Skip to content
Home » தீரனின் தென்றல் – 15

தீரனின் தென்றல் – 15

தீரன் குமார் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்க தென்றலும் ரூபியும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்…

Thank you for reading this post, don't forget to subscribe!

நால்வரின் படிப்போடு அவர்கள் காதலும் தங்கு தடையின்றி நடைபெற்றது… ரூபிணியின் தந்தை குடிகாரன் என்பதால் சிறுவயதில் இருந்தே அவளின் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்து வர அவளை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அவளின் தாய் இருக்க குமாரின் தாயிடம் ‘தென்றலின் உறவுக்கார பெண்.. திருவிழாவிற்கு வந்தாளே’ என்று நினைவுறுத்தி தன் காதலுக்கு சம்மதம் வாங்கி இருந்தான் குமார்.

“ஆனா படிப்பை முடிச்ச கையோட நல்ல வேலை தேடிக்கோ… அடுத்த நல்ல நாள் பார்த்து நான் பொண்ணு கேட்க போறேன்” என்று அவன் தாய் சொல்ல தாயை தலைக்கு மேல் தூக்கி சுற்றி தன் மகிழ்வை காட்டினான் குமார்.

ஆதீரன் தென்றல் இருவருமே காதலை மறைத்து வைத்து இருக்க இப்போதெல்லாம் தென்றல் வீட்டிற்கு வந்தால் அவளை வம்பிளுத்து அழ வைக்காமல் ஓரக்கண்ணால் அவளை பார்த்து செல்லும் மகனை பூரணி கவனித்தாலும் “படிப்பு முடிஞ்ச உடனே தென்றலை மருமகளா கூட்டிட்டு வந்திடனும்.. இதை பத்தி அண்ணாகிட்ட பேசனும்…” என்று முடிவு செய்து வைத்தார் அன்னபூரணி.

இந்நிலையில் தீரனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் தமிழ்நாடு முழுக்க கிளைகள் இருந்த பெரிய நிறுவனமான ஷ்ரதா க்ரூப்ஸ் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ஆக்கிடெக்சர் கம்பெனியில் வேலை கிடைக்க அவனின் சொந்த ஊரான தேனிக்கு அருகில் புதிதாக தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் ல் உதவியாளனாக வேலை கிடைக்க குமாருக்கு மதுரையில் புதிதாக கிளை தொடங்கப்பட்ட பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

குமார் ரூபிணி இருவருக்கும் இது பெரிய பிரிவாக மனதை வாட்டினாலும் குமாரின் அம்மா ரூபிணி குடும்பத்தை அவளின் ஆச்சி வீட்டில் வரவைத்து இவர்கள் காதல் பற்றி எடுத்து கூறி குமாருக்கு நல்ல வேலை கிடைத்ததை கூற ரூபிணியின் அம்மா ஆச்சி இருவருக்கும் மகிழ்ச்சி தான்…

தனக்கு பிறந்த வழியில் நெருங்கிய உறவான பொன்னி குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட இடம் என்ற வகையில் ரூபியின் அன்னை பொன்னி மற்றும் ரங்கநாதனுக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்து அபிப்பிராயம் கேட்க

“என்ன மதினி நீ… குமாரை கட்னா அவ எனக்கு மருமக… எனக்கு ஒரு பையன் இருந்து ரூபாவை பொண்ணு கேட்டா யோசிப்பியா… ரூபியை கட்டிக் கொடு… என் பொண்ணு மாதிரி பக்கத்துல வைச்சு நான் பார்த்துப்பேன்…” என்று பொன்னி கூற மகிழ்வாக சம்மதித்தார் ரூபியின் தாய்…

“சரி சீக்கிரம் நல்ல நாள் குறிச்சா பையன் மதுரைக்கு வேலையில சேரும் போது மருமகளையும் சேர்த்து குடி வைக்கலாம்…” குமாரின் அம்மா கூற இந்த ஆண்டு தேர்வுகள் முடிந்து வைகாசி மாசம் கல்யாணம் வைச்சுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

நண்பர்கள் ஆதீரனும் தென்றலும் இருவரையும் ஓட்டித் தள்ள வெட்கத்தில் முகம் சிவக்க வேறு உலகத்தில் சஞ்சரித்தனர் திருமணம் முடிவு செய்யப்பட்ட ஜோடிகள்…

பேசி வைத்தது போல நால்வரின் தேர்வுகள் முடிந்து அதே மாதத்தில் குமாரவேலு ரூபிணி திருமணத்திற்கு தேதி குறிக்கப் பட்டிருக்க ஆதீரன் தான் அதிக நேரம் செலவிட்டான் இவர்கள் திருமண வேலைகளுக்காக…

தென்றல் ரூபிணிக்கு தோழியாக அருகில் இருக்க பொன்னி ரங்கநாதன் அன்னபூரணி தங்கள் வீட்டு விசேசம் போல அனைத்தும் இழுத்துப் போட்டு செய்ய சொந்தமும் நட்பும் சூழ நல்ல முறையில் நடந்து முடிந்தது.

குமார் மதுரையில் வேலைக்கு செல்ல அவனோடு சேர்த்து ரூபிணியும் குடியமர்த்த பெரியவர்கள் மதுரையில் வீடு பார்க்க ஆனால் குமார் ‘ரூபிணி படிப்பு தடைபடுமே’ என்று தயங்கினான்.

அவனை புரிந்து கொண்ட ரூபிணியும் “நான் இந்த ஒரு வருஷம் இங்கேயே அத்தை கூட இருக்கேன் வேலு… ஒரு வருஷம் நல்லா வேலை பார்த்து இன்னும் கொஞ்சம் மேல வந்துட்டு என்னையும் அத்தையும் சேர்த்து உன்கூட கூட்டிட்டு போய் வச்சுக்கோ” என்று சொல்ல

“அம்மாடி நான் தனியாவா இருக்கப் போறேன்.. இங்க தான் பொன்னி அன்னபூரணி எல்லாம் இருக்காங்க ல நீ குமாரு கூட போய் இரு… கல்யாணம் ஆகியும் நீங்க ஏன் பிரிஞ்சு இருக்கனும்…” குமாரின் தாய் கூற

“அத்தை… வேலு என்ன வெளிநாடுக்கா போறாரு.. மதுரை தானே… தேனில இருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகுமா… சனி ஞாயிறு லீவ்… வெள்ளிக்கிழமை சாயங்காலமா பஸ் ஏறுனா இங்க வந்திடுவாரு… திங்கட்கிழமை காலையில இங்க இருந்தபடியே அப்படியே வேலைக்கு போகட்டும்… நான் உங்க கூடவே இருக்கேன்…” என்று ரூபிணி பேச பேச

“என் ராசாத்தி…” என்று அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்துக் கொண்டார் அவளின் மாமியார்.

குமார் வேலைக்காக சிறிய அறை எடுத்து தங்கிக் கொண்டான். அதே சமயம் மதுரையில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தவன் குடிகார மாமனாரை திருத்த மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டான் குமார்.

ஆதீரன் வேலைக்கு செல்ல துவங்கிய சில நாட்களில் அவனுக்கு ஒரு பைக் வாங்கி தந்தார் ரங்கநாதன்..

“ஏன் மாமா… வேலைக்கு போய் நானே வாங்கிப்பேனே… இதுக்கு எவ்வளவு செலவு வந்திருக்கும்” என்று ஆதீரன் தயங்க

“மருமகனே… நான் ஒன்னும் முழு தொகையையும் உடனே கொடுத்து வாங்கலப்பா…  இந்த வெள்ளாமை நல்லா போச்சு… பாதி பணத்தை முன் பணம் கொடுத்து வாங்கிட்டேன் மீதி மாத தவணை தான்… மெல்ல மெல்ல கட்டிக்கலாம்…” ரங்கநாதன் சொல்ல

“சரி மாமா… தவணை இனிமே நானே கட்டிக்கிறேன்… இந்த முன் பணம் கூட கொஞ்ச கொஞ்சமா நான் கொடுக்குறேன்…” ஆதீரன் சொல்ல

“உன்கிட்ட யாருப்பா காசு கேட்டது?” பொன்னி கேட்க

“இல்ல… நான் பணம் கொடுப்பேன்… அதுக்கு ஒத்துக்கிட்டா தான் இந்த பைக் நான் எடுத்துப்பேன்…” தீரன் உறுதியாக சொல்ல

“சரி ப்பா… உன் விருப்பம்..” என்று ரங்கநாதன் சிறு சிரிப்போடு முடித்து விட்டார்.

“தீரா… வாயேன் பைக்ல ஒரு ரைடு போகலாம்..” தென்றல் ஆசையாக கேட்க

“ஏய் வேண்டாம் போ..” தீரன் மறுத்தான் அவளின் தந்தையை பார்த்து

“ஆதீரா… கூட்டிட்டு போ ப்பா… பிள்ளை ஆசையா கேட்குது ல…” பூரணி சொல்ல “சரி” என்று தீரன் பைக்கை உயிர்ப்பிக்க சுடிதார் அணிந்து இரண்டு பக்கமும் கால் போட்டு ஏறி அமர்ந்தாள் தென்றல்.

தங்கள் வீடுகளை தாண்டும் வரை மெதுவாக சென்ற தீரன் எல்லை கடந்த பிறகு வேகமெடுத்து ஓட்ட தென்றல் இடையோடு கை வைத்து தீரன் முதுகில் சாய்ந்து கொண்டாள்…

ஆதீரனும் அந்த தருணத்தை மிகவும் ரசித்து அவளின் கையை எடுத்து தன் மார்போடு வைத்து அழுத்திக் கொண்டான்…

ரூபிணி தென்றல் இருவரும் சேர்ந்து கல்லூரி சென்று வர குமார் வாரம் ஒரு முறை வந்து தன் தாயையும் மனைவியையும் பார்த்து சென்றான்.

“டேய் அந்தப் பொண்ணை வெளியே எங்காவது கூட்டிட்டு போடா…” என்று தன் தாய் மட்டுமின்றி பொன்னி அன்னபூரணி என்று அனைவரும் வற்புத்த ஊருக்கு வரும்போது எல்லாம் பக்கத்தில் இருக்கும் கோவில் தியேட்டர் பார்க் ஹோட்டல் என்று அழைத்து செல்ல திருமணமான புதுமண தம்பதியர்க்கு நெருக்கம் அதிகரித்தது.

வேலை விஷயமாக குமார் கேரளா செல்ல வேண்டி இருக்க செமஸ்டர் விடுமுறையை பயன்படுத்தி ரூபியும் உடன் சென்றாள்.

ஆனால் ஊரில் இருந்து வரும் போது ரூபி கருவுற்றிருக்கிறாள் என்று தெரிய அனைவரும் கையில் வைத்து தாங்கினர் அவளை…

ரூபியை பத்திரமாக கல்லூரிக்கு அழைத்துச் சென்று வரும் மொத்த பொறுப்பும் தென்றலிடம் தான்… குமாரும் முடிந்த அளவுக்கு விடுமுறை எடுத்து வந்து மனைவியோடு அதிக நேரம் செலவிட்டான்.

இந்நிலையில் தென்றல் ரூபிணிக்கு இறுதி செமஸ்டர் நெருங்கிக் கொண்டு இருக்க பொன்னியின் நெருங்கிய உறவில் அண்ணன் மகளுக்கு திருமணம் நடை பெற அத்தை முறைக்கு நலங்கு வைக்க பொன்னி தான் உள்ளார் என்று ஒருவாரம் முன்பே அவரையும் ரங்கநாதனையும் அழைக்க தென்றலுக்கு பரிட்சை என்பதால் வரமுடியாத சூழல் என்பதால் பொன்னி தயங்க

“அதான் நான் இருக்கேனே அத்தாச்சி… கல்யாணத்துக்கு முன்னாடி நாள் தானே நான் வாரேன்… அதுவரைக்கும் நான் கூட இருந்து பார்த்துக்கிறேன்.” என்று தென்றலோடு அவள் வீட்டில் வந்து தங்கிக் கொண்டார் அன்னபூரணி.

குமார் விடுமுறை சொல்லி விட்டு வந்திருக்க ரூபியை அவனே அழைத்து சென்று வர தனியாக கல்லூரி சென்ற தென்றல் மாலை நான்கரை மணிக்கு வீட்டிற்கு வர வேண்டியவள் ஆறு மணியை கடந்தும் வீடு வரவில்லை என்று பதட்டம் கொண்ட பூரணி தீரனுக்கு அழைத்துச் சொல்ல தன் தென்றலை தேடி கிளம்பினான் ஆதீரன்.

– தொடரும்…

– நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல் – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *