அத்தியாயம்-17
Thank you for reading this post, don't forget to subscribe!நேராக பெண்கள் நால்வரும் மிருதுளா வீட்டிற்கு தான் வந்தார்கள்.
திலகாவோ “பத்து நாள் எங்கடி போயிட்டு வர்ற?” என்று வாசலில் கால் மிதிக்கவும் சிகையை அள்ளி கொண்டை போட்டு சிலிர்த்துக்கொண்டு வந்தார்.
“என் பிரெண்ட்ஸ் கூட தானே போனேன். தனியா போனது போல சிலிர்க்கறிங்க.
எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலை. அதனால உங்களிடம் வாதம் செய்யவும் பிடிக்காம என் பிரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டேன்.” என்று நிமிர்வாகவே கூறினாள்.
“பார்த்திங்களா? உங்க மக லட்சணத்தை. கல்யாணம் பிடிக்கலையாம். ஏன் நான் பார்த்த வரனுக்கு என்ன குறை?” என்று எட்டுக்கட்டையில் எகிறினார் திலகா.
“அதேதான் நானும் கேட்கறேன். அவருக்கு என்ன குறை? எதுக்கு முதல் ஓய்ப் இருக்கும் போதே என்னை இரண்டாதாரமா கேட்கறார்?” என்றதும் திலகா ஆடிவிட்டார்.
எதையும் மிருதுளா விஷயத்தில் பின்னடைந்து பழக்கமில்லாத திலகா, கணவரை உசுப்பி, “தனிபங்களா, பெரிய வீடு ராணி மாதிரி வாழ வைக்கப்போறார். கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரங்க இருக்க போறாங்க. நூறு சவரன் நகை போட்டு இவளை கட்டிக்கறார். இதுக்கு மேல என்ன வேண்டுமாம் உங்க பொண்ணுக்கு?.” என்று பொறுமினார்.
கேசவனோ, “ஏன் இப்படி பண்ணற மிருதுளா. நல்ல வரன் தானே. இங்க கஷ்டப்படறதுக்கு அங்க போய் நிம்மதியா இருக்கலாம். அப்படியும் போகாம, செத்தும் தொலையாம என் உசிரை ஏன் பறிக்கற? சாகறதுக்கு தூக்கு போட்டுட்டு போயிட்ட. அதுல தலையை விட்டு சாக வேண்டியது தானே” என்று கடிந்தவர், உடனே கண்ணீர் மல்குவதாக துண்டை எடுத்து கண்ணை துடைத்து, “ராஜபாண்டியனை நீ கட்டிக்கலைனா இந்த வீடு வாசல் எல்லாம் பிடுங்கிட்டு துரத்திடுவான். நான் நாண்டுட்டு சாகணுமா?” என்று கேட்டதும் மிருதுளா எப்பவும் போல தனக்காக யோசித்து முடிவெடுப்பாளென்று எண்ணினார்
அவளோ அவர் எண்ணத்திற்கு மாறாக, “செத்து போங்கப்பா. என்னை சாக சொல்லற நீங்க, பிரச்சனைக்கு காரணமா இருக்கற நீங்க, நீங்களாவே செத்துடுங்க. நான் ஏன் சாகணும்?
பொண்ணு வாழ்ந்தா என்ன செத்தா என்னனு இருக்கற உங்களுக்கு நான் என்ன செய்தாலும் பாசம் வைக்க மாட்டிங்க.
நான் ஏன் சாகணும். நீங்க உங்க மனைவி திலகா இரண்டு பேரும் செத்து போங்க” என்றதும் திலகா அடிக்க, சாக்ஷியும் மென்பனியும் “ஹலோ பேசிட்டே இருக்கறப்ப அடிக்கறிங்க?” என்று சண்டையிட்டனர்.
“ஏய் எங்க குடும்பத்துல இருக்கறவங்க என்னை அடிக்கறாங்க. உங்களுக்கு என்ன? வாயை மூடி வேடிக்கை பார்க்கணும்” என்றவள் திலகாவிடம் திரும்பி ‘பளீரென’ பதிலுக்கு பதில் அடிக்கவும் சோபாவில் சுருண்டு விழுந்தார்.
“எனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சு மூன்று வருஷத்துக்கு மேல ஆச்சு. என் வாழ்க்கையை நானா பார்த்துக்கறேன். உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராது. நான் சாக்ஷி வீட்ல பெயிட் கெஸ்டா போய் தங்கிக்கறேன். அதை மீறி அங்க குடைஞ்சிங்க? கம்பிளைன் பண்ண வேண்டியதா இருக்கும்.” என்று ஆள்காட்டி விரலால் பத்திரமென்றாள்.
“அப்ப என்னிடம் வாங்கின பணம் நிலம் எப்படி கண்ணு வாங்கறது?” என்று ராஜபாண்டியன் வந்து சேர்ந்தார். அவரோடு அவர் அரசியல் ஆட்களில் அடியாட்களும் சேர்ந்தே வந்திருந்தனர். பார்க்கவே திகிலூட்டியது.
பெரும்பாலும் அரசியல்வாதியிடம் போலீஸிடம் பகையை பாராட்டினால் அல்லல்பட நேரிடலாமென்றது எழுதப்படாத விதி. அதுவும் பெண் விஷயமென்றால் மானமிழந்து அடிபணிவதே அதிகபட்சம்.
அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவனே ராஜபாண்டியன். இதற்கு முன்னே ராஜபாண்டியனை மிருதுளா சந்தித்திருக்கின்றாள். ஆனால் பொண்ணு பார்க்க என்று வந்ததில்லை. தந்தையை தாயை பார்க்க வந்தவராக காட்டிக்கொண்டு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
மற்றபடி மணக்க போவதாக கூறியது, பேசியது, மிருதுளாவை வைத்து பேரம் நடத்தியது எல்லாம் ராஜபாண்டியனின் இடத்தில் தான்.
“எங்க சித்தி என்னை வச்சி நிலம், பணம் வாங்கியிருக்காங்க. சட்டம் தெரியும் தானே? என்னை வச்சி அவங்க எப்படி வாழ முடிவெடுப்பாங்க. வாழப்போறது நான். நீங்க என்னிடம் கேட்டிருக்கணும். அதோட நீங்க பத்திரம் பதிவு பண்ணியது என் பெயர்ல இல்லை. என் தம்பி மதன் பெயர்ல. வேண்டுமின்னா அவனுக்கு ஓகேனா அவனை கட்டிக்குங்க.” என்று நக்கல் தெறிக்க பேசினாள்.
சஹானாவோ “அவர் அரசியல்வாதிடி இப்படி பேசாத” என்று காதில் மெல்லிசையாக உரைத்தாள்.
“கண்ணு தப்பு தப்பா பேசற? நான் அரசியல்வாதி. உன்னை இப்பவே தூக்கிட்டு போய் தாலிக்கட்ட முடியும். ஏன் இந்தா இந்த ரூம்ல ஒதுங்கி உன்னை என்ன வேணும்னா பண்ணுவேன்.” என்று ஜம்பமாய் உரைத்தார். சாக்ஷியும் மென்பனியும் திகிலோடு மிருதுளா கையை பிடித்து நின்றனர்.
மிருதுளாவோ பயமின்றி “ஓ அப்படியா? அப்படி பண்ணி என் கழுத்துல தாலி கட்டி உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவ? ஏன்டா டேய் நீ தூங்கறப்ப தலையில கிரைண்டர் கல்லு போட்டு சாகடிக்கவோ, இல்லை இஞ்சி தட்டுற குலவி கல் வச்சி மண்டையை உடைக்கவோ எனக்கு தெரியாது.
நாளைப்பின்ன கல்யாணத்துக்கும் கட்டிலுக்கும் சம்மதிச்சு. ஒரு நாள் உன் சாப்பாட்டுல விஷம் வச்சா என்ன பண்ணுவ? என்னை கட்டிக்கிட்டு நீ எப்ப நம்மளை சாகடிப்பானு பயந்துட்டே வாழ்வியா?
நான் நாகரிகமா சொல்லிட்டேன். அதுக்கு பிறகு உன் தலைவிதி. நீ என்னை கட்டாயப்படுத்தினா அடுத்த நொடி உன் பேர்ல புகார் போய் சேரும். ஏன்னா அதுக்கு ஏத்தது மாதிரி வக்கீலிடம் பேசியிருக்கு.” என்றவள் அம்ரிஷ் வேதாந்த் அண்ணன் நிஷாந்த் வக்கீலென்று கொடுத்த கார்டை ராஜபாண்டியனுக்கு நீட்டினாள்.
கார்டே பளபளப்பாய் இருந்தது. வீம்புக்கும் வெட்டிக்கு வக்கீலுக்கு படித்துவிட்டு சும்மா மிரட்ட மட்டும் உபயோகப்படும் வக்கீல் அவரல்ல என்று புரிந்தது.
யாரின் தைரியமோ இங்கு வந்து அறைக்கூவல் விடுப்பது ராஜபாண்டியனுக்கு மெல்ல மெல்ல புரிந்தது.
ராஜபாண்டியன் திலகாவிடமும் கேசவனிடமும், “ஒழுங்கு மரியாதையா உங்க பொண்ணை கட்டி வையுங்க. இல்லை கொடுத்த நிலமும் பணமும் வரணும்.” என்று மிரட்டி சென்றார்.
அவர் சென்றதும் மிருதுளா தன் உடமைகளை அள்ளி பையில் திணித்தாள்.
கேசவனோ “எல்லா நேரமும் உன் பிரெண்ட்ஸ் கூடவே இருப்பாங்கனு நம்பாத. பெத்தவங்களை தவிர்த்து யாரும் நம்பிக்கையான ஆளுங்க இல்லை.” என்று பேசினார்.
“உண்மை தான் அப்பா. பெத்தவங்களை தவிர்த்து இந்த உலகத்துல வேற யாரும் நம்பிக்கையானவங்க இல்லை. ஆனா நீங்க பெத்தவர் என்றதையே மறந்துட்டிங்க. நீங்க இப்ப திலகாவோட கணவர் அவ்ளோ தான். எங்கப்பா உங்கம்மா இறந்தப்பவே இறந்துட்டார்.
அதோட என் பிரெண்ட்ஸை நம்பிமட்டும் நான் வீட்டைவிட்டு கிளம்பலை.” என்று ஆயத்தமானாள்.
“படிச்ச படிப்பை நம்பி போறியா? அந்த படிப்பும் நாங்க போட்ட பிச்சை” என்றார் திலகா.
“பிச்சை புக்காயினும் கற்றல் மிகவினிதே’னு இனியவை நாற்பதும்,
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
அப்படின்னு நீதிநூலான நறுந்தொகையில அதிவீரராம பாண்டியனும் சொல்லிருக்கார்.
அரசியல்வாதி ராஜபாண்டியனை பத்தி தானே உங்களுக்கு தெரியும். இந்த நீதிநூல்களையும் கொஞ்சம் தெரிந்து வச்சிக்கோங்க. அறிவும் வளரும். அப்ப தான் மனுஷங்களா நடப்பிங்க.
நீங்க பிச்சையா போட்ட படிப்பாவது எனக்கு வாழ வழிபிறக்க வைக்கட்டும். அதோட படிப்பு மட்டும் இருப்பதால போறேன்னு நினைக்காதிங்க. தன்னம்பிக்கையும் தைரியமும் வந்துடுச்சு.
அங்கங்க படிப்பு இல்லையென்றாலும் கூலி வேலை செய்து ஒழுக்கமா இருந்து இரண்டு வேலை கஞ்சி வயிற்றை நிரப்ப கூட சம்பாதிக்கறாங்க. எனக்கு நீங்க பிச்சை போட்ட படிப்பு இருக்கு. நான் உங்களை விட நல்லாவே வாழ்வேன்.” என்று புறப்பட்டாள். திலகா கேசவன் வாய்பிளந்து ஆச்சரியமாய் பார்த்தனர். திலகா மகன் மதன் கல்லூரியில் சென்றதால் அவன் வீட்டில் இல்லை.
கால்டேக்ஸி காரை புக் செய்து நால்வரும் சாக்ஷி வீட்டுக்கு திரும்பினார்கள்.
காரில் பலத்த அமைதி. மிருதுளா பயந்து நடுங்குவாள், ஓடுங்குவாளென்றதற்கு மாறாக அவளே தக்க பதிலடியாக பேசி அனுப்பியதை கண்டு வாயடைந்து போனார்கள்.
இத்தனைக்கும் காரணம் அம்ரிஷ் இருக்கும் தைரியமா? என்று தான் சாக்ஷிக்கும் மற்ற இரு பெண்களுக்கும் எண்ணம் சென்றிருக்க வேண்டும்.
சாக்ஷி வீட்டுக்கு வந்தப்பின், “என்னிடம் இவ்ளோதான் பணமிருக்கு சாக்ஷி. இதை வாங்கினா மட்டும் தான் இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பேன்.” என்றவளை புதிதாக தான் பார்த்தார்கள்.
இதுவரை காசுயில்லைடி என்று கூறி வருந்துவாளே தவிர இப்படி இருப்பதை கொடுத்து வாங்கினால் மட்டும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்ததில்லை.
சாக்ஷி வீட்டுக்கு வந்ததும் அன்னை குருபிரசாத்தும், பத்மாவும் வரவேற்றார்கள். ஏற்கனவே போனை எடுத்து, நோட்டிபிகேஷனை கண்டதும் முதல் வேலையாக தந்தைக்கு அழைத்து தாங்கள் வருவதாக உரைத்தாள்.
கூடவே மிருதுளா தங்கள் வீட்டில் தங்க ஏற்பாடும் செய்திட கூறