தீரனின் தென்றல் – 37
தன் மகள் முதல் முறை அப்பா என்று அழைத்த மகிழ்வை கூட கொண்டாட மறந்து தென்றல் அறைக் கதவை தட்டிக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
பட்டென்று கதவு திறக்கப்பட அனைவரும் ஆசுவாசமாக பார்க்க தென்றல் வேகமாக அபூர்வா உயரத்திற்கு குனிந்து மகளை கட்டிக் கொண்டாள்.
தாயோடு ஒட்டிக் கொண்ட சேயவள் சிணுங்க “என்னடா தங்கம்… ஏன் இப்படி அழறீங்க? அம்மா குளிச்சிட்டு இருந்தேன் அதான் கதவை திறக்க லேட் ஆகிடுச்சு…” என்று குழந்தையை சமாதானம் செய்ய
“தெட்டு… உனக்கு என்னு மேல கோவமா?” கிள்ளை மொழியில் கேட்க மகளை தன்னோடு அணைத்து தூக்கிக் கொண்டாள் தென்றல்.
“ஆமா… நீ தான் நான் வேணாம் னு சொல்லிட்டியே…” என்று தென்றல் குழந்தை போல முகத்தை திருப்பி கொள்ள
“எனக்கு நீயும் அப்பாவும் சேர்த்து வேணூ தெட்டு…” என்று குழந்தை தன் ஆசையை தெளிவாக கூறிட
“அம்மா உனக்கு மொறுகலா தோசை ஊத்தி தரேன் வா…” என்று நேக்காக பேச்சை மாற்றி அபூர்வாவோடு கிச்சன் சென்ற தென்றல் பொன்னி சமைத்த எதையும் எடுக்காமல் மாவை எடுத்து தோசை வார்த்து கொஞ்சமாக தேங்காய் சட்னி அரைத்து அபூர்வாவிற்கு ஊட்ட துவங்கினாள் தென்றல்.
“ஏன்டி… அத்தை காலையில இருந்து அவ்வளவு பண்ணி வைச்சிருக்கு… நீ பாட்டுக்கு தோசை ஊத்தி பிள்ளைக்கு சட்னி அரைச்சு ஊட்டிட்டு இருக்க? உனக்கு என்ன தான் தென்றல் வேண்டும்?” ஆற்றாமையில் கேட்டு விட்டாள் ரூபிணி.
“எனக்கு ஒன்னும் வேணாம்… உங்க எல்லாருக்கும் தான் புதுசா ஒரு உறவு தேவைப்படுது… உங்க புது உறவுகளை மட்டும் நீங்க கவனிச்சுக்கோங்க.. என்னையும் குழந்தையும் நான் பார்த்துப்பேன்…” வெட்டும் தோணியில் தென்றல் பேச ரூபியோடு சேர்ந்து அனைவருக்கும் சங்கடமாக தோன்ற
“விடு ரூபா… அவ என்னவோ பண்ணட்டும்… மாப்ளை நீங்க வாங்க குமாரு மதன் சித்ரா நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்று பொன்னி அழைக்க
தென்றல் தங்களோடு உண்ண வேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும் “அவளை அப்படி உடனே எல்லாம் மாத்த முடியாது தம்பி… நீங்க உட்காருங்க” என்று அனைவருக்கும் பொன்னி பரிமாறினார்.
அபூர்வாவிற்கு கிச்சனில் வைத்தே தென்றல் ஊட்டி விட்டிருக்க அதன் பின்னர் தனக்கும் இரண்டு தோசை வார்த்து சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள் தென்றல். குழந்தை தன்னை தேடக்கூடும் என்று நினைத்து கதவை தாழிடாமல் சாத்தி விட்டு சென்றிருக்க சக்தியோடு சேர்ந்து விளையாடிய அபூர்வா தன் தந்தையோடு நேரத்தை செலவிட மதிய உணவாக சக்தியோடு அமர்ந்து பொன்னி சமைத்த சாப்பாட்டை அபூர்வா சாப்பிட ஆசையாக தன் மகளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தான் ஆதீரன்.
தென்றல் அனைத்தும் கவனித்தாலும் வெளியே வந்து தடுக்கவும் இல்லை மதியம் சாப்பிட அவள் வரவும் இல்லை.. குமாரும் ரூபியும் மனம் பொறுக்காமல் உள்ளே சென்று தென்றலை சாப்பிட அழைக்க
“உங்களுக்கு தான் நான் முக்கியம் இல்லையே…” என்று முகத்தில் அடித்தாற் போல் தென்றல் பேச
“தென்றல் என்ன பேசிட்டு இருக்க நீ? குமாரும் ரூபியும் கூட இல்லாட்டி தெரியாத ஊர்ல இத்தனை வருஷம் நாம எப்படி டி இருந்திருப்போம்… அவங்களை கஷ்டப்படுத்தற மாதிரி பேசிட்டு இருக்க.. தப்பு தென்றல்” என்று பொன்னி கடிந்து கொள்ள சட்டை செய்யாதது போல அமர்ந்திருந்தாள் தென்றல்.
மாலை மங்க “சரி அத்தை… நேத்து போட்டது போட்ட படி அப்படியே வந்தோம்… நாங்க கிளம்பறோம்…” என்று ரூபிணி கிளம்ப
“இரு ரூபி நைட்டுக்கு போய் இனி என்ன சமைக்க போற? நான் தோசை சுடுறேன் சாப்பிட்டு கிளம்புங்க” பொன்னி கூற சரி என்று இருந்து விட்டாள் ரூபிணி.
சித்ராவும் தன் வீட்டிற்கு செல்வதாக கூற அவளிடமும் “ஏன் மா ஒரு ஆளுக்கு சமையல் எதுக்கு னு அந்த ரொட்டியை நின்னுட்டு தூங்க போறியா?” என்று பொன்னி கூற அசடு வழிந்தாள் சித்ரா.
அநேக நேரங்களில் ஒருத்திக்கு தனியாக சமைக்க வேண்டுமா என்று சோம்பலில் இப்படி பிரட் ஜாம் பால் என்று முடித்துக் கொள்வேன் என்று சித்ராவே சொன்னதை நினைவு படுத்தி “உனக்கு மட்டும் தனியாவா உலை வைக்கப்போறேன் சித்ரா… இனி அப்படி எதுவும் பண்ணாதே உனக்கு என்ன வேணுமோ கேளு அம்மா நான் சமைச்சு தரேன்” என்று பாசத்தில் கட்டிப்போட்டார் பொன்னி.
தென்றல் வெளியே வரவே இல்லை இரவு அவளுக்கும் சேர்த்து தான் பொன்னி சமைக்க வேண்டுமென்றே அதை தவிர்த்து பிரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள் தென்றல்.
சாப்பிட்டு முடித்து ரூபிணி குமார் சக்தி மூவரும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பி விட சித்ரா தன் வீட்டில் உறங்க செல்வதாக கூறி சென்று விட்டாள்.
குழந்தை அபூர்வா அப்பா அப்பா என்று ஆதீரனை நன்கு ஒட்டிக் கொள்ள “அத்தை… நான் இன்னைக்கு ஒரு நாள் பாப்பாவை மதன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என் கூட தூங்கட்டும்…” என்று ஆதீரன் கேட்க
“மாப்ளை… அவ உங்க பொண்ணு.. என்கிட்ட எதுக்கு அனுமதி கேட்டுட்டு…” என்று பொன்னி சொல்ல அதுவரை அறைக் கதவை தாழிடாமல் வெறுமனே சாத்தி இருந்த தென்றல் “மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை…” என்று சத்தமாகவே முணுமுணுத்து விட்டு கதவை டம் என்று அடைத்து சாத்திட அதிலேயே அவளின் கோபம் உணர்ந்த மதனுக்கு பகீரென்றது.
அபூர்வாவை தன்னோடு அழைத்துச் சென்ற தீரன் அவளை உறங்க வைக்க முயல் கதைகள் சொல்ல சொல்லி கேட்டாள் அபூர்வா. தனக்கு வாயில் வந்த கதைகளை ஆதீரன் குழந்தையிடம் கூறிக்கொண்டு இருக்க
“போப்பா… உனக்கு கதை சொல்ல தெரில… தெட்டு ச்சூப்பரா கதை சொல்லுவா.. அவ தான் என்னை டெல்லி (டெய்லி) தூங்க வப்பா…” என்று தென்றல் பெயரை கூறவும்
“அப்படியா பூர்வி மா.. அப்படி என்ன எல்லாம் கதை சொல்லுவா உங்க அம்மா?” ஆதீரன் தென்றல் பெயர் வரவும் உற்சாகமாக கேள்வி தொடுக்க குழந்தை தாய் சொன்ன நீதி கதைகளில் தனக்கு நினைவில் வந்ததை உளறலாக கூற தூக்கத்தில் அதுவே குளறலாக… சற்று நேரத்தில் தனக்கு தானே கதை சொல்லியபடி உறங்கி போனாள் அபூர்வா.
உறங்கும் குழந்தையை தன் தோள் வளைவில் இருந்து படுக்கையில் நேர படுக்க வைத்து குழந்தை நெற்றியில் முத்தமிட்டு புன்னகையோடு எழுந்து அமர்ந்தான் ஆதீரன்.
அவன் அருகில் வந்த மதன், “பாஸ் என்ன பாஸ் இது? தென்றலுக்கு இவ்வளவு கோபம் வருது…” மிரட்சியாக கேட்க
“என்னையும் பொன்னி அத்தையும் பொறுத்தவரை இப்போ அவ ரொம்ப சாந்தமா இருக்கா மதன்.. அவளோட கோபம் எல்லாம் வேற மாதிரி இருக்கும்..” என்று ஆதீரன் சொல்ல மிரண்டு விழித்தான் மதன்.
“பாஸ்… நீங்க தான் தென்றல் வேலை பார்க்குற கம்பெனி எம்.டி உங்களுக்கு தான் அசிஸ் பண்ண போறோம் னு தென்றலுக்கு தெரிஞ்சிடுச்சு.. இனி அவங்க வேலைக்கு வருவாங்களா பாஸ்?” மதன் சந்தேகமாக கேட்க
“அதெப்படி வருவா மதன்… அவ அப்படி வராம போயிட கூடாது னு தான என்னை அடையாளம் காட்டிக்காம ரெண்டு வருஷம் அக்ரீமெண்ட் சைன் பண்ண சொல்லி வாங்கிருக்கோம்… ஆனா கண்டிப்பா நாளைக்கே அவ வேலைக்கு வரமாட்டா மதன். எங்க போயிட போறா… அவளுக்கான ஸ்பேஸ் கொடுத்து அவளோட வருகைக்காக காத்திருக்கிறதை தவிர எனக்கு வேற எந்த வழியும் தெரியலை…” என்று மதனிடம் கூறிய ஆதீரன் தென்றல் இனி தன்னை நீங்கி சென்றிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தன் மகளை அணைத்துக் கொண்டு உறங்க இன்னொரு அறையில் சென்று மதன் உறங்கினான்.
மறுநாள் பலநாள் கழித்து ஆதீரன் அலுவலகம் செல்ல கிளம்ப நேற்றை போல இன்றும் தனக்கு மட்டும் சமைத்து கொண்ட தென்றல் வீட்டில் இருக்க பொன்னியோடு பேசவே இல்லை.. பொன்னியும் தென்றலோடு பேச முயலவில்லை…
ஆதீரன் அலுவலகம் கிளம்பி வர பொன்னி எங்கேயோ கிளம்பி வெளியே வருவதை பார்த்து “என்ன அத்தை எதுவும் தேவை படுதா நான் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்க
“இல்ல மாப்ளை… பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அங்க தான் போயிட்டு வரலாம் னு…” என்றிட
“வாங்க அத்தை நான் ட்ராப் பண்றேன். ஆமா பாப்பா வரலையா அத்தை…?” ஆதீரன் கேட்க
“இல்ல மாப்ளை… அப்புக்குட்டி அவ அம்மா கூட இருக்கா நான் இருந்தா தென்றல் சிரிக்க கூட மாட்டா குழந்தையோட விளையாடினா கொஞ்சம் மனசு மாறி இருப்பா…” என்று விளக்கிய பொன்னி
“நீங்க போங்க மாப்ளை… கீழ் ஃப்ளோர் வசந்தியும் வரேன் னு சொன்னா… எனக்கும் கொஞ்சம் வாக்கிங் போன மாதிரி இருக்கும் நாங்க நடந்தே போய்கிறோம்…” என்று ஆதீரனை அனுப்பிவிட்டு பொன்னி நடந்து சென்று கோவிலில் வழிபாட்டை முடித்து வீடு திரும்ப வீடு யாருமற்று திறந்த நிலையில் வரவேற்றது பொன்னியை…
தென்றல் தனக்கு சாதகமாக பேசாத தாயும் வேண்டாம் என்று நினைத்து விட்டாள் போல… அபூர்வாவை தன்னோடு கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் தென்றல்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Omg. Thendral what happened? Where she gone?. Intresting