Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

அத்தியாயம்-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   பராதியோ “அம்மா காபி டீ கொடுத்திங்களா” என்று கேட்க, “ஆஹ்… கொடுத்தாச்சு பாரதி” என்றார் ஆர்வமாக.

  “குட்… நாளைப்பின்ன டீ காபி கூட கொடுக்கலைன்னு பேச்சு வரக்கூடாது.

  உதய்… நீ அவசரப்பட்டுட்ட.. என்னிடம் பேசியிருந்தா..
நான் நிச்சயம் உன் லவ்வுக்கு…. நோ சொல்லிருப்பேன். ஆமா உதய்… நான் நோ தான் சொல்ல போறேன். நீ உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து இங்க சங்கடப்படாம போயிருப்ப.” என்று கூறவும் உதய் தன் காதலுக்கு பாரதி மறுக்க மாட்டாள். அதுவும் அவளது தாய் தந்தையர் இந்தளவு வரவேற்று அமர வைத்து உபசரித்ததில் மறுக்க வழியில்லை என்று நினைத்தான்.‌

  ஆனால் பாரதி பேசவும் அதிர்ச்சியடைந்தான்.‌
அவன் மட்டுமா… சௌந்திரராஜன் மணிமேகலையும் கூட.

  “ஏன்… என்ன காரணம் பாரதி. நான் நல்லா அழகா இருக்கேன். நம்ம ஆபிஸ்ல நீ 40 ஆயிரம் சம்பாதிக்கற. நான் உன்னை விட 75 ஆயிரம் சம்பாதிக்கறேனே.

  ஒரே ஆபிஸ்.. நல்ல அன்டஸ்டாண்டிங் இருக்கும். நம்ம பேரண்ட்ஸ் கூட சப்போர்டிவா இருக்காங்க. பிறகு ஏன்?” என்றான்.

“பிகாஸ் நான் ஒருத்தரை விரும்பறேன்.” என்று தலைகுனிந்தாள்.

“நம்ம ஆபிஸ்லயா?” என்று கேட்க மறுப்பாய் தலையாட்டினாள்.

  “காலேஜ்..” என்று கேட்க அதற்கும் மறுத்தாள்.

“ஸ்கூல்லயா? சைல்ட்வுட் பிரெண்ட்? இல்லை நெய்பரா?” என்று கேட்க, பாரதி உதட்டில் சிறு முறுவல் வந்து ஒட்டிக் கொண்டு, கொஞ்ச காலத்துக்கு நெய்பரா இருந்தார்” என்றுரைத்தாள்.

சௌந்திரராஜனோ பாரதி பிறந்ததிலிருந்து இந்த வீட்டில் தானே இருக்கின்றோம். இங்க யார்? என்று முழித்தார்கள். அப்படியென்றாலும் கல்யாணம் செய்தால் சரிதான் என்று அமைதியானார்.

   “ஐ அம் சாரி பாரதி. தப்பு பண்ணிட்டேன். நம்ம ஆபிஸ்ல உன் பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் நீ யாரையாவது லவ் பண்ணறியானு கேட்டுட்டு தான் முடிவு செய்தேன். நீ யாரையும் விரும்பலைனு சொன்னாங்க. ஐ அம் ரியலி ரியலி சாரி பாரதி.” என்றான்.

  மணிமேகலையோ மகள் யாரை காதலிப்பதாக சொல்கின்றாள் என்று, ஒரளவு யூகித்திட, கணவரிடம் முன்பே காதில் போட்டு வைக்காத மடத்தனத்தில் கையை பிசைந்து நின்றார்.

  “நான் விரும்பறது யாருக்கும் தெரியாது. ஏன்னா… நான் இப்ப தான் காதலிக்கறேன். என் காதலை நான் காதலிக்கறவரிடமும் கூட சொல்லலை.

   அவரிடம் சொல்லாததால நான் என்‌ பேரண்ட்ஸ்கிட்டயும் என் பிரெண்ட்ஸ்கிட்டயும் ஷேர் பண்ணலை.” என்றாள்.

 உதயின் தாய் தந்தையரை பார்த்து “அங்கிள் ஆன்ட்டி… ஐ ரியலி சாரி. நான் உதயை நிராகரிக்கறேன்னு தப்பா நினைக்காதிங்க. உதய் ரொம்ப நல்ல பெர்ஸன். ஆனா அவனுக்கு லைஃப் பார்ட்னர் நான் இல்லை. உங்க பையனுக்கு என்னை விட ஃபெட்டரா, நல்ல பொண்ணா, அழகான பொண்ணா அமையும். நான் ஃப்ரே பண்ணறேன். பட் நான் அவன் காதலுக்கு சம்மதிக்கலைன்னு மட்டும் என்னை தப்பா எடுத்துக்காதிங்க ப்ளீஸ்.

   ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டு, நிறைய சம்பவத்தை மறந்து, இந்த நிலைக்கு வந்து நிம்மதியா நிற்கறேன். ஏதாவது சாபம் கீபம் கோபம்னு தந்துடாதிங்க.” என்று உதயின் அன்னை கையை தீண்டினாள்.

  அவர்களோ பாரதி வந்ததிலிருந்து பேசாமல் மகன் முதலில் பேசட்டுமென காத்திருக்க, பாரதி இப்படி பேசியதும், மனம் தாளாமல், “அச்சோ… நீயேன்மா மன்னிப்பு கேட்கற. உதயிடம் நீ ஒருமுறை காதலிச்ச பெண்ணிடம் சம்மதம் வாங்கிட்டு எங்களை கூட்டிட்டு போடானு சொல்லியிருக்கணும். இது எங்க மிஸ்டேக் தான். இல்லிங்க” என்று அவரது கணவரிடமும் கேட்க, “சாரிம்மா… உதய் கிளம்பலாம்” என்று அவர் கூற, “அங்கிள் என்‌மேல கோபமில்லையே?” என்றாள்.

“நோ மை சைல்ட்” என்றார் உதய் தந்தை.
  “கடவுள் உனக்கு நல்ல எதிர்காலத்தை தரட்டும். உதய் பேசிட்டு வா” என்று மகனிடம் உதய் அன்னை பேசியவர், பாரதி பெற்றவர்களிடம், “சம்பந்தியாக முடியலை. எனிவே… பாரதி காதலை ஆதரியுங்க. நைஸ் டூ மீட்யூ” என்று‌ நாகரிகமாக கூறி விடைப் பெற்றனர்.
  உதய் மட்டும், “அவர் பெயர் என்ன?” என்று கேட்க பாரதியோ தாய் தந்தையரை பார்த்து, ”சரவணன்.” என்றாள்.

    “சரவணனை ஒரு நாள் அறிமுகப்படுத்து. நான் கிளம்பறேன். வர்றேன் அங்கிள் வர்றேன் ஆன்ட்டி” என்று உதயும் புறப்பட்டான்.

  பாரதி தயக்கமாய் மணிமேகலை முன் வந்து நின்றாள்.

  சௌந்திரராஜனுக்கு இன்னமும் சரவணன் தன் வீட்டில் மகளை விட்டு சென்றவன் என்று மட்டும் தெரியும். ஆனால் துப்புரவு தொழிலாளி என்று தெரியாது. அதோடு மகள் மருத்துவமனையில் இருந்த நேரம் போலீஸ் துப்புரவு தொழிலாளரை காட்டி இவங்க தான் காப்பாற்றியது என்று சுட்டி காட்டும் போது சரவணனை சரியாக பாராது கலாவை தான் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

  அந்த நேரம் விழி நிமிர்த்தி அங்கிருந்த ஆண்மகனான சரவணனை காண கூசியது. மகள் இருந்த கோலம் அப்படியாயிற்றே.

மணிமேகலையோ உதய் வீட்டு ஆட்கள் குடித்த டம்ளரை கோபமாய் எடுத்து சிங்கில் ‘டம்டொம்’மென்று போட்டார்.

“மணிமேகலை… என்ன சத்தம்? பொண்ணு காதலிக்கற விஷயம் உனக்கு முன்னவே தெரியுமா?” என்று மனைவி உருட்டலுக்கு காரணம் இதுவாக இருக்குமென கேட்டார்.

“அன்னிக்கு உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பையன் தான் சரவணனாம்மா?” என்று சௌந்திரராஜன் கேட்டார். 

   பாரதி என்னவென்று சொல்வாள்? அவள் நிலையை ஊரார் அறிந்தால் வீட்டு படியேறி பொண்ணு கேட்க மாட்டார்கள். ஆனால் தனக்கு நடந்ததை தந்தை புதைத்து வைக்க, இன்று உதய் பெண் கேட்க வந்துவிட்டான்.
ஒருவிதத்தில் பாரதி அதிர்ஷ்டசாலி. இந்த நிலையிலும் நான் நீ என்று போட்டி வந்துள்ளதே. ஆனால் நடந்த தவறில் துளியும் தன் பங்கு இல்லாத பட்சத்தில் அவள் இன்றும் அதிர்ஷ்டசாலி கற்புக்கரசியே‌! அதை விவரம் தெரிந்தவர்களுமா அறிவார்.
பாரதி எச்சிலை கூட்டி விழுங்கி மனதை தயார் செய்து, “என்னை ரஞ்சித் கெடுத்து குப்பையில் போட்டர்லப்ப… அந்த குப்பையிலிருந்து என்னை கவனிச்சு ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்தவர். என் உயிரை காப்பாத்தியவர். எனக்கு இந்த உலகத்தில் மறுபிறவி எடுக்க காரணமாயிருந்தவர்” என்று எடுத்ததும் அவன் யார் என்றும், தன்னை எந்த நிலையிலிருந்து காப்பாற்றினான் என்றதையும் நாசூக்காய் கூறியிருந்தாள்.

   சௌந்திரராஜன் அதிர்ந்தவர் மணிமேகலையை கண்டார். அவர் தானே சரவணன் வீட்டுக்கு சென்று வந்தார்.

  தந்தை தன்னையே காணவும் பாரதி தொடர்ந்து “நான் எந்தவிதமான மனநிலையில் வீட்டை விட்டு போனேன்னு உங்களுக்கு தெரியும். அப்படி நான் எதையுமா யோசிக்காம போனப்ப சரவணன் வண்டில தான் மறுபடியும் விழ பார்த்தேன்.” என்று அன்று மணிமேகலையிடம் கூறியது போலவே, இன்று தந்தையிடம் அவன் மூலமா தான் போலீஸ் ஸ்டெஷன் சென்று ஆதாரம் இல்லாது திரும்பி வந்து, தனியாக வீடெடுத்து தங்கியது, அந்த வீட்டிற்கு பக்கத்தில் சரவணன் இருந்ததும், அங்கிருந்தே வேலைக்கு சென்றதும், அனிதா விமலா இவர்களது அறிமுகம்.

  மேலும் ரஞ்சித்தின் காரை கண்டு அவன் வீட்டை தேடி சென்று அவன் அன்னை தந்தை தங்கை என்று இருந்த பொழுது தன் மனக்குமறலை கொட்டி திட்டி தீர்த்ததும் உரைத்தாள்.

அதன் காரணமாக தான் அவன் நல்லவனாக வீடு தேடி வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மணக்க கெஞ்சியது.

   இதுல ஆனந்தராஜ் வந்ததையும் உரைத்துவிட்டு, இங்கு வந்த கதையை கூறினாள்.
கூடவே அவன் வீட்டிற்கு அன்னையுடன் சென்று வந்தப்பொழுது அவன் அம்மாவும் சரவணனும் பேசியதையும் உரைத்தாள்.

  சில நாட்களுக்கு முன் ராட்சத இயந்திரம் மேலே விழும் நேரம் காப்பாற்றி இழுத்து பேசியதையும் உரைத்தாள்.

அனைத்தையும் கேட்டு சௌந்திரராஜன் மௌனம் சாதிக்க, மணிமேகலையோ, “ஏன் பாரதி… உன்னை பத்தி தெரிந்துக்கிட்ட பிரஷாந்த், திரும்ப வந்து மணப்பதா சொன்னப்ப வேண்டாம்னு மறுத்த. சரி…. அவன் ஒரு பொண்ணோட இருந்ததை உன்னிடம் முதல்ல சொல்லலை. நீ ரஞ்சித்தால் கெடுக்கப்பட்டவனு தெரிந்தும் பிறகு சொன்னான். அப்ப ஏதாவது பிற்காலத்தில் சண்டை வந்தா உன்னை வாயுக்கு வந்தபடி பேசலாம்னு சொன்ன.
ரஞ்சித் வந்தப்ப கெடுத்தவனையே எப்படிம்மா கல்யாணம் செய்யனு சொன்ன.
  கரெக்ட் தான்‌, உன்னை அவனுக்கே கல்யாணம் செய்து வைத்தா பிறகு, பிடிச்ச பொண்ணை வேண்டும்னா, எவனாயிருந்தாலும் ரேப் பண்ணிட்டா போதும்னு ஒரு தாட்ஸை விதைச்சிடும்.

  இப்ப உன் ஆபிஸ்ல உன் கூட வேலை செய்தவன். உன்னை பத்தி தெரியாதவன். நீயும் அவனும் கல்யாணம் செய்யலாமே. அதைவிட்டுட்டு, சரவணனை விரும்பறேன்னு சொல்லற.
  அவன் மட்டும் உன்னுடைய கசப்பான சம்பவத்தில் தொடர்பு இல்லாதவனா? அவனை பார்க்கும் பொழுது உனக்கு எதுவும் தோணாம அவனை போய் கல்யாணம் செய்ய நினைக்கிற. ஆப்ட்ரால் ஒரு குப்பையை அள்ளறவன் தான் கிடைச்சானா.

  ஏன்…‌ நீ பாதிக்கப்பட்டதும், பிச்சைக்காரனும் குப்பைய அள்ளறவனும் தான் கிடைப்பான்னு நீயா முடிவெடுத்திட்டியா?” என்றதும் பாரதி சட்டென்று முறைத்தாள்.

     தான் நேசித்தவனை கூறியதில் கோபம் வந்து “குப்பை அள்ளினா… உங்களுக்கு கேவலமா? கொரானா வந்தப்ப ஊரே செத்து சுடுகாடா மாறிட்டுயிருக்கப்ப ஜனங்களை வீட்லயிருக்க வச்சாங்க. குறிப்பிட்ட டைம்ல வரணும் வாங்கணும்னு உத்தரவு இருந்ததே… அப்ப இந்த நாட்ல போலீஸ், டாக்டர்னு உயர்ந்த உத்யோகத்துல இருந்தவங்க மட்டும் தான் நடமாடினாங்களா? இதே நீங்க சொன்ன அதே குப்பையை அள்ளினவங்க அவங்க உயிரை துச்சமா நினைச்சி, முகத்துல மாஸ்க் கையில க்ளவுஸ்னு, உலகமே கொரனா நோய்ல போராடிட்டு இருந்தப்ப அவங்க அதை மீறியும் ஏகப்பட்ட குப்பையை சேகரிச்சு அவங்க பணியை பின்வாங்கலையே. குப்பையில மாஸ்க் இருந்ததையும் தெரியும்ல.

  தொழில்னு பார்த்தா உங்களுக்கு பிடிக்கலை. ஐ நோ எனக்கு புரியுது. ஆனா அவன் மனசை பாருங்களேன்.

உதயிடம் நான் காதலிச்சதை சொல்லிட்டேன். நாளைப்பின்ன என்னைக்காவது நான் கெடுக்கப்பட்ட விஷயம் தெரிந்து வீட்டோட கூட வாழாவெட்டியா இருக்க நேரும். எதுக்கு அப்படி திரிசங்கு நிலை.

ஒரு பொண்ணு உயிருக்கும் மானத்துக்கும் போராடி குப்பைத்தொட்டில இருந்தப்ப, போலீஸுக்கு போன் பண்ணி அவங்க வரட்டும் பார்க்கட்டும்னு இல்லாம, யாருனு தெரியாத என்னை தூக்கிட்டு போனான்.

   என்னை இரண்டாவது சந்திப்புல பார்த்ததும், இது அந்த பொண்ணு தானேனு இழிவா பார்க்கலை. மரியாதையோட நடத்தினான். இந்த பொண்ணுக்கு நாம ஏன் உதவனும்னு யோசித்து ஒதுங்கலை. அவன் இல்லாதப்பட்டவன். ஆனாலும் உதவனும்னு மனசு இருந்தது.

   வீடு பார்த்து பக்கத்துல வச்சிக்கிட்டதா சொன்னிங்க. அவன் பக்கத்துல இருந்தானே. இந்த பொண்ணு தான் எவனிடமோ சீரழிந்தவளாச்சே. ஏதாவது வம்பு பண்ணுவோம்னு நினைக்கலையே.

    நான் சில நேரம் எனக்கு நடந்த நிகழ்வால இட்லியை கருகவிட்டு இருந்தப்ப, வீட்ல வேற புட் இல்லைன்னு எனக்காக அவன் இரண்டு இட்லி வாங்கிட்டு வந்து தந்தான் மா.
  பசியறிந்து ஒரு தாய் தானேம்மா பார்த்துப்பாங்க. எனக்கு அப்ப அவன் தாயா தெரிந்தான்மா. அந்த நேரம் நீங்க தான் கண்ணுக்குள்ள வந்துட்டு போனிங்க.
 
  நான் ரஞ்சித்தை பார்த்து திட்டிட்டு வந்தப்ப என் கூட வந்தார். ஆனா அப்ப எனக்கு அவரை சரவணனா பார்க்கலை. பெத்த பொண்ணுக்கு பிரச்சனைனா கூடவே வந்து உறுதுணையா இருக்கற அப்பாவா பார்த்தேன்.‌ சரவணனை அப்ப நான் நம்ம அப்பாவா நினைச்சேன்.
  ஒரு அப்பா கூட இருக்கறப்ப தானேம்மா ஒரு பொண்ணுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்‌. சரவணன் கூடயிருந்தப்ப அந்த உணர்வும் வந்துச்சும்மா.

  ஒவ்வொரு முறையும் எனக்கு பிரச்சனைனா அவரை கூப்பிடறப்ப எனக்கு வேற்று மனுஷரா தெரியலை.
  
இதை தாண்டி காப்பாத்தியவன் மேல காதல் வந்துடுச்சானு என்னை நானே கேட்டுட்டு கொஞ்சம் அனலைஸ் பண்ணினேன்.
   ஆனா சரவணனை பக்கத்திலருந்து பார்த்தா நிச்சயம் எந்த பொண்ணுக்கும் பிடிக்கும்.

என்னை பொருத்தவரை சரவணனை நேசிக்க ஆரம்பிச்சப்பவே அவர் வேலையையும் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுல அவரை தரக்குறைவா பேசாதிங்க.
   இங்க சரவணனை தரக்குறைவா பேசற அளவுக்கு இருந்தா… உங்க பொண்ணு தரம் உயர்ந்தவளா  இல்லையென்றதையும் நினைவுல வச்சிக்குங்க.

நான் என்னை காப்பாத்தினவனை காதலிக்கலை. எனக்கு சரவணனை பார்த்து பழகியதுல அவரோட குணத்தை வச்சி தான் பிடிச்சிருக்கு.

  நீங்க சம்மதிச்சு.. நீங்களா கல்யாணம் செய்து வைத்தா அவரோட சேர்ந்து வாழ்வேன். இல்லைன்னா… இப்படியே இருந்துக்கறேன். நான் சோகமா எல்லாம் நடமாட மாட்டேன். ஜாலியா சௌந்திரராஜன் மணிமேகலையோட மகளா சந்தோஷமா இருப்பேன். சின்ன வயசுல இருந்து அப்படி தானே நாம மூன்று பேரும் குட்டி குருவி கூடு மாதிரி வாழறோம். அப்படியே வாழ்ந்துப்போம்.” என்று கூற மணிமேகலைக்கு சரவணனை கீழ்உயர்ததி பேச எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதனால் கணவரை ஏறிட, ஏற்கனவே மகள் தங்களிடம் வந்ததற்கு முதல் காரணம், அந்த சரவணன் ஓயாமல் ‘உங்க வீட்டுக்கு போங்க’ என்று குச்சி வைத்து விரட்டாத குறையாக கூறியதை அறிந்ததாலும், தன் மகளுக்கு தான் கூடவே வந்து ரஞ்சித்தை வீடு தேடி சென்று, குறைந்தபட்சம் அதட்டியாவது இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை கூட பூர்த்தி செய்யாத நிலையில் தவிக்க விட்ட குற்றவுணர்விலும், முன்பே எவ்வித கடின சூழ்நிலையிலும் வீட்டை விட்டு சென்ற மகளின் மனதை மாற்றவும் இயலாது. இன்றும் அவ்வாறே காதலிலும் உறுதியாக தானே நிற்பாளென்ற தெளிவான பதிலிலும் மௌனமாய் தான் நின்றார்.

பாரதியே இருவரையும் பார்த்து, “வெளியே போயிட்டு வந்ததும் உதய் பேரண்ட்ஸிடம் பேச இங்க உட்கார்ந்துட்டேன். நான் போய் ரெப்பிரெஷ் பண்ணிட்டு வர்றேன். அப்பா…. அம்மா… நீங்க இரண்டு பேரோட முடிவு மட்டும் தான் எனக்கு வேண்டும். இந்த சமுகத்துல ஐடி ஜாப்ல இருக்கற என்னையும், துப்புரவு தொழிலாளியா என்னை விட வேலையில் அடிமட்டத்துல இருக்கற சரவணனையும் உலகம் எப்படி பார்க்கும்னு தெரியும். அதையும் நான் தான் பேஸ் பண்ணணும். அதெல்லாம் பண்ண தயாராகிட்டு தான் உங்களிடம் இப்ப என் மனதை சொல்லிருக்கேன். அப்பறம் இப்பவே சொல்லுங்கன்னு உங்களுக்கு அழுத்தம் கூட்ட மாட்டேன்.
   உங்களுக்கு சரவணனை பிடிக்கலைன்னாலும் ஓகே. நான் அதை பத்தி கவலைப்படலை. ஆனா என்னிடம் வேறொருத்தனை கட்டிக்க கேட்காதிங்க.
  அதோட.. சரவணனிடம் நான் இன்னமும் என்‌ விருப்பத்தை சொல்லலை. சோ…. அவர் என்னை நிரகாரிக்கவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா… நான் ரஞ்சித்தால சீரழிக்கப்பட்டவ. ஒரு ஆம்பளைக்கு அந்த காரணமே போதும் என்னை வேண்டாம்னு சொல்ல. சரவணன்… அப்படி சொல்ல மாட்டார். ஆனாலும்… உங்களுக்கு பாஸிபிள்லா பதில் வரலாம்.” என்று அவளது அறைக்கு சென்றியிருந்தாள்.

மணிமேகலையோ ‘என்னங்க பண்ணறது?’ என்று பார்த்திட, சௌந்திரராஜன் முதல்ல அவளை கவனி.’ என்று அனுப்பினாரே தவிர அவர் சிந்தனை மகளது பேச்சிலிருந்து மீளவில்லை.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

10 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 bharadhi eppdi oru badhil solluvaa nu nenaikave ella pa semma😘😘😘 edhu saravanan ku therinja eppdi react pannuvaano😊🤔

  2. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 26)

    பாரதியோட ஒவ்வொரு பாயிண்ட்டும் சும்மா நச்சுன்னு இருக்கு. ரொம்ப அழகா யோசிச்சிருக்காள்.
    இன்னும் அவளுக்கு சரவணனனும் தன்னை காதலிக்கிறான் என்கிற உண்மை தெரியாது தானே ?
    ஆனா, அதுக்கு முன்னாடியே நெகட்டிவ், பாஸிட்டிவ்ன்னு ரெண்டுத் தரப்பையும் யோசிச்சு ரொம்ப தெளிவான முடிவெடுத்திருக்காள்.
    இட்ஸ் ரியலி ஆவ்ஸம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!