Skip to content

லாவா மன்னவா-25

53 / 100 SEO Score

அத்தியாயம்-25

கமலகண்ணன் ஓரளவு உடல்நிலை சீராகி சிறிது சிறிதாக நடைமுறை உணவை எடுத்துக் கொள்ள, ரவிபிரகாஷோ “இப்படி உடல்நிலையை கெடுத்து வச்சிட்டு தான் கல்யாணத்தை அவசரமா பண்ணினியாடா?” என்று கேட்க கமலகண்ணன் சிறுமுறுவலிட்டார்.

“உயிரோட இருக்கறப்பவே அட்லீஸ்ட் ஒரு பொண்ணை கட்டிக் கொடுத்த நிம்மதியாவது கிடைக்கும்னு நினைச்சேன் டா. ஆனா மருமகன் எனக்கு மறுபிறவி கொடுத்துட்டார்.” என்று புகழ்ந்தார்.‌

“விஷயம் தெரியுமா? மருமக உன்னை விட என் பையனை தான் சுத்தி சுத்தி வர்றா. மருமகளுக்கு என் பையன் மேலயிருந்த கோபம் சூரியனை கண்ட பனியா போயிடுச்சு போல” என்று சந்தோஷமாக உரைத்தார்.

கமலகண்ணனோ “மாப்பிள்ளை உண்மையிலேயே நல்லவரு டா. நீ அவர் காதலிச்ச பொண்ணை அறுத்துவிட்டிருக்க கூடாது. ஆனா ஒரு விதத்தில் எம் மக மேல இந்த காதல் வந்தா… அவ கொடுத்து வச்சவ.” என்றவரை டிஸ்சார்ஜ் செய்வதற்காக ஏற்பாடுகள் மறுபக்கம் நடந்துக் கொண்டிருந்தது.

விக்ரம் எழுந்து நடமாடவும் அவனே டாக்டரிடம் கேட்டு வாங்க அலைந்து திரிந்தான்.
“நீ போயிருக்கலாம்ல. எதுக்கு அவரை அலையவிட்ட” என்று வினோதினியை ஹரிணி கடிய, “மாமா தான் அக்கா, நான் போறேன்னு சொன்னார்.” என்று இதோடு மூன்றாவது முறைக்கு மேலாக வினோதினி அலுத்துக் கொண்டாள்.

‘அவருக்கும் கிட்னி எடுத்த இடத்துல தையல் போட்டிருக்கு. ஆற வேண்டாம். அதுக்குள்ள என்ன வேலை?” என்று பேசி திரும்ப, விக்ரமோ இடுப்பில் கையை வைத்து நின்றான்.

தான் இல்லாத பொழுதும் தனக்காக துடிக்கின்ற ஹரிணியை கண்டு திக்குமுக்காடி போனான்.
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தந்தையை மாமனாரை காண சென்றான்.

ராதிகா மாலதி இருவரையும் வீட்டில் இருக்க கூறியதால், நண்பனையும் மகனையும் அழைத்து செல்ல ரவிபிரகாஷூம் ஹரிணி வினோதினி வந்துவிட்டார்கள். வினோதினி கூட, வீட்டில் அம்மாவோடு இருக்க போரடிக்குமென தான் இங்க ஹாஸ்பிடல் வந்தது. அப்படியாவது வெளியே சுற்றி கடையில் திண்பண்டம் வாங்கி திங்க, விக்ரம் மாமாவோடு பேசி பழக, கல்லூரி பற்றி கேட்கவும் படிப்பு சம்மந்தமாக பேசவும் நேரம் கழித்தாள்.

அங்கொருத்திக்கு காந்தினாலும் விக்ரமோடு தங்கை பேசுவதில் தவறாக கருதவில்லை.

டாக்டர், சம்மரி கொடுத்ததும் மருந்து மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

ஒரு வாரத்திற்கு மேலாக ஊரில் போட்டது போட்டபடியாக உள்ளதென்று புறப்பட தயாரானார்கள்.

டிராவல் எல்லாம் வேண்டாம்
ஆப்ரேஷன் செய்த உடல் என்று கமலகண்ணனை மட்டும் இங்கே இருக்க கூறியதற்கு, ரயில் டிராவல் செய்யலாமென்று டிக்கெட் போட்டு விட்டார்.

விக்ரம் அதற்கு பிறகு வற்புறுத்தவில்லை.
அப்பா ரவிபிரகாஷ் அம்மா ராதிகா, மற்றும் மாமனாரை அவரது குடும்பத்தில் மாலதி அத்தை வினோதினி என்று பார்த்துக் கொள்வார்களென விட்டுவிட்டான்.

ஹரிணியும் சொல்லி பார்த்து சம்மதமாய் ரயிலில் செல்வதற்கு விட்டுவிட்டாள்.
வினோதினிக்கு அடுத்து சில சர்டிபிகேட் ஜெராக்ஸ் எல்லாம் எடுத்து வைத்து கல்லூரிக்கு சேர்க்க அலைய வேண்டும். தந்தை அவளை தனித்து விடுத்து தங்க மாட்டார். அதோடு…டாக்டரும் அதெல்லாம் டிராவல் செய்யலாம். கொஞ்சம் அடிக்கடி ரெஸ்ட் மட்டும் எடுத்துக்கோங்க.
ரொம்ப ஸ்டெயின் பண்ணாதிங்க. தையல் ஆறற வரை, அவரோட உடல் அந்த கிட்னியை அக்சப்ட் செய்து நார்மலுக்கு வரவும் சரியா இருக்கும் என்றதால் கூடுதலாக நாலு நாள் இருந்துவிட்டு புறப்பட ஆயத்தமானார்கள். இங்கிருக்கும் நான்கு நாளும் மாமனார் மருமகன் தான் கட்டிலில் படுத்திருந்தனர்.
கூடவே ரவிபிரகாஷ் தரையில் பாய் விரித்து படுத்து கொண்டார்.

மற்ற பெண்கள் நால்வரும் ஹாலில் கதையளந்து உறங்கினார்கள். சின்ன வீடு என்றாலும் சம்பந்தியின் இரண்டு குடும்பமும் அனுசரித்து இருந்தார்கள்.
காய்கறி கடை பக்கத்தில் உள்ள பூங்கா என்று வினோதினியை அழைத்து செல்ல, ஹரிணிக்கு நேரம் கழிந்தது.
கணவனோடு பேச தான் நேரமேயில்லை. அவளும் மனதை பகிர்ந்தப்பின், விக்ரமின் மனதில் என்ன உள்ளதென அறியும் ஆவவோடு நடமாடினாள்.

எப்படியோ காலம் காற்றாடி போல வேகமாய் இயங்க, ஆப்ரேஷன் நடந்து பத்து நாட்களுக்கு மேலான பிறகு திருப்பூர் செல்ல ரயிலில் பயணமானார்கள்.

விக்ரம் ஹரிணிக்கு அலைச்சல் வேண்டாமென கூறியதால் அவர்கள் ஸ்டேஷன் வரை செல்ல காரை ஏற்பாடு செய்ததோடு சரி.

ஹரிணி தான் அவ்வீட்டை ஏக்கமாய் பார்த்தாள்.

“வீடு ஜெஜெனு இருந்தது. இப்ப ஒரு மாதிரி சைலண்டா இருக்கு. இந்நேரம் ஸ்டேஷன் போயிருப்பாங்களா? ரயில் ஏறியிருப்பாங்களா? ஆப்ரேஷன் பண்ணிட்டு போறதால கொஞ்சம் பயமாயிருக்கு. மாமா பார்த்துப்பாரு. இருந்தாலும்….” என்று இழுத்தவள் விக்ரம் தன்னை பார்வையிட அமைதியானாள்.

‘கொஞ்ச நேரம் வாயை மூடுதா!’ என்று மடிக்கணினியை விரித்து வேலையை காண அமர்ந்தான்.

இரண்டு நாட்களாய் ஹோர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு வீட்டிலேயே வேலை பார்க்கின்றான்.

ஹரிணியோ ஹாலிலேயே புரண்டு புரண்டு படுத்து, அடிக்கடி எட்டி பார்த்து, பாத்ரூம் செல்வதாக அறைக்கு வந்து விக்ரமை நோட்டமிட்டு பால்கனி வந்து சோர்வாய் அமர்ந்தாள்.

மாலை நேரம் மங்கத்துவங்க, அதுகூட அறியாமல் பால்கனியில் வேடிக்கை பார்த்தாள்.
விக்ரம் காபி தயாரித்து இரண்டு கப்பில் ஊற்றி கொண்டு வந்ததும், “என்னிடம் காபி கேட்டிருக்கலாமே. சாரி… நேரத்தை கவனிக்கலை” என்றவளிடம் காபி கப்பை நீட்டினான்.

“தேங்க்ஸ்” என்று பெற்றுக் கொண்டாள்.

“எனக்குமே வீடு முழுக்க ஆட்கள் இருந்துட்டு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு.” என்றான்.

ஹரிணி அவனை பார்த்து தூரத்தில் சூரியன் மறையும் திசையை வெறித்தாள். ஆங்காங்கே பறவைகள் சிறகை விரித்து பறந்து கூட்டிற்கு சென்றது.

காபி கப்பை மிடறு பருகி முடித்து, “யார் மேலையோ இருந்த கோபம். அப்ப வந்த உன்னிடம் காட்டிட்டேன்.” என்று விக்ரம் பேசவும் ஹரிணி காபியை பருகி உதட்டை ஈரப்படுத்தி, என்ன கோபம்? யார் மேல் கோபம் என்பது போல பார்வை வீசினாள்.

“அப்பா நதியாவிடம் பேசியதை அவங்க அப்பா அம்மா பார்த்துட்டு அவளுக்கு அவசரமா மேரேஜ் பண்ண முடிவெடுத்தாங்க. நான் என்ன பேசியும் என்னை நெருங்க விடலை.
காலேஜ் அனுப்பாம அவளுக்கு கல்யாணம் முடிச்சாங்க. அன்னிக்கு என்னால அதை தாங்க முடியலை. எனக்கு… வாழ பிடிக்கலை. யோசிக்காம தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து குதிச்சிட்டேன். அஜய் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டான்.
அன்னிலயிருந்து அப்பாவோட சுத்தமா பேசறதில்லை. பட்… தற்கொலை பண்ணறது தப்பு. அது காதல் தோல்விக்கு முடிவில்லைனு அனலைஸ் பண்ணிட்டேன். ஆனா அவளை மறக்க என்ன செய்யனு தெரியலை.
தம்மு தண்ணி எல்லாம் என்னைக்காவது என்று இருந்த காலம் போய், ஏதாவது ரிலாக்ஸ் பண்ண அப்படினு தான் பழகியது. பச் அது தான் ரிலாக்ஸ்னும் தப்பா கையிட் பண்ண மாட்டேன்.
நான் அரை லூசுதனமா அப்படி இருந்தேன்.
அன்னிக்கு காலையில அப்பாவை பிக்கப் பண்ண பைக் எடுத்துட்டு வேகமா கிளம்பினேன்.

இரண்டு தெரு தாண்டினப்ப…., நதியாவை பார்த்தேன். அவ பெட்டியை எடுத்துட்டு, காலையிலயே நடந்துட்டு வந்திருந்தா. அதுவும் அழுதுட்டே போனா.
என்ன தான் நதியா வேறொருத்தன் பொண்டாட்டினு என்றாலும், அவ கண்ணீரோட நடந்து போறதும் மனசு கேட்கலை.
காதலிச்ச என்னை வச்சி அவங்களுக்குள் ஏதாவது சண்டையா இருக்குமோனு பயந்து தான் அவளிடம் பேச கிட்ட போனேன்.‌ என்னை பார்த்து பயப்படுவா.. பேசமாட்டானு நினைச்சேன்.

ஆனா அவளா… ‘விக்ரம்… நீயா.‌ எப்படிடா இருக்க. ஐ மிஸ் யூ விக்ரம்னு கட்டிப்பிடிச்சா.’ ஆளில்லாத இடம். எனக்கு உதறல் எடுத்தாலும் அவளை தள்ளி நிறுத்தி, ‘எப்படியிருக்க? நல்லாயிருக்கியா? என்ன காலையிலயே.. அழுதுட்டு வந்த மாதிரி இருக்கு’னு கவலையா கேட்டேன்.

‘நான் அவசரப்பட்டுட்டேன் டா. உங்கப்பா மேல கோபம் வரவும், இனி அந்தாளு முகத்துல முழிக்கணுமானு எங்கப்பா பார்க்கறவனை கல்யாணம் பண்ணினேன். நல்லா தான் லைப் போச்சு. ஆனா இப்ப…’ என்று அழதா.

எனக்கு அவ பாதில பேச்சை முடிக்கவும் கூடுதலா பயமாயிடுச்சு.
அப்பறம் அவளா பேச்சை தொடர்ந்தா. அவ பேச பேச அவ மேல இருந்த கொஞ்ச நஞ்ச காதல் தரைமட்டா போயிடுச்சு.” என்று விக்ரம் ஹரிணியை பார்த்தான்.

சற்று இடைவெளியிட்டு தொடர்ந்தான். “அவங்க மாமியார் குழந்தை உண்டாகலைனு அவளை ரொம்ப திட்டியிருக்காங்க.  போற வர்றவங்ககிட்ட எல்லாம் கல்யாணமாகி சும்மா தான் இருக்கானு இவளை ஹர்ட் பண்ணிருக்காங்க.
அதுக்கு இவ அவளோட புருஷனிடம் அவளுக்கான செக்ஸை தேடியிருக்க. அவன் குழந்தை வர்றப்ப வரட்டும்டி. என்னை தொல்லை பண்ணாதனு இவளை திட்டியிருக்கான்.
அந்த விஷயத்துல என்னை திருப்திப்படுத்த மாட்டேங்கறான். எனக்கு உன்னோடவே வாழ்ந்திருப்பேன். விக்ரம்… இப்பவும் எதுவும் கெட்டு போகலை. எனக்கு உன்னோட குழந்தையை பெத்துக்கணும். நான் வந்தது வீட்டுக்கு தெரியாது. நாம ஒரு லாட்ஜில் புக் பண்ணலாமானு என் கையை பிடிச்சா.” என்று கூறியவனுக்கு தொண்டை அடைத்தது.

ஹரிணிக்கு இதை கேட்க குமட்டியது. இது தகாத உறவுக்குள் தள்ளும் விஷயமாயிற்றே குமட்டாமல் இல்லாமலா?!

விக்ரமோ இடது கையால் நெற்றியை கீறியபடி “அந்த செகண்ட் தான், நான் எப்படிப்பட்ட பொண்ணை காதலிச்சேன்னு ஏமாந்த தருணம்.
‘ஏன் இப்படி பேசற. கல்யாணமாகி இப்ப தானே ஆறு மாசம் ஆகுது. இப்படி பேசாத’னு அவ கையை தட்டி விட்டேன்.
அதுக்கு அவ.. ‘இல்லைடா… நீ வேணும். ப்ளீஸ்.. என்னை எடுத்துக்கோ. எனக்கு நீயும் வேணும்னு சொன்னா.

“நான் லவ் பண்ண பொண்ணு நீயில்லை‌. இது தகாத உறவு, உன் புருஷனுக்கு தப்பு செய்யாத. இதான் நம்ம கடைசி சந்திப்பு. இப்படிப்பட்டவளை காதலிச்சதை நான் வெறுக்கறேனு சொல்லிட்டு பைக்கை எடுத்துட்டு கிளம்பினேன்.

என்னால எந்தளவு வேகமா ஓட்ட முடியுமோ அந்தளவு பைக்கை முறுக்கிட்டு அங்கிருந்து வந்தேன். அந்தளவு நதியா மேல எனக்கு வெறுப்பு, கோபம். அந்த நேரம் மழையில வழுக்கிட்டு விழுந்து எனக்கெதாவது ஆனாலும் செத்துடலாம்னு முடிவு.
ஆனா எதிர்தரப்புல யாராவது வருவாங்க. அவங்களுக்கு என்னால ஆபத்து வரும்னு யோசிக்க மறந்த மடையனா இருந்தேன்.‌ நான் தான் சில நேரத்துல செல்பிஷ்ஷா யோசிப்பேனே.
அதோட பலன்… உன்னை மோத வந்தேன். அந்த நேரம் ஏன் அப்படி திட்டினேன்னு எனக்கு சத்தியமா தெரியலை. இதே அந்த இடத்துல ஒரு பையன் இருந்து, அதே வார்த்தை தமிழ்ல திட்டியிருப்பேன். அடிதடி சண்டையா ஆர்கியூமென்ட் நடந்திருக்கும். பிரச்சனை வந்து போலீஸ் ஸீடேஷன்ல நின்றுயிருப்பேன்.
நீ பொண்ணு என்பதால அந்த செகண்ட் ‘ஃப்க்யூ’னு திட்டிட்டேன். ரியலி… உன்னை திட்டியதால தான் அன்னிக்கு எனக்கு நதியா நினைக்காம போனேன்.
இல்லைன்னா நான் காதலிச்ச பொண்ணு இவ்ளோ மோசமானு அவளை நினைச்சி நினைச்சி நான் ஒரு வழியாகியிருப்பேன்.

உன்னை ஃபக்யூனு திட்டிட்டு பஸ் ஸ்டாப் வந்தேனா, என்னடா இது நதியா மேலயிருந்த கோபம், யாரோ ஒரு முன்னபின்ன தெரியாத பொண்ணிடம் கெட்ட வார்த்தை பேசிட்டோம்னு ஒரே டென்ஷன். அசிங்கமா போச்சு. அப்பா மட்டும் நதியாவை திட்டியதுக்கு உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இதே வார்த்தை கேட்பிங்களானு கேட்டேன். இப்ப நான் மோசமா உன்னை திட்டியதுல ரொம்ப வருத்தப்பட்டேன்.

பஸ் ஸ்டாப் வந்து அந்த டென்ஷன்ல தம் அடிச்சப்ப தான் அப்பா பார்த்துட்டார்.

வீட்டுக்கு வந்ததும் அதுக்கு பிறகும், ‘அச்சோ அந்த பொண்ணிடம் தப்பா பேசிட்டோமேனு ரொம்ப நாள் உன்னை நினைச்சியிருக்கேன்.
சம்டைம் அதே வழியில இரண்டு மூனு தடவை நின்று இருந்தேன். நீ வந்தா சாரி கேட்கலாம்னு.‌

அப்பா இரண்டு வரன் நிராகரிச்சிட்டாங்கனு சொன்னார்.
அப்ப தான் அன்னிக்கு அந்த பொண்ணு வொயிட் கலர் டிரஸ்ல ஏஞ்சல் மாதிரி வந்தா. அவளிடம்  அசிங்கமா பேசிட்டோம். அவளுக்கு அந்த வார்த்தை பேசிய என்னை மனசுக்குள்ள என்னலாம் திட்டினாளோ? ஏற்கனவே லவ் புட்டுக்கிச்சு… அந்த பொண்ணு வேற என்னலாம் சாபம் தந்தாளோ, எனக்கு இனி நல்ல லைஃப் பாட்னரே கிடைக்காதுனு ஃபீல் பண்ணினேன்.

ஆனா அதென்னவோ நதியா மேலயிருந்த காதல் துளிகூட இல்லை.
ஜம்முனு பொண்ணு பார்க்க, ஆசை ஆசையா தான் வந்தேன்.
எனக்குன்னு பிறந்தவளை அப்பா அம்மா பார்த்து, அவங்க விருப்பத்தோட, அவங்க ஆசையோட, ஊரறிய கல்யாணம் செய்து வச்சி அவளோட நல்லபடியா வாழ்ந்தா போதும்னு வந்தேன். ஆனா சத்தியமா உன்னை தான் பொண்ணு பார்க்க வருவேன்னு கனவுல கூட நினைக்கலை.

உன்னை பார்த்ததும் செம ஷாக். இவளை கல்யாணம் செய்தா. சாரி கேட்கணும். அதுகூட கேட்டுடலாம். ஆனா என்ன காரணம்னு சொல்லணும். காதலிச்சதை சொல்லணுமானு ஒரே குழப்பம். நீ வேற என்னை பிடிக்கலைனு சொல்லி திட்ட, சரி வந்த வழியா போகலாம்னு தான் விட்டுட்டேன்‌.

ஆனா அப்பா ரொம்ப ஆசைப்பட்டார். அடுத்த நாளே நீ ஓகேன்னு சொன்னதும்… எனக்கு கோபமாகிடுச்சு.

அசிங்கமா திட்டியும் இந்த பொண்ணு ஓகே சொல்லுதுன்னா என்ன ஜென்மம்னு. நதியா மூலமா காயப்பட்தால அப்படி தான் யோசித்தேன்.
நீ சம்மதிக்க ஏதாவது காரணம் இருக்கும்னு நினைக்கலை. உன்னை பார்க்க கோபமா வந்தேன். உன் கழுத்தை நெறிச்சேன்.
நீ பிறகு ரீல்ஸ் எடுத்து காட்டி காரணம் சொன்னதும், என்ன செய்யனு தெரியலை. உன்னிடம் ஏற்கனவே பேசியதுக்கு மன்னிப்பு கேட்கலை. இதுல கழுத்தை வேற நெறிச்சு கோபமா நடந்துக்கிட்டேன். அதனால கல்யாணம் பேசி பத்திரிக்கை அடிச்சி கொடுக்கற வரை இந்த பக்கமே வர வேண்டாம்னும், உன்னிடம் பேச வேண்டாம்னு இருந்தேன்.‌
நம்பர் கூட அப்பா தந்தப்ப சேவ் பண்ணலை‌.

நம்ம மேரேஜ் அப்ப, ஏதோ உருத்துச்சு. அஜய் தண்ணி தந்தப்ப தான், என் கையில இருந்த மோதிரமே எனக்கு கவனத்துல வந்துச்சு. நானும் நதியாவும் காதலிச்சப்ப அந்த மோதிரம் மாத்தி, போட்டுக்கிட்டது.
அது இன்னமும் என் கையில இருக்கவும், அந்த சூழ்நிலை என்ன சுத்தி இருக்கற சொந்தபந்தம் யாரையும் மைண்ட்ல வரலை. பக்கத்துல இருக்க உனக்கு தாலி கட்டும் போது மனசால சுத்தமா இருக்கணும்னு மோதிரத்தை நெருப்புல போட்டேன்.

ஆப்டர் மேரேஜ் முதலிரவு, உன்னோட பேச முடியலை. நமக்குள் பெரிய சண்டை இருந்தது.
உன்னிடம் பழகினப்பிறகு  ரிலாக்ஸா சொல்லணும்னு வெயிட் பண்ணினேன். ஆனா நீ ஒவ்வொரு முறையும், உங்கப்பாவுக்காக தான் என்னை கல்யாணம் செய்துக்கிட்டதா பேசவும், எனக்காக நீ எப்ப யோசிக்கறியோ அப்ப பார்க்கலாம்னு இருந்தேன்.

இங்க வந்தப்பிறகும் நீ நீயா இருந்த. நான் நானா இருந்தேன். பச் இந்த பொண்ணுக்கு நான் பேசின வார்த்தையை மறக்க முடியலை. சாரி கேட்கலாமானு பலதடவை யோசித்து பேச நினைச்சி வீட்டுக்கு வந்திருக்கேன். ஆனா நீ கதவை  தாழ்பாள் போட்டது. நான் கதவை தாழிட்டது. உன்னோட பீரியட்ஸ் அப்ப வேற நடந்ததா. மறுபடியும் மறுபடியும் இந்த பொண்ணை காயப்படுத்தறேனேனு கஷ்டமாகிடுச்சு.

சரி எதுவரை போறோமோ அதுவரை இருக்கட்டும்னு வெயிட் பண்ணினேன்.

சடன்னா மாமா வரவும் அவருக்கு உடல்நிலை மோசமாக, நான் கிட்னி தரவும், நீ அதனால என்னை ஏதோ கடவுள் ரேஞ்சுக்கு பார்க்க, மனசு ரணமாகிடுச்சு. நான் உன்னிடம் உண்மையான அன்பை எதிர்பார்த்தேன். நீ காட்டியது போலியா இருக்கும்னு தான் ஹாஸ்பிடலில் அப்படி பேசினேன்.
ஆனா நீ என்னை விரும்பறதா சொன்னதும், எனக்குள்ள சந்தோஷம் வந்துச்சு.

பைனலி… இந்த இங்கிலிஷ் படத்துல வர்ற மாதிரி ட்ரூ லவ்.” என்று கூற ஹரிணி அவன் முதுகை அணைத்துக் கொண்டு நின்றாள்.

-தொடரும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!