Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

3
புதுவயல் ஒரு அழகான சிறு கிராமம். ஆடு மாடு வளர்ப்பதும் விவசாயமும் தான் அங்கே
பிரதான தொழில். கன்னியப்பனும் அவன் மனைவி மாரியம்மாளும் கிராமத்திற்கு
ஒதுக்குப்புறமாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர். கன்னியப்பன் அந்த கிராமத்தாரின்
மாடுகளை தினந்தோறும் அருகே இருக்கும் வயல்வெளியின் இறுதி வரை மேய்ச்சலுக்கு கூட்டி
செல்வான். சமயத்தில் மாடுகள் காட்டின் முகப்பிலும் மேய்ச்சலுக்கு போவதுண்டு. அதை
கண்டுபிடித்து ஒரு இடத்தில் கூட்டி சேர்த்து மாலையில் மீண்டும் கிராமத்திற்கு அழைத்து
வருவது தான் அவனுக்கு வேலை.
மிகவும் அருமையாக புல்லாங்குழல் இசைப்பான். அவன் இசை அந்த மாடுகளுக்கு அத்துப்படி.
மாலையில் அவனுடைய குழலிசைக் கேட்டதும் அவைகள் எங்கே மேய்ந்து
கொண்டிருந்தாலும் அவன் இருக்குமிடம் நோக்கி திரும்பத் தொடங்கி விடும். புல்லாங்குழல்
இசைத்தவாறே ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டின் பின்புறம் விட்டு செல்வான்.
கிராமத்தினருக்கு தினம் மாலை இது பார்ப்பதற்கு ஒரு அருமையான காட்சி அது.
அன்றும் அதிகாலையில் முகம் கழுவி வயிறு முட்ட நீராகாரம் குடித்து விட்டு மீதமுள்ள பழைய
சோற்றை பித்தளை அடுக்கு சட்டியில் போட்டுக் கொண்டான். பொரித்த கருவாடு இருக்கிறதா
என்று சட்டி முட்டியை துழாவி எடுத்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தான்
கன்னியப்பன்.
சத்தம் கேட்டு கண் விழித்த மாரியம்மா “என்ன மச்சான், கிளம்பிட்டியா?” என்று கேட்டாள்.
“ஆமாம் புள்ள. நீ படுத்துக்க. நான் போயிட்டு வாறேன்”
“நீ வெளியே கிளம்பும் போது நான் எப்படி படுத்துக் கிடப்பது?” சொன்னவள் தன்னுடைய
நிறைமாத வயிறுடன் தடுமாறி எழுந்து அவிழ்ந்திருந்த முடியை கொண்டையிட்டவாறே அவன்
பின்னால் குடிசைக்கு வெளியே வந்தாள்.
“பத்திரமா இருந்துக்கோ புள்ளை. அம்மா………நான் போய் வாறன். பார்த்துக்க. பத்திரம்”
என்று நூறு பத்திரம் சொல்லிப் புறப்பட்டான்.
வழக்கம் போல மேய்ச்சலுக்கு மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டு அவன் வழக்கமாக அமரும்
மரத்தின் அடியில் நிழலில் அமர்ந்திருந்தான். அவனோடு அவன் நண்பர்கள் செவந்தி கருப்பு
இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் ஆரம்பித்தவன் கருப்புத் தான்.”அண்ணே, அதோ அங்கன போனா புஷ் புஷு சத்தம்
வருதுண்ணே”
“என்னடா இன்னைக்கு காலமே உன் கதையை ஆரம்பித்து விட்டாயா?” இது கன்னியப்பன்.
“இல்லப்பா, நானும் கூட என் ஆடுகளை தேடிக்கிட்டு போன போது இவன் சொல்றே

Thank you for reading this post, don't forget to subscribe!

இடத்தில சத்தம் வந்தது யாரோ மூச்சு விடராப்போல”
“என்னடா சொல்றீங்க? கேட்டவனின் இருந்த குழப்பத்தை தெளிவுப்படுத்தி விடும் நோக்கில்
இன்னும் விவரித்து சொல்ல ஆரம்பித்தார்கள்.
“போன வாரம் என் மாடுங்களில் செவளியைக் காணலையேன்னு தேடிக்கிட்டுப் போனேன்.
மாட்டைக் கடைசி வரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால் அதோ அங்க உஷ். உஷ்
ன்னு சத்தம் கேட்கவே மாட்டைத் தேடறதை விட்டு பயந்து ஓடியாந்துட்டேன்”
சொன்ன கருப்பை வழி மொழிந்தான் செவந்தி.”ஆமாம், கன்னிப்பா. நான் கூட பயந்து
போயித் தான் ஓடியாந்துட்டேன். ஒருவேளை நாம தான் கற்பனை பண்ணிக்கிட்டோமான்னு
யோசித்தேன். ஆனால் இவன் சொல்றதைப் கேட்டப் பிறகு தான் நெசமாவே நானும் கேட்டது
இதோ இவன் சொல்ற சத்தத்தை தான்”
அன்றைக்கு மூன்றும் பேரும் ஒரு முடிவு எடுத்தார்கள். இனி மூவரும் தனித்தனியாக போகக்
கூடாது. சேர்ந்தே இருப்பது என்று. மாட்டையும் அவர்கள் கண்பார்வையிலேயே மேய்த்துக்
கொள்வது என்று முடிவு செய்த பிறகு தான் ஓரளவுக்கு பயம் தெளிந்தவர்களாக இருந்தார்கள்.
“ஏய் கன்னியப்பா,,,……..!” குடிசையின் வாசலில் தலையாரியின் குரல் கேட்டது.
இந்நேரத்துக்கு எதற்கு நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று யோசித்தவாறே வெளியே வந்தான்
கன்னியப்பன்.
“உன்னை உடனே சாவடிக்கு வர சொன்னாங்க மணியக்காரரு”
“ஏன் அண்ணே, இந்த நேரத்தில?’
“ஏன் இந்த நேரத்துக்கு என்ன?”
“ராத்திரி நேரமா இருக்கே. மாரியம்மாவுக்கு பிரசவ நேரம் வேறே”
“நீயாடா கூட இருந்து பிரசவம் பாக்கப் போறே?”
“அண்ணே”
“அண்ணே நொந்நேன்னு……….”
வேறு வழியில்லை. போய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் கிளம்பினான்
கன்னியப்பன். அதற்குள் குடிசைக்குள் இருந்த மாரியம்மா “அண்ணே எதுக்கு எம் புருஷனைக்
கூப்படறாங்க?” என்று வழி மறித்தாள்.
இதை கேட்கத் தோணவில்லையே நமக்கு என்ற யோசனை ஓட, “ஆமாம் எதுக்கு
கூப்பிடறாங்க?” என்று கன்னியப்பனும் கேட்டான்.
“ம்…..உன்னை விருந்துக்கு கூப்பிடறாங்க” நெட்டி முறித்தான் அவன்.
“அண்ணே”
“ஆளைப் பாரு. உன் மேல் பிராது வந்திருக்கு. வளவளன்னு பேசிக்கிட்டு இருக்காம வெரசா

கிளம்பி வா”
“அய்யோ என்ன மச்சான்? என்ன பிராது?” கதறினாள் மாரியம்மா.
“இரு புள்ளை. பார்த்துட்டு வந்துடறேன்”
சாவடியில் கிட்டத்தட்ட கிராமத்தினர் அனைவரும் கூடி இருந்தார்கள். அதிலும் முக்கியமாக
பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நடுவே கருப்பும் செவந்தியும் வேறு. என்ன நடக்கிறது
இங்கே? என்று குழம்பியவனாக கூட்டத்தினரை விலக்கி கொண்டு உள்ளே வந்தான்.
கூட்டாளிகள் இருவரையும் ஒரு சேர காணவும் சரி தான் மாடு காணாமல் போனதைப் பற்றி
விசாரிக்கத் தான் கூப்பிட்டிருப்பார்கள் என்று முடிவற்கு வந்தவனாக சபையைப் பார்த்து
வணக்கம் என்று கும்பிட்டு நின்றான் கன்னியப்பன்.
“என்ன கன்னியப்பா, மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுட்டு நல்லா தூங்கினியா?”
“அய்யா, நான் தூங்குவது இல்லைங்க”
“அப்புறம் எப்படி இத்தனை மாடுங்க காணமல் போகும்?”
“சொன்னீங்களாடா?” நண்பர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டான்.
“சொன்னோம் அண்ணே” ஒத்து ஊதினார்கள் இருவரும்.
அது தான் சொல்லி விட்டார்களே அப்புறம் என்ன? என்பதைப் போல ஊர் பெரியவர்களைப்
பார்த்தான் கன்னியப்பன்.
“என்னடா நீயும் இவுங்க விட்ட அதே கதையைத் தான் விடப்போறியா? பேசி வெச்சிக்கிட்டு
கதை விடறீங்களா? மரியாதையா மாடுகளை என்ன செய்தீங்கன்னு விவரம் சொல்லிடீங்க”
“அய்யா நானே வந்து உங்க கிட்ட விவரம் சொல்லாம்னு நெனச்சென்னுங்க. அங்கே
காட்டுக்கு முகப்புல இருந்து கல்லெறியும் தூரத்தில் ஒரு பாப்ப்ம்பு புத்து இருக்குங்க. அங்கே
இருந்து உஷ் உஷ்ன்னு சத்தம் வருது. அங்கே காத்து கருப்பு ஏதானும் இருந்து அது தான்
மாடுகளை காவு வாங்கிடுது போல.”
“இதென்ன புதுசா இருக்கு. நம்பற மாதிரியா இருக்கு.”
“யாராவது எங்களோட வந்து பாருங்க. உங்களுக்கேத் தெரியும்”
காத்து கருப்பு என்றதும் பெரியவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் அடிமனதில். ஆனாலும்
இவர்கள் சொல்வது போல ஏதேனும் ஏடாகூடாமாக இருந்து, இதைப் போல பலி விழுந்தது
என்றால் அப்போது கிராமத்தார்கள் அப்போதே அந்த மாடு மேய்ப்பவர்கள் சொன்னார்கள்.
நீங்களே ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்திருக்கலாம் இல்லே என்று நம்மை பழி
சொல்வார்களே. என்ன செய்வது? என்று யோசித்தார்கள். பாக்கு வெட்டியில் வைத்தது போல
கிடிக்கிப்பிடியாக இருக்கிறதே என்று அலமலந்து போனார்கள்.ஆனாலும் வறட்டு கவுரவத்தை
விடாமல் தங்களுக்குள் ஆலோசித்தார்கள்.
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாளை இரவு வரைக்கும் உங்களுக்கு அவகாசம்
தருகிறோம். அதற்குள் நீங்கள் மாடுகளுக்கு என்னவாயிற்று என்பதைக் கண்டுபிடித்து வர
வேண்டும். அப்படியில்லா விட்டால் தொலைந்து போன மாடுகளுக்கு நீங்கள் தான் கிரயத்தை
எண்ணி எடுத்து வைக்க வேண்டும்”
“நாங்க அம்மாம் பணத்துக்கு எங்கே போவது?” திகைத்துப் போனார்கள் மூவரும்.
“நாங்க என்னப்பா பண்ணுவது?”
அதற்குள் வடக்கு வீதி செல்லாயி கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தவள் “அய்யா,
நான் என் ஒத்தை மாட்டை வெச்சிக்கிட்டு தான் பொழச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு
புருஷனும் இல்லை. இருக்கிற சின்னப்பயலும் நானும் இனி என்ன பண்ணுவது?”
“ஆமாங்கய்யா, சும்மாவா சொல்லியிருக்காங்க, சம்சாரி வீட்டுக்கு ஒரு பசுமாடுன்னு. ஆளு
அம்புன்னு எதுவும் இல்லாம அநாதரவா இருக்கிற செல்லாயிக்கு இந்த மாடு இல்லாட்டா
பொழப்பே நாறிப் போய்டும்”
“ஏன் எனக்கும் தான்”
“எனக்கு மட்டும் என்னவாம்?”
கூட்டத்தில் பெண்கள் ஆளாளுக்குப் பேசத் தலைப்பட்டார்கள். சிலர் கோபமாக. சிலர்
அழுகையுடன். சாவடியே மிகவும் சோகமாக இருந்தது. கன்னியப்பன் கருப்பு செவந்தி
இவர்கள் மூவருக்கும் ஆதரவாக பேசுபவர்கள் இல்லை. அவர்களும் ஏழைகள் தானே.
அவ்வளவு பணத்தை எப்படி ஈடுக் கட்டுவார்கள்?
கடைசியில் கன்னியப்பன் ஒத்துக் கொண்டான் மாடுகளின் கதி என்னவாயிற்று என்று
அறிந்து மாட்டை மீட்டுக் கொண்டு வருவதாக. வேறு வழியில்லை. விடிய வெள்ளனே
போகலாம் என்று பேசிக் கொண்டு வீட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது
கன்னியப்பனின் தாய் எதிரே பதறியபடி வந்தாள்.“ஏலே கன்னிப்பா, மாரியம்மாவுக்கு நோவு
கண்டுடுச்சு. ஓடு. போய் மருத்துவச்சியைக் கூட்டியாந்துடு. நான் வீட்டுக்குப் போறேன்”
“என்னம்மா இப்போ நாளில்லையே”
“பிறப்பையும் இறப்பையும் யாரால் கணிக்க முடியும்? நின்னு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காம
ஓடு” சொல்லி விட்டு அவளுமே வீட்டை நோக்கி வேக நடையில் பாதி நடையும் ஓட்டமுமாக
விரைந்தாள்.
மருத்துவச்சியை அழைத்துக் கொண்டு கன்னியப்பன் வீட்டிற்கு வந்த போது மாரியம்மாள்
பிள்ளையைப் பெற்றிருந்தாள். ஆனால் பிறந்த பிள்ளை மூச்சு விடுவதற்கு திணறிக்
கொண்டிருந்தது. கன்னியப்பன் கையிலே பிள்ளை இறந்தும் போனது.
பொழுதும் விடியத் தொடங்கியது. பிள்ளை பிறந்து இறந்ததிற்கு அழுது முடித்து விட்டு
களைத்து போன கன்னியப்பனை தேடிக் கொண்டு கூட்டாளிகள் வந்து விட்டார்கள்.
மாரியம்மாவிடம் விவரம் சொல்லப் போய் அவள் அதற்கும் சேர்த்து அழவே பிரசவ ஜன்னிக்
கண்டு விட்டது அவளுக்கு. கன்னியப்பனுக்கோ எங்கே மாரியம்மா தன்னை விட்டு விட்டு
பிறந்த பிள்ளையுடன் பரலோகம் போய் விடுவாளோ என்று கவலையில் அழுவதற்கு கூட
முடியாமல் கிராமத்தினரின் நெருக்கடிக்காக காட்டை நோக்கி போகும் படி ஆகி விட்டது.
நாள் முழுவதும் காட்டில் மாட்டைத் தேடி நடந்தார்கள் மூவரும். காணவில்லை மாடுகள்.
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று காட்டின் உள்ளே போய் விட்டார்கள்.
அலுத்துக் களைத்துப் போய் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். பொழுது போய் இருட்டத்
தொடங்கி விடவே வீட்டிற்கு திரும்பும் வழி தெரியாமல் இரவு இங்கேயே தங்கி விடுவது
என்று தீர்மானித்தார்கள். மாடு இல்லாமல் போனால் அதற்கு உண்டான கிரயத்தை கட்டனும்.
அதற்கு இங்கே மரத்தின் மீது ஏறிப் படுத்துக் கொள்வது. விடிந்ததும் மீண்டும் மாடுகளைத்
தேடத் தொடங்குவது என்று தீர்மானித்துக் கொண்டு மரத்தின் மீதி ஏறிப் படுத்துக்
கொண்டார்கள்.
விடிந்து வெளிச்சம் வரத் தொடங்கிய அந்த அதிகாலைப் பொழுதில் உஷ் உஷ் என்று சத்தம்
கேட்டு கண் முழித்தார்கள். எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. எதற்கு வந்தோம்
என்றும் புரியவில்லை. உஷ் உஷ் என்ற சத்தம் தான் அவர்களுக்கு தாங்கள் தேடி வந்த
மாடுகளை நினைவுபடுத்தியது. சத்தம் வந்த திசையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே
ஒரு பாம்பு புற்றில் இருந்து தான் அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு மாடு
காணப்பட்டது.
“ஏண்டா இந்த மாடு தான் அப்படி சத்தம் போட்டதா?”
“நம்ம மாடு தானே!”
“ஆமாம்”
“அப்பாடா நல்லவேளையா ஒன்னை கண்டு பிடிச்சிட்டோம். அப்படினா மத்தது எல்லாம்
இங்ஙனக்குள்ளத் தான் சுத்திக்கிட்டு இருக்கும். பாவம் வழி தெரியாம சுத்திக்கிட்டு
இருக்குங்க”
“நமக்கே வழி தெரியலையாம். பாவம் அதுங்க என்ன பண்ணும்”
“சரி இறங்குவோம். இந்த மாட்டை பிடிச்சிக்கிட்டு மீத மாட்டையும் தேடலாம் வாங்கடா”
சொல்லியவாறே மரத்தில் இருந்து இறங்கத் தொடங்கினார்கள்.
அப்போது.!
புற்றிலிருந்து வெளியே வந்த அந்த உருவத்தைக் கண்டு திகைத்துப் போய் அப்படியே
இறங்காமல் நின்று விட்டார்கள்.
என்னவொரு பயங்கரமான உருவம். !
இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த கோர உருவம் மாட்டைப் பிடித்து
அப்படியே வாயில் போட்டு மென்று முழுங்கியது. மீண்டும் புற்றில் போய் படுத்துக் கொண்டு
விட்டது.
மெல்ல தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள் மூவரும்.”நம்மளோட மாடுகளை

எல்லாம் இந்த ராட்ஸசன் தான் முழுங்கி இருக்கான்.”
“அடப்பாவமே. என்னவொரு கோர உருவமடா!”
“இது ராட்ஸசன்னு உனக்கு எப்படிடா தெரியும்?”
“எங்க பாட்டி சொல்லியிருக்குடா ராட்ஸசங்க தான் இவ்வளவு அசிங்கமா கோரமா
இருப்பாங்கன்னு”
“அப்படின்னா நெசமாவே இது ராட்ஸசனா?”
“ஆமாம். எங்க பாட்டன் கூட சொல்லும். இதோ தெரியுதே மலைங்க. அதில தான்
அரக்கனுங்க எல்லாம் வசித்து வந்தாங்களாம்”
“இப்போதும் அங்கே தான் இருக்காங்களா?”
“இல்லை. அவுங்களுக்கும் தேவர்களுக்கும் பெரிய சண்டை கூட நடந்ததாம். கடைசில
தேவர்ங்க தான் ஜெயித்ததாம். அந்த அரக்கன் எங்கேயோ ஓடிப் போய் ஒளிஞ்சிக் கிட்டானாம்”
“ஒருவேளை அவன் தான் இவனோ?”
“இருக்கலாம்”
“ஐயோ. மெல்லமா இறங்குங்கடா. ஊருக்கு ஓடலாம்”
“மாடாவது மண்ணாவது”
“ஆமாம். ஓடியாங்கடா”
ஊரில் இவர்கள் வந்து சொன்ன தகவலைக் கேட்டு உண்மையில் ஊரார் பயந்து தான்
போனார்கள். ஏதோ நாம் செய்த புண்ணியத்தால் அந்த அரக்கன் காட்டை விட்டு ஊருக்குள்
வராமல் இருக்கனே. அந்த மட்டும் நாம் தப்பினோம். மாட்டை இனி மேல் அங்கே
மேய்ச்சலுக்கு கொண்டு போக வேண்டாம் என்று தீர்மானித்துக் கொண்டு சற்றே அச்சம்
அகன்றவர்களாக இருந்தார்கள்.
மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்பது ஒன்று இல்லாமல் போய்
விடும் அல்லவா! மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன!
ஒருநாள் மதியவேளையில் உச்சி வெய்யிலில் ஊரின் மையத்தில் வந்து நின்றான் மகாசுரன்.
ஆம். தேவர்களுடனான போரில் தோற்று ஓடிப் போய் மண்ணுக்குள் பதுங்கி கொண்டிருந்த
மகாசுரனே தான். ஆனால் மண்ணுக்குள் புதைந்திருந்ததினால் பழைய பெருத்த உருவமன்றி
சாதாரண மனிதர்களை விட சற்றே உயரமாக அதாவது ஏழடி உயரத்தில் ஒற்றைக்
கண்ணுடன் அகோரமாக வந்து நின்றான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *