குமாரின் பைக்கில் ஏறிச் சென்ற தீரன் கல்லூரி செல்லும் பாதி வழியிலேயே பைக்கை நிறுத்த சொல்ல நிறுத்திய குமார் “ஏன்டா இங்க எதுக்கு நிறுத்த சொல்ற?” என்றிட
Thank you for reading this post, don't forget to subscribe!“இல்லடா நான் இன்னைக்கு காலேஜ் வரலை… நீ மட்டும் போ..” என்று சொல்லி விட்டு இறங்க
“ஏன் சாருக்கு அப்படி என்ன வேலை?”
“ம்ம்…” என்று முறைத்தவன் “நான் வரலை நீ போ குமாரு…” என்று மட்டும் சொல்ல
“ஏன்டா என்னாச்சு?”
“ஏன் உனக்கு தெரியாதா டா… செமஸ்டர் ஃபீஸ் இன்னும் கட்டலை… வந்தாலும் எல்லாருக்கும் முன்னாடி வச்சு கேட்டு அவமானப் படுத்தி வெளியே போக சொல்லுவாங்க… அதுக்கு இங்கேயே நான் இறங்கிக்கிறேன்… மத்த பசங்க முன்னாடி அவமானப் படாமலாவது இருக்கலாம்… சரி நீ போ குமாரு” என்று சொல்லி விட்டு பைக்கை விட்டு இறங்கினான் ஆதீரன்.
“டேய் இதுக்கு தான் அன்னைக்கே நான் பணம் கொண்டு வரேன் னு சொன்னேன் கேட்டியா?” குமார் சொல்ல
“டேய் நீ மட்டும் அம்மா கஷ்டப்பட்டு வேலை பார்த்து கொண்டு வர பணம் பத்தலை னு கடன் வேற வாங்குன… இதுல எனக்கும் சேர்த்து நீ கடன் வாங்கனுமே..” ஆதீரன் வருந்த
“ஏன்டா அம்மாகிட்ட நீ கேட்கவே இல்லையா? அம்மா கூட இது பத்தி என்கிட்ட பேசவே இல்லை…” குமார் சந்தேகமாக கேட்க
“அம்மாக்கு தெரியாது டா… சொன்னா பணம் இல்லையே னு மனசு வெசன படும்… சரி நீ போ குமாரு.. நான் பக்கத்துல ஒரு இடத்துல வேலைக்கு கேட்டிருந்தேன்.. பார்ட் டைம் வேலை தான் நான் போய் அவரை பார்க்கிறேன்.” என்று தீரன் நகரப் போக
“தீரா...” என்று கத்திக் கொண்டே வேகமாக தன் சைக்கிளை அழுத்தி மிதித்துக் கொண்டு வந்தாள் தென்றல்.
இவர்கள் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு வாய் திறந்து மூச்சு வாங்க
“ஏய்… எதுக்கு இப்போ நீ எங்களை தொரத்திட்டு வந்த?” கோபமாக தென்றலிடம் எரிந்து விழ
“டேய் சும்மா இரு டா… தென்றல் எதுக்கு மா.. எங்களை இப்படி தேடிட்டு வந்த?” குமார் அன்பாக கேட்க
“இந்தா தீரா…” என்று தன் தாவணி முந்தானையில் இருந்த முடிச்சை கழட்ட அதில் அவளின் அரைச் சவரனில் ஒரு ஜோடி தோடும் ஒரு மோதிரமும் இருக்க
“என்ன தென்றல் இது? எதுக்கு நகை?” குமார் கேட்க
“ஏய்.. இது உன்னோட போன பிறந்த நாளுக்கு மாமா வாங்கின நகை தானே… அதை எதுக்கு கழட்டி கைல வச்சுருக்க?” சினம் மாறாது சீறினான் தீரன்.
“தீரா… நீயும் அண்ணனும் நேத்து உனக்கு இன்னும் காலேஜ் ஃபீஸ் கட்ட பணம் ரெடி பண்ணலை யார்க்கிட்டயும் கேட்க மனசு வரல னு பேசிட்டு இருந்தீங்க கேட்டேன்… அதான் என்னோட தோடு மோதிரம் இதெல்லாம் அடகு வச்சா எவ்வளவு வரும் னு தெரியலை… உனக்கு போதும் னா அடகு வை.. இல்ல வித்திடு தீரா..” கபடம் இன்றி சிரிக்க மெய்மறந்து பார்த்தான் ஆதீரன்.
“ஏய் லூசு… அதுக்காக நகையை கழட்டி தருவியா? போடி நான் பார்த்துக்கிறேன்” என்று கோபம் குறையாமல் தீரன் சொல்ல
“டேய்… உனக்காக இவ்வளவு அன்போட ஓடி வந்து தருதே… அந்த புள்ளைய போய் திட்ற?” கடிந்து கொண்டான் குமாரவேல்.
“நீ சும்மா இரு டா… சும்மா இவளை ஏத்தி விடாதே..” அவன் இவனை அதட்டிட
“ஏன் தீரா உனக்கு இவ்வளவு கோபம்… என்ன இருந்தாலும் இது உனக்கு சேர வேண்டிய நகை தான்..” என்று தென்றல் சொல்ல இருவரும் விழித்தனர்.
“ஆமா தீரா… என்னோட நகை னா இன்னும் மூனு வருஷம் கழிச்சு நமக்கு கல்யாணம் ஆகும் போது எனக்கு போட்டு விட்டு அனுப்ப போற நகை தானே… அது உனக்கு சொந்தமான நகை தானே…” என்று தென்றல் சிரித்தபடி கூற பல்லைக் கடித்து அவள் கழுத்தை நெறிப்பது போல கையை அருகில் கொண்டு செல்ல குமார் பயந்து போய் இவன் கையை தட்டி விட்டான்.
“தீரா… என்னை திட்றதை தினமும் தான் பண்ற… இந்தா நகை நகையோட பில்… தேனி ல நல்ல நகைக்கடையா பார்த்து கொண்டு போ… போ தீரா காலேஜ்க்கு டைம் ஆகுது…” என்று நகை மற்றும் அது வாக்கிய ரசிதோடு சேர்த்து தீரன் கையில் திணிக்க இவர்களுக்கு எதிர் திசையில் இருந்து தன் டிவிஸ் பைக்கில் வந்து கொண்டு இருந்தார் ரங்கநாதன் தென்றலின் தந்தை…
இவர்கள் அருகில் வந்து வண்டியை நிறுத்திய ரங்கநாதன் “மாப்ளை… இன்னும் நீ காலேஜ் க்கு போகலையா ப்பா..” என்று கேட்க
“இல்ல மாமா இதோ போகனும்…” என்று மழுப்பலான சிரிப்போடு தீரன் சொல்ல
“தென்றல்… நீ என்னடா பண்ற இங்க?” மகளை பார்த்து ரங்கநாதன் கேட்க
“ப்பா.. எங்கப்பா போன ரெண்டு நாளா… தீரனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டனுமே.. அந்த நினைப்பு வேண்டாம்? போகும் போது பீரோ சாவியை எங்க வச்ச னு உன் பொண்டாட்டிக் கிட்ட சொல்லாமலும் போய்ட்ட… எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா?” என்று தென்றல் பொரும
“ஒன்னும் இல்ல டா… ஒருத்தரை பார்க்க வேண்டிய வேலை இருந்துச்சு மதுரை ல… அதான்… உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தானே போனேன்…” ரங்கநாதன் சொல்ல
“அப்பா… நீ போன கதையை யார் கேட்டது? தீரனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டனும்… அதை மறந்துட்டு என்ன வேலை உனக்கு?” என்று தந்தையிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட
“அம்மாடி… முதல்ல மறந்தது என்னவோ உண்மை தான் டா… ஆனா நான் மதுரையில இருக்கும் போது தான் நினைவு தட்டச்சு… உடனே நம்ம உரக்கடை பெருமாள் இல்ல அவருக்கு தகவல் சொல்லி கட்ட சொன்னேன். அவரு என்னனா நேத்து பூராவும் வேலையா இருந்துட்டு அந்தி சாயுற நேரத்துல வந்து காலேஜ்ல பீஸ் கட்டனாராம்.. மாப்ளை நேத்து சீக்கிரமே வீட்டுக்கு வந்ததால பீஸ் கட்ன ரசீதை கொடுக்க முடியலை னு சொன்னான்
அதான் நானே அவனை போய் பார்த்து வாங்கிட்டு வந்தேன்.. ஏன் மாப்ளை… நான் மறந்தாலும் நீ கொஞ்சம் நியாபகப்படுத்தி இருக்கலாம் ல…” என்று ரங்கநாதன் தீரனிடம் கேட்க
“இல்லை மாமா… உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் னு தான்…” என்று தயங்கிட
“என்ன மாப்ளை… உங்க நிலத்தை குத்தகைக்கு எடுத்து நான் விவசாயம் பண்றேன்… அந்த குத்தகை பணத்தை கேட்க நீ ஏன் தயங்கனும்?” என்று செல்லமாக கடிந்து கொண்டார் ரங்கநாதன்.
“இந்தாப்பா… இதை நீ நேத்து நான் உனக்கு ஃபோன் போட்டேனே அப்போவே சொல்லி இருக்க வேண்டியது தான?” தென்றல் கேட்க
“நீ எங்க மா என்னை பேச விட்ட… மதுரை ல இருந்து வரும் போது இது வாங்கிட்டு வா அது வாங்கிட்டு வா னு உத்தரவு மட்டும் தான போட்ட? ம்ம்… பீரோ சாவி காணோம்னதும் உன்னோட துணி வைக்கிற மர அலமாரில வச்ச நகை பில்லை தூக்கிட்டு வந்திருக்க… ரொம்ப விபரம் தான் தென்றல் நீ…” மெச்சுதலாக கூற
“என்னை புகழ்றியா இல்ல கலாய்க்கிறயா… ஒன்னும் புரியல… சரி விடு ப்பா… இனி தீரனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டிய நேரத்துல சரியா கட்டிடு… இல்லாட்டி தீரனோட நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்றேன் னு சொல்ற ல்ல… அந்த குத்தகை பணத்தை தீரனோட அக்கவுண்ட் போட்டிடு… சரியா தீரா…. நான் சொன்னது?” தீரனிடம் மற்றும் தந்தையிடம் கேட்க
ரங்கநாதன் “சரி” என்று தலையாட்டி மகளை மகிழ்வோடு பார்க்க தென்றலுக்கு தன் மீதான அன்பில் சிறு கர்வம் பொங்க யாரும் அறியாத மர்ம சிரிப்பை உதிர்த்துக் கொண்டான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Super
SUPERB IVLO PASAMA IRUNTHAVALA INIKU IVLO KOVAMA IRUKA