Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 10

முகப்பு இல்லா பனுவல் – 10

தேவராஜனின் அப்பா என்ற அழைப்பில் உள்ளம் உருகி நின்று விட்டார் இந்திரன். 

அவன் பிறந்து முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் பொழுது, பேசிய முதல் வார்த்தை அப்பா தான். எல்லா குழந்தைகளும் அம்மா என்று அழைக்க தேவராஜன் முதலில் பேசியது அப்பா. “ப்பா.. ப்பா.. என்பது தான். அதிலேயே அவர்கள் இருவருக்கும் பிணைப்பு அதிகம் உண்டு. 

அதுவும் சிறுவயதில் அவனின் தாய் அவளை விட்டு சென்ற பிறகு தேவராஜனுக்கு அப்பாவே எல்லாமும் ஆனால் அதேபோல் இந்திரனுக்கு தன் மகனின் நலம் மட்டுமே கண் முன் இருந்தது. 

மகனுக்காக உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட கொடுக்கும் நிலையில் இருந்த இந்திரன். இவ்வளவு காலம் தேவராஜன் தன்னுடன் பேசாமல் இருந்ததில் மனம் உடைந்து போய் ஒரு நடை பிணம் போல வாழ்ந்து கொண்டிருந்தார். 

இன்று அவன் “அப்பா” என்று சொன்னதும் அவரின் உயிர் வரை சென்று, அவரது வாழ்க்கைக்கு உயிர் வந்தது போல் பிரகாசமானார். அந்த பாசம் தனக்கு நிலைத்து இருக்க வேண்டும் என்று அவர் காமாட்சியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டார்.  

ஆனால் அவர்களை பார்ப்பதற்கு கொஞ்ச வயதாக தெரிகிறதே. ஐம்பத்தைந்து வயதான என்னை திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதித்திருப்பார்? எதற்காக இந்த திருமணம் செய்ய வேண்டும்? என்று குழப்பமாக இருந்தது. 

தன்னை பற்றி முழுவதும் அவரிடம் தெரிவிக்க வேண்டும். கொஞ்சம் பேசினால் நன்றாக இருக்கும் ஆனால் அதற்கு தேவா சம்மதிப்பானா என்று தெரியவில்லையே? என்று தனக்குள்ளையே நினைத்து நினைத்து குழம்பிக் கொண்டிருந்தார். 

அவரின் குழப்பமான முகத்தைப் பார்த்த தேவராஜன் “என்னப்பா? என்ன யோசிக்கிறீங்க? என்றான். 

“ஒன்றும் இல்லைப்பா. அவர்களுக்கு என்னை உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். 

“அதெல்லாம் நான் பேசிவிட்டேன் எல்லாம் சம்மதம் தான். நேரம் ஆகிவிட்டது முதலில் தாலி கட்டி திருமணத்தை முடித்து விடுவோம். அதன் பிறகு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள். உங்கள் சந்தேகத்தைகங்கள் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று அவசரப்படுத்தி அவர்களை அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றான்.

அவர்கள் அங்கு செல்லும்பொழுது அங்கு அவனது காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் தயாராக காத்திருந்தார். 

“என்ன ரஞ்சித் எல்லாம் ரெடியாக இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே அவனது அருகில் வந்து நின்றான் தேவராஜன். 

அவனை அவனை கண்டதும் விரைப்பாக நின்று புன்னகைத்து “எஸ் சார், எல்லாம் தயாராக இருக்கிறது” என்றான். 

அவனது தோளில் கைகளை போட்டு உனக்கு எத்தனை தடவை சொல்வது. ஸ்டேஷன் ல மட்டும்தான் நீ என்னை சார் என்று சொல்ல வேண்டும். மற்றபடி வெளியில் நீ என்னுடைய தம்பி தான்” என்றான் . 

அவனும் சிரித்துக்கொண்டே “எல்லாம் சரியாக இருக்கிறது அண்ணா” என்று சொல்லிவிட்டு, அப்பாவிடம் மாலையை போட்டுக்க சொல்லுங்க” என்று சொல்லி ஐயரிடம் இருந்து மாலை இரண்டையும் வாங்கி தேவராஜன் கையில் கொடுத்தான். 

காமாட்சியும் இந்திரனையும் அருகருகே நிக்க வைத்து இருவர் கையிலும் மாலையை கொடுத்த தேவராஜன், “அப்பா நீங்க அம்மாவுக்கு மாலை போடுங்க. அம்மா நீங்க அப்பாக்கு மாலையை போடுங்க” என்றான்.

அவன் சொல்வதை இருவரும் தயங்கிக் கொண்டே செய்தனர். அதன் பிறகு ஐயர் தாலியை எடுத்துக் கொடுத்து மந்திரங்கள் சொல்ல, இந்திரன் தேவராஜனை ஒரு முறை பார்த்துவிட்டு, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு காமாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவரை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும் மணமக்களை அழைத்துக் கொண்டு முருகரை தரிசித்து விட்டு எல்லோரும் ஹோட்டல் சென்று உணவு உண்டனர். அதன் பிறகு நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப, விசு அவன் மனைவி மட்டும் தேவராஜன் வீடு நோக்கி வந்தார்கள். 

வீட்டிற்கு வந்ததும் விசுவின் மனைவி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். பிறகு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இந்திரனும் காயத்ரியும் தயங்கியபடியே இருந்தார்கள். 

அவர்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட் மூன்று படுக்கை அறை கொண்டது. தந்தையும் மகனும் ஆளுக்கு ஒரு அறையில் இருக்க, மூன்றாவது அறையை உடற்பயிற்சி கூடமாக வைத்திருந்தான் தேவராஜன். 

தந்தையின் அறையை காண்பித்து “அம்மா இதுதான் அப்பாவோட ரூம். இனிமே நீங்க அங்கேயே இருந்துக்கோங்க” என்று அவரிடம் உள்ள பைகளை அந்த அறையில் வைத்து, “நீங்கள் வேண்டுமென்றால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறீர்களா?” என்று கேட்டான். 

அவரோ இல்லை என்று மறுப்பாக தலையாட்டி விட்டு, “எல்லோருக்கும் காபி போடட்டுமா? சமையலறை எங்கிருக்கிறது?” என்று கேட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார். 

விசுவின் மனைவியோ “முதல் முதலில் வேலையா செய்யப் போகிறீர்கள்?”என்று சொல்லி விட்டு, “நான் காபி போடுகிறேன், நீங்கள் உட்காருங்கள்” என்றாள். 

அதன் பிறகு தான் தேவேந்திரனுக்கு, வந்ததும் விளக்கேற்ற சொல்லாதது நினைவு வந்தது. இதுவரை அவர்கள் வீட்டில் பூஜை என்று சிறப்பாக எதுவும் செய்தது கிடையாது. இந்திரன் மட்டும் நல்ல நாள், விசேஷ நாட்களில் ஒரு அலமாரியில் இருக்கும் தங்கள் குலதெய்வ படத்திற்கும் முருகர், விநாயகர் படத்திற்கும், பூ போட்டு விளக்கேற்றி சாமி கும்பிடுவர். 

தேவராஜனுக்கு அந்தப் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. இப்பொழுது விசுவின் மனைவி கேட்டதும், “ஆமாம் வீட்டுக்கு மருமகள் வந்ததும் விளக்கேற்ற தானே செல்வார்கள். நீங்க என்ன அடுப்பை பற்ற வைக்க செல்கிறீர்கள். வாருங்கள் என்று தந்தை வழிபடும் பூஜை அறை செல்ஃப் காண்பித்தான். “இதுதான் எங்க அப்பாவோட பூஜை அறை. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று இப்பொழுது விளக்கேற்றுங்கள்” என்றான். 

அவரும் புன்னகையுடன் அங்கிருந்த காமாட்சி அம்மன் விளக்கிற்கு, எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினார். 

அனைவரும் சாமி கும்பிட்டு முடித்ததும், “இப்பவாவது போய் நான் காபி போடட்டுமா?” என்றான். அவர் அப்படி கேட்டதும் அவரைப் பார்த்து சிரித்த தேவராஜன், “அம்மா இது உங்கள் வீடு. உங்களுக்கு என்ன தோணுதோ அதை சமைத்து எங்களிடம் கொடுத்து, இதுதான் சாப்பாடு என்று சொன்னால், நாங்கள் வாயை மூடிக்கொண்டு சாப்பிட போகிறோம்” என்றான். 

“வாயை மூடிக்கொண்டு எப்படிப்பா சாப்பிடுவ?” என்று அவர் வெகுளியாய் கேட்பது போல் கேட்க, அனைவரும் சிரித்து விட்டனர். 

இந்திரனுக்கு மகன் முகத்தில் இருந்த சிரிப்பும் இந்த வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றியதும், உண்டான ஒரு நிறைவும் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. இத்தனை காலம் வெறும் செங்கற்களால் நிறைந்த கட்டிடம் போல் பொலிவிழந்து இருந்த அந்த வீடு, இன்று அனைவரது சிரிப்பு சத்தத்தில் ஜொலிப்பது போல் இருந்தது. 

அதில் இயல்பாக அவரது மனம் கடவுளுக்கு நன்றியை கூறியது. தன் அப்பா அம்மாவை நினைத்து கொண்ட இந்திரன், ‘பாருங்கள் அம்மா தேவா எனக்காக என்னெல்லாம் செய்து கொண்டிருக்கிறான் என்று’ என்று தன் தாய் தந்தையரையும் நினைத்து கொண்டார். 

காபி குடித்து முடிந்ததும் விசுவும் அவனது மனைவியும் கிளம்புவதாக கூற, இரவு சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்று காமாட்சி கூறினார். 

“இல்லை அம்மா என் மற்றொரு நாள் வந்து சாப்பிடுகிறேன். இன்று நாங்கள் இவள் வீட்டிற்கு போகிறோம்” என்று மனைவியை காண்பித்தான். 

அவரும் சந்தோஷமாக “சரி போயிட்டு வாருங்கள். இனிமேல் இங்கு வரும் பொழுது சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும்” என்று அன்புக் கட்டளையாக சொன்னார். 

விசுவும் அவனது மனைவியும் கிளம்பியதும், வீட்டில் மூவர் மட்டுமே ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்திருந்தார்கள். வாசுகி உடன் விளையாடிக் கொண்டிருந்த தேவராஜன், தன் தந்தையிடம் “கோயிலில் வைத்து நீங்கள் எதுவோ பேச வேண்டும் என்று சொன்னீர்கள். இப்பொழுது சும்மா உட்கார்ந்து சுவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் சட்றென்று காமாட்சியை பார்த்த இந்திரனுக்கு, என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று புரியாமல் அமைதியாக இருந்தார். 

தேவராஜன் பேசியதை கேட்டதும் காமாட்சிக்கும் ஒரு மாதிரி சிறு தயக்கமும் பயமும் அவர் உடம்பில் தோன்றியது. கைகளை பிசைந்து கொண்டு தலைகவிழிந்து உட்கார்ந்திருந்தார். 

இருவரையும் பார்த்த தேவராஜன் வாசுகி தூக்கிக்கொண்டு ‘நீ வாடா குட்டிமா, நம்ம ரெண்டு பேரும் அண்ணன் ரூமுக்கு போகலாம். அப்பாவும் அம்மாவும் ஏதோ முக்கியமான விஷயம் பேசப் போகிறார்களாம். சின்ன பசங்க நாம இங்க இருக்க கூடாது. சரியா?” என்று குழந்தையிடம் பேசிக் கொண்டே, குழந்தையை நோக்கி கையை நீட்ட, உடனே அவனிடம் தாவியது குழந்தை சிரித்துக்கொண்டே. 

தன்னிடம் வந்த குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்த தேவராஜன், “இருவரும் இன்றே பேசிக் கொள்ளுங்கள். நாளைக்கு உங்கள் இருவரிடமும் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்” என்று பீடிகை வைத்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். 

‘நாளை ஏதோ பேச வேண்டும் என்று சொல்றானே? இன்னைக்கே இவன் பண்ணினது அதிர்ச்சியா இருக்கு. நாளைக்கு இன்னும் என்ன பண்ணப் போகிறானோ?’ என்று நினைத்து பயந்தபடி செல்லும் தன் மகனின் முதுகை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் இந்திரன். 

அவன் அங்கிருந்து சென்றதும் அங்கு ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும்போது அமைதியாக இருந்தது. அந்த அமைதியை கலைக்கும் வண்ணம் தொண்டையை செருமிய இந்திரன் “என் பெயர் இந்திரன். உங்க.. உன்..” என்று திணறினார். 

“என் பெயர் காமாட்சி” என்று காற்றுக்கு கூட வலிக்கா வண்ணம் மெதுவாக கூறினார் காமாட்சி. 

“ம்ம்ம்” என்று சொல்லிய இந்திரன் “என்னை பற்றி எதுவும் கூறினானா தேவா?” என்று சந்தேகமாக கேட்டார். அவரோ இல்லை என்று தலையாட்டினார். உடனே தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தார் இந்திரன். “என் பெயர் இந்திரன்” என்றார் 

“அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே!” என்று மென்னகையுடன் கூறினார் காமாட்சி. 

அவரின் புன்னகை முகத்தை பார்த்ததும் இந்திரன் முகத்திலும் லேசாக புன்னகை தோன்றியது.

அந்தப் புன்னகையுடனே தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தார். “நான் கல்லூரி படிப்பு முடித்ததும், அந்த வருடமே வேலையில் சேர்ந்து விட்டேன். வேலையில் சேர்ந்தும் திருமணமும் முடிந்தது. உடனே தேவாவும் பிறந்து விட்டான்” என்று 

தேவா பிறந்ததை பற்றி சொல்லும் போதே இனிமையாக கனிந்தது இந்திரனின் முகம்.

தொடரும்…

அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *