Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

அத்தியாயம்-11

    ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று “நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்” என்றான்.

      “நான் கோவிலுக்கு போகணும். குழந்தை பிறந்த நாள் நல்லபடியா முடிந்தா அங்க இன்னிக்கு கேசரி பிரசாதம் கொடுக்கலாம்னு.” என்று கூறவும் “ஓ… அப்ப நானும் வர்றேன்” என்றான்.

     “மாமா உங்களுக்கு கோவில் பிடிக்காதுனு சொல்லிருந்தாரே. சந்தனாவை மேரேஜ் பண்ணியது கூட ரிஜிஸ்டர் ஆபிஸ் தானாமே. பிறகெப்படி?” என்று தயங்கினாள்.

     “இதுவும் சுயநலம் தான். மனிதனுக்கு கஷ்டமில்லாதப்ப வேண்டுதல் இல்லாதப்பவும் கடவுளை தேடமாட்டான். ஆனா இப்ப மனசுல வேண்டுதல் நிறைய இருக்கு.” என்றான். 

       யஷ்தவி இதற்கு மேல் தோண்டிதுருவாமல் கோவிலுக்கு தயாரானாள்.

     ஆத்விக் பாவனாவிற்கு உடைமாற்றி தலலவாறினான். அதற்குள் யஷ்தவி கிளம்பி ஒரு தூக்குவாளியில் கேசரியை எடுத்து கொண்டு வநதாள்.

     “இந்த வெயிட்டை வச்சிட்டு பாப்பாவை வேற தூக்கிட்டு கோவிலுக்கு சேலையில் போனா ஸ்லிப்பாகவா? உனக்கு தான் சேலையில வேகமா நடக்க வராதே” என்றான்.

    யஷ்தவி புரியாமல் விழிக்க, நம்ம மேரேஜ் அப்போ நீ நடந்த நடையை வச்சி சொன்னேன்.” என்று மென்னகை விடுத்தான்.

     “நீங்க வரலைனா செக்யூரிட்டி அண்ணாவிடம் சொல்லி ஆட்டோ வரவழைச்சியிருப்பேன். இல்லை ஓலா ஆட்டோல கிளம்பாயிருப்பேன்.” என்றாள்.

     “நல்ல தெளிவா தான் இருக்க” என்று மகளை எப்பொழுதும் போல முன்னிருக்கையில் அமர வைத்தான்.

      குழந்தையை தூக்கி பின்னாடி உட்கார வைத்தாள். கேசரி தூக்கை எடுத்து அவன் டேங்க் மேலே வைத்து குழந்தையை பிடித்து கொண்டாள்.

     “ரொம்ப தெளிவா இருக்க” என்று முறுவலோடு வண்டியை உயிர்பித்தான்.

    அவள் கூறிய கோவிலுக்கு வந்து, நிறுத்திட, தூக்கை எடுத்து கீழே வைத்து விட்டு குழந்தையை தூக்கினாள்.

   வண்டியை பார்க்கிங் செய்து வந்தவனின் சட்டையில் நெய் கரை ஒட்டியதை கண்டாள்.

    யஷ்தவி பார்வை தன் மேல் இருக்க சட்டையை பார்த்தான்.
   
     “பார்த்தியா சட்டை கரையாகிடுச்சு. என் பேவரைட் சட்டை இந்த லைட் ப்ளு கலர். உன்னோட முதல் முறை வர்றேன்னு போட்டேன். யஷ்… எதுக்கு பீலிங் துவைச்சா போகப்போகுது இல்லையா ஸ்வீட் மெம்மரியா எடுத்துக்கலாம்.” என்றதும் யஷ்தவி முறைக்க, “கேசரி ஸ்வீட் தானே அதனால தான் ஸ்வீட் மெமரினு சொன்னேன்.” என்று நமுட்டு சிரிப்பை உதிர்த்தான்.

     காலையிலிருந்து புன்னகை முகமாக தான் ஆத்விக் உலாவிக் கொண்டிருக்கின்றான். அவனின் சின்ன சின்ன சீண்டல்கள் அவளின் இறுகிய தன்மையை உடைத்து கொண்டிருந்தது.
   ஆனாலும் கண்டுக் கொள்ளாமல் வீம்பாக இருந்தாள்.

     கடவுள் சந்நிதியில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு மனமுறுக வேண்டினாள்.

      ‘கணவன் என்ற உறவை பறிச்சப்ப கூட நான் கலங்கலை. விதி இப்படி தான் என் வாழ்க்கை என்று விதவையா ஏற்றுக்க செய்தேன்.

    மறுமணமா ஆத்விக்கோட திருமணமாகினாலும் ஒரு நல்ல நண்பனா இருக்கார்.

     எங்க கணவன் என்ற உறவு முலைத்து இந்த தோழமை உறவு கிடைக்காம போனா என் வலி ஏறிடும். என்னால இதுக்கு மேல வலிகளை சுமக்க முடியாது. வேதனையும் ஏமாற்றமும் அதிகரித்து என்னை தள்ளினா எங்க எனக்கே வாழ பிடிக்காம தற்கொலை செய்துப்பேனோனு பயமா இருக்கு. என்னை நம்பி பாவனா இருக்கா. எந்த அபத்தமும் இனி வாழ்க்கையில உள்ள நுழைய கூடாது” என்று வேண்டி ஆராதனையை தொட்டு கும்பிட்டாள். சிறுதுளி கண்ணீர் கசிந்தது. பாவனாவிற்கும் தீப ஆராதனையை தொட்டு வைத்தாள்.

     “என்னோடது பெரிய வேண்டுதல் இல்லை. நீ நான் பாவனா நிறைவா குடும்பமா வாழணும். நீ என்னை கணவனா பார்த்தா போதும் என்ற சின்ன வேண்டுதல் தான்” என்று கூறி அங்கே இருந்த விநாயகர் சிலை முன் குங்குமம் இருக்க அதனை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தான்.

      வருண் இறந்ததிலிருந்தும் ஆத்விக்கை மணந்தப் பின்னும் குங்குமம் நெற்றியில் வைக்காததால் ஆத்விக் வைத்ததும் சிலையானாள்.

     அவள் மிரண்டு விழித்ததில் அதிகப்படியாக உரிமை எடுக்கின்றோமோ என்று தோன்றாமலில்லை. அவளை மாற்றிட, “கேசரி ஆறுவதற்குள் கொடு யஷ். அப்பறம் வந்தவங்க சூடா கிடைச்சா நல்லாயிருக்கும்னு ஒரு ‘க்கு சேர்த்து பேசுவாங்க.” என்று அனுப்பினான்.

    ஆத்விக்கை பார்த்து பார்த்து சென்று தொன்னையில் வைத்து கொடுத்தாள்.

     “லைட்டா சிரிச்சுக்கிட்டே… கொடுக்கும் போது சின்ன ஸ்மைல் வேண்டும்.” என்றான். ஏற்கனவே சிரிதாய் வந்த முறுவலை அடக்கினாள். தற்போது முகம் புன்னகையை சிந்திவிட, அதனை கண்டு ஆத்விக் குழந்தைக்கு மட்டும் வாங்கி பாவனாவுக்கு ஊட்டிவிட்டான்.

      கோவிலுக்கு வந்தவர்கள் வாங்கவும் முகம் மாறி புன்னகை அமர்ந்து நிறைவாய் தர, கேசரி சாப்பிட்டு வாயை அங்கும் இங்குமென பாவனா இழுவிவிட்டு, ஆத்விக் உடை நெய்யாடையாக மாறியது.
   
   கேசரி காலி செய்து திரும்ப, சட்டையை ஆராய்ந்து கொண்டிருந்தவனை கண்டு சிரித்து விட்டாள்.

     “என்னடா குட்டி இப்படி பண்ணிட்டியே? நீ சிரிக்கிற.” என்று மனைவியை வேறு செல்லமாய் கண்டித்தான்.

    “இந்த ஹாண்ட் பேக்கில் தானே பிப்(bib) இருக்கு மாட்டிட்டு ஊட்டி விட்டுயிருக்கலாம்ல.” என்று பேச ஆத்விக் அசடு வழிந்தான். “ஈ ஈ பார்க்கலை” என்றான்.

      வீட்டுக்கு வந்து உடைமாற்றி சிறிது நேரம் டிவியில் பாடலை இசைக்க விட்டு யஷ்தவியை கண்டான்.

    மதியம் நெருங்க உணவகத்துக்கு அழைத்து சென்றான். ஆர்டர் செய்து விட்டு சாப்பிடவும் யஷ்தவியோ “நானே பாவனாவை கூட்டிட்டு இப்படி ஒரு நாள் ஹோட்டலுக்கு வரணும்னு ஆசையா இருந்தேன். ஆனா கேட்க தயக்கமா இருந்தது. பாவனா சுற்றி இருக்கறவங்களை கவனிக்க ஆரம்பிக்கிறா. புது இடம் புது மனிதர்கள் என்று பார்த்து நல்லதை கெட்டதை கத்துக்கறா” என்றாள்.

      “இனி எங்கயாவது போகணும்னா என்னிடம் கேளு யஷ். தயக்கம் வேண்டாம். பாவனாவுக்கு மடடும் இல்லை உனக்குமே எங்கயாவது போகணும் நிம்மதி வேண்டும்னா ஆத்வி கோவிலுக்கு போகலாமா சினிமா போகலாமானு கேட்கலாம் தப்பில்லை. நானும் அதே போல கேட்பேன்.” என்று எப்படியும் இனி இது போன்ற வாழ்வை பழகிக்கொள் என்பதாய் இலைமறையாய் கூற அது புரிந்து மெதுவாய் தலையாட்டினாள்.

       சின்னதாய் நேசம் துளிர்க்க, “பார்த்தியாடி செண்பா. என் மகனை முழுங்கிட்டு எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆளை பாரு ஆளை. முன்ன விட மினுக்கறதை.” என்று வருண் தாய் வள்ளி கத்த அவ்விடம் இருந்தோர் திரும்ப, யஷ்தவிக்கு நொடியில் நெருப்பில் தள்ளி விட்டது போன்ற தகிப்பு.  வருண் தாய் வள்ளி தங்கை செண்பா மற்றும் அவள் கணவன் குழந்தை என்று அதே ஹோட்டலில்
வந்திருக்க வள்ளி பொறுமிவிட்டார்.

     “அய்யோ அம்மா சும்மாயிறேன். எல்லாரும் பார்க்கறாங்க.” என்று இழுத்தாள் செண்பா.

    “ஒரு நிமிஷம் மா. உங்க மகனை இவ எப்போ முழுங்கினா. இவ என்ன ராட்சஸியா? உங்க பையனுக்கு கொரானா வைரஸால ரெக்கவர் ஆகமுடியாம மரணம் சம்பவிச்சா இவ என்ன செய்வா?

   என்ன சொன்னிங்க மினுக்கறதா. ஏங்க இந்த சின்ன தாலி செயின் உங்க கண்ணுக்கு மினுக்கிற மாதிரி இருக்கா? உங்க பையன் இறந்தும் நீங்க சாப்பிடாம இருக்கீங்களா? இல்லை நல்ல உடை உடுத்தாம இருக்கிங்களா. உங்க கழுத்துல தான் மூனு செயின் போட்டு இருக்கிங்க. நீங்க தான்…. ம்ம் மினுக்கறிங்க.

      இன்னொரு கல்யாணம் யஷ்தவி பண்ணினா தப்பா. உங்க பொண்ணை விட சின்ன வயசு தானே அவளுக்கு ஏன் இப்படி பேசறிங்க.” என்று ஆத்விக் மெதுவாக எடுத்து கூறவும் யஷ்தவி அவன் கையை பற்றி “போகலாம் ஆத்விக் ப்ளிஸ்” என்று இழுத்தாள்.

     “நாம மில்க் ஷேக் வந்ததும் குடிச்சிட்டு தான் போக போறோம் யஷ். அவங்க வேண்டுமின்னா போகட்டும். நீ உட்காரு.” என்று அருகே அமர வைத்து அவள் கைகளை விடாமல் இருந்தான்.

    செனண்பாவோ தாயை இழுத்து சென்றாள்.

     யஷ்தவி கைகளை நீவியபடி, “திருஷ்டி பட்டுடுச்சு யஷ். அவங்க போய் தொலையறாங்க நீ என்ன என் எதிர்ல தான் அழாம கெத்தை மெயிண்டெயின் பண்ணற. மற்றவங்க இப்படி பேசினா சட்டுனு பொசுக்கு பொசுக்குனு அழுவுற.” என்று சிரிக்க வைக்க முயன்றான்.

      அவன் கைகளை உதறாமல் மெதுவாக அவனை நோக்கினாள்.

      தன் கையை விடாமல் குழந்தையை மடியில் வைத்து நிலைமையை சமன் செய்தவனை வியந்தாள்.

     இதே போல தானே சந்தனா கைகளை பற்றி ஆறுதல் மொழிந்தான். அன்று இருந்த அதே காதலும் நேசமும் இன்று எனக்கா? என்று கண்ணீர் உகுத்தினாள்.

    கண்ணீரில் சந்தனா உருவம் மெல்ல மெல்ல கலைந்து அங்கே அவள் உருவமாக தோன்ற, திடுக்கிட்டு கண்களை துடைத்தாள்.

     “நாம வீட்டுக்கு போகலாம். பில் வந்துடுச்சு” என்று கையை உருவினாள்.
  
    வீட்டுக்கு வந்ததும் பாவனா உறங்க அவளருகே படுத்து கொண்டாள்.

     படுத்த நொடியே இமை மூடியவளை ஆத்விக் எதுவும் கேட்கவில்லை. தூங்கி எழுந்தால் சற்று எல்லா கசப்பும் மறையும் என்று விட்டுவிட்டான்.

   மாலை ஆறுமணிக்கு பாவனா விழிக்க ஆத்விக் வந்து அவளை மட்டும் தூக்கி பாலாற்றி பிஸ்கேட் தொட்டு ஊட்டி விட்டான்.

    ஆறு முப்பதுக்கு யஷ்தவி விழிதிறக்க, அருகே பாவனா இல்லையென்றதும் ஹாலுக்கு வர, தந்தை மகள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதை கண்டு முகமலப்பி காபி தயாரிக்க கிச்சன் சென்றாள்..

     “யஷ் நான் காபி குடிச்சிட்டேன்” என்று கூறவும் அவளைக்கு மட்டும் கலந்து கொண்டாள்.

     ஏழு முப்பதுக்கு உணவை ஸ்விகியில் ஆர்டர் தந்து விட்டு யஷ்தவிக்கு வேலையை குறைத்தான்.
  
     சாப்பிட்டு முடித்ததும் இரவு உறங்க சென்றவளின் கையை பிடித்து, நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

     “இந்த உலகம் வாழ ஆசைப்படறவங்களை வாழ விடாது. நாம தான் அதை பற்றி யோசிக்காம நம்ம வாழ்க்கையை வாழணும்.
   
    இது மாதிரி காயத்தை கடந்து வாழுகிற அனுபவம் தான் வாழ்க்கை.

      எப்ப கிஷோர் உன்னை பார்த்து வருண் ஒய்ப் நீங்களானு கேட்டப்ப, நீ ஓடி வந்து ஆத்விக்னு என் நெஞ்சில சாய்ந்து அழுதியோ அப்பவே உனக்கு நான் இருக்கேனு நம்பிக்கை வந்துடுச்சு. இன்னமும் பயந்து ஊர் உலகத்துக்கு வாழ வேண்டாம்.

     நடந்தது எல்லாமே மறக்கவோ மாத்தவோ முடியாது. ஆனா சந்தோஷமா வாழ ஆரம்பிக்கலாம்.

    உன்னோட பொண்ணு பாவனா உன்னோட கணவன் ஆத்விக் இது தான் உன் நினைவில் இருக்கணும். தூங்கு.” என்று நெஞ்சில் அவள் முகத்தை சேர்த்தணைத்து பேசினான்.

      சின்ன சின்ன அன்பில் ஆத்விக் இனி வரும் காலங்களில் யஷ்தவியின் இதயத்தை திறப்பான். பாவனாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் மற்றவரின் பார்வைக்கு தாய் தந்தை என்று வாழும் இந்த ஜோடி நிஜமான காதல் கணவன் மனைவியாக வாழ்ந்து உங்களை இரண்டாம் பிறந்த நாளுக்கு அழைப்பார்கள் நம்புவோமாக.

                                                      *சுபம்*

               -பிரவீணா தங்கராஜ்

கதை பிடித்திருந்த உங்க கருத்தை முன் மொழியுங்கள்.

facebook ல கூட review போடலாம். இல்லைனா site ல novel discussion ல கூட விமர்சனம் பண்ணலாம்.

நன்றி. 

2 thoughts on “பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *