Skip to content
Home » மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

அந்த வீட்டில் படுக்கையறை  என்று ஒன்று உள்ளது என்பதை மறந்த இருவரும் ஹாலிலேயே தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

தருணும் நடந்தது புரியாமல், அடுத்து என்ன செய்வது என்றும் அறியாமல், ஹாலிலேயே உட்கார்ந்து இருக்க, அவனை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாதவளும் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

மதியம் வாங்கி வந்த சாப்பாட்டை கூட இருவரும் கையால் தொட்டு கூட பார்க்கவில்லை. பூஜாவும் அவனை சாப்பிட சொல்லி வற்புறுத்தவும் இல்லை. அவளும் சாப்பிடவில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவள் மனதில் இப்பொழுது தருணுடைய சூழ்நிலையும், அவனுடைய பிரச்சனைகளும், அதனால் அவனின் மனநிலை தற்பொழுது என்னவாக இருக்கும் என்ற யோசனை மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவளுக்கென்று கடந்த காலம் ஒன்று ஒன்று இருந்தது…. அதில் ஒருவன் மேல் உயிராய் இருந்தாள்…. இப்பொழுது அவனை கரம் பிடிக்க முடியாமல் போய்விட்டது…. என்பதை எல்லாம் அவளின் நினைவிலேயே இல்லை.

அவளுடைய காதல் கைகூடாமல் போனது அவளுக்கு வருத்தம் தான். ஆனால் அவளுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு ஏமாற்றத்தைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை… அப்படி இருக்கும் பொழுது இங்கே தருணுக்கோ அடுத்தடுத்து எத்தனை ஏமாற்றங்கள்..

அவளுக்கு தான் உயிராய் நினைத்த ஒரு உறவு விட்டுப் போனதையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை….  அப்படி இருக்கும்பொழுது அவனுடைய எல்லா உறவுகளும் அவனை ஏமாற்றிவிட்டு போனதை எப்படி அவனால் தாங்கிக் கொள்ள முடியும்?

அதனாலேயே இப்பொழுது அவனைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

இவ்வளவு நேரம் அவளுடைய சூழ்நிலையையும், அவனின் சூழ்நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து கொண்டிருந்தவள், இப்பொழுதுதான் சுவரில் மாற்றப்பட்டிருக்கும் கடிகாரத்தை பார்த்தாள்.

மணியும் நல்லிரவு 3 மணியை காட்ட, இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவள் “தருண்….” என்று மெல்லிய குரலில் அவனை அழைத்தாள்.

அப்பொழுது தான் சுயநினைவுக்கு வந்தவன், என்ன என்பது போல அவளுடைய முகத்தை பார்த்தான்.

“தருண் டைம் 3:00 ஆச்சு…  ஒன்னு போய் தூங்குங்க…. இல்லைன்னா ரெண்டு பேரும் சாப்பிடவாவது செய்வோம். எதுவுமே பண்ணாம இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? நீங்க இப்படி சாப்பிடாம தூங்காம இருக்கறதுனால நடந்த பிரச்சினையும், ஏமாற்றமும் இல்லன்னு ஆகிடுமா? இல்ல அது எல்லாமே சரியாகிடுமா? எதுவுமே மாறப்போறது கிடையாது. முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க. அதுக்கு அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்று அவளோ  பிராக்டிக்கலாக பேசினாள்.

அப்பொழுது தான் அவள் சொல்வதில் உள்ள நிதர்சனத்தை உணர்ந்தவன், மூச்சை வேகமாக இழுத்து விட்டபடியே “ஆமா பூஜா…..  நீங்க சொல்றதும் சரிதான்.  இப்போ நான் இப்படி உக்காந்துட்டு இருந்தா, அடுத்து என்ன பண்றதுன்னு எனக்கு எதுவுமே தோணாது.  அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் என் கூட இருந்தவங்க எல்லாரும் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க. இதுக்கு அப்புறம் உங்களுக்காகவாவது நான் பழையபடி மாறனும். உங்களுக்காக  நான் கண்டிப்பா ஏதாவது செய்யணும். நம்ம வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதுக்கு கண்டிப்பா  பினான்சியலா ஏதாவது பண்ணனும்.”  என்று வார்த்தைக்கு வார்த்தை அவளுக்காக அவளுக்காக என்று அவன் பேசியதில், அடுத்த வார்த்தை என்ன பேசுவது என்றே தெரியாமல் அவளோ அமைதியாக இருந்து விட்டாள்.

அவளுடைய அமைதியில் ஏதோ சங்கடத்தை உணர்ந்தவன் “என்ன பூஜா ஏன் அமைதியாயிட்டீங்க?” என்று கேட்டான்.

அதற்குள் அவளிடம் பதில் இல்லை.

மறுபடியும் அவனே பேச ஆரம்பித்தான். “என்னோட வாழ்க்கையில நான் யாரெல்லாம் முக்கியம்னு நினைச்சேனோ, யாருக்காக என்ன வேணாலும் பண்ணலாம்ன்னு நினைச்சேனோ அவங்க எல்லாரும் ஈசியா என்னை விட்டுட்டு போயிட்டாங்க.  முதல்ல என்னோட அம்மா அப்பா… அதுக்கு அப்புறம் என்னோட அத்தையும் மாமாவும்… 
கடைசியா ரத்த சொந்தமா இருந்த என் தம்பி ….  அவனுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா எல்லாரை விடவும் அவன் கொடுத்த வலி தான் எனக்கு இப்போ ரொம்ப அதிகமா இருக்கு. ஆக மொத்தம் நான் உறவா நினைச்ச எல்லாருமே என்னை விட்டுட்டு போயிட்டாங்க.  இப்போ என்னோட முழு வாழ்க்கையோட உறவா உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன் பூஜா. இதுக்கு அப்புறம் என்னோட வாழ்க்கையோட அர்த்தமே நீங்க மட்டும் தான்…  இனி நான் செய்யப் போற ஒவ்வொரு விஷயமும் உங்களுக்காக மட்டும் தான். இதுக்கு அப்புறம் நான் வாழ போற வாழ்க்கையும் உங்களுக்காக தான். ஆனா இப்போ தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு….  நான் இதே மாதிரி  நினைச்ச எல்லாருமே என்னை விட்டுட்டு போயிட்டாங்க. இப்போ உங்களை அந்த இடத்தில வச்சிருக்கேன்.  நீங்களும் என்னை விட்டுட்டு போயிட மாட்டீங்களே பூஜா…” என்று அவள் கையை பிடித்து கண்ணீரோடு கேட்டான் அவன்.

இப்போது அவனின் கண்ணீர் துளிகள்  அவள் கை மேல் படவே, அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

“சொல்லுங்க பூஜா….  நீங்களும் என்னை விட்டுட்டு போக மாட்டீங்களே….  இதுக்கு அப்புறம் நீங்களும் இல்லன்னா கண்டிப்பா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது….  என்னோட வாழ்க்கை என்ன ஆகும்னு எனக்கே தெரியல…. எவ்வளவு தான் பணம் இருந்தாலும் நமக்காக ஒரு உறவு வேணும்… இவ்வளவு வருஷம் என்கிட்ட இல்லாத பணமே இல்லை… நான் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு என்கிட்ட அவ்வளவு பணம் இருந்தது.  ஆனா அது எல்லாத்தையும் மேல நான் எனக்குன்னு ஒரு உறவு இருக்கனும்ன்னு எப்போமே நினைப்பேன். பணம் மட்டும் இருந்தா கண்டிப்பா நமக்காக ஒரு உண்மையான உறவு கிடைச்சிருமான்னா அது சந்தேகம்தான்… பணத்துக்காக வேணும்னா நம்மகிட்ட உறவாடுவாங்களே தவிர, உண்மையா இருப்பாங்களான்னு நமக்கு தெரியாது. ஆனால் நமக்குன்னு ஒரு உறவு உண்மையா இருந்தாங்க அப்படின்னா கண்டிப்பா நம்மளால எவ்வளவு தூரத்துக்கு வேணும்னாலும் போக முடியும். எவ்ளோ பணம் வேணும்னாலும் சம்பாதிக்க முடியும்.  இப்போ நான் அந்த நிலைமையில தான் இருக்கேன்.” என்று தன்னுடைய மனதில் உள்ளவைகளை வெளிப்படையாக சொன்னான் அவன்.

