பிரியமானவரே என் தேவதுதனே-23
அத்தியாயம்-23
(Few Months Later)
சில மாதங்கள் கடந்து போயிருந்தது.
புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள் இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு இணைந்துவிட்டனர்.
முன்னாடி இருந்த அதிர்ச்சிகள், கண்ணீர், குழப்பம்,
அனைத்தும் ஓரளவு இயல்பாக மாறியிருந்தது.
தற்போது தினசரி வாழ்வோட தமிழ் சரளமாக சாராவோடு கலந்திருந்தது. சார்லஸிடம் மலையாள நெடி ஆங்காங்கே ஆரம்பித்திருந்தது.
சார்லஸின் காலை நேரம். கிச்சன்ல இருந்து வரும் தேநீரியின் நறுமண வாசம்.
“சாரா… சக்கரை கொஞ்சம் குறைச்சு கலந்தா சாயா நல்லாயிருக்கும்” என்று சார்லஸ் ஹாலிலிருந்து சொன்னான்.
“நிங்களுக்கு வரவர என்ட சமலயலில் குறை காணும்” என்று
அவள் சிரித்தபடி கூறினாள்.
சார்லஸும் இயல்பான கணவன் மனைவி வாழ்வில் சிறிய நிம்மதி கலந்து இருந்தது.
சார்லஸ் அவளை பார்த்தான்.
சில விஷயங்கள் பேசாமலேயே புரியும். இவர்கள் வாழ்க்கை அப்படிதான் மாறி இருந்தது.
இருவரும் ஒரே வீட்டுல இருந்தாலும்
மெதுவா அருகே வர கற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால்
அந்த வீட்டில் இன்னும் ஒரு வெற்றிடம் இருந்தது. அதுவும் பூர்த்தியானால் சாராவுக்கு நேரம் இறக்கை கட்டி பறக்கலாம்.
சாரா இரவு நேரங்களில் பால்கனியில் நின்று
கீழே விளையாடும் குழந்தைகளை பார்ப்பாள். அவள் முகத்தில் அந்த ஆசை உருவாகும். அதை சார்லஸிடம் சொல்ல மாட்டாள். சார்லஸ் அதை கவனிக்காதவனில்லை. அவனுமே காத்திருந்தான்.
அன்று மெர்ஸி சார்லஸிற்கு போனில் அழைத்தாள்.
“அண்ணா… இன்னிக்கு வீட்டுக்கு வா. அப்பா அம்மா நீ நான் எல்லாம் ஒரே இடத்தில் சந்தித்து பேசலாம்னு ஆசையாயிருக்கு. சாராவும் நீயும் ஈவினிங் வந்துடுங்க” என்றாள்.
சார்லஸோ ஏன் எதற்கு என்று கேளாமல் சரியென்றான். இப்பொழுது எல்லாம் அம்மா அப்பாவை அவனுமே அதிகம் பார்ப்பதில்லை. அதனால் தனது வீட்டிற்கு சென்று வரும் முடிவோடு வர சம்மதித்தான்.
சாராவும் ஆசையாக கிளம்பினாள்.
சார்லஸோடு பயணிக்கும் ஒவ்வொரு நேரமும் சாராவுக்கு சந்தோஷம் பூக்கும் தருணம் தானே.
சாரா சார்லஸ் இருவரும் நிர்மலா வீட்டிற்கு வந்த நேரம், அங்கே மரியம் அந்தோனியும் இருந்தார்கள்.
“நீங்க எப்ப வந்திங்க மாமா அத்தை” என்று கேட்டான்.
அந்தோனியோ “மேத்யூ எங்களையும் இங்க வரச்சொல்லி கட்டாயப்படுத்தினான்.
ஏதோ எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு டின்னர் சாப்பிடலாம்னு விரும்புவதாக சொன்னான்.” என்று கூறினார்.
சார்லஸ் புன்னகையுடன் என்ன காரணம் மெர்ஸி அழைத்திருக்கா? என்று யோசித்து நழுவ, சாராவுக்கு தந்தை தாயை கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
மரியம் மகளை உச்சி முகர்ந்து, நலத்தை கேட்டு கொண்டார்.
சார்லஸ் அங்கே தேவதூதனாக நல்லவனாக சாரா வாயிலிருந்து புகழப்பட, மேத்யூ கூட ஆனந்தப்பட்டான்.
மெர்ஸியிடம் வந்து ”என்ன சேச்சி… உங்கட முகம்… பிரகாசமாயி” என்று கேட்க, மெர்ஸியோ, “அம்மா-அப்பா அத்தை-மாமா, அண்ணன்-அண்ணி என்று குழுமியிருக்கவும், கர்த்தர் முன் மெழுகு விளக்கு ஏற்றிவிட்டு, கும்பிட்டவளாக, “அந்த ஆண்டவர் எனக்குள்ள இன்னொரு உயிரை வளர்த்தெடுக்க ஆசிர்வாதம் செய்திருக்கார். அதை சொல்ல தான் இங்க எல்லாரையும் ஒன்னா வரவழைச்சது. ஸ்வீட்ஸ், கேக்ஸ் எடுத்துக்கோங்க.” என்று மேத்யூவிடம் நின்று கூறினாள்.
“ஏ… மெர்ஸி அண்ணி.. சேட்டா.. கங்கிராட்ஸ்” என்று மேத்யூவை கட்டி பிடித்தாள்.
மரியம் கூட “வீட்டில் சொல்லியிருந்தா நாம ஏதாவது செய்து கொண்டு வந்திருக்கலாமே” என்று ஆனந்தப்பட்டார்.
அந்தோனியும் கூட, “என்னடா மேத்யூ.. அங்கன விட்டு இங்க.? நம்ம வீட்டுக்கு சம்பத்தியை அழைச்சி விருந்து வச்சியிருக்கலாமே.” என்று கூறினார்.
“அவதான்பா எல்லாரிடமும் ஒரே நேரத்துல சொல்வோம்னு சொன்னா. அத்தை மாமா சார்லஸ் நம்ம வீட்டுக்கு வருவதை காட்டிலும். நாம வந்துட்டா ஈஸியா இருக்கும்னு சொன்னா.” என்று கூற, அந்தோனி மர்யம் மகனை அணைத்து கொண்டார். கூடுதலாக மர்யமோ “என்ட மோளே.. என்ட வீட்டுக்கு வாரிசு வருது.” என்று மெர்ஸியை அணைத்து விடுவித்தார்.
சாராவுக்கு அன்னை மெர்ஸியை கட்டி அணைத்ததும், சுயம் வந்தடைந்தவள் மெர்ஸிக்கு அவள் பங்கிற்கு அணைத்தாள்.
“சேச்சி… ரொம்ப சந்தோஷமாயி…”
அவள் குரல் ஆனந்தத்தில் இருந்தது. அந்த நேரம் நிர்மலா மெதுவாக தாயின் பூரிப்பை உணர்ந்தவராக, மகளை முத்தமிட்டார்.
“கர்த்தர் உன்னை ஆசிர்வதித்துவிட்டார்” என்றவர் பார்வை நேரா சாராவை தட்டியது.
“மெர்ஸி…” என்று அழைத்தவர், சாராவை பார்த்து, “இனி நீ கவனமா இருக்கணும். இப்ப தான் ஆரம்பம்.” பிறகு சாராவை நோக்கியபடியே “ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில
பூரிக்க வேண்டிய தருணம்.” சாரா புரியாம பார்த்தாள்.
“மனைவி ஆவதும் ஒரு பக்கம், அது ஈஸி தான். அம்மாவா ஆவதும் தான் முழுமை.” என்று ஈட்டி போன்ற வார்த்தையால்
சாராவின் நெஞ்சில் குத்தினார்.
சார்லஸ் முகம் மாறியது.
“அம்மா” என்று சார்லஸ் கூப்பிட,
“நான் உண்மையைத்தான் சொல்றேன் சார்லஸ். கல்யாணம் என்பது யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கும். இரண்டு பேர் புருஷன் பொண்டாட்டி என்று ஒரே வீட்ல வாழறது எல்லாம் ரொம்ப எளிதா இருக்கும். கடவுள் ஆசி என்பது முழுமையான தாய்மையால தான் வரும். அது வரம்.” என்று நிர்மலா நிறுத்தவில்லை.
“ஒரு வீட்டுக்கு வாரிசு கொடுக்கறதுக்குத்தான்
மருமகள். என்னங்க சம்பந்தி” என்று மரியத்தை வேறு கூட்டு சேர்க்க ஆரம்பித்தார். ஆமென்றோ இல்லையென்றோ கூறமுடியுமா?
மரியம் மகளை மருமகளை இருவரையும் பார்வையிட்டார்.
சாரா அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள். மீண்டும் மீண்டும் நிர்மலா வார்த்தை ஒலித்தது.
“கடவுள் ஆசி என்பது முழுமையான தாய்மையால தான் வரும். அது வரம்”
அந்த வார்த்தை… இந்த முறை மெதுவாக ஆழமாக குத்தியது.
மெர்ஸி தற்போது அதிர்ந்தாள். தனது சந்தோஷத்தை இங்கே இரு வீட்டார் முன்னிலையில் பகிர விரும்பினால், அன்னை தன்னை வைத்து சாராவை அம்பு எய்வதை கண்டு மேத்யூவை கண்டு அஞ்சினாள்.
அதற்குள் சார்லஸ் குரல் கடினமேறியது. “அம்மா… போதும். இது தேவையில்லாத பேச்சு. மெர்ஸிக்கு வீட்டில் செய்யற பலகாரம், கேக் ஸ்வீட்னு செய்யுங்க.” என்று அதட்ட முற்பட்டான்.
“அம்மா… நான் சந்தோஷமா பகிர வந்தேன். நீங்க ஏன் சாராவை காயப்படுத்தறிங்க. மேத்யூ இருக்கார், அத்தை இருக்காங்க. பார்த்து பேசுங்க.” என்று சபை நடுவே அன்னையை நாசூக்காய் அடக்க நினைத்தாள். தனியாக இருந்தால் அன்னையை திட்டியிருப்பாள்.
நிர்மலா மகளை நாசூக்காய் குத்துவது புத்திக்கு உரைக்கவில்லை. மாறாக மருமகள் கர்ப்பம் அடைந்ததை புகழ்வதாக எண்ணிக்கொண்டார் மர்யம்.
சாரா சார்லஸின் கையை மெதுவா பிடித்தவள், “அத்தை சொல்றது… தவறில்லையே… ஒரு பெண் பிறக்கும் பொழுது கால் வாசியும், பூப்பெய்திய பொழுது பாதி பெண்ணாகவும், விவாகம் நடக்கறச்ச முக்கால் வாசியும், கர்ப்பஸ்திரி ஆகறச்ச முழு பெண்ணாகவும் மாறுவதாக கேள்விப்பட்டு இருக்கேன்.” என்று சமாளிக்கும் விதமாக அவள் சொன்னாள். அதனாலோ என்னவோ இந்த உள்குத்து அங்கிருப்பவருக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோணத்தை தந்தது.
கூடவே சார்லஸை பார்வையிட்டு “ஒவ்வொரு பெண்ணுக்கும்…
அந்த ஆசை இருக்கும். டாக்டர் சாரே.” என்றவள் சிரிக்க முயன்றாள். ஒவ்வொருத்தரும் மெர்ஸியை கவனித்து நிலைமையை சமாளிக்க முயல, சார்லஸோ சாராவையே பார்வையிட்டு நின்றான்.
“எனக்கும் இருக்கு சாரே.” என்றவளின் பேச்சு அவளது இதயத்தை வெளிச்சத்துல வைத்தது. சார்லஸ் சாராவின் கண்ணை பார்த்தான்.
அவன் கண்களில் கோபம் இல்லை… லேசான வலி பிறந்தது. சாராவின் ஆசையை தீர்த்திடும் வழியறியாத வலி.
சார்லஸ் முகம் வாடவும் அதை கண்டு அவளது விரல்கள் சின்னதாய் நடுங்கின.
அவள் மெதுவாக “நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வாரேன்” என திரும்பி நடந்தாள்.
ஒவ்வொரு அடியும் கடினமா இருந்தது. சார்லஸ் சாரா முன்பிருந்த அறைக்கு வந்து நின்றதும் அவள் கைகளை மேசை மேல் வைத்தாள். சுவாசம் கூட சீராக வரவில்லை.
அவளது வயிற்றில் கையை வைத்து, எதிரேயிருந்த கர்த்தர் முன் “கர்த்தரே… இன்னமும் என்னிடம் எந்தா குறை?” என்ற வலியுடன் உள்ளத்திலிருந்து அழுதாள்.
வெளியில்… மெர்ஸி இன்னும் மகிழ்ச்சியோட துகிராவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள். தன் தோழியிடமும் அடுத்து தனது கர்ப்பத்தை கூறும் ஆவல்.
நிர்மலா நக்கலாய் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரே நாளில் நிகழ்ந்த திருமணம், தனது மகள் உண்டாகி தனக்கு சந்தோஷத்தை ஈட்டி தந்துவிட்டாள். வீட்டுக்கு வந்தவளோ இன்னமும் புழு பூச்சியை சுமக்கவில்லையே என்ற நக்கல் சிரிப்பு. ஒன்றை மறந்து போனார்… அங்கே தனது மகன் வலியுடன் கடந்து சென்று மருமகளை நாடுவதை.
சார்லஸ் உள்ளே வந்தான்.
சாராவை பார்த்ததும், எதுவும் கேட்கவில்லை.
சாராவின் தோளில் கையை வைத்தான். சாரா திரும்பி பார்த்தாள். அந்த ஒரு பார்வை…
அவள் எதையும் மறைக்க முடியவில்லை.
“சாரா…” அவன் மௌனமாய் அழைத்தான்.
“நான் ஃபைன் டாக்டர் சாரே…” என்று சமாளித்தாள்.
சார்லஸ் மெதுவா மறுப்பாய் தலையசைத்தான். “பொய் சொல்லாத சாரா.” என்றான்.
சாரா கண்களில் இருந்து கண்ணீர் உடைந்தது.
“என்னடா…” என்று தாடை பிடிக்க, “என்னால கர்ப்பஸ்திரியாக முடியாதா டாக்டர் சாரே. எனிக்கு அந்த கொடுப்பினை இல்லையா?” என்று கேட்டாள்.
அவள் குரல் கிட்டதட்ட உடைந்தது.
“நான்.. நான் ஒரு நார்மல் லைப்பிற்கு சரியானவளா இருக்க முடியாதவளா…?” என்றாள்.
சார்லஸ் உடனே அவளை அணைத்தான்.
“ஹேய்… ஸ்டாப் இட் சாரா.” என்று இப்படி பேசாதே என்றான்.
சாரா தனது மனகாயத்தை நிறுத்தாமல், “அவங்க சொன்னது தப்பில்ல டாக்டர் சாரே…
ஒரு வீட்டுக்கு குழந்தை வேணும். நிங்களுக்கு நான் வாரிசு பெற்றுத் தரணும்ல்லே.” என்றாள்.
சார்லஸ் அவளது முகத்தை பிடித்து திருப்பினான். “எனக்கு என்ன வேணும்னு தெரியுமா சாரா?” என்று சார்லஸ் கேட்க சாராவிடம் மௌனம்.
“எனக்கு இந்த உலகத்துல நீ மட்டும் தான் வேண்டும். உனக்கு அடுத்து தான் மத்தது எதுன்னாலும். அது நம்ம குழந்தையாவே இருந்தாலும்.” என்றவன் குரல் உறுதியா இருந்தது.
“நம்ம வாழ்க்கை முழுமையானதாக ஆகணும்னு யாராவது வெளியில இருந்து ஏதாவது சொல்ல முடியாது. அவங்க அவங்க வாழ்க்கையில எது முழுமைனு அவங்க மனசுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றவனை அமைதியாக பார்த்தாள்.
“நமக்கு குழந்தை வரும்…
இல்லை வராம கூட இருக்கலாம்…
ஆனா அதுனால நீ குறைவானவளா ஆக மாட்டே சாரா. ஒன்னை புரிந்துக்கோ.. ஒரு பொண்ணு வளர்ந்து கல்யாணமாகி குழந்தை, குடும்பம் என்ற கட்டமைப்பு மட்டும் தான் வாழ்க்கை இல்லை. கணவன் மனைவி புரிதல் தெளிவு இதெல்லாம் கூட முழுமையாகும்.
யோசித்து பாரு… ஒருவேளை குழந்தை குட்டினு வாழ்ந்து அவங்க பிறந்து, வளர்ந்து எப்படியும் அவங்க அவங்க துணையோட கல்யாணமாகி செட்டிலாகறாங்க.
அப்படியிருக்கறப்ப மறுபடியும் கணவன் மனைவி மட்டும் தான் கடைசிவரை இருப்பாங்க. சோ… குழந்தை இல்லாம நீ நான் இருந்தாலும் அதே நிலை தானே.?!
இதுக்கு ஏன் இந்த உலகம் கல்யாணமான ஒரு பொண்ணை அல்லது ஆணை அழுத்தம் தந்து குழந்தை மட்டும் தான் முழுமைனு பதியவைக்கணும்.
அவங்க அவங்க லைப்புக்கு எது தேவைனு அந்த கர்த்தர் முடிவு செய்வார் சாரா.” என்றான்.
சார்லஸ் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும், சாரா இதயத்துக்கு மருந்து மாதிரி இருந்தது.
ஆனாலும் வலி இன்னும் இருந்தது.
அவளொன்றும் சார்லஸை போல மனோதத்துவ படித்தவள் அல்லவே.!
சாரா மெதுவாக சார்லஸ் மார்பில் சாய்ந்தாள்.
அறைக்கு வெளியில்.. ஹாலில்…
சிரிப்புகள். குழந்தையை பற்
றிய பேச்சுகள் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது.
சார்லஸின் முன்பிருந்த அறைக்குள்ளே… சாரா தன் மனதின் வலிமையை மீண்டும் தேடிக் கொண்டிருந்தாள்.
-தொடரும்.
