Skip to content
Home » தீரனின் தென்றல்-20

தீரனின் தென்றல்-20

தீரனின் தென்றல் – 20

மாதங்கள் இரண்டு கடந்திருந்தது… ரங்கநாதன் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி… அவர்களுக்கு உறவுகள் இருக்கும் ஊரில் எல்லாம் தீரனும் குமாரும் தனித்தனியாக தேடி பார்த்து விட்டனர். எங்கும் இல்லை அவர்கள் மூவரை பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை…

இந்நிலையில் ரூபிணிக்கு பிரசவ தேதி நெருங்க அன்னபூரணியே “ரூபி கூட பக்கத்துல இரு குமாரு” என்று வலியுறுத்த தன் மனைவி அருகில் இருந்து கொண்டான் குமார்.

தீரன் மட்டும் பொன்னியின் உறவினர்கள் இருக்கும் இடம் எல்லாம் மீண்டும் ஒரு முறை தேடி வந்தான்.

தீரன் மீது இருந்த கோபம் பூரணிக்கு போகவே இல்லை… அவனிடம் பேசுவதை முழுவதும் தவிர்த்தார். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தார் பூரணி. ஆரம்பத்தில் இதை கவனித்த குமார் ரூபிணியிடம் பகிர அலைபேசியில் அழைத்த ரூபிணி

“அம்மா… சின்ன வயசுலயே நீங்க இதை அண்ணன் கிட்ட சொல்லி வளர்த்திருக்கலாம் ல ம்மா..‌ இப்போ இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது.” என்று வருந்த

“நான் என்னமா பண்றது? என் மதினி பொன்னி அளவுக்கு கூட படிப்பறிவு கிடையாது.. வீட்ல சொன்னாங்க னு அந்த மனுஷனை கல்யாணம் பண்ணி வாழ்ந்தேன்.. என்ன பிரச்சினை வந்தாலும் சகிச்சுக்க சொல்லி வளர்த்தாங்க அது படி என் வாழ்க்கையை கடந்தேன்… பெத்த பிள்ளை கிட்ட உன் அப்பன் அயோக்கியன் னு சொன்னா அவனோட மனசை ரொம்ப பாதிச்சு சமூகத்து மேல நாட்டம் இல்லாம போய்டும் னு என் அண்ணன் சொன்னாரு… அதனால தான் நான் அமைதியா இருந்தேன் ரூபி…” என்று புலம்பிய பூரணிக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது அனைவராலும்…

தீரன் தான் செய்த தவறினை முழுவதும் உணர்ந்து மனதால் தினமும் அழுது கொண்டு இருந்தவன் தன் தென்றல் இல்லாத இடத்தில் வாழவே மூச்சு முட்டியது தீரனுக்கு.

குமார் வாரம் ஒரு முறை ஊருக்கு வந்து போக ரூபிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க பூரணி சென்றிருந்தார். தங்களோடு சில காலம் இருக்க சொல்லி அவரை அனைவரும் வலியுறுத்த மறுத்துவிட்டார் பூரணி.

தீரன் தனியாக சென்று குழந்தையை பார்த்து ரூபியை நலம் விசாரிக்க குமார் முகம் கொடுத்து கூட பேசவில்லை… தாயும் பேசுவது இல்லை தோழனும் கடமைக்கு என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறான்… இதையெல்லாம் விட மரணத்திலும் தன்னை பிரிய மாட்டேன் என்று வாக்கு தந்த தென்றல் தன்னை விட்டு சென்று விட்டாள்…

இதற்கெல்லாம் காரணம் தான் செய்த ஒரு தவறு… தன் மாமாவை தவறாக நினைத்து தான் நடந்து கொண்ட விதம் மட்டுமே என்று நினைத்த தீரனுக்கு இந்த நொடி உயிர் வாழ்வதை விட செத்து மடிவது மேல் என்று தோன்றியது.

தனக்கு குழந்தை பிறந்த பிறகு முன்பு போல அடிக்கடி குமார் வந்து போக இயலாது வருந்த “இதுல என்ன ப்பா… நீ ரூபியையும் பிள்ளையும் பாரு.. எதாவது பிரச்சினை னா நான் உனக்கு ஃபோன் பண்ணி கூப்பிடுறேன்…” என்று பூரணி சொல்ல அடிக்கடி குமார் வருவது குறைந்தாலும் தினமும் இருமுறை அழைத்து நலம் விசாரித்து கொண்டான் குமார்.

என்ன தான் தீரனோடு பேசாமல் இருந்தாலும் அவன் தென்றல் இன்றி வாடுவதையும் வேலையில் கவனம் இன்றி அவளை தேடி திரிவதும் புரணியை வருத்த மெதுவாக குமாருக்கு அழைத்து நிலையை எடுத்துச் சொல்லி

“அவனை வேலைக்கு போக சொல்லுப்பா… அவன் வேலை செய்ற கம்பேனிக்கு தமிழ்நாடு முழுக்க கிளை இருக்கு ல வேற ஏதாவது ஊருக்கு மாற்றம் கிடைச்சாலும் சரி தான்… என்னதான் எங்க அண்ணன் குடும்பத்துக்காக அவனை மன்னிக்க கூடாது னு மூளை சொன்னாலும் பெத்த மகனை இப்படி பார்க்க மனசு பொறுக்க மாட்டேங்குது…” என்று புலம்ப

“சரி ம்மா… நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்று விட்டு ஆதீக்கு அழைத்து “செய்றதை எல்லாம் செய்துட்டு இப்போ வருந்துனா எப்படி? அண்ணே குடும்பம் எங்க இருக்கு னு தெரியாத கவலையை விட உன்னை நினைச்சு அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க… ஒழுங்கா வேலைக்கு போ… பேசாம உன் கம்பெனி ல பேசி ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்கு போய் கொஞ்ச நாள் இரு..

இல்லைன்னா இங்க கூட வா டா…” என்று உரிமையுடன் குமார் அழைக்க சிறு புன்னகை நீண்ட நாள் கழித்து ஆதீரன் முகத்தில்…

“பரவாயில்ல டா.. அம்மா என்கூட பேசாட்டியும் நான் இல்லாம அவங்க இருக்க மாட்டாங்க… நிச்சயம் இந்த ஊரை விட்டு வரவும் சம்மதிக்க மாட்டாங்க.. நான் இங்கேயே இருக்கேன். இனி தினமும் வேலைக்கு போறேன்.. அம்மாவை கவலைப்பட வேண்டாம் னு நீயே சொல்லிடு..” என்று கசந்த புன்னகையோடு அணைத்தான் அழைப்பை…

அதன் பின்னர் தென்றலின் நினைவையும் அவனின் சோகத்தையும் மனதுக்குள் மறைத்துக் கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான் ஆதீரன். ஒரு நொடி ஓய்வாக சாய்ந்தாலும் தென்றலின் நினைவும் அவள் இறுதியாக தன்னை பார்த்த பார்வையும் கண் முன் தோன்ற மிரண்டு விழிப்பான் உறக்கத்தில் இருந்தாலும்…

ஓய்வு உறக்கமின்றி உழைத்தான் அவள் நினைவுகளில் இருந்து வெளி வர தெரியாமல்.. அந்த உழைப்பு குறுகிய காலத்தில் அந்த நிறுவன கிளையில் அவனின் புகழ் பரவ ஷ்ரதா க்ரூப்ஸ் எம்.டி தர்மலிங்கம் நேரில் அழைத்து பாராட்டி அவனை தலைமை அலுவலகத்தில் வேலை செய்ய அழைக்க ஆதீரன் அன்னையை காரணம் காட்டி வர மறுத்து விட்டான்.

மாதங்கள் யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக்கொண்டே இருக்க அன்னபூரணியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர் திருச்சியில் உள்ள தன் “குல தெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்து விட்டு அப்படியே ஸ்ரீரங்கம் உச்சி பிள்ளையார் கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் என்று ஒரு சுற்றுலா மாதிரி போக முடிவு பண்ணிருக்கோம் நீயும் வரியா பூரணி” என்று கேட்க தனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டார் பூரணி…

பூரணி வேண்டாம் என்றாலும் ஆதீரன் அவரை சுற்றுலா அழைத்துச் செல்லும் பெண்மணியிடம் அதிகமாகவே பணம் தந்து “அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க” என்று அனுப்பி வைத்தான் ஆதீரன்.

திருச்சியில் உள்ள அவர்கள் குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கநாதனை தரிசித்து விட்டு அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தரிசனம் செய்து விட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்து தன் மனச்சுமைகளை அந்த அம்மனிடம் மானசீகமாக புலம்பி கொண்டு இருந்த அன்னபூரணி கோவிலை விட்டு வெளியேறிய நபரை கண்டு அதிர்ச்சி ஆனந்தம் என்று கலவையான உணர்வுகளை முகத்தில் வந்து போக அவரை பின் தொடர்ந்தார் அன்னபூரணி.

தனக்கு முன்னால் சென்ற ஆட்டோவில் இருந்த பொன்னியை பின்தொடர்ந்தார் அன்னபூரணி. பொன்னி ஓரிடத்தில் இறங்கி சந்தில் திரும்பி ஒரு வீட்டில் நுழைய பின்னால் சென்ற அன்னபூரணி அந்த வீட்டின் முன் நின்று “மதினி…” என்று அழைக்க

“யாரு?” என்று கேட்டபடி வந்த பொன்னியை கண்டு அதிர்ந்து போனார் பூரணி.

பொன்னி நெற்றியில் குங்குமம் இன்றி கழுத்தில் தாலி இன்றி வந்து நிற்க நொடியில் புரிந்து கொண்டார் தன் அண்ணன் இப்போது உயிரோடு இல்லை என்று…

“மதினி…” என்று கலங்கி அழுதவரை “உள்ளே வாங்க…” என்று தரையை பார்த்தவாறு அழைத்தார் பொன்னி உள்ளே வந்து பொன்னியை கட்டிக் கொண்டு அழுதவர் தன் அண்ணன் மறைவிற்கு தான் தான் காரணம் என்று அழுது புலம்ப

“போதும் நிறுத்து அத்த… அப்பா நினைவுல இருந்து இப்போ தான் அம்மாவை வெளியே கொண்டு வர முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. நீ திரும்பவும் அம்மாவை அழ வைக்காதே…” என்று தென்றலின் சத்தத்தில் திரும்பி பார்க்க வந்து நின்ற தென்றலை பார்த்து மூர்ச்சை ஆனார் பூரணி

எட்டு மாத கருவை வயிற்றில் சுமந்து சற்று சிரமத்தோடு வந்து நின்றாள் தென்றல்.

“என் பேர புள்ளை…” என்று அதிர்ச்சி கலந்த ஆசையோடு அவள் வயிற்றில் கரம் வைத்தார் அன்னபூரணி.

  • தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *