அத்தியாயம்-27 (Final)
“நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2
“கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5
After Few Years
சர்ச் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்த கிறிஸ்மஸ் கீர்த்தனையின் இசை, அந்த குளிர்ந்த டிசம்பர் நள்ளிரவை இன்னும் புனிதமாக மாற்றியது.
கேரளாவின் அந்த பழமையான தேவாலயம், இன்று முழுக்க வண்ண நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிவப்பு-பச்சை ரிப்பன்கள் வாசலில் தொங்கியிருந்த பெரிய கிறிஸ்மஸ் ஸ்டார், சிறு குழந்தைகள் சாண்டா தொப்பி அணிந்து ஓடி விளையாடுவது, மெழுகுவர்த்தியின் வாசனையோடு கலந்த அப்பம், வைன் மணம் அனைத்தும் சேர்ந்து, ‘கிறிஸ்மஸ்’ வந்துவிட்டதை பறை சாற்றியது.
“அம்மே… எனிக்கு சாண்டா கிப்ட் தர்றில்லா.. அங்கன எல்லாருக்கும் தந்து” என்றது சின்ன குரல்.
சாரா கீழே குனிந்து பார்த்தாள்.
வெள்ளை ஃப்ராக்கில், சிவப்பு ரிப்பன் கட்டிய முடியில், கண்கள் முழுக்க குறும்போடு சிறு கோபத்துடன் நின்றிருந்தாள் நான்கு வயது ‘ரேச்சல் சார்லஸ்’.
“அச்சோ… சாண்டா எதுக்கு என்ட ரேச்சல் குட்டிக்கு கிப்ட் தர்றில்லா. நீ நம்ம அச்சனிடம் கேளு. என்றாள் சாரா.
“அச்சனிடம் கேட்டால் எனிக்கு இபிரபஞ்சத்தை முன்ன கொண்டு வரும். பட்சே… எனிக்கு சாண்டா கிப்ட் முக்கியம்” என்றாள்.
“என்ட ரேச்சல் குட்டி” என்று பின்னால் வந்த சார்லஸ், மகளை தூக்கிக் கொண்டான்.
“அச்சா… நிங்கள் தான் சாண்டாவா?” என்று வாயை பிளந்து சாண்டாவை நோக்கினாள் ரேச்சல். குட்டி குட்டி கண்ணில் அத்தனை சுவாரஸ்யமான ஆர்வம்.
“பின்னே… ரேச்சல் குட்டி கண்டுபிடிக்கலையா?” என்று கேட்டான்.
“இல்ல அச்சா” என்று கூற, சாண்டாவாக இருந்த நேரம் தரும் பரிசை நீட்டினான்.
“இங்கிருக்கற குழந்தைகளுக்கு இன்னிக்கு மட்டும் சாண்டா கிப்ட் தருவார். ஆனா ரேச்சல் குட்டிக்கு மட்டும் இந்த சாண்டா டெய்லி கூட கிப்ட் தரும்.” என்றவன் மகளின் நெற்றியில் முத்தமிட்டான்.
அந்த காட்சியை பார்த்த சாரா, ரேச்சல் பிறந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டதை நம்ப முடியாமல் நின்றாள்.
ஒரு காலத்தில், குழந்தை இல்லாத வெறுமையை நினைத்து அமைதியாக அழுதவள். இன்று, தன்னையும் சார்லஸையும் இணைத்துக் கொண்டு சிரிக்கும் உயிரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சாரா…” அழைத்தபடி அருகே வந்தார் மரியம். முடியில் வெள்ளை முடி இன்னும் அதிகரித்திருந்தாலும், முகத்தில் இருந்த அமைதி மாறவில்லை.
“அம்மே…” என்று சாரா மகிழ்ந்து அடைத்தாள்.
” நாங்க நாளைக்கு வயநாட்டுக்கு கிளம்பறோம் மொளே… கிறிஸ்மஸ் ஊழியம் இருக்கு.” என்றார்.
“இவ்வருஷமும் போறீங்களா?” என்றதும், “ஆம்” என்று சிரித்தார் அந்தோனி.
“அங்க மலைப்பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு டிரஸ் கேக் பைபிள் எல்லாம் கொண்டு போறோம். கிறிஸ்மஸ் சர்விஸ் முடிஞ்சதும் புட் டிஸ்டிரிபியூஷேன் கூட இருக்கு” என்றார் மரியம்.
அந்தோனி மரியம் இருவரும் மகன் மேத்யூவுக்கு மெர்ஸியை மணமுடித்து ரோஷன் பிறந்தப்பின்னரும், சாரா-சார்லஸுக்கு ரேச்சல் பிறந்தப்பின், சில நாட்களாக ஊழியத்துக்காக வேற ஊர் சென்று வருகின்றார்கள்.
கேரள கிறிஸ்தவ குடும்பங்களில், சிலர் சர்ச் மினிஸ்ட்ரக, சாரிட்டி சர்வீஸ், மிஸ்ஸன் வொர்க செய்வது சாதாரணமான ஒன்றே.
மரியம் மெதுவாக ரேச்சலை தூக்கிக் கொண்டார்.
“என்ட அம்மு குட்டி… இதென்ன கிறிஸ்மஸுக்கு முந்தைய டிரஸோ. கிறிஸ்மஸுக்கு என்ன கலர் வாங்கியிருக்கு?” என்று கேட்டார்.
“ரெட்!” என்று சிரித்தாள் குழந்தை.
அந்த நேரத்தில், சர்ச் மணி மீண்டும் ஒலித்தது. அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.
மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. சிறு சோர், குழந்தைகள் முன்னே நின்று பாட ஆரம்பித்தனர் “சைலன்ட் நைட் ஹோலி நைட்” சாரா மெதுவாக கண்களை மூடினாள். சார்லஸ் சாண்டா உடையில் தான் சாரா அருகில் நின்றிருந்தான். அவர்களின் நடுவில் ரேச்சல். பாதர் ஜெபிக்க ஆரம்பித்தார்.
“பரமபிதாவே… இந்த புனித இரவில், உமது மகனின் பிறப்பை நினைத்து நாங்கள் மகிழ்கிறோம். உடைந்த குடும்பங்களுக்கு சமாதானம் தாரும்… காயமடைந்த இதயங்களுக்கு ஆறுதல் தாரும்… அன்பில்லா இடங்களில் அன்பை நிரப்பும்… இந்த கிறிஸ்மஸ், எங்கள் வீடுகளில் மட்டும் அல்ல… எங்கள் இதயங்களிலும் பிறக்க அருளும் கர்த்தாவே… ஆமென்.”
“ஆமென்…” என்று சர்ச் முழுக்க ஒலித்தது.
ஜெபம் முடிந்ததும், முன்னால் நின்றிருந்த நிர்மலா மெதுவாக திரும்பிப் பார்த்தார்.
அவரது பார்வை நேராக
ரேச்சலை தேடியது.
“ரேச்சல் அச்சம்மாவிடம் வருவியா?” என்றதும் குழந்தை உடனே சாராவை பற்றிக் கொண்டாள்.
“இல்லா… நான் அம்மயோட போயிக்கும்” என்று முதலில் மறுத்தாள்.
நிர்மலா முகத்தில் ஒரு நொடியில் ஏமாற்றமடைந்தது.
அதை கவனித்த சாரா, மகளை மெதுவாக கீழே இறக்கினாள்.
“போ மொளே… அச்சம்மா விளிக்குதன்னே.” என்றதும் தான் ரேச்சல் ஓடி சென்று நிர்மலாவை கட்டிப்பிடித்தாள்.
சாராவின் இந்த பெருந்தன்மையான மனதால் நிர்மலாவின் கண்கள் கலங்கியது.
ஒரு காலத்தில் ஆசையாக மகனுக்கு மணமுடித்து வைத்து, யாரோ ஏதோ சொன்னதும், ‘பைத்தியக்காரி, குழந்தை இல்லாதவள்’ என்ற பட்டம் தந்து காயப்படுத்தி, மகனை அவளிடமிருந்து பிரிக்க முனைந்து, தீப்பார்வையால் வேதனைக்குள்ளாக்கி பார்த்த சாராவின் மகள் ரேச்சலை, இன்று, உயிரை விட மேலாக கைகளில் தழுவிக் கொண்டிருந்தார்.
என்ன தான் மகள் மெர்ஸியின் மைந்தன் ரோஷன் மீது அன்பு செலுத்தினாலும், சார்லஸ் மகள் மீது கூடுதல் ப்ரியம் உண்டு நிர்மலாவுக்கு. சொல்லப்போனால் ரேச்சல் தான் உலகமாக பாவிக்கின்றார்.
சாராவுக்கு நிர்மலாவை தண்டிக்க மனமில்லை. என்ன இருந்தாலும் சார்லஸ் பெற்றெடுத்த பாக்கியவதி. அதிலும் விவாகம் ஆனப்பின் தன்னை அன்பாக தானே கவனித்தார். ஹனிமூனுக்கு சாராவை சார்லஸ் அழைத்து போக கூறி முதலில் சார்லஸிடம் நச்சரித்தே அவர் தான்.
இதில் சார்லஸ் பேஷண்ட் என்று ஒடிய போதும், கல்யாணம் ஆகறப்ப இதே போல ஓடின. இப்பவும் ஓடறியே. முதலில் சாராவை கவனி என்று கூறியவரும் நிர்மலா தான்.
ஸ்டெல்லாவிடம் போன் பேசியதும், அனைத்தும் மாறிவிட்டார். சாரா மனதை நோகடித்தார். என்னயிருந்தலும் மகனுக்கு ஏதேனும் குறையுடன் மருமகளை பார்த்துவிட்டோமே என்று தாயுள்ளம் பதறுவது இயற்கை என்ற கண்டோட்டத்தில் மன்னித்து விட்டாள்.
மன்னிப்பை தருவதில் சாரா ஒன்றும் பாதிப்படைய போவதில்லை. கர்த்தரே ‘மன்னிப்போம் மறப்போம்’ என்று தானே அறிவுறுத்திகின்றார்.
நிர்மலா பேத்தி ரேச்சலிடம் “குளிர் அடிக்குது… ஷால் போடு…” என்று ரேச்சலை சுற்றிய போர்வையை சரி செய்தார் நிர்மலா.
பின்னர் மெதுவாக சாராவை பார்த்தார்.
“சாரா… இன்று சர்வீஸ் முடிஞ்சதும்… நீங்களும் ரேச்சலும் நம்ம வீட்டுக்கு வரணும்.” என்று கட்டளை இல்லை அழைப்பு விடுத்தார். இந்த அன்போடு அழைப்பு சாரா மணமாகி வந்த போது கிடைத்த மரியாதை. இன்று அதை திருப்பி தர வைத்திருக்கின்றான் சார்லஸ்.
“வரன் அம்மே” என்று அவளும் பழைய நிகழ்வை மறந்து கூறினாள்.
சார்லஸ் அந்த காட்சியை பார்த்துக்கொண்டே நின்றான்.
அவன் வாழ்க்கையில் முக்கியமான இரண்டு பெண்கள்,
இன்று, ஒரே இடத்தில் நின்றிருந்தார்கள்.
மெர்ஸி அருகே நின்று சிரித்தாள்.
“அம்மே… இப்ப இந்த வீட்டுல நாங்க இரண்டாம் பட்சம் தான். அச்சம்மாக்கு உயிரே ரேச்சல் மட்டும் தான்.” என்று ரேச்சலை காட்ட, நிர்மலா உடனே மறுக்கவே இல்லை.
ரேச்சலை இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்.
வெளியே, கிறிஸ்மஸ் நட்சத்திரம் ஒளிர்ந்தது. சர்ச் மணி மீண்டும் ஒலித்தது. சாரா மெதுவாக சார்லஸின் தோளில் சாய்ந்தாள்.
“டாக்டர் சாரே” என்று கிசுகிசுப்பாய் அழைத்தாள்.
“ஹ்ம்?” என்றான்.
“எனிக்கு இப்போ எப்படியிருக்கு தெரியுமா? இ பிரபஞ்சத்தில் நான் தான் பாக்கியசாலி. எத்தினி ஆனந்தமாய் இருக்கேன் அறியுமோ?
நான் குழந்தை வரத்தை தேடி ஓடில்லா… நிங்களோட காதலை பிடிச்சிட்டு நடந்தேன்” என்றாள்.
சார்லஸ் மெதுவாக அவள் கையை பிடித்தான். “அதான்… இப்ப நம்ம காதல்… நமக்கு முன்னாடி ஓடி விளையாடுது.” என்று தொலைவில், ரேச்சலை பார்வையால் சுட்டிக்காட்டினான். ரேச்சல் அங்கே நிர்மலா மோஸஸ் இருவரின் அரவணைப்பில் கலந்து சிரிப்பது ஒலித்தது.
சார்லஸ் சாண்டா உடையலங்காரத்தில் இருந்தாலும், சாராவிற்கு ‘பிரியமானவரே என் தேவதூதனே’ என்று இதயத்திற்கு நெருக்கமாய் பார்த்தவளாக, கைகோர்த்து நடந்தாள். சாரா சார்லஸ் வாழ்க்கையும் கர்த்தர் அருளால் முழுமைப் பெற்றிருந்தது.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
ஏதேனும் தப்பும் தவறுமாய் மலையாளம் அல்லது கிறிஸ்துவரின் லாஜிக் மீறிய வசனம் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். எடிட் செய்யப்படும். மற்றபடி சரியா இருந்தால் அதையும் தெரிவிக்கவும். எனக்கு ஆனந்தமாய் இருக்கும்.
கதை பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுக்கு தோழிகளுக்கு பகிருங்கள்.
1.கிறிஸ்டியன் காதல் கதை
2.பிடிக்காத திருமணம்
3.ஆப்டர் மேரேஜ் லவ் ஸ்டோரி
4.Feel Good Story
5.Decent Love story
6. Family+ Entertainment
மேலும் உங்களுக்கு தோன்றும் பகிர கூடிய வகையில் கதை இருந்தாலும் கதை கேட்பவருக்கு பகிரலாம்.

Wonderful story sis. Especially u have mentioned many details about psychology about human beings in a detailed manner. Very good and feel.good story sis. Charlaes lovable hubby. Sara very innocent wife. Good family story sis. Malayalam slang also very good while reading it sis. Keep rocking sis.