Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

“சரி தருண்… நீங்க தான் எல்லா பேப்பர்ஸ்லையும் சைன் போட்டு கொடுத்துட்டீங்கல்ல…  கிஷோர் வந்துருவாரா?”  என்று கேட்டாள் பூஜா.

“இல்ல பூஜா… நான் மட்டும் தான் சைன் பண்ணி இருக்கேன். நீங்களும் அதுல சைன் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் கிஷோரை விருவேன்னு சொல்லியிருக்காங்க…. எனக்காக இதை பண்ணுவீங்களா பூஜா?”  என்று அவனும் தலைநிமிர்ந்து அவள் கண்ணை பார்த்தபடி கேட்க,

அவனின் கலங்கி போன கண்களை பார்த்தவளோ “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு தருண்?  அது உங்களோட சொத்து. நீங்களே வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டீங்க. அப்போ நான் எல்லாம் யாரு? அவங்க கேக்குற இடத்துல நானும் சைன் பண்றேன்” என்று சொன்னாள் அவள்…. அது அவனின் மனைவிக்காக உரிமை என்பதை நினைத்து பார்க்காமல்….

“ரொம்ப தேங்க்ஸ் பூஜா…. அப்புறம் சாரி…” என்று  அவன் கேட்டதும்

“இப்போ எதுக்கு சாரி சொல்றீங்க?” என்று அவளோ புரியாமல் கேட்டாள்.

“இல்ல…. உங்க வீட்ல என்னை பணக்காரன்ன்னு நினைச்சு தான் நான் கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க. ஆனா உங்களை இந்த மாதிரி இடத்துல வந்து நிக்க வச்சுட்டேனே… அதுக்கு தான் சாரி கேட்டேன்…”  என்று தருண் சொன்னதும் “பரவால்ல தருண்…. இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் எனக்கு வாழ்க்கையில புதுசு கிடையாது. நாங்க சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டப்பட்டு இருக்கோம். இதெல்லாம் எனக்கு சாதாரணம் தான். நீங்க எதை நினைச்சும் பீல் பண்ணாதீங்க.  முதல்ல கிஷோரை கூட்டிட்டு வர வழிய பாருங்க” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள்…. அவள் கஷ்டத்தில் இருப்பதையும் மறந்து…

“சரி பூஜா… நீங்க போய் பிரஷ் ஆகுங்க. லன்ச் டைம் ஆகிருச்சு. நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க உங்க கிட்ட கையெழுத்து வாங்க வருவாங்க” என்று சொன்னவன் அந்த இருக்கையை விட்டு  எழுந்தான்.

பூஜா உடை மாற்றிவிட்டு வெளியே வரவும், தருண் அவளுக்காக சாப்பாடு வாங்கிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பும் போது கிராண்டான புடவையை அணிந்து வந்ததால் இப்போது சிம்பிளான புடவையை அணிந்தாள்.

அடர் பச்சை வண்ண பிளைன் புடவையில், அதற்கு கான்ட்ராஸ்ட்டாக தங்க நிற பிளவுஸ் போட்டு கொண்டு, தன்னுடைய இரு காதுகளிலும் அணிந்திருக்கும் குட்டியான குடை ஜிமிக்கியை நடனமாட விட்டபடியே தலை முடியை வாரிய படியே வெளியே வந்தாள்.

அந்த அழகு தேவதை அவனின் கண் முன்னே நின்று நின்று கொண்டிருந்தாலும், அதை ரசிக்கும் மன நிலைமையில் அவன் இப்போது இல்லை.

இப்பொழுது அவனுடைய மனது முழுவதும் அவனுடைய தம்பியை காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது.

அவளைப் பார்த்தவன், அவன் வாங்கி வந்திருந்த சாப்பாடு பார்சலை அவள் புறம் நீட்டி “இந்தாங்க பூஜா…. நீங்க சாப்பிடுங்க” என்று சொன்னான்.

“நீங்களும் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க. ரெண்டு பேரும் சாப்பிடலாம் ” என்று சொன்னாள் அவள்.

“இப்போ சாப்பிட்டாலும் என்னால நிம்மதியா சாப்பிட முடியுமான்னு தெரியல.  கிஷோர் வந்ததுக்கு அப்புறம் நான்  சாப்பிடுறேன்” என்று சொன்னான் அவன்.

அவனின் தவிப்பும் அவளுக்கு நியாயமானதாக படவே “சரி ஓகே தருண்…  அப்போ நானும் கிஷோர் வந்ததுக்கு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்”  என்று அவன் கொடுத்த சாப்பாடு பார்சலை வாங்கி அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்து விட்டாள்.

அப்போது தான் பூஜாவிற்கு ஒரு விஷயம் நினைவு வந்தது. பூர்ணாவின் திருமணத்திற்கு கிஷோரை பூஜா அழைக்கவில்லை என்றாலும் அவன் எதற்காக வந்திருந்தான் என்பதை இப்போது புரிந்து கொண்டாள்.

“நாம தான் பூர்ணா கல்யாணத்துக்கு தருணை இன்வைட் பண்ணோமே.. சோ  அண்ணன் கூட கிஷோர் வந்திருப்பாரு போல” என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

அப்பொழுது “என்னடா… உன்னோட பொண்டாட்டி கிட்ட எல்லாத்தையும் சொல்லி சம்மதம் வாங்கிட்டியா?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் மஞ்சுளா.

மஞ்சுளாவுடன் வந்திருந்த அவளின் கணவரையும், நான்கு அடியாட்களையும் பார்க்கவே பூஜாவிற்கு பயமாக இருந்தது.

தருண் அவர்களின் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் தலைகுனிந்து நிற்க, அவனின் அருகில் போய் நின்று கொண்டாள் பூஜா.

“என்னடா கண்ணா? அம்மாவ உள்ள வாங்கன்னு கூட கூப்பிட மாட்டியா?”  என்று எதுவும் அறியாதவள் போல் மஞ்சுளா கேட்க

“முதல்ல பேப்பர்ஸ்ஸ கொடுங்க. பூஜா இப்பவே சைன் பண்ணிடுவாங்க.”  என்று அவரிடம் தருண் கேட்டதும் மஞ்சுளாவின் கணவர் தான் கொண்டு வந்திருந்த ஃபைலில் இருந்து எல்லா டாக்குமெண்ட்டையும் எடுத்து தருண் கையில் கொடுத்தார்.

அவர் முகத்தைக் கூட எட்டிப் பார்க்காமல், அந்த பேப்பர்ஸை வாங்கி பூஜாவிடமும் கொடுத்தவன்,  “இந்தாங்க பூஜா… இதுல எல்லாம் சைன் பண்ணிடுங்க”  என்று அவள்  கண்ணை பார்த்தபடியே குற்ற உணர்ச்சியோடு சொன்னான் அவன்.

பின்பு…  எப்படியெல்லாம் அவனுடைய மனைவியை வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பான்? ஆனால் இப்பொழுது எல்லா சொத்துக்களையும் தொலைத்து கையில் எதுவும் இல்லாமல் நிற்கிறானே….

தருண் சொன்னதும் தலையசைத்தவள், அந்த பேப்பர்ஸை வாங்கி அவர்கள் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டாள்.

பூஜாவின் கையில் இருந்த டாக்குமென்டை வாங்கி மஞ்சுளாவின் கையில் கொடுத்தவனோ “கிஷோர் எப்ப வருவான்?”  என்று கேட்டான்.

“இருப்பா… இப்ப தானே கையெழுத்தை போட்டு இருக்கீங்க? ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும், அடுத்த ஒன் அவர்ல உன் தம்பி உன்னோட வீட்டுல இருப்பான். புரியுதா?”  என்று சொல்லிய மஞ்சுளாவோ அந்த டாக்குமெண்டை அவன் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கிய படியே வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவர்கள் அங்கே இருந்து சென்ற பிறகு, தருண் அருகில் இருக்கும் சோபாவில் விரக்தியாய் உட்கார்ந்தான்.

அவன் வருந்துவதை புரிந்து கொண்ட பூஜாவோ, அவன் அருகில்  கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து “அது தான் சைன் பண்ணி கொடுத்துட்டோமே தருண்..  இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க தம்பி வந்துருவாரு… ஃபீல் பண்ணாதீங்க” என்று சொன்னாள்.

“எனக்கு இப்போ யோசிக்க நிறைய பிரச்சனை இருக்கு பூஜா… கையில வேலை இல்ல… கையில இருந்த கம்பெனியும் போயிடுச்சு… அடுத்ததா என்ன செய்ய போறோம்… இன்னும் எதுவுமே தெரியல… ஆனா இது எதுவுமே இப்ப என்னால யோசிக்க முடியல…  முதல்ல கிஷோர் வரணும்…  அதுக்கப்புறம் தான் எல்லாமே யோசிக்கணும்” என்று தருண் சொன்னதும்

“சரி தருண்… எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்… ஆனா நீங்க உடைஞ்சு போயிறாதீங்க… எல்லாத்துக்குமே சொல்யூஷன்ன்னு ஒன்னு இருக்கும். கண்டிப்பா நமக்கு அடுத்தது என்ன பண்ணனும்னு ஒரு வழி கிடைக்கும். நீங்க அதை பத்தி எல்லாம் யோசிக்காதீங்க… பாத்துக்கலாம்” என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்.

