புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே-11

அத்தியாயம்-11

   அடுத்த நாள் ஆதிரா கண் விழித்தபோது சிற்பிகா வாசலை பெருக்கி முடித்திருந்தாள். இதே மற்ற நாளாக இருந்தால் புள்ளிக்கோலமோ ரங்கோலியோ போட்டு வாயிலை அழகு படுத்தியிருப்பாள். ஆச்சி இறந்ததால்  பெருக்கி மட்டும் விட்டு மண்பாதையில் முட்கள் ஏதேனும் உள்ளதா என்று அகற்றினாள்.

      ஆதிரா பல் விளக்கி வந்தப்போது சூடான தேனீர் போட்டு எடுத்து வந்து நீட்டினாள்.

   சிற்பிகா குளித்து முடித்து அலுவலகம் செல்லும் தோரணையில் இருக்கவும், “எங்க கிளம்பிட்ட? என்று ஆதிரா வரவும், “பொழப்பை கவனிக்கணுமே அம்மா ஆச்சிக்காக நான், எனக்காக நீங்கன்னு இங்கயே தங்கிட முடியாதே, கடந்து போகணுமே.

    உங்களுக்கு அங்க ஏகப்பட்ட வேலையிருக்கும். எனக்காக இங்க ஒரு நாள் தங்கியதே எனக்கு அதிசயம் அம்மா. உங்க பெரிய பிள்ளை எப்படி விட்டாரோ? நேத்து ஒருநாள் நீங்க தங்கவே வீட்டை பார்வையால அளந்துட்டார். போதாதுக்கு முள்ளுவேற, உங்க சௌவுகரியம் எப்படின்னு பயந்துடுவார். நீங்க கிளம்புங்கம்மா நானும் பருத்தி மில்லுக்கு போயிடுவேன்.” என்று தெளிவாய் உரைத்தாள்.

   ஆதிராவோ சிற்பிகாவை நிறுத்தி, “அங்கப்போய் ஆச்சி பத்தி யோசித்து கவலைப்படுவியே” என்று ஆதிரா அக்கறையாக கேட்டார்.

  “கவலை அதிகமாயிருக்கும்மா, இருந்த ஒத்த உறவையும் இழுந்துட்டோமேனு.
   ஏதாவது ஒன்னுனா ஓடிவந்து அரவணைச்சிடுவாங்க. அன்பாயிருந்தவங்க, அவங்க இழப்பு கஷ்டமாயிருந்தாலும் இங்கயே இருந்தா அவங்க நினைவு வாட்டும். அதுக்கு வேலைக்கு போய் மனசை மாத்திக்கணும். வேலை செய்யறப்பவாது ஆச்சி வீட்ல உயிரோட நடமாடுதுனு நினைச்சிப்பேன்” என்றதும் அவளது பக்குவப்பட்ட மனதை கண்டு வியந்தார் சிற்பிகா.

   அவ்வளவு எளிதில் இதுபோன்ற பக்குவப்பேச்சு வந்திடாது. காயப்பட்ட வலியை அனுபவித்த இதயத்திற்கு மட்டுமே பக்குவம் விரைவில் கிடைக்கும். அந்த விதத்தில் சிற்பிகா காயப்பட்டவளே அதனால் தான் இந்த மாற்றம்.

   “சரி நீ வேலைக்கு போ. அங்க ஏதாவது கஷ்டமாயிருந்தா ஐயாவிடம் சொல்லு.” என்று தாடைப்பிடித்து கூறவும், “அம்மா நீங்க என்கூடவே தங்கிட முடியாதா?” என்று ஏக்கமாய் கேட்டுவிட்டாள்.

  கேட்டப்பின்னரே தன் பேச்சு புரிய, “சாரிம்மா அதென்னவோ உங்களை பார்த்தா தான் இந்த ஏக்கம் வருது.
   அதுக்குயெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். நான் உங்க மகளா பிறக்க.

   அம்மா நான் இப்படி பேசினேன்னு உங்க பெரிய பையனிடம் சொல்லிடாதிங்க. பிறவு என் அம்மாவையே கேட்பியானு சண்டைக்கு வந்துடுவார். முன்னயாவது எப்பவாது பார்ப்பேன் நைஸா அன்னைக்கு மட்டும் லீவு போட்டுட்டு மறைஞ்சிப்பேன்.

   இப்ப அப்படி முடியாது வந்த கொஞ்ச நாள்ல இரண்டு தடவை பார்க்கற மாதிரி நிலைமை அமைஞ்சிடுச்சு.
   நீங்களும் கிளம்புங்க அம்மா. இல்லைன்னா அவர் வந்துடுவார்” என்று விரட்டாத குறையாக கூறவும் ஆதிராவுக்கு நகைக்க தோன்றியது.

   காபி குடித்து குளித்து முடித்து உணவையும் முடித்து ஆதிரா கிளம்ப ஆயத்தமாக, டிபன் பாக்ஸை எடுத்து மூட முயன்றாள்.

   “சிற்பிகா உன் டிபன் பாக்ஸ் ஒன்னு எங்க வீட்லயிருக்கு. ஆக்சுவலி நீ அன்னைக்கு வீட்டுக்கு வரவும் உன் டேபிளில் இருந்த லஞ்ச் பாக்ஸை ஆர்யன் அவனுக்கு கொடுத்ததுனு நினைச்சி எடுத்து சாப்பிட்டுட்டான். அப்பறம் எங்க கேரியரோட அந்த பாக்ஸும் வீட்டுக்கு  வந்துடுச்சு.
   கொடுத்து விடணும்னு நினைச்சேன். எங்க அதுக்குள்ள… சாரி… நீ கிளம்பு நான் சர்வேஷிடம் கொடுத்து அனுப்பறேன்” என்றதும் தலையாட்டினாள்.

    உள்ளுக்குள் ‘என் சமையலை ஆர்யன் சாப்பிட்டாரா? பச் இனி அந்த டிபன்பாக்ஸ் இங்க வந்தாலும் தலையை தூக்கி விசிறியடிக்கறேன்’ என்று நினைத்திருக்க, ஆதிராவோ தனது உடைமையை எடுத்து கொண்டார்.

    சிற்பிகா ஸ்கூட்டியிலேயே இருவரும் வந்தார்கள்.

  ‘திருநிறையகம்’ வீட்டு வாசலிலேயே ஆதிராவை விட்டுவிட்டு “நான் கிளம்பறேன் அம்மா” என்று ஓட்டமெடுத்தாள்.

   நிபுணனோ ஆதிரா வந்ததை கண்டு “என்ன இம்புட்டு சீக்கிரம் வந்துட்ட?” என்று வேஷ்டியும் தோளை போர்த்திய துண்டும் நெற்றியில் தன் பெற்றோர் சமாதியில் வணங்கிவிட்டு வந்த சுவடாக விபூதியும் நிறைந்திருந்தது.

    “எங்க அந்த பிள்ளையே உங்க மில்லுக்கு வேலைக்கு ஓடறா. நான் என்ன செய்ய? அவ வீட்லயிருந்தா ஆச்சி நினைப்பு வருதுனு மனசை எங்குட்டாவது மாத்திக்க நினைக்கிற” என்ற பேச்சு ஆர்யனுக்கு கேட்டது.

   தாய் தநதையர் பேச்சில் இடையில் செல்லாத டீசன்ஸி மேன் தூரமாகவே இருந்தான்.

   “துளிர் காலேஜ் கிளம்பிட்டாளாங்க?” என்று கேட்டதும், “அவ அப்பவே கிளம்பிட்டா அம்மா” என்று சர்வேஷ் குரல் கொடுத்தான்.

   ஆதிராவோ “நீ காலேஜ் கிளம்பலையாடா?” என்ற வரவும் அண்ணனை ஏறிட்டான்.

   ஆர்யனோ “அவன் உங்களுக்கும் எனக்கும் சண்டை வருதானு வேடிக்கை பார்க்க லேட்டா போறான் அம்மா ” என்று மாட்டிவிட, ஆதிரா நிபுணன் பாட்டி தாத்தா என்று அவ்விடமே நகைப்புக்குரிய நேரமாக மாறியது.

   “அப்படிலாம் இல்லைம்மா. அண்ணன் என்னை சும்மாவே மாட்டிவிடுது.” என்று சர்வேஷ் கேரட்டை கடித்து திண்றான்.

  தங்கலட்சுமியோ கேரட்டை பிடுங்கி வைத்து சமைத்ததை சாப்பிடுடா” என்று உணவை அடுக்கினார்.

   “அம்மா நீங்க இருக்கறது எனக்கு இந்த தருணத்துல ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு. பாருங்க என் பசங்க அவங்க பாட்டுக்கு வயிறு நிரம்பி சாப்பிடறாங்க. இப்பயே போகணுமா அம்மா? அங்க யார் இருப்பாங்க?” என்று கேட்டாள் ஆதிரா.

   மாதவன் வாயெடுக்கும் முன், தங்கலட்சுமியோ, “இதே முன்னனா நீயே சொல்ல வேண்டியதில்லை.  இங்கயே பழியா இருப்போம். இப்ப அப்படியா? உங்கப்பா ‘என் பொண்ணு எல்லாம் சிறுவர் சீர்த்திருத்தபள்ளியில மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லி தந்து சேவை பண்ணறா. நல்லாசிரியர் விருது வாங்கிட்டு சர்வீஸ் முடிச்சி நான் வீட்ல சும்மாயிருக்க முடியுமானு பசங்களுக்கு ப்ரீயா டியூசன் நடத்தறார். மூன்று பசங்களுக்கு படிப்பு செலவு வேற பார்க்கறார். அந்த பசங்க நம்ம அப்பாவை தேடி வருவாங்க. உன் அளவுக்கு இல்லைனாலும் என் வீட்டுக்காரரும் படிப்பு சொல்லி தந்துட்டு இருக்காரே” என்று பேசவும் ஆதிரா இன்னமும் சிரித்தாள்.

     மாதவனோ “எல்லாரும் அப்பா மாதிரி ரோல்மாடல்ல வளருவாங்க டா. எனக்கு என் மக தான் ரோல்மாடல். ஆனா என் மகளை பெரியாளாக்கி பெருமையா வேடிக்கை பார்க்கறது என் மருமகன் தான்” என்றதும் அவ்விடம் நிசப்தமானது.

    “ஐயா நீங்க உத்தியோகத்துக்கு போகலையா?” என்று நிபுணன் கூப்பிட ஆர்யனோ “இல்லிங்க ஐயா சாப்பிட்டு கிளம்பணும் கதை கேட்டுட்டு உட்கார்ந்துட்டேன்” என்று இட்லியை எடுத்து போட்டு சாப்பிட்டான்.

   “நீங்க சாப்பிடலையா அம்மா?” என்று ஆர்யன் கேட்க, “அந்த பிள்ளை மடமடனு கிச்சடி செய்துடுச்சு டா. ரொம்ப டேஸ்டா செய்தா அங்கயே சாப்பிட்டேன். மறுத்தா சாப்பிடாம கிளம்புவாளோனு ஒரு எண்ணம்.” என்று கூற ஆர்யனோ சிற்பிகா பேச்சை நாசூக்காக எழுந்தான்.

   சர்வேஷ் ஆர்யன் கிளம்பவும் நிபுணன் மில்லிற்கு செல்ல ரெடியானார்.

    “அந்த பொண்ணு வந்ததிலருந்து நான் வரவர மில்லுக்கு தாமதமா தான் போறேன். எல்லாம் அதுவே கவனிச்சுக்குது.” என்று வரவும், “உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்ங்க.” என்று கூறவும் “வந்துப் பேசலாம் ஆதிரா” என்று செல்ல “பையன் கல்யாண விஷயமா” என்றதும் கால்கள் ஸ்தம்பித்தது.
  
  “அத்தை மாமா சமாதிக்கிட்ட பேசுவோம்” என்று கூப்பிட இருவரும் அங்கே நடந்தார்கள்.

   ஆதிரா ஐந்து நிமிடம் மௌவுனமாய் அமரவும், “பொண்ணு சிற்பிகாவா முடிவு பண்ணிருக்கியா?” என்று மனைவியை புரிந்த கணவனாக கேட்டார்.

   எப்படிங்க? என்ற ஆச்சரியம் எல்லாம் ஆதிரா காட்டவில்லை. இத்தனை வருட திருமண வாழ்வும், புரிதலும் இருந்ததில் நிபுணன் போன்றவர் மனைவி மனதை படித்தது பெரிய விஷயமேயில்லை.

  “ஏன் சிற்பிகாவை தேர்ந்தெடுத்தது தப்பா?” என்று ஆதிரா கேட்டதும் நிபுணனோ “சேசே சிற்பிகா ரொம்ப நல்லப்பொண்ணு. நம்ம பையன் ரொம்ப நல்ல பையன். ஆனா உன் பையனை கண்டா ஓடி ஒளியறவ அவள். உன் பையனுக்கு அந்த பொண்ணை கண்டாலே ஆகாது. அப்படியிருக்க இரண்டு பேரை எப்படி  கல்யாணம் பண்ணி வைக்க யோசிக்கற?” என்று வெகு ஆர்வமாக கேட்டார்.

எப்படியும் ஏனோ தானோ என்ற முடிவை ஆதிரா எடுக்கமாட்டாலென்ற நம்பிக்கை. அதுவும் பெற்ற பிள்ளை ஆர்யன் விஷயத்தில் ஆயிரம் முறை யோசித்திருக்க வேண்டும்.

  அதனால் என்ன காரணமென்று கேட்கும் ஆவலில் நின்றார்.

   “முதலில் சிற்பிகா பக்கமிருந்து அவளுக்கான நல்லது எதுனு சொல்லறேன்.
  அடுத்து நம்ம பையன் ஆர்யன் பக்கம் சொல்லறேன்.

   சிற்பிகாவுக்கு இருந்த ஒரே உறவும் இப்ப இல்லை. அவளுக்கு நல்லது பண்ணணும் என்று நினைக்கிற ஜீவன்கள் நீங்களும் நானும்.

   அவளுக்கும் கல்யாண வயசு. நம்ம சர்வேஷை விட பெரியவ. நாளைக்கு அவளுக்கு கல்யாணம் பார்த்து கட்டிக்கொடுக்குற கடமை நமக்கும் இருக்கு.

   யாரோயோ கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு நம்ம பையனை கட்டி வைக்கிறதுல தப்பா தோணலை.

   இப்ப முட்டிக்கிட்டு இருக்கறவங்க நாளைக்கு நம்மளை மாதிரி முன்னுதாரணமான ஜோடியா மாறுவதற்கு வாய்ப்பிருக்கு. ஏன்னா ஆர்யன் கெட்டவனில்லை. அவளோட பாயிண்ட் ஆப் வியூ தெரியவந்தா அவன் புரிஞ்சுப்பான் அப்பறம் அவளும் அன்பு செலுத்தலாம்..” என்று கூறவும், நிபுணனோ மொத்தமா சொல்லு நான் உனது திட்டத்தின் ஓட்டைகளை விளக்குகின்றேன் என்று கைகட்டி நின்றான்.

    ஆதிரா தொடர்ந்து “இப்ப நம்ம பையனுக்கு சொல்லறேன். அவன் இதுவரை யாரையும் விரும்பலை. சிற்பிகாவை நாம பார்த்த பொண்ணா கட்டிவச்சா அவன் அவளை மணந்தப்பிறகு காதலிப்பான்.

  அவன் அவளை எதுக்கு அறைஞ்சான்? என்னை சிற்பிகா தள்ளிவிட்டதுக்கு. என்னை எதுக்கு தள்ளிவிட்டான்னு தெரிந்தா சிற்பிகாவோட நிலை அப்ப என்னனு தெரிந்துக்கிட்டா கண்டிப்பா அவளை நேசிப்பான். என் பையன் ஒன்னும் பழி வாங்கறவன் இல்லை. அதோட சிற்பிகா தங்கமான குணம். நாளடைவில் பேசிக்கிட்டா அவங்க மாறுவாங்க” என்று ஆதிரா பேசவும் நிபுணன் முடிச்சிட்டியா என்று பார்க்க, “ப்ளீஸ் எதுவும் சொல்லாம நிற்கறிங்க. ஏதாவது சொன்னா தானே அதுக்கு நான் பதில் தருவேன்” என்று கணவரை ஏறிட்டாள்.
 
    “உட்காரு” என்று சமாதியில் தட்டவும் ஆறமர உட்கார்ந்தாள்.

   “பிடிக்காத இரண்டு பேர்னு தெரிந்தே கட்டி வைக்கிற. குட்… உன் மகன் நேத்தே எப்படி எகிறினான்னு பார்த்தல்ல? அப்பறமும் உனக்கு இந்த எண்ணம் உதிச்சதுக்கு பாராட்டணும்.
 
   அந்த பொண்ணு இவன் வந்ததால தான் ஓடினா. இன்னொன்னு கவனிச்சியா? சிற்பிகா எப்பவும் உன் கூட வால் மாதிரி ஓட்டிட்டு இருப்பா. ஆனா இவன் ஊர்லயிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறை என்று ஏதாவது பண்டிகைக்கு வர்றப்ப எல்லாம் அவளுக்கு பிடிக்காத அவ அப்பன் ஊருக்கு போறா. நாமளா போமானு சொன்னா கூட தவிர்க்கிறவ, உன் பையன் வர்றப்ப மட்டும் தான் அவ எங்கயாவது ஊருக்கு போவா. இது அன்னைக்கு காலையில ஒன்பது மணிக்கு பருத்தி மில்லுக்கு வந்துட்டு, பத்து மணிக்கு நம்ம பையன் வரவும் பத்தரைக்கு அந்த பிள்ளை வயிறுவலினு ஓடினதுக்கு பிறகு யோசிச்சேன். இவன் வர்றப்ப எல்லாம் அந்த பிள்ளை அப்படி தான் பண்ணிருக்கு. இது முதல்லயே நமக்கு ஸ்டக் ஆகியினுக்கணும். ஆனா நாம நல்ல நாள் அதுவுமா அவ அப்பா ஊருக்கு போறதா நினைச்சிட்டோம்.

     தன்னை ஒருத்தன் அடிச்சியிருக்கான். அதுவும் தன்னால தான் படிக்க சென்னைக்கு அனுப்பபட்டான்னு தெரிந்தும், அந்த பொண்ணு நம்ம பையனை ஏற்றுக்குமா? அது தனியா நின்று வாழ பழகின பொண்ணு. தைரியசாலி, பாட்டி இறந்ததை கூட சமாளிச்சி சமூகத்துல நடமாட வந்து நிற்குது. இவனிடம் முகம் திருப்புதலை பார்த்துச்சு அந்த பிள்ளை சந்தோஷமா இருக்குமா?

  நல்லது செய்தோம் நல்ல இடத்துல கட்டி கொடுக்குற கடமை நமக்கு இருக்கு. அதே சமயம் நமக்கு நன்றி கடன் பட்டதுனு நாமளே குழில தள்ளிட்டதா நாளைக்கு சிற்பிகா நினைச்சிடக்கூடாது.
  
   ஏன்னா உன் பிள்ளைக்கு அந்த பொண்ணை பத்தி ஒன்னும் தெரியாது. இங்கிருந்து படிக்க போகறப்பவும் நாம சிற்பிகா பத்தி சொல்ல வந்ததுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை ஐயானு முடிச்சிட்டான்.

  எங்கம்மாவை என் கண் எதிர்ல தள்ளிவிட்டா அதுக்கு எந்த நியாயமான காரணம் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லைனு சொல்லிட்டான். அதோட சிற்பிகாவை அவன் அடிச்சதுக்கு, நீ மன்னிப்பு கேட்க சொல்லியும் நம்ம மகன் செய்யலை.
   நீ அன்னைக்கு என்ன சொன்ன? ஒன்னு சிற்பிகாவிடம் மன்னிப்பு கேளுடா. இல்லை சென்னைக்கு படிக்க போ. என் பேச்சை கேட்காதவனுக்கு அதான் தண்டனைனு முடிச்சிட்ட.

    ஆர்யன் மன்னிப்பு கேட்கமாட்டேன்னு வீம்போட படிக்க அவன் தாத்தா பாட்டி வீட்டுக்கு போயிட்டான்.

   இன்னிவரை மன்னிப்பு கூட கேட்காதவன் நாளைக்கு கல்யாணத்துக்கு எப்படி சம்மதிப்பான்னு நினைக்கிற?” என்று பேசவும் ஆதிரா கண்ணில் நீர் தேங்கி நிறைந்தது.

   “உண்மை தாங்க. என்னோட கவலையே அதான். என் பேச்சை தட்டாத என் பிள்ளை. அன்னைக்கு அவ்ளோ சொல்லியும் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை உதிர்க்கலை. மன்னிப்பு கேட்கறதுக்கு பதிலா நான் படிக்க தாத்தா வீட்டுக்கு போறேன்னு சொன்னதும் என் நெஞ்சே வெடிச்சிடுச்சு.

  ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க முடியாத அளவுக்கு அவன் மனசு கல்லா போயிடுச்சு?

    எல்லாரிடமும் நல்லவன்னு பெயர் வாங்கின என் பிள்ளை, இப்படி வீம்போட இருக்கறப்ப அதை களையறது தானே என் வேலை. ஒரு வேளை சிற்பிகா ஆர்யனுக்கு சண்டை ஏற்படாம இருந்து நாம சிற்பிகாவை பார்த்து ஆர்யனுக்கு கட்டிவச்சிருந்தா அவன் சந்தோஷமா அவளை ஏத்துட்டு இருப்பான். இப்ப சண்டை இருக்கு.
   சிற்பிகாவும் அவ மனசுல ஆர்யனை பத்தி தவறான பிம்பமா நினைக்கிறா. இவனும் அப்படி தான். இரண்டு பேரும் ஒருத்தரை புரிஞ்சுக்காம இருக்காங்க.

   நம்ம பையனுக்கு விரோதம் வன்மம் என்ற வார்த்தை வாயிலயிருந்து வருதுங்க. ஒரு இறப்புக்கு கூட மரியாதை செலுத்தாம தன் வேலை முக்கியம்னு ஓடினது நம்ம பையனா? அவன் சிற்பிகா மேல வச்சிருக்கற கருத்து மாறணும்னு நான் நினைக்கலை. அவன் இப்படி நடந்ததுக்கிட்டது தவறுனு உணரணும். சிற்பிகா ரைட் சாய்ஸ். அது வாழ்ந்து பார்த்து அவன் சொல்வான்.
    என்னைக்காவது என் கையை பிடிச்சிட்டு நான் அன்னைக்கு சிற்பிகாவிடம் மன்னிப்பு கேட்டுயிருக்கணும்மானு சொல்லணும்ங்க. அப்ப தான் ஒரு அம்மாவா நான் சந்தோஷப்பட்டுக்குவேன். நம்ம வீட்ல இருக்கற விருது மெடல் பாராட்டு சான்றிதழ் எதுவும் பெரிசுயில்லைங்க. என் பையனை நான் சரியா வளர்த்துட்டேன் என்ற பெருமிதம் அதான் எனக்கு வேண்டும்.” என்று கண்ணீரோடு கூறவும் நிபுணனுக்கு ஆதிரா மகன் மன்னிப்பு கேட்காமல் சென்று படித்து விட்டு வந்ததை இன்னமும் ஜீரணிக்க முடியாது இருப்பதை உணர்ந்தான்.
  
   பிடிக்காத இருவருக்கு மணம் செய்து வைப்பதா? அல்லது மனைவியின் மனதில் இருந்து இந்த கண்ணீரை அடியோடு விரட்டுவதா? என்ற எண்ணத்தில் அவனுக்கு மனைவியின் நலனே முன்னின்றது.

   “சரி உன் முடிவு சரிதான். உன் பையனை எப்படி சம்மதிக்க வைப்ப? சிற்பிகாவை எப்படி சம்மதிக்க வைப்ப? இந்த நன்றி அதுயிதுனு அந்த பொண்ணை கார்னர் பண்ணாத. அப்பறம் செய்த நன்றி அசிங்கமா போயிடும்.

   நம்ம பையனை என்னவேண்ணா இம்சை பண்ணு. என்னை மாதிரி தாங்குவான்.” என்று கன்னத்தை பற்றி தன் வன்கரத்தால் கண்ணீரை துடைத்து விட்டு, குறும்பாய் சிரித்தர் நிபுணன்.

  ஆதிராவோ “உங்களை மாதிரி அவனும் மாறவேண்டாமா?” என்று ஆசையாக நிபுணனின் மீசையை நீவிவிட்டு கணவரை ரசித்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் .
 
 

33 thoughts on “என் நேச அதிபதியே-11”

  1. அருமை 🥰❤️🫂
    எவ்வளவு பேர் வெளிய பாரட்டுனா என்ன வீட்டுல நா பெத்த பிள்ளை என் பேச்ச கேக்கலையேங்கற மனக்கசப்பு பெரிசு தான் 😌😌😌😌😌😌😌😌😌
    பிடித்தம் இன்மைய எப்படி விலக்க போறீங்க லவ்லீ கப்பில்ஸ் 😉🤩😍🥰😎

    1. ஆனா, இது தேவையா…?
      இங்கேயாவது நிபுணன் ஆதிராவை பார்த்த நொடியில இருந்து
      அவ மேல ஒரு க்ரஷ்லயே சுத்தினான். ஆதிராவும் அவளோட குணங்களை பார்த்து அவனை ஏத்துக்கிட்டா. ஆனா, இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கோ ஒதுங்கிக்கோன்னு இருக்காங்களே…
      என்ன செய்யறது…????

  2. ரொம்ப அழகா கதையை கொண்டு போறிங்க சகி நிபுணனின் காதல் தான் ஆதிராவின் மனதை புரிய வைக்குது ஆர்யன் சிற்பியின் புரிதலை காதலை காண ஆவலாக உள்ளது சகி ஆர்யன் எப்படி சம்மதிப்பான் என்று ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறீங்க சகி வாழ்த்துகள்

  3. Semma semma semma semma semma semma semma semma semma super super super super super super super super sis 👌👌❤️❤️💞💞💕💕💗💖💓💓💖💗💞❤️👌👌👌👌👌👌❤️❤️💞💕💗💖💓💓💖💗💞❤️❤️💕💖💓Aadhira Nibunan puridhal romba azhaga sollirukkenga romba romba romba romba arumai 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 waiting for next ud 👍👍👍👍👍👍👍👍

  4. Super epi . Neenga tha best best couple ungala mari irukanum couple na . Athe mari unga paiyanum irupan aathira aaryan nalla paiyan etho oru vishayathula tha yosikama nadanthu irukan kandipa unga choice crt aathira . Sirpika unga kitta keta mari unga kuda ve iruka vainga unga paiyan avala purinji kittu mrg panni happy ah iruka poranga ungala mariye😍🥰🥰🥰

  5. Athira oda enna tha thappu solla mudiyathu yae oru amma ah va avaluku indha medal appreciation ithu ella tha vida avanga pasangala seri ah na valathu iruku ah na ra thu than avaluku sandhoshatha kudukum athu nibu ku purinchi thu na la than aariyan oda behavior ah la ava hurt aanathu ah mathanum nu nenaikiran

    1. நடந்தா நல்லாதான் இருக்கும்!!.. ரெண்டு பேரும் எப்ப, எப்படி சம்மதிக்க போறாங்களோ!???..

  6. நெஜமாவே இந்த செகண்ட் பார்ட் ஓட ஹீரோ ஹீரோயின் சிற்பிகா ஆரியனா இல்ல நம்ம நிபுணன் ஆதிராவான்னு தெரியல

  7. ஆதிரா எண்ணம் அத்தனை சீக்கிரம் ஆக நிறைவேறுமா என்றால் அது இப்போது கேள்வி குறி தான்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!