அவன் பேசுவதை கேட்டு அவளோ பிரம்மித்து தான் போய்விட்டாள்.  பணம் தான் முக்கியம் என்று எவ்வளவோ மனிதர்கள் பேசுவதை அவன் கேட்டிருக்கிறாள். அப்படி இருக்கும் பொழுது அதே பணத்தில் பிறந்து வளர்ந்தவன் பணத்தை விட உறவு தான் முக்கியம் என்று சொல்வதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை தான்.

அவளும் அவன் சொன்னதில் ஆச்சரியம் அடைந்து போய் நிற்க, “சொல்லுங்க பூஜா… நீங்களும் என்னை விட்டுட்டு போயிட மாட்டீங்களே…”  என்று மறுபடியும் அதே வார்த்தையை அவளிடம் கேட்டு அவளின் மனதை நோகடித்தான்.

அவன் கண்ணீரோடு கேட்பதை பார்த்தவளுக்கு இப்பொழுது தானும் அவனை விட்டு போய்விட்டால் அவனை நிலைமை என்ன ஆகும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டாள். அந்த சூழ்நிலையை சமாளிக்கவே “இல்ல தருண் கண்டிப்பா நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்”  என்று தெரிந்தோ தெரியாமலோ அவனிடம் ஒரு வாக்குறுதியை கொடுத்து விட்டாள்.

ஒருவனே உயிராய் காதலித்து சந்தர்ப்பத்தால் வேறொருவனை திருமணம் செய்து கொண்டவளுக்கு, திருமணம் செய்த அடுத்த நாளே இத்தகைய வாக்குறுதி கொடுப்பது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை…  ஆனாலும் அவனின் சூழ்நிலையை உணர்ந்தவளுக்கு இந்த வாக்குறுதியை கொடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவள் கொடுத்த வாக்குறுதியை கேட்ட சந்தோஷத்தில் புன்னகைத்தவனும், அவன் பிடித்திருந்த அவளின் கையை அவனுடைய நெற்றியில் வைத்து மறுபடியும் கண்கலங்கினான்.

அவனின் அத்தகைய செயல் அவளுக்கு ஏதோ போல்தான் இருந்தது.

கண்ணனோ ஐசியூ முன்னால் கலங்கிய கண்களோடு நிற்க, அவனை நோக்கி வந்தான் அரவிந்த்.

“சார்…  நான் சொல்றதை நீங்களாவது நம்புங்க…. நான் வேணும்னே எதுவும் பண்ணல. அந்த பொண்ணா தான்  வண்டி மேலே  வந்து விழுந்தாங்க. இப்போ கூட பாருங்க  அந்த பொண்ணோட நிலைமையை தெரிஞ்சுக்காம என்னால இங்க இருந்த நகரவே முடியல. என்னோட அப்பா கொஞ்சம் செல்வாக்கான ஆளு. அதனால தான் என்னை இன்னும் ஸ்டேஷனுக்கு கூட கூட்டிட்டு போகாம இங்கே விட்டிருக்காங்க.  நான் தப்பானவனா இருந்தா எப்பவோ கிளம்பி போயிருக்கலாம்”  என்று  தன் தரப்பு நியாயத்தை கண்ணனிடம் சொன்னான்.

அவன் சொல்வதும் உண்மைதான் என்றே கண்ணனுக்கு தோன்றியது.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கவே அதிகாலை 5:30 மணிக்கு பூர்ணா கண் விழித்தாள்.

செவிலியர் ஒருவர் அந்த வார்டில் இருந்து வெளியே வந்து “சார் அந்த பொண்ணு கண் முழிச்சுட்டாங்க.  நீங்க பாக்கணும்ன்னா போய் பாருங்க. ஆனா அஞ்சு நிமிஷத்துல வெளிய வந்துருங்க .யாருக்கும் தெரியாம உங்களுக்காக ரிஸ்க் எடுக்குறேன்” என்று கண்ணனிடம் சொன்னார்.

செவிலியர் சொன்னதும் அவனோ வேக வேகமாக பதற்றத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே பூர்ணா அப்போது தான் கண்விழித்திருந்தாள்.

தலையைக் கூட அசைக்க முடியாமல் கண்களை மட்டும் சுற்றி சுற்றி எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே கண்ணனை பார்த்ததும் அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் கண்ணனுக்கு பூர்ணாவை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும், அவன் மேல் அதீத கோபமும் வந்தது.

கண்ணனை பார்த்தவளோ “யாஷ்….”  என்று பேச முடியாமல் உதடுகளை மட்டும் அசைக்க முயற்சி செய்ய, அவள் வாயில் இருந்து சத்தம் வந்த பாடில்லை.

அவள் தன் பெயரை உச்சரிக்க சிரமப்படுவதை உணர்ந்தவனோ, கோபத்துடன் அவள் அருகில் போய் “லூசாடி நீ…… நீ எல்லாம் என்ன பொண்ணு?  ஏன் இவ்வளவு செல்பிஷ்ஷா  இருக்க? உன்னை பத்தி மட்டும் தான் யோசிப்பியா? மத்தவங்கள பத்தி எப்பவுமே யோசிக்க மாட்டியா?  முதல்ல அம்மா அப்பா தங்கச்சியை பத்தி யோசிக்காம யாரோ ஒருத்தனை நம்பி ஓடி வந்த. அதுனால அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமும் அவமானமும் வரும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா? நீ எங்கே யோசிச்சு பாத்திருப்ப? உனக்கு உன்னோட சந்தோசம் மட்டும் தான முக்கியம்?  சரி நீ பண்ணதெல்லாம் தெரியாம பண்ணிட்டேன்னு உனக்காக  நிறைய விஷயம் ரிஸ்க் எடுத்து பண்னேன்.  இப்போ மறுபடியும்  என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க. உனக்கு கொஞ்சமாவது மூளைன்னு ஒன்னு இருக்கா? இல்லையா? நீ வீட்ல இருந்து ஓடி வந்த பொண்ணு… உன்னை என் கூட தங்க வச்சிருக்கேன். அப்படி இருக்கும்போது உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் தானே பொறுப்பு?  எனக்கு அதுனால எவ்வளவு பிரச்சனை வரும்?  அந்த அறிவு கொஞ்சமாவது உனக்கு இருக்கா? என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம நீ பாட்டுக்கு கிளம்பி போய் இப்படி ஒரு முடிவு எடுத்து வச்சிருக்க? நீ வேணும்ன்னே தான் அந்த கார்ல போய் விழுந்தன்னு  எனக்கு நல்லாவே தெரியும். படிச்ச பொண்ணு தான நீ?  இப்போ மட்டும் உனக்கு ஏதாவது ஆகி இருந்தா, உனக்கு ஹெல்ப் பண்ண பாவத்துக்கு வாழ்க்கை முழுசும் நான் கம்பி தான் எண்ணனும். இங்க பாரு…. என்னோட முகத்தை நல்லா பாரு…. எவ்வளவு காயம் இருக்கு பாரு…. என்னோட டிரஸ்சை பாரு….  எல்லாம் உன்னால தான். நீ காணாம போய்ட்டேன்னு கம்ப்ளைன்ட்  கொடுக்கப் போனா பாவத்துக்கு நான் தான் உன்னை ஏதோ பண்ணிட்டேன்னு என்னை உள்ள வச்சு நல்லா வெளுவெளுன்னு வெளுத்துட்டாங்க.  நீ பண்ண தப்புனால தான் எனக்கு இப்போ இந்த நிலைமை. எவ்வளவு பட்டாலும் உனக்கெல்லாம் புத்தியே வராதா?  உனக்கு எப்பவுமே உன்ன பத்தி மட்டும் தான் கவலையா? மத்தவங்கள பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க மாட்டியா? உனக்கு புத்தினு ஒன்னு இருந்தா அடுத்த தடவை ஏதாவது பண்ணும் போது அதை யூஸ் பண்ணி கொஞ்சம் யோசிச்சு பண்ணு…. இது எல்லாத்துக்கும் மேல நேத்து காலையில இருந்து சாப்பிடாம தூங்காம  ரோடு ரோடா அலைஞ்சு திரிஞ்சு பைத்தியம் மாதிரி உன்னை தேடிட்டு இருந்தேண்டி…லூசு… லூசு..” என்று அதீத கோபத்துடன் அவளை திட்டினான்.

2 thoughts on “மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *