Skip to content
Home » 06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு கலைச்செல்வி ஒருவாரமாக காலேஜ் வரவில்லை கவலையில் மூழ்கி போனது என்னவோ ஸ்ரீ தான் போன் எடுத்தாலும் ஆன்சர் இல்லை வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்றாள் தன் வீட்டில் இருந்து ஆயிரம் கேள்வி கணக்குகளை கேட்டு படுத்தி எடுப்பார்கள் என்ன செய்வது என்ற சிந்தனையில் உலன்று கொண்டு இருந்தாள்.

தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தவளின் அருகில் வந்தான் யாதவ் “ஸ்ரீ இன்னைக்கு கூடவா செல்வி வரலே…”

“ம்ம் ஆமா சீனியர் அத்தனை பேர் முன்னாடியும் அவளை இதான் நேரம்னு நல்லா வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க நீங்களும் அவளை அவனுங்ககிட்ட இருந்து காப்பாத்தினதோட விட்டிருக்கலாம் சீனியர் நீங்க பேசி பழகினது தான் இங்கே நிறைய பேருக்கு அவள் மேல கோபத்தை வர வெச்சிருக்கு ஏற்கனவே தன்னையே தாழ்த்திக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருந்தா இப்போ சொல்லவே வேணாம்…” என்றவள் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவன்.

“ஸ்டேஜ்ல நடந்தது யாரோட வேலைன்னு உனக்கு தெரியுமா ஸ்ரீ?…”

“யாரு ப்ளேன் போட்டதுன்னு தெரியல ஆனா ஒன்னு ரெண்டு பேரை அடையாளம் தெரியும் அவங்க தான் மத்தவங்களையும் தூண்டி விட்டது சரி சீனியர் அதை நான் பார்த்துக்கிறேன் இதுக்கு மேலேயும் நீங்க இந்த விஷயத்திலே தலையிட வேணாம் அது இன்னும் அவளுக்கு பிரச்சினையை தான் கொடுக்கும்…” என்றவள் தன் பையை எடுத்துக்கொண்டு க்ளாஸ் ரூமிற்கு சென்றவளுக்கு மனம் கேட்கவில்லை காலேஜ் கட் அடித்து விட்டு கலைச்செல்வி வீட்டை நோக்கி சென்றாள்.

“செல்வி உனக்கு என்ன ஆச்சு ஒருவாரம் காலேஜுக்கும் போகல எங்கயாவது வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க இதுலே சரியா சாப்பிடுறதும் இல்லை இப்படியே இருந்து வேறெதும் நோயை இழுத்து வெச்சிடாதே ஒழுங்கா வந்து இதை சாப்பிடு…”

“இப்போ எதுக்கு புள்ளைகிட்ட சத்தம் போடுற மெதுவா தான் பேசேன் கல்யாணி…”

“உங்க பொண்ணுக்கிட்ட எப்படி எப்படி பேசனுமோ எல்லா மாதிரியும் பேசியாச்சு அவள் தான் வாயே திறக்க மாட்டேங்கிறாளே நீங்களாச்சும் உங்க மகளாச்சும் என்னமோ பண்ணுங்க வாயை திறந்து ஏதாவது சொன்னா தானே என்னன்னு தெரியும் பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்து இருந்தா எல்லாம் சரியாகிடுமா?…” என்றவர் மகளிடம் கத்தி விட்டு திரும்ப வாயிலில் தயக்கமாக நின்று கொண்டு இருந்தாள் ஸ்ரீ.

“ஸ்ரீ ஏன் அங்கயே நிக்கிறே உள்ள வா…” என்றவரின் பேச்சில் அவசரமாக நிமிர்ந்து பார்த்தாள் கலைச்செல்வி “ஹா இதோ வரேன் ஆன்டி…” என வந்தவளையும் மகளையும் மாறி மாறி பார்த்த சுந்தர்.

“வாம்மா ஸ்ரீ உன்னை பத்தி தான் வீட்டுல சொல்லிக்கிட்டே இருப்பா நல்லா இருக்கியாமா?..”

“ஹா நல்லா இருக்கேன் அன்கிள்…” என அவருக்கு புன்னகை முகமாக பதில் கொடுத்தாள்.

“சரிம்மா ரெண்டுப்பேரும் பேசிக்கிட்டு இருங்க எனக்கு வேலை இருக்கு நான் வரேன்…” என்றவர் கல்யாணி வா… என அவரையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

அவர்கள் சென்றதும் ஸ்ரீ கலைச்செல்வியை நெருங்கினாள் கலை… என அழைத்தவளின் கரம் பற்றி அறைக்குள் இழுத்து சென்றாள் “அம்மா அப்பாக்கு நடந்தது எதுவும் தெரியாது அதனாலே மெதுவா பேசு நீயா பேசி எதையும் காட்டிக் கொடுத்திடாதே…” என எச்சரித்தாள் கலைச்செல்வி.

“என்னை ஏங்க வர சொன்னீங்க..”

“எல்லாம் காரணமா தான் பிள்ளைங்க ரெண்டுப் பேரும் பேசிக்கட்டும் நீ குறுக்க போகாதே காலேஜ்ல தான் ஏதோ நடந்து இருக்கும் புள்ள நம்ம கஷ்டப்படுவோம்னு தான் சொல்லாம இருக்கா இல்லைன்னா எப்பவோ சொல்லி இருக்கும் நீ எதையும் தோண்டி துருவாம உன் வேலையை மட்டும் பாரு…” என்றவர் வெளியே சென்று விட இவரும் அவர் சொன்னது போல நடந்து கொண்டார்.

“நீ காலேஜ் கட் பண்ணிட்டு என்ன பார்க்க வரனுமா உன் அக்கா பார்த்தா உன் நிலமை என்ன ஆகுறது…”

“அதெல்லாம் நான் சமாளிச்சுக்கிறேன் நீ எப்போ காலேஜ் வர ஐடியாலே இருக்க போன் போட்டா கூட எடுக்க மாட்டேங்கிற என்ன தான் பிரச்சினை உனக்கு…”

“எந்த மூஞ்சை வெச்சிட்டு நான் அங்கே வரது நீயே பார்த்தியே என்னை எல்லாரும் எப்படி அவமானப்படுத்தினாங்க கருப்பா இருந்தா இப்படி தான் அசிங்கப்படுத்துவாங்களா கருப்பும் ஒரு கலர் தானே அது ஏன் அவங்களுக்கு புரியல அதை சொல்லி கத்தி அசிங்கப்படுத்தி ச்சே திரும்ப நான் அந்த காலேஜுக்கு வந்தா வழக்காம கிண்டல் பண்ணி வம்பு இழுத்திட்டு இருந்தவங்களை தவிர மொத்த காலேஜும் சேர்ந்து என்னை‌ கிண்டல் பண்ணி‌ சிரிக்கும் அந்த அவமானத்தை தாங்கிக்க என்னாலே முடியாது அதுக்கு பதிலா செத்து போயிறலாம்…” என்றவளை கலங்கிய கண்களுடன் அணைத்துக் கொண்டாள்.

“ஏன்டி இப்படி எல்லாம் பேசுற நடந்தது தப்பு தான் உன்னாலே இதை ஏத்துக்கவே முடியலன்னு எனக்கும் அது புரியிது நான் இல்லைன்னு சொல்லலே ஆனா அதுக்காக உன் கனவு, லட்சியம் எல்லாத்தையும் இந்த நாலு சுவத்துக்குள்ள போட்டு புதைக்க போறீயா நீ தோத்து போக போறீயா? என் கலை தோத்து போறது எனக்கு பிடிக்கலே அவள் ஜெயிக்கனும்னு நான் ஆசைப்படுறேன் உன்னை இழிவா நினைச்சவங்க உன்னை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி செய் அடிக்க அடிக்க ஓடிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா நல்லா யோசி கலை எவனோ ஒருத்தன் செய்றான் உன்னை கிண்டல் பண்ணுறான்னு உன் கனவை தொலைச்சிடாதே உன் மேல உள்ள அக்கறையிலே தான் சொல்றேன் இழந்ததை நினைச்சு பிறகு ஒருநாள் கவலைப்படுறதுல எந்த பயனும் இல்லை…” என்றவள் அவளுக்கு யோசிக்க நேரம் கொடுத்து விட்டு சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

வெகுநேரமாக ஸ்ரீ சொன்னதை மூளையில் ஏற்றி அதை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருக்க தான் செய்தது தன் அறையில் இருந்த அந்த ஆளுயர கண்ணாடியில் தன் தோற்றத்தை பார்த்தாள் காலேஜில் நடந்த அனைத்தும் அவள் மனக்கண் முன்னால் வந்து எள்ளி நகையாடியது அதே நேரம் தன் தாய் தந்தை ஒவ்வொரு நாளும் நெருப்பின் அருகே மணிக்கணக்கில் நின்று படும் பாடு அத்தனையும் நினைவில் வர அவர்களுக்காகவாவது‌ படித்து முடிக்க வேண்டும் என்ற விவேகம் உருவானது.

எதிர்ப்பார்ப்புடன் காலேஜ் வாயிலில் தவிப்புடன் நின்றுக்கொண்டு இருந்தாள் ஸ்ரீ டைம் வேறு போய் கொண்டு இருந்தது இன்னும் பெண்ணவளை காணவில்லை வரவே மாட்டாள் போலும் என நினைத்தப்படி தன் வகுப்பை நோக்கி திரும்பி நடந்தவளை ஸ்ரீ… என்ற அவளின் அழைப்பு தடுத்து நிறுத்தியது உற்சாகமாக திரும்பி பார்த்தவளை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் கலைச்செல்வி.

“ரொம்ப பயந்துட்டேன்டி இன்னைக்கும் வராம இருந்திடுவியோன்னு…” என்றவளிடம் புன்னகையுடன் “வா க்ளாஸ்க்கு போலாம் டைம் ஆகுது…” என்றதும் இருவரும் வகுப்பறை நோக்கி நடந்தனர் கலைச்செல்வி துணிந்து வந்து விட்டாலும் அவள் இதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது பயத்தின் வெளிப்பாடாக இவர்கள் இருவரும் க்ளாஸ் ரூமை அடையும் போது அன்றைய முதல் பாடத்தை கற்றுக்கொடுக்க பேராசிரியரும் வந்திருந்தார்.

ஸ்ரீயுடன் இணைந்து வந்த கலைச்செல்வியை அத்தனை பேரும் ஒருவித திகைப்புடன் பார்த்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர் ஸ்ரீயின் கையை இறுக பிடித்துக்கொண்டாள் கலைச்செல்வி தங்கள் இடத்தில் போய் அமர்ந்து கொண்டவள் பாடத்தில் கவனத்தை செலுத்தினாள்.

மச்சான்… என நால்வரில் ஒருவன் எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்தான் “என்னடா? எதுக்கு இப்படி கொலை செய்ய தொரத்துற மாதிரி ஓடி வர…” என அதில் இருந்த ஒருவன் பிடித்துக் கேட்க “டேய் அந்த காக்கா திரும்ப வந்திருக்காடா‌…”

“என்னடா சொல்லுற அவள் எப்படிடா வருவாள் அவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் ச்சே இருக்காதுடா…”

“டேய் எனக்கு என்ன பைத்தியமா பொய் சொல்ல அந்த ஸ்ரீயோட போனதை என் கண்ணாலே பார்த்தேன்டா…” என்றவன் சொன்னதை கேட்டு அந்த மூவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“நாம தான் அவளை ஸ்டேஜ்ல வெச்சு அசிங்கப்படுத்த நினைச்சோம்னு யாருக்காவது தெரியுமாடா?…”

“எனக்கு தெரியுமே…” என வந்தவனை கண்டு அங்கிருந்த நால்வரும் எச்சில் விழுங்கினர் “எதுக்காகடா அப்படி பண்ணீங்க அன்னைக்கு அவ்ளோ சொல்லியும் திரும்ப இப்படி பண்ணி இருக்கீங்கன்னா உங்களுக்கு எவ்ளோ திமிரு இருக்கும்‌…” என்ற யாதவ் அந்த நால்வரையும் முறைத்தப்படி நெருங்க நால்வரும் ஒரு சேர பின்னால் நகர்ந்தனர்.

“அப்போ அங்கே நடந்த எல்லாத்துக்கும் நீங்க தானாடா காரணம் யாதவ் இவனுங்களை விடக்கூடாதுடா பிரின்சிபால் சார்கிட்ட கூட்டிட்டு போகலாம் வா…” என யாதவ்யின் நண்பன் செந்தில் சொல்ல அவசரமாக “பலூன் அடிச்சதோட பட்ட பேர் வெச்சு கூப்பிட்டு பிரச்சினை பண்ணது எங்களோட ஏற்ப்பாடு தான்‌ ஆனா ஸ்டேஜ்ல விழ வெச்சது வயரை பிடுங்கினது எல்லாம் நாங்க இல்ல அது‌ உங்களோட க்ளாஸ் பொண்ணுங்க எங்களை மட்டும் இதுலே சிக்க வெச்சா நாங்க சும்மா இருக்க மாட்டோம்…” என ஒருத்தன் எகத்தாளமாக பேசிக்கொண்டு வர அவன் முகத்திலே விட்டான் ஒரு குத்து மூக்குடைந்து ரத்தம் வழிந்தது.

“உன்னை காலேஜ் நிர்வாகம் முன்னாடி கொண்டு போய் நிறுத்திறதை விட பாதிக்கப்பட்டவள் முன்னாடி போய் கொண்டு நிறுத்தினா தான் சரி‌ செந்தில் இழுத்திட்டு வாடா…” என முன்னால் நடக்க “என்னங்கடா முறைப்பு நட…” என அவன் தலையில்‌ ஒரு தட்டு தட்டி அழைத்து சென்றான் செந்தில்.

அது ப்ரேக் டைம் கேன்டீன் அருகில் உள்ள மரத்தடியில் தான் அமர்ந்து இருந்தனர் இருவரும் எதார்த்தமாக திரும்பிய ஸ்ரீ “அங்கே பாரு கலை…” என கைகாட்ட திரும்பி பார்த்தாள் யாதவ் செந்தில் இருவரும் அந்த நால்வரையும் இழுத்துக்கொண்டு வந்து இவள் காலடியில் தள்ளி விட்டனர்.

சீனியர்… என முழித்தவளை கண்டு அந்த நால்வர் முதுகிலும் எட்டி உதைத்தான் “சாரி எங்களை மன்னிச்சிடு நீ‌ ஆடுறப்போ தண்ணி எடுத்து அடிச்சது நாங்க தான் சாரி கலைச்செல்வி…” என மன்னிப்பு கேட்டனர் அந்த நால்வரும் “சூப்பர் சீனியர்…” என்ற ஸ்ரீ அந்த நால்வரின் மண்டையிலும் தன் பங்கிற்கு கையை மடக்கி கொட்டி வைத்தாள் போங்கடா… என நால்வரையும் செந்தில் விரட்டிட அவர்கள் தலை குனிந்தபடி அங்கிருந்து சென்றனர்.

9 thoughts on “06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. CRVS2797

    அச்சோ..! இதனால இன்னும் காண்டாகி கலைக்கு திரும்பவும் ஏதாவது பிரச்சினை தருவாங்களோ என்னவோ..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *