Skip to content
Home » சிற்றினஞ்சேராமை-46

சிற்றினஞ்சேராமை-46

பொருட்பால் | அரசியல் | சிற்றினஞ்சேராமை-46

குறள்:451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:452

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

சேர்ந்த நிலத்தின்‌ இயல்பால்‌ நீர்‌ வேறுபட்டு அந்நிலத்தின்‌ தன்மையுடையதாகும்‌; அது போல்‌ மக்களுடைய அறிவு இனத்தின்‌ இயல்பினை உடையதாகும்‌

குறள்:453

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால்‌ ஏற்படும்‌; இப்படிப்பட்டவன்‌ என்று உலகத்தாரால்‌ மதிக்கப்படும்‌ சொல்‌ சேர்ந்த இனத்தால்‌ ஏற்படும்‌.

குறள்:454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

ஒருவனுக்குச்‌ சிறப்பறிவு மனத்தில்‌ உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும்‌ போது) அவன்‌ சேர்ந்த இனத்தில்‌ உள்ளதாகும்‌.

குறள்:455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.

குறள்:456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.

குறள்:457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

மனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.

குறள்:458

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.

குறள்:459

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

மனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.

குறள்:460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!