“அது எப்படி பூஜா? உங்களுக்கே நிறைய பிரச்சனை இருக்கும்போது, என்னோட பிரச்சினைக்கு ஆறுதல் சொல்லணும்னு தோணுது? நேத்து நீங்க எப்படி கதறி அழுதீங்கன்னு என் காதால கேட்டேன். அதுல இருந்தே  உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு  தெரியுது. ஆனா அதையெல்லாம் மனசுல வச்சுக்காம இப்போ எனக்காக பேசுறீங்களே… எப்படி உங்களால இதெல்லாம் முடியுது?”  என்று அவளை கேள்வியாய் பார்த்தபடி கேட்டான் தருண்.

“உங்கள பத்தி நினைக்கும் போது என்னோட பிரச்சினை எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது தருண். உங்க மனசுல இவ்வளவு வலியை வச்சுக்கிட்டு கார்ல வரும்போது எனக்காக பேசினீங்களே… அது மாதிரி தான்…”  என்று பூஜா சொன்னதும்

“எனக்கு இப்போ கூட உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க தோணுது…  உங்ககிட்ட அத பத்தி கேட்கணும்னு தோணுது… ஆனா இப்போ எதையுமே என்னால யோசிக்க முடியல பூஜா… என்ன மன்னிச்சிடுங்க”  என்று அவளிடம் சொன்னவன்,  தன்னுடைய கையில் கட்டியிருக்கும்  கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தபடியே “இவ்ளோ நேரம் ஆயிடுச்சு… இன்னும் கிஷோர் வரலையே பூஜா”  என்ற படியே பதற்றமாய் கேட்டான்.

அப்பொழுது சரியாக “அண்ணா….” என்ற படியே உள்ளே நுழைந்தான் கிஷோர்.

தன்னுடைய தம்பியை பார்த்ததும், எழுந்து  சென்று அவனை கட்டி அணைத்துக் கொண்டான் தருண்.

“டேய்…. உன்னை எதுவும் கொடுமை பண்ணாங்களாடா?  நீ நல்லா தான இருக்க? நீ திரும்பி வந்ததே போதும் டா எனக்கு….”  என்று தன் தம்பியை அணைத்தபடியே சொன்னான் தருண்.

தருண் பேசியதற்கு கிஷோர் அமைதியாகவே இருக்க,

“உன்னை இப்படி பார்த்ததுக்கு அப்புறம் தான்டா எனக்கு நிம்மதியாவே இருக்கு… ரெண்டு நாளா ரொம்ப தவிச்சு போயிட்டேன் தெரியுமா”  என்று தருண் சொல்ல

“எனக்கும் உன்னை இப்படி பார்த்ததுக்கு அப்புறம் தான்டா ரொம்ப சந்தோஷமா இருக்கு….”  என்று சொன்ன கிஷோரின் குரலும் முகமும் மாறி போனதை இருவரும் கவனிக்க தவறவில்லை.

“என்னடா சொல்ற?”  என்று தருண் புரியாமல் கேட்டிட

“ஆமா டா…  நம்ம அம்மா அப்பாவுக்கு நாம ரெண்டு பேருமே தானே புள்ளைங்க… ஆனா அவங்களால எப்படிடா எல்லா சொத்தையும் உன் பேர்ல மட்டும் எழுதி வைக்க முடிஞ்சது?” என்று கிஷோர் கோபமாக கேட்க

அவன் சொல்வதின் அர்த்தம் புரியாத தருண் “நீ என்னடா பேசுற?” என்று புரியாமல் கேட்டான்.

“ஆமாடா…. எல்லா சொத்தும் உன்னோட பேர்ல தான் உயில் எழுதி இருக்குன்னு எனக்கு நாலு வருஷம் முன்னாடியே தெரியும். அந்த சொத்தை எப்படியாவது உன்கிட்ட இருந்து என்னோட பேருக்கு எழுதி வாங்கணும்னு தான், அத்தை மாமா கூட சேர்ந்து இந்த பிளானையே போட்டேன்…..

நீ பூஜாவை கல்யாணம் பண்ணது… என்னை கடத்தினது…. நீங்க ரெண்டு பேரும் சொத்தை எழுதி கொடுத்தது…. எல்லாமே என்னோட பிளான் தான்…. இது எல்லாத்துக்கும் எனக்கு அத்தையும் மாமாவும் உதவி பண்ணாங்க…. அந்த உதவிக்கு கைமாறா  தான் நம்ம அத்தை பொண்ணு ஆதிராவை  கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்று சொன்னான் கிஷோர்.

4 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *