தீரனின் தென்றல் – 24
ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல என்றே தெரியவில்லை… யார் மீது தவறு சொல்ல… “எல்லாம் விதி தம்பி…” ஒரே வார்த்தையில் கூறி விட்டார் கமலம்.
மதனுக்கு என்ன சொல்ல யாருக்கு ஆதரவாக பேச என்றே புரியவில்லை… ஒரு கனத்த அமைதி நிலவ ஆதீரனே அதை கலைத்தான்.
“என்ன மதன் உனக்கும் இப்போ நான் எவ்வளவு மோசமா நடந்துக்கிட்டேன் னு தோணுதா?” என்று கேட்க
“பாஸ்… என்ன பாஸ் நான் எப்படி உங்களை தப்பா நினைப்பேன்… ஆனா தென்றல் மேம் ரொம்ப பாவம் பாஸ்.. அந்த நிலையில் தனியா குழந்தை அம்மா னு எல்லாத்தையும் பார்த்துக்க ரொம்ப ஸ்ட்ரகுள் பண்ணிருப்பாங்க இல்லையா?” என்று தென்றலுக்காக வருந்த
“அட போ மதன் தம்பி… ஆதீ தம்பி மேலேயும் அப்படி பெருசா என்ன தப்பு இருக்கு? அந்த பொண்ணு கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா எல்லாம் புரிஞ்சும் இத்தனை வருஷம் இவங்க ரெண்டு பேரும் இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே…” தீரனுக்கு ஆதரவாக கமலம் பேச
“கமலா ம்மா பாஸ் மேல தப்பு இருக்கு னு நான் சொல்லவே இல்லையே… தென்றல் பாவம் னு தானே சொன்னேன்?” மதன் பாவமாக சொல்ல
“இல்ல கமலாம்மா… தென்றல் மேல எந்த தப்பும் இல்ல… நான் தான் புரிஞ்சுட்டு இருந்திருக்கனும்… என் அப்பாவை விட சின்ன வயசுல இருந்து ரங்கநாதன் மாமா தான் என்னை வளர்த்தாரு.. அப்பா போன அப்பறம் கூட அவர் தானே என்னை படிக்க வைச்சு வளர்த்தாரு… நான் அவர் குணத்தை புரிஞ்சுக்காம என் அப்பா சாகுறதுக்கு முன்னாடி சொன்னதை மனசுல பதிய வைச்சிட்டு மாமா மேல வஞ்சம் வைச்சது என் தப்பு தானே…?” ஆதீரன் சொல்ல கமலம் மதன் இருவரும் அமைதி காத்தனர்.
சற்று நேரம் கழிய “சரி பாஸ்… இனி தென்றலை எப்படி கன்வீன்ஸ் பண்ண போறீங்க? அவங்க தன் குழந்தை அவ அப்பாவை இழந்துட்டா னு சொல்லிட்டு இருக்காங்க.. அந்த அளவுக்கு கோபம் இருக்கு. எப்படி அதை மாத்துறது?” மதன் கேட்க
“அதுக்கு முன்னாடி குமாரை சமாதானம் பண்ணி ஆகனும் மதன். அவனோட ஹெல்ப் எனக்கு தேவை…” சிறு யோசனையோடு ஆதீரன் சொல்ல
“அந்த தம்பியும் உன் மேல கோபமா இருக்கு இல்லாட்டி இத்தனை வருஷம் உன் கூட பேசாம இருந்துருக்குமா?” கமலம் சொல்ல
“கோபம் இருக்கும் தான் கமலாம்மா… ஆனா குமாரை கன்வீன்ஸ் பண்றது ரொம்ப ஈசி… ஆமா மதன் அதான் என் தங்கச்சி ரூபியே எனக்கு சப்போர்ட்டா பேசிருக்காளே… அத்தைக்கும் நானும் தென்றலும் சேர்ந்து வாழ ஆசை இருக்கு. சோ, முதல்ல இந்த ரெண்டு லேடிசை மீட் பண்ணி அவங்க மூலமா குமாரை ஈசியா சமாதானம் பண்ணிடுவேன்…” என்று கணக்கு போட்டான் ஆதீரன்.
“மதன்… இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு… ஆனா நான் நாளைக்கு அங்க வரேன் மதன்.. எனக்கு என் பொண்ணை பார்க்கனும் னு தோணுது…” ஏக்கத்துடன் ஆதீரன் கூற வருத்தமாக போனது மதனுக்கு..
“பாஸ் அபூர்வா உங்க குழந்தை பாஸ்… ஆனா, தென்றல் உங்களை பார்த்துட்டா?” மதன் தயங்க
“அவ இல்லாத நேரத்துல தான் வரனும்… அதை நீ தான் சொல்லனும்.” என்று ஆதீரன் சொல்ல முழித்து வைத்தான் மதன்.
மறுநாள் சித்ரா உடன் தென்றல் அலுவலகம் கிளம்பி செல்ல தன் வீட்டில் இருந்து அதை உறுதி செய்து கொண்டான் மதன். ரூபி குமார் தங்கள் மகள் சக்திஸ்ரீயோடு அவர்கள் வீட்டிற்கு சென்று விட அப்பார்ட்மெண்ட்ஸ் ல் இருந்த குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு பூங்காவில் அபூர்வா விளையாடி கொண்டு இருக்க கொஞ்ச நேரம் அவள் அருகில் இருந்த பொன்னி
“அப்பு குட்டி… அம்மம்மா க்கு கொஞ்சம் வேலை இருக்கு உனக்கு மதியம் பருப்பு சாதம் வேணும் னு கேட்டல… நான் அதை சமைச்சு வைச்சுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன். நீ அதுவரை பத்திரமா விளையாடிட்டு இரு…” என்று பொறுமையாக கூறிய பொன்னி
பக்கத்தில் இன்னும் சில பெரியவர்கள் பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவர்களிடம் “குழந்தையை பார்த்துக்கோங்க.. ஒரு அரைமணி நேரத்துல வந்திடுறேன்…” என்று கூறி விட்டு சென்றிருக்க ஆதீரன் வருகைக்காக மதன் கீழே வந்து காத்திருந்தான்.
ஆதீரன் வர “பாஸ்… பாப்பா பார்க் ல விளையாடிட்டு இருக்கா… பொன்னி அம்மா வீட்ல ஏதோ வேலை இருக்கு னு போயிருக்காங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் பார்க் ஏரியாவை நோக்கி சென்றிருந்தான் ஆதீரன்.
தன் மகள்… தன் உதிரம்… உருவத்தில் அப்படியே பூரணியை உரித்து வைத்திருந்தாள் அபூர்வா... பார்த்த நொடி கண்கள் கலங்கி போனது ஆதீரனுக்கு…
தென்றல் ஊரில் இருந்தபோது தான் வேலைக்கு செல்ல துவங்கிய நாட்களில் ரூபிணி கருவுற்றிருந்த போது அவள் வயிற்றில் இருந்த குழந்தையை பற்றிய கனவுகளை குமார் ஆதீரனிடம் தான் பகிர்வான்.
அப்போது எல்லாம் தென்றலை தான் திருமணம் செய்து அவளோடு மகிழ்வாக வாழ்ந்து தங்கள் காதலின் அடையாளமாக அவள் கருவுற்ற செய்தி கேட்ட நொடியில் இருந்து தென்றலை தன் உள்ளங்கையில் தாங்கி தென்றலை கவனித்து கொள்ள வேண்டும். வயிற்றில் வளரும் சிசுவோடு அழகிய பந்தம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் கண்டான் ஆதீரன்.
ஆனால் தென்றல் தன் மூலமாக கருவுற்றிருக்கிறாள் என்பதே எட்டாம் மாதம் தான் தெரிந்தது. அதிலும் அப்போது இருந்த சூழல் குழந்தையை தொட்டு உணர கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் வாயும் வயிறுமாக இருந்த தென்றலை கூட சரியாக நிமிர்ந்து பார்க்க முடியவில்லையே…
குழந்தை பிறந்த பிறகு அந்த செய்தி கூட ரூபிணி மூலமாக யாரோ ஒருவருக்கு சொல்லப்படுவது போல சொல்லப்பட்டது.
முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்து தன் மகளை முதல் முறை நேரில் காண்கிறான் ஆதீரன். திரையிட்ட கண்ணீரை இமை தட்டி வெளியேற்றி விட்டு கன்னம் வழிந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் தன் மகளின் சிரிப்பையும் விளையாட்டையும்…
முகச்சாயல் தன் அன்னையை போல இருந்தாலும் குழந்தையின் கண்களும் குறும்பு சிரிப்பும் அப்படியே தென்றல் தான்…
ஊரில் இருந்தவரை பார்ப்பவர்கள் அனைவரும் “அப்படியே உன் அத்தைகாரியை உரிச்சு வச்சு பொறந்திருக்க…” என்பர் தென்றலை பார்த்து.
ஆதீரனுக்கே சிறுவயதில் தென்றலை பிடிக்க காரணம் தன் அன்னையின் ஜாடையில் உள்ளாள் என்பதால் தான்… அப்படி இருக்க இன்று தன் தாயே மகளாக பிறந்ததிருக்கிறாள். என்று மனதினுள் மகிழ்ந்து போனான் ஆதீரன்.
சூட்டிகையாக ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் துள்ளி திரியும் பட்டாம்பூச்சி போல அபூர்வா குதித்து விளையாடி கொண்டு இருக்க மறைந்து நின்றும் பார்க்காமல் அவள் அருகேயும் செல்லாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் ஆதீரன்.
அப்போது திடீரென ஓடி விளையாடி கொண்டு இருந்த அபூர்வாவிற்கு மூச்சு திணற என்ன செய்ய என்று புரியாத குழந்தை ஓட்டத்தை குறைக்காமல் வாயை திறந்து மூச்சு விட்டபடி ஓடிக்கொண்டே இருக்க அதுவே குழந்தையை மயங்க செய்தது.
அபூர்வா வாயை திறந்து மூச்சு வாங்குவதையும் அவளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் கவனித்த ஆதீரன் சட்டென்று குழந்தை அருகில் செல்லவும் குழந்தை மயங்கி விழவும் சரியாக இருந்தது.
மயங்கிய குழந்தையை கையில் பிடித்த ஆதீரன் “குட்டி.. குட்டிமா என்னை பாருடா… அபூர்வா கண்ணை திறடா” என்று லேசாக கன்னத்தில் தட்டி எழுப்ப குழந்தை எழுந்த பாடில்லை…
“பாஸ் என்னாச்சு பாஸ்.. பாஸ் பக்கத்துல தான் ஒரு ஹாஸ்பிடல் இருக்கு பாஸ்… அப்பார்ட்மெண்ட் ல எந்த குழந்தைக்கு ஹெல்த் இஸ்ஸூ வந்தாலும் அங்க தான் கூட்டிட்டு போவாங்க…” என்று மதனும் பதட்டத்தோடு கூற சுற்றி நின்றவர்களும் அதையே சொல்லி மருத்துவமனை அழைத்துச் செல்ல சொல்ல
ஆதீரன் தன் மகளை கையில் தூக்கி இருந்தான் மருத்துவமனை அழைத்துச் செல்வதற்கு…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Omg. What happened to the baby? A father’s real emotions. Intresting