Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

அத்தியாயம்-2
வீடு களை கட்டி விட்டது. கலர் கலர் பலூன்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு காற்றில் ஆடியது.
அந்தி நேரம் ஆதலால் வண்ண வண்ண குட்டி விளக்கு சர அலங்காரங்கள் வேறு ஜொலித்து,
இடத்தை அழகாக்கியது. முன் பக்க பெரிய தோட்டப் பரப்பில் நாற்காலிகள், மேஜைகள்
போடப்பட்டிருந்தன. விருந்தினர்கள் வரிசையாக பரிசுப் பொருட்களுடன் வர ஆரம்பித்தனர்.
“ஹேப்பி பர்த்டே ஆர்த்தி……” வந்திருந்த குழந்தைகள் அனைவரும் ஆரத்தியை வாழ்த்தி பரிசு
கொடுத்தனர். ஆர்த்தி ஆறு மெழுகுவர்த்திகள் தாங்கிய கேக்கிடம் வந்தாள். “ம்…..ப்ளோ த
கேன்டீல் ஆர்த்தி….” என்று சுஜா சொன்னாள்.
ஆர்த்தி சின்ன பூந்தோட்டம் போலவே இருந்தாள். மல்லிகையின் மென்மை, ரோஜாவின்
நிறம், சாமந்தியின் மலர்ச்சி, முல்லையின் பல்வரிசை….இந்த மலர்களை மொய்க்கும்
கருவண்டுகள் போல், விருந்தினர் கண்கள் அவளை மொய்த்தன. இத்தனை விமரசையாக
அவள் பிறந்த நாளை கொண்டாடுவது இதுவே முதல் முறை.
“அப்பா….என் பிறந்த நாளைக்கு நீங்க எனக்கு என்ன பரிசு தரப் போறீங்க.?” போனில்
குழந்தை ஆவலுடன் கேட்டதும்……ரமேஷ் இந்த ஏற்பாட்டை செய்யச் சொன்னதோடு,
ஆர்த்திக்கு அழகான உடையும், ஒரு சின்ன ஐ-பேடும் பரிசாக அனுப்பியிருந்தான். ஆர்த்திக்கு
ஒரே குஷி.! ரோஸ் வண்ண காக்ரா சோழியில் தேவதை போல் மின்னினாள்.
ஆர்த்தி மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள். படபட கை தட்டலும், “ஹேப்பி பர்த்டே டூ
யூ..” என்ற கோரஸ் பாட்டுமாக அந்த இடம் குதூகலமாக குலுங்கியது. சுஜா முகம் அன்றலர்ந்த
ரோஜாவாயிற்று. சந்தோஷத்தில் உணர்வுகள் திக்கு முக்காடியது. ஆறு மாதம் முன்பு “உங்க
கணவரை டிவோர்ஸ் பண்ணிட்டு நீங்க சுஜா ஸ்ரீதர் ஆகணும் செய்வீங்களா?” என்று
அநாகரீகமாக பேசிய ஸ்ரீதர் என்ற வாலிபனை. அவள் கிட்டத்தட்ட மறந்தே போனாள்.
அன்று கொதித்துப் போய் சொன்னாள் “மிஸ்டர் ஸ்ரீதர் உங்களுக்கு பைத்தியமா? என்
குழந்தையை காப்பாத்தியதுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன். அதுக்காக இப்படிப்பட்ட,
அபத்த கண்மூடித்தனமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கேட்பது அராஜகம். இன்னொரு
முறை இப்படி சொல்லி டார்சர் பண்ணா……யு வில் ஸீ ஏ டிபரண்ட் சுஜா. காட் இட்.?”
என்றாள். கடைசி வரியில் தீப்பொறி பறந்தது. அவன் எதுவுமே நடவாதது போல்
அலட்சியமாக சிரித்தான்.
“சரி…..நோ பிராப்ளம். எப்படியும் ஒரு நாள், உங்க கணவரை டிவோர்ஸ் பண்ணிட்டு
என்னிடம் வரத்தான் போறீங்க. ஐ வில் வெயிட். இந்தாங்க உங்களுக்கு ஒரு நாள்
தேவைப்படும்….” என்று தன் படம் போட்ட விசிட்டிங் கார்டை கொடுத்தான். ஆத்திரத்தின்
உச்சிக்கே போனாள் சுஜா. அவன் முகத்திற்கு நேரவே அதை கிழித்துப் அவன் மேலேயே

Thank you for reading this post, don't forget to subscribe!

போட்டாள். “இடியட்….அடுத்த முறை இப்படி உளரிப் பார்….போலீஸ் வரும்.” என்றாள்.
கொதிப்புடன் அவள் உமிழ்ந்த சொற்களை பூ துவியது போல் சிரிப்புடன் ஏற்றான். சீ….என்ன
ஜென்மம் இவன் என்று அதிர்ந்தாள் சுஜா.
வீட்டுக்கு வந்த சுஜா மனம் ரணபட்டுக் கிடந்தது. தாங்காமல் தங்கை சுதாவுக்கு ஃபோன்
செய்து சொன்னாள்.
“என்ன அட்டூழியம் இது? வரம்பு மீறி நடக்கிறவங்களை சும்மா விடக் கூடாது அக்கா.
இப்பவே போய் போலீசில் புகார் கொடு….”
“இல்லை சுதா. இந்த ஒரு முறை விட்டு விடறேன். அடுத்த முறை வாலாட்டினா போலீஸ்
தான்.”
“தைரியமா இரு அக்கா. நான் வேணா அம்மாவை துணைக்கு அனுப்பி வைக்கவா? உனக்கு
தெம்பாக இருக்கும்.”
இருக்கும் தான். ஆனா அது சரிவராது. அம்மாவுக்கு கண் நரம்புகளில் தளர்ச்சி ஏற்பட்டு,
எவ்வளவு சிகிச்சை அளித்தும் பார்வை போய்விட்டது. அவளோ வேலைக்குப் போகிறாள்.
அம்மாவை வீட்டில் தனியா வைத்திருப்பது நல்லதல்ல.
“நீ வீட்டில் இருப்பதால், அம்மா உன்னுடன் இருப்பது தான் சரி. நான் அனுப்பிய பணம்
கிடைச்சுதா.?”
“கிடச்சுதுக்கா. எதுக்கு இப்படி மாசம் மாசம் அனுப்பற? நான் பார்த்துக்க மாட்டேனா.?”
“என் கடமை இல்லையா.? அம்மாவை நல்ல பார்த்துக்கோ? ஆர்த்திக்கு நேர்ந்த
கஷ்டத்திலிருந்து அவள் மயிரிழையில் தப்பியிருக்கா. பூர்வ ஜென்ம புண்ணியம் தான்.”
“அதுக்காக அந்தக் கிறுக்கனின் தொந்தரவுகளை பொறுத்துக்கணும்னு அவசியமில்லை
அக்கா. எதுவானாலும் எனக்கு ஃபோன் பண்ணு.”
தங்கையிடம் பேசி முடித்ததும் ஃபோன் அலறியது.
“ஹலோ…. “
“சுஜா……அறை மணி நேரமா டிரை பண்றேன், யார் கூட பேசிட்டு இருந்தே.?” கணவனின்
குரல் கேட்டதும் சுஜா யானை பலம் பெற்றாள். மட மடவென்று கொட்டித் தீர்த்தாள்.
“சுஜா, யார் அந்த ராஸ்கல்.? சும்மா விடக் கூடாது. போலீசில் புகார் கொடு.” என்றான்
கோபத்துடன்.
“ஏதோ கிராக்குன்னு நினைக்கிறேன். இப்படியே விட்டிடுவோம். இனி ஏதாவது வம்பு பண்ண
போலீஸ் தான்.”
“பயப்படாதே. என் நண்பன் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டரா இருக்கான். அவனுக்கு
ஃபோன் போட்டு அலர்ட் பண்ணறேன். ஏதாவது பிரச்சனைன்னா உடனே அவனுக்கு
ஃபோன் பண்ணு. நம்பர் குறிச்சுக்கோ. சரி தைரியமா இரு. நான் இருக்கேன். ஆர்த்திக்கு என்
முத்தங்கள்.” இந்த வார்த்தைகள்
கேட்டு சுஜா பெரும் நிம்மதி அடைந்தாள்.

“யாமிருக்க பயமேன்” என்று முருகக் கடவுளே நேரில் வந்து சொன்னது போல் இருக்க,
சுஜாவின் பயமும் பட படபடப்பும் முழுவதுமாக நீங்கியது.
அப்பாடா……கணவன் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும்.!ஆயிரக்கணக்கான
மையில்களுக்கப்பால் இருந்து கொண்டு எப்படி பழம் தருகிறான்.!
அடுத்த பத்தாவது நிமிடம் குணசேகரன் பேசினார்.
“சிஸ்டர்……நான் சப். இன்ஸ்பெக்டர் குணசேகரன் பேசறேன். ரமேஷ் சார் இப்ப தான்
விஷயம் சொன்னார். எதுக்கும் பயப்படாதீங்க. திரும்ப அவன் வாலாட்டினா உடனே ஃபோன்
எனக்கு ஃபோன் பண்ணுங்க. தொலச்சுடறேன்..” என்றார் போலீஸ் தோரணையோடு.
மனசில் இருந்து ஒரு பாறாங்கல்லை எடுத்த மாதிரி இருந்தது சுஜாவுக்கு. நன்றி
சொல்லிவிட்டு ஃபோனை வைத்தாள். அதன் பிறகு நிம்மதியாக தூங்கினாள்.
அடுத்த வாரம் ரமேஷ், அவளையும் குழந்தையையும் அழைத்துக் கொள்வது பற்றி முடிவு
எடுப்பதாக சொன்னான். அந்த முறையும் தட்டிப் போய்விட்டது. பூவை உதிர்ப்பது போல்
காலண்டர் தன் மாதப் பக்கங்களை உதிர்த்தது. ஆறு மாதங்கள் பறந்து விட்டது. இதுவரை
எந்த தொல்லையும் ஸ்ரீதர் தராததால் அவளுக்கு அவன் பேர் கூட மறந்து போனது.
“அம்மா….இந்தாங்க கேக்…” ஆர்த்தி கேக்கை கட்ட செய்து அம்மாவின் வாய் அருகே
கொண்டு சென்றாள். சுஜா மிகுந்த உற்சாகத்துடன் கேக்கை கடிக்கப் போனாள். அப்பொழுது
ஒரு பெரிய பொக்கேயுடன் ஸ்ரீதர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். பார்த்த சுஜா
அதிர்ச்சியில் கேக்கை நழுவ விட்டாள். அது புல் தரையில் விழுந்தது. “என்னம்மா நீ….கேக்கை
டிராப் பண்ணிட்டே.” என்று குறைபட்டுக் கொண்டே ஆர்த்தி வேறு கேக் துண்டை கொண்டு
வந்து கொடுத்தாள். இந்த முறை துண்டை வாங்கிக் கொண்டாள் சுஜா. ஆனால் அவள் முகம்
இருண்டு விட்டது.
எதற்கு வருகிறான் இவன்? இவனை யார் அழைத்தார்கள்.? வம்பு பண்ணவே வருக்கிறானோ?
எப்படி தெரிந்தது இவனுக்கு? என்ன கலாட்டா பண்ணப் போகிறானோ? நினைத்த
மாத்திரத்தில் சுஜாவின் குலை நடுங்கியது. உடல் சில்லிட்டது. ரொம்ப சகஜமாக பொக்கேயை
ஆர்த்தியிடம் கொடுத்து வாழ்த்தினான்.
“மிஸஸ் ரமேஷ்..இந்த நல்ல நாளில் உங்க இனிய குரலால் ஒரு நல்ல பர்த்டே பாட்டு பாட
வேண்டும்.” என்று வேண்டினான். சுற்றி நின்ற கூட்டமும் பாடுங்க என்று வேண்டியது. என்ன
திமிர் இவனுக்கு.? ஆத்திரம் பொங்கியது. எல்லோரும் வற்புறுத்த அவளுக்கு கண்ணீர் வந்தது.
பாடும் நிலையிலா அவள் இருக்கிறாள்.? பாம்பு போல் படம் எடுத்துபடி யார் இவனை வரச்
சொன்னது.? அமிர்தத்துக்காக பாற்கடலை கடையும் போது விஷம் வந்தது. அதுபோல்
மகிழச்சி கொப்பளிக்கும் நேரத்தில் விஷம் போல் வந்து சேர்ந்திருக்கானே? இவன் கக்கும்
விஷத்தை யார் முறியடிக்கப் போகிறார்கள். இன்னொரு சிவபெருமானாக ரமேஷ் வருவானா?
“ஆர்த்தி….இந்தா உனக்கு என் பிறந்தநாள் பரிசு.” என்று ரெண்டு அடி உயரமான
பொம்மையை கொடுத்தான் அவன். ஆர்த்தி கண் அகல அந்தப் பரிசை வாங்கி “தேங்க்ஸ்
அங்கிள்.” என்றாள். ஒரு பெரிய கேக் துண்டை கொடுத்தாள். புன்சிரிப்புடன் “இந்த அங்கிள்
தான் என்னை காப்பாத்தினாங்க.” என்றாள். பல அம்மாக்களுக்கும் அவனை தெரிந்திருந்தது.
அவர்களில் சிலரின் குழந்தைகளையும் அவன் காப்பாற்றி இருக்கானே.! ஹீரோவாக
நின்றான். அதற்குள் சுஜா தன்னை சுதாரித்து கொண்டாள். வெள்ளம் தலைக்கு மேலே போய்
விட்டது.

“பாடுங்க மிஸஸ் சுஜா….எல்லோரும் கேட்கலாமே உங்க இனிய குரலை.” அம்மாக்கள்
வற்புறுத்தினர். குழந்தகள் விளையாட்டுக்காக மைக் அரெஞ்ச் பண்ணியிருந்தாள். மைக்கை
கையில் எடுத்தாள். பாட்டு மூலமாக அவனை தாக்க முடிவு செய்தாள். அவ்விதம் என்ன பாட்டு
உள்ளது.? சடாரென்று புன்னகைத்துக் கொண்டாள். பழைய பாடல் ஒன்று மின்னல் போல்
நியாபகத்துக்கு வந்தது.
“ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னை இனம் பொறுக்காதே..”
பல வருடங்களுக்கு முன் ‘புன்னகை’ என்ற படத்தில் கதாநாயகி பட்ட துயரமும் துடிப்புமாக
குமுறலுடன் பாடி முடித்தாள். கொதிப்பு தெரிந்தது. ஸ்ரீதர் முதல் ஆளாக கை தட்டினான்.
“ஃபன்டாஸ்டிக் மேடம்….தத்ரூபமா யாரோ உங்களை தாக்க வர்ற மாதிரி பாடிட்டீங்க. ஆனா
இந்த நேரத்துக்கு பொருத்தமில்லாத பாடல். குழந்தையின் பிறந்த நாளுக்கு இப்படியா
பாடறது.?” அவன் சொல்லிவிட்டு அவளையே கேலி செய்யும் விதமாகப் பார்த்தான். மற்ற
எல்லோரும்….
“பாட்டு நல்லா பாடின நீங்க, இந்த அக்கேஷனுக்கு பொருத்தமில்லாத பாட்டுன்னு
நினைக்கலையா? பட்….இனிமையான குரல்.” என்றனர்.
இது தான் பொறுகத்தமான பாட்டு என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் சுஜா. கட்காரி
அழுது விடுவோமோ என்ற பயத்தில் “இப்ப வந்திடறேன்….எக்ஸ்கியூஸ் மீ….” என்று விட்டு
உள்ளே ஓடினாள். தன் தனி அறையில் நின்று கண்ணீர் சிந்த துக்கித்தாள். மனசு ஆடிப்
போயிற்று.
கடவுளே உனக்கு கருணை இல்லையா? ஏன் இந்தப் பேதையை தண்டிக்கிறாய்.? பிரிவு
என்கிற வலியோடு, வாழ்க்கை என்கிற படகை, ஒற்றையாய் சமாளிக்க போராடுகிற
வலிமையை கஷ்டப்பட்டு சேகரித்த என்னை, ஊமை வாழ்க்கை வாழக் கூட விடமாட்டியா.?
யார் இவன்? எதற்கு சுற்றிச் சுற்றி வருகிறான்?. முதல் முதலாகத் தன் தமையன் பற்றி
நினைத்தாள். யாரோ ஒரு அமெரிக்க பெண்ணை காதலித்து மணந்து கொண்டு ஓடினவன்
தான். அப்பா தலை முழ்கிவிட்டார். அந்த வலியிலேயே, இவள் கல்யாணம் முடிந்த கையோடு
ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார். இப்பொழுது தமையன் என்ற ஒருவன் இருந்தால், இவன்
இப்படி தைரியமாக உள் நுழைந்து கலாட்டா பண்ணி இருக்க முடியுமா.?
வெளியே யாரோ தீடீரென இனிமையாக பாடுவது கேட்டது. எட்டிப் பார்த்தாள். அவன் தான்.
“சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேன் உண்டா போதையில் திண்டாடுது
ஹேப்பி பெர்த்டே டூ யூ. ஹேப்பி பெர்த்டே டூ யூ.”
இப்படி ஒரு நயவஞ்சகனுக்கு,. இத்தனை இனிய குரலா? தன்னை மறந்து ரசித்துக் கேட்டாள்.
படம் எடுக்கும் பாம்பு, இனிமையாக பாடுவது என்கிற இயற்கைக்கு விரோதமான செயல்
போல் பட்டது. ரசிக்கிறேனே….மை காட்.! நோ. நிறுத்துடா ராஸ்கல் என்று கத்த வேண்டும்
போல் இருந்தது. அப்படி செய்ய முடியாது. எல்லோருக்கும் அவள் காரணம் சொல்ல வேண்டி
வரும். இந்த விசித்திர காரணத்தை யார் நம்புவார்கள்.! மெள்ள கண் துடைத்துக் கொண்டு
வெளியே வந்தாள். தன் அன்பு மகளின் இனிய விழாவினை ரசிக்க கூட அவளுக்கு கொடுத்து

வைக்கவில்லை. பாவி எங்கிருந்து தான் வந்தானோ.? பூமி பிளந்து இவனை விழுங்கினால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.!
எல்லோரும் டின்னர் சாப்பிட ஆரம்பித்தனர். அவனும் ஜம்மென்று ஆர்த்தி பக்கத்தில் அமர்ந்து
கொண்டான். அவளை காப்பாற்றிய கோதாவில் பெருமிதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆபத் பாந்தவன் என்ற பேரை சுலபமாக தட்டிச் சென்று விட்டான்.
“அம்மா….நீங்களும் உட்காருங்கம்மா. பரிமாறத் தான் ஆல் இருக்கே. அங்கிள் அம்மாவுக்கு
பாசந்தின்னா ரொம்ப பிடிக்கும்…” ஆர்த்தி ஆர்பரித்தாள். சுஜா தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.
“இஸ் இட்.? வாட் எ கோ இன்சிடென்ஸ்? எனக்கும் பாசந்தின்னா ரொம்பப் பிடிக்கும்.
ஊக்கருங்க மேடம்……குழந்தை ஆசைப்படுகிறாளே.”
முதல் முறையாக ஆரத்தியா அறைய வேண்டும் போல் ஆங்காரம் ஏற்பட்டது சுஜாவுக்கு.
“எல்லோர் டேபிளையும் கவனிச்சிட்டு வரேன் ஆரத்திமமா.” என்றவள் அவனை முறைத்துப்
பார்த்துவிட்டு அகன்றாள்.
சாப்பாடு முடிந்தது. கேம்ஸ் முடித்து. ஒவ்வொருவராக விடை பெற்றார்கள். ஓடிஓடி
வழியனுப்பிவிட்டுப் பார்த்தால் இவன்….குத்துக்கல் போல் நின்று கொண்டிருக்கிறான்.
“டேய் ராஸ்கல்….வொய் ஆர் யூ ஹியர்? கெட் லாஸ்ட். அண்ட் கெட் அவுட்.
ஏண்டா……ஏண்டா இப்படி வந்து என் நிம்மதியை குலைக்கிறே.? நான் உனக்கு என்ன
கெடுதல் செய்தேன்.? லீவ் மீ அலோன்.” தன் முழு சக்தியையும் சேகர்த்து கத்தி தீர்த்து
விட்டாள் சுஜா. ஆர்த்தி அதிர்ந்து போனாள். அம்மா எதுக்கு கத்தறா.?
“அம்மா என்னாச்சுமா? ஏம்மா ஆங்கிரியா இருக்கே.? அங்கிள், ஏன் அம்மா வெரி பிடிச்சா
மாதிரி கத்தறாங்க? பயமா இருக்கு அங்கிள்.” என்றபடி ஆர்த்தி அவன் பின்னால் ஒளிக்கிறாள்.
சட்டென்று சுஜா சுதாரித்துக் கொண்டாள் சுஜா.
“ஒன்னுமில்லே……ஒன்னுமில்லே ஸாரி ஆரத்திம்மா.” குழந்தையை அப்படியே வாரி
அணைத்துக் கொண்டாள். குழந்தை ஆவாலி பயத்துடன் ஏறிட்டது. “சுஜா ரிலாக்ஸ். இப்ப
வந்திடறேன்.” சகஜமாக அவள் புருஷன் சொல்வது போல், உரிமையுடன் சொன்னான்.
பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு. “இடியட்..” என்று மெதுவாக காரித் துப்பினாள்.
“ஆர்த்தி நீ உள்ளே வா. அம்மா மூடு சரியில்லை.” என்று குழந்தையின் கைபிடித்து உள்ளே
கூட்டிப் போனான்.
அடப் பாவி குழந்தையை ஏதாவது செய்து விடுவானோ.? ஓடிப் போய் பக்கத்து வீட்டு ராவ்
அங்கீலாய் கூப்பிடலாமா.? சுவர் அருகே நின்று ராவ் அங்கிள்..ராவ் அங்கிள் என்று சத்தமாக
கூப்பிட்டாள்.
வேலைக்காரி வந்து எட்டிப் பார்த்து “மணி பதினொன்னு மா. அவர் தூங்கிட்டார். என்னம்மா
வேணும்.”
“ஒன்னுமில்லே. நாளைக்கு பேசிக்கிறேன்.” என்றதும் அவள் உள்ளே சென்றுவிட்டாள். சுஜா
சின்ன பிள்ளை போல் வாய் விட்டு அழுதாள். பிறகு சீ அழுவானே. இன்ஸ்பெக்டர்
குணசேகரணை கூப்பிடலாம் என்று அவர் எண்ணை ஒற்றினாள். அவன் வந்து அவள்
செல்லை பிடுங்கினான்.

“சுஜா….இப்ப தான் ஆரத்தியை தூங்கப் பண்ணியிருக்கேன். பிளீஸ் ஸ்டாப் திஸ்
நான்சென்ஸ். குழந்தையை எழுப்பிவிடாதே.” என்றான்.
அவள் திக்பிரமித்து நின்றாள். என் குழந்தையை தூங்க வைக்க இவன் யார்.? உடம்பு
நடுங்கியது. கண் செருக்கிற்று. பலமிழந்து நின்றாள். முகமெல்லாம் வியர்த்து விட்டது.
“சுஜா பிளீஸ்…..நீங்க பயப்படத் தேவையில்லை. நான் மனுஷன் தான்.”
“மனுஷன் பண்ணுகிற காரியமா செய்றீங்க.? அப்பாவியான என் வாழ்க்கையில்
அனாவசியமாக தலையிட்டு பயபடுத்த உங்களுக்கு எப்படி மனசு வருது.? இனிமே உங்க
குறுக்கீடு வேண்டாம்.”
அவன் புன்னகைத்தான். அதில் சோகம் இளையோடியது. பின் மெள்ள பாடினான்.
“அமைதிக்கு பேர் தான் சாந்தி……”
அதில் இடையில் வரும் ஒரு வரியை திரும்பத் திரும்ப நான்கு முறை பாடினான். “நீ பெற்ற
துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி. சாந்தீங்கறதுக்குப் பதிலா சுஜான்னு
போட்டிக்கோங்க.”
“ச்சீ.. ச்சீ ராஸ்கல்….என் துயரே நீ தானேடா. கல்யாணம் ஆன பெண்ணிடம் நீ என்ன
எதிர்பார்க்கிற முட்டாள்.? போய்விடு. இனி என் முகத்தில் முழிக்காதே. நல்லவிதமா கடைசியா
சொல்றேன், ஒழுங்காப் போய்விடப் போகிறாயா.? இல்லை……”
“இன்ஸ்பெக்டர் குணசேகரனைக் கூபிட்டு மிரட்டப் போகிறாயா.? சுஜா, அவனே என்
நண்பன் தான். நீ எந்த மேலிடம் போனாலும், யாராலும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது.
உன்னையும் குழந்தையையும் பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன்.”
“எங்களை நிம்மதியா விடமாட்டியா.? எங்களை கண்காணிக்கறது தவிர உனக்கு வேற
வேலையே இல்லையா.?”
“கண்காணிச்சதாலே தான் அன்று இரெண்டாவது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருந்த
உங்க மகளை என்னாலே காப்பாத்த முடிஞ்சுது. எத்தனை பெண் குழந்தைகள் கால்
கருகி….நெற்றியில். கையில் தீக்காயங்கள் பட்டு துடிச்சாங்க.? இப்படி வடுக்கள் இருந்தால்
எவ்வளவு கஷ்டம்னு தெரியாதா? அதுவும் பேன் குழந்தைகளுக்கு.! தப்பிச்சதாலே அருமை
தெரியலை.”
சுஜா தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக தினறினாள். அவன் சொல்வதிலும் உண்மை
இருக்கே.!
“சுஜா……ரமேஷ் நல்லவனில்லை. இந்தக் கல்யாண பந்ததத்திலிருந்து வெளியே வந்துடு.
என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. எச்சரிக்கை
பண்ணிட்டேன். பிறகு உன் இஷ்டம்.”
பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள் சுஜா.
“என் புருஷன் கால் தூசி பெருவியாடா நீ.? பேச வந்திட்டான்.”
“அடிச்சதுக்கு தேங்க்ஸ். நெற்றிக் கண்ணை காட்டினாலும்….இதாயே தான் சொல்வேன்.
வரட்டா.?”

வரிசை பற்கள் தெரிய சிரித்தபடி போனான். முத்திப் போன பயித்தியம் இவன். அன்று இரவு
அவள் தூக்கம் தொலைத்தாள்.

தொடரும்

சங்கரி அப்பன்

1 thought on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *