குமோயென கேட்டுவிட்டாள்.
முதலில் விஷ்ணு தன் மீது கோபத்தில் இருப்பதால கண்டுக்காமல் ஏளனம் செய்வதாக தோன்றியது. திவ்யபாரதியும் விஷ்ணு பற்றி அறையும் குறையுமாக கூறியிருக்க அவள் புரிந்துக் கொண்டது விஷ்ணு சில வருடத்தில் நடந்ததை மறந்து நிற்கின்றான் என்பதே.
அப்படி தோன்றவும், வார்த்தையால் விஷ்ணு அன்னையிடம் கேட்டதும், வசுந்தரா தன் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.
“ராஜா வீட்டு கண்ணுகுட்டிம்மா. சாப்பாடு, டிரஸ், பைக், கார்னு எதுனாலும் பிடிச்சதை தான் செலக்ட் பண்ணுவான். அப்படி பிடிச்சி வாங்கிட்டா அதை உயிரா மதிப்பான்.
சின்ன வயசுலயே இந்த ஸ்கூல்ல தான் படிக்கணும்னு ஆசைப்பட்டான். படிக்க வச்சோம். இந்த காலேஜ்ல பி.பி.ஏ தான் படிப்பேன்னு நின்றான். பி.பி.ஏ படிச்சிட்டு இருந்தான். என்ன செய்ய அந்த காலேஜ்ல பியூன் ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடக்க, இவன் கண்ணெதிர்ல நடந்ததும் பியூனை அடிக்க ஆரம்பிச்சிட்டான். பியூன் அவனை சார்ந்த அந்த காலேஜ் ஆட்கள் ஒன்று சேர்ந்து இவனுக்கு டி.சி தர முடிவெடுத்தாங்க.
ஆறு மாசம் தப்பே செய்யாம நான் தண்டனை அனுபவிக்கணுமானு, அந்த காலேஜ் கான்டெக் சர்டிபிகேட்ல இன்டீசன்ட் பிகேவியர் மாத்த சொல்லி ஒரே போராட்டம். டி.சியும் வாங்கலை. ஆறுமாசம் அந்த காலேஜ்ல படிக்க போகலை. சண்டையிடுவும் நியாயத்தை கேட்கவும் குரல் கொடுக்க, இவன் பிடிவாதம் பார்த்து அவங்களா எக்ஸாம் மட்டும் எழுத அலோவ் செய்து டி.சியை கொடுத்தாங்க.
சரி எம்.பி.ஏ-வது ஒழுங்கா படிடான்னு அவன் விருப்பப்பட்டு பெங்களூர் அனுப்பினோம்.
ரொம்ப சந்தோஷமா படிச்சான். இங்க வர்றதுக்கு இரண்டு நாள் முன்ன கூட, ‘மம்மி உங்களுக்கு ஒரு ஷாக்கிங் சர்பிரைஸ் வச்சிருக்கேன்.’ புட்டெல்லாம் தடபுடலாக பண்ணி வையுங்க சொன்னான்.
என்ன தலைவிதியோ பைக்ல வர்றப்ப விபத்து நடந்துடுச்சு. பஸ்ல மோத வந்தவன் பைக்ல மோதியதா அவன் பிரெண்ட் ஆனந்த் சொன்னான். எங்களுக்கு இந்த ஷாகிங் சர்பிரைஸ் தான் கிடைச்சது.
உடபெல்லாம் ரத்தமா, உயிருக்கு போராடி ஹாஸ்பிடல்ல அவன் பிரெண்ட் ஆனந்த் தான் சேர்த்திருந்தான்.
உயிர் பிழைக்க முடியாதுன்னு டாக்டர் டைம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
விஷ்ணுவோட அப்பா தான் எந்த மருந்துவமென்றாலும் பாருங்க பணத்தை பத்தி யோசிக்காதிங்கன்னு சொன்னார்.
கடவுள் புண்ணியம் உயிர் இருந்தது. ஆனா கோமா நிலையில் ஒரு மாசம் எங்களை தவிக்க வச்சிட்டு போயிட்டான்.
வீடு, வாசல், பூர்விக நிலம், சொத்து எல்லாம் வித்து தான் பிழைக்க வச்சது. நாங்க வாழ்ந்த வீடு விஷ்ணு பார்த்து பார்த்து வடிவமைச்ச வீடும்மா. வசதியா ஒவ்வொரு சுவரும் டிசைனும், தூணும், இவன் ரசித்து இப்படி வையுங்கன்னு சொல்லி கட்டியது.
கல்யாணம் முடிஞ்சி என் மனைவி கூட வாழற இடம் இந்த ரூம் அப்படின்னு பெரிய அறையா கட்டி வச்சான்.
விபத்துக்கு சிகிச்சைக்கே எல்லாம் விற்றுட்டோம். விஷ்ணு எழுந்து நடமாடினா போதும்னு தவமிருந்தோம்.
எங்க வேண்டுதல் வீண் போகலை. அவனும் மனசுல உயிர் வாழ ஆசைப்பட்டு துடிக்க எழுந்து வந்தான். ஆனா அவனுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தெரியலை. அவனை ஆனந்த் என்ற பிரெண்ட் சேர்த்தான்னு சொல்லி காட்டினா, எனக்கு இவரை தெரியலையேனு சொல்லறான்.
பி.பி.ஏ படிச்ச பசங்க பெயரை வரிசையா சொல்றான். ஆனா எம்.பி.ஏ பிரெண்ட் ஒருத்தரும் நினைவு வரலை.
சரி நினைவுகள் தானா வரட்டும்னு டாக்டரும் விட்டுட்டார்.
வீடு வாசல் விற்றதால தான் இப்ப இங்க வாடகைக்கு வந்துட்டோம்.
தினம் தினம் நம்ம வீடு வித்துட்டிங்களா?அப்படின்னு அதிர்ச்சியடையறான்.
இதுல சமீபகாலமா நான் சர்பிரைஸ் சொன்னேனே யாரையாவது விரும்பினேனா அம்மான்னு கேட்டான்.
எங்களுக்கு என்ன சொல்ல தெரியலை. ஆனந்த்கிட்ட கேட்டதுக்கு இல்லைம்மானு சொல்லிட்டான்.
காதலிச்சா அந்த பொண்ணு வீடு தேடி வந்து விசாரிக்கும் தானே. அப்படி யாரும் வரலை.
எங்களுக்கும் விஷ்ணு ‘சர்பிரைஸ்’ சொன்னதும் மனசுல மருமகளை கூட்டிட்டு வரப்போறானோனு சந்தோஷப்பட்டோம். யாருக்கு தெரியும்? இவன் கோமால இருக்கான்னு தெரிந்ததும் தூரத்துல நின்று பார்த்து அப்படியே போயிட்டாளோ என்னவோ? என் மகன் எதை நினைச்சி உசிரை கையில் பிடிச்சி மீண்டு வந்தானோ. அந்த கடவுளுக்கே வெளிச்சம்.” என்று கண்ணீரை துடைத்தார்.
அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து தலையாட்டி கமலி சோபாவில் பொத்தென்று விழுந்தாள். என் விச்சுவை அப்படி விட்டுட்டு போவேனா? நான் அப்படிப்பட்ட பொண்ணா?
விஷ்ணு நிலையறியாது தனக்கு பொண்ணு பார்க்கும் விஷயம் தெரிந்தும் வரவில்லை என்று அரற்றினாளே.
தன்னை இன்னொருவன் முன் அலங்காரம் செய்து நின்றிடக் கூடாதென்றும் யாரின் கையையும் பற்றிட கூடாதென்றும், சாவோடு போராடி வந்திருக்கின்றான்.
எனக்காக… ஆம் எனக்காக மட்டுமே. இல்லையென்றால் அவன் என் எதிரில் இப்படி மீண்டும் சந்திக்க நேருமா?
விஷ்ணுவுக்கு என்னை பார்த்ததும் நினைவுகள் தூண்டப்படுகின்றதோ? அதனால் தலைவலி உண்டாகி இப்படி நெடுஞ்சாணாக கிடக்கின்றான் என்ற நிதர்சனம் புரிய அழுகை உண்டானது.
“விச்சு… விச்சு..” என்று மனதில் புலம்பினாள். ஆனந்தனின் நெற்றியில் கட்டு கட்டி, தன் படிக்கும் இடத்தில் மருத்துவம் பார்க்க வந்தானே இப்பொழுது இப்படி அவஸ்தை அடைகின்றான் என்று வருந்தினாள்
அவனது அறையை ஏறிட, அவன் எழுந்து அமரும் அசைவு தோன்ற, வேகமாய் நந்தினியை அழைத்து படிக்கட்டில் இறங்கினாள்.
வாசலில் நுழையவும் ஈஸ்வரன் எதிரே வந்திருந்தான்.
“ஹாய் கமலி, எப்படியிருக்கிங்க” என்றதும், குழந்தையை கீழே இறக்கிவிட்டு அறைக்குள் ஓடினாள்.
கமலி கண்ணீரை காணாத திவ்யபாரதியோ “உன்னை பார்த்ததும் வெட்கப்பட்டு ஓடிட்டா போல” என்றுரைக்க ஈஸ்வரனுக்கு அவளது கண்ணீர் கண்டதால் என்னவோ உதைத்தது.
இங்கு வந்ததும் வராததும் விசாரணை துவங்குவானேன் என்று ஒத்தி வைத்தான் ஈஸ்வரன்.
“சித்தப்பா எனக்கு என்ன வாங்கி வந்திங்க” என்று நந்தினி ஈஸ்வரனை உலுக்கவும், எண்ணங்கள் கலைந்தது.
“சூட்கேஸ்ல இருப்பதெல்லாம் உனக்கு தான் நந்து குட்டி” என்று கூறினான்.
ஈஸ்வரன் நந்தினியை தூக்கி கொஞ்சிக் கொண்டு வந்தான். அதற்குள் கமலி முகமெல்லாம் கழுவி அழுத சுவடை நீக்கியிருந்தாள்.
ஈஸ்வரன் வந்ததும் அறைக்கு வந்துவிட்ட மடத்தனம் உணர, வெளியே வந்தாள். “சாரி ஏதோவொரு ஞாபகம் நீங்க வந்ததும் வந்துட்டேன்” என்று கூறி தண்ணீரை நீட்டினாள்.
“பரவாயில்லை கமலி.” என்று வாங்கி பருகியவன் பார்வை கமலியை விழுங்கியது.
”சித்தி சித்தப்பாவுக்கு குலோப்ஜாமூன் கொடுங்க” என்று இனிப்பை நினைவூட்ட, கிச்சனில் சென்று இரு பௌவுலில் எடுத்து வந்தாள்.
திவ்யபாரதியும், ஈஸ்வரனும் சேர்ந்தே ஆளுக்கொரு பௌவுலை எடுத்து இனிப்பை சுவைக்க ஆரம்பித்தனர்.
“டெலீஷியஸ் கமலி. நான் ஒரு மாசம் முன்ன இன்னிக்கு வர்றதா சொல்லிருந்தேன். நினைவு வச்சி ஸ்வீட் செய்திருக்கிங்க. தேங்க்யூ” என்றான்.
கமலிக்கு ஈஸ்வரன் போன் பேசியதே மறந்தும் போனது. இதில் தேதியை அவள் நினைவு வைத்திருக்கின்றாளா? கமலி நினைப்பெல்லாம் விஷ்ணுவை சுற்றி வந்துக்கொண்டிருக்க அவள் உயிரையும் மறந்து போகின்றவளே.
“நீங்க பேசிட்டு இருங்க” என்று கமலி நழுவினாள்.
ஈஸ்வரன் சரியென்று கூறிவிட்டு அவளது பாதம் செல்லும் திசையை வெறிக்க, திவ்யபாரதியோ, “ஈஸ்வரா… கல்யாணமே வேண்டாம் அம்மா. நந்துவை படிக்க வச்சி ஆளாக்கற பொறுப்பு மட்டுமா போதும்னு பேசின. இப்ப கமலி திரும்புற பக்கம் எல்லாம் உன் கவனம் திரும்புது. கமலியை எப்ப மணந்து உன் மனைவியா மாத்தப்போற?” என்று ஆர்வமாய் கேட்டார் ஒரு தாயின் எதிர்பார்ப்போடு.
பெருமூச்சை உள்ளிழுத்து, “கல்யாணம் செய்தா எனக்குன்னு வர்ற பொண்ணு நந்துகுட்டியிடம் அன்பா இருக்க மாட்டான்னு பயந்தேன் அம்மா. ஆனா கமலி நந்தினியை எப்படி பார்த்துக்கறான்னு இந்த இடைப்பட்ட நாளில் கவனிப்பதை பார்த்து, நானுமே நந்துகுட்டி மாதிரி குழந்தையா இருக்க கூடாதானு மனசு ஏங்குது.
அந்தளவு கமலி நம்ம நந்தினியை பார்த்துக்கறா.
உங்களையும் வீட்டையும் கவனிச்சுக்கறா.
முன்ன கடனேனு கடமைக்கு பொண்ணு பார்க்க வந்தேன். இப்ப கமலியோட வாழ ஆசை வருதும்மா. இந்த முறை கமலியிடம் திருமணத்தை பற்றி பேசறேன்” என்று ஆசையாய் உரைத்தான்.
திவ்யபாரதி மகனது தோளை தட்டி, “இனி தடையென்ன? கல்யாணம் பண்ணிடலாம். அதுக்கு முன்ன முதல்ல குளிச்சிட்டு வாடா ” என்று மகிழ்ந்து கூறினார்.
ஈஸ்வரன் வெட்கப்பட்டு அவனுக்கான அறைக்கு சென்றான். நந்தினி குட்டியோ சித்தப்பா வாங்கி வந்த பொருட்களை எடுத்து விளையாடினாள்.
ஈஸ்வரன் தனது அறைக்கு வந்ததும், மெத்தையில் படுத்து பொண்ணு பார்க்க சென்றதும் கமலி கூறியதும் அதன் பின் நடந்தவையை நினைவேட்டில் மீட்டெடுத்தான்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்
Super