Skip to content
Home » வெஃகாமை-18

வெஃகாமை-18

அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18

குறள்-171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே வந்து சேரும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்-172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமை அல்லாதவற்றைக்‌ கண்டு நாணி ஒதுங்குகின்றவர்‌, பிறர்‌ பொருளைக்‌ கவர்வதால்‌ வரும்‌ பயனை விரும்பிப்‌ பழியான செயல்களைச்‌ செய்யார்‌.

குறள்-173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

அறநெறியால்‌ பெறும்‌ இன்பத்தை விரும்புகின்றவர்‌, நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம்‌ அல்லாதவற்றைச்‌ செய்யார்‌.

குறள்-174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

ஐம்புலன்களையும்‌ வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர்‌, “யாம்‌ வறுமை அடைந்தோம்‌’ என்று எண்ணியும்‌ பிறர்‌ பொருளை விரும்பார்‌.

குறள்-175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

யாரிடத்திலும்‌ பொருளைக்‌ கவர விரும்பிப்‌ பொருந்தாதவற்றைச்‌ செய்தால்‌, நுட்பமானதாய்‌ விரிவுடையதாய்‌ வளர்ந்த அறிவால்‌ பயன்‌ என்ன?

குறள்-176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருளை விரும்பி அறநெறியில்‌ நின்றவன்‌, பிறனுடைய பொருளை விரும்பிப்‌ பொல்லாத குற்றங்களை எண்ணினால்‌ கெடுவான்‌.

குறள்-177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பிறர்‌ பொருளைக்‌ கவர விரும்புவதால்‌ ஆகும்‌ ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்‌; அது பயன்‌ விளைக்கும்போது அப்பயன்‌ நன்மையாவது அரிதாகும்‌.

குறள்-178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

ஒருவனுடைய செல்வத்திற்குக்‌ குறைவு நேராதிருக்க வழி எது என்றால்‌, அவன்‌ பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்‌.

குறள்-179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

அறம்‌ இஃது என்று அறிந்து பிறர்‌ பொருளை விரும்பாத அறிவுடையாரைத்‌ திருமகள்‌ தான்‌ சேரும்‌ திறன்‌ அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்‌.

குறள்-180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

விளைவை எண்ணாமல்‌ பிறர்‌ பொருளை விரும்பினால்‌ அஃது அழிவைத்‌ தரும்‌; அப்பொருளை விரும்பாமல்‌ வாழும்‌ பெருமை வெற்றியைத்‌ தரும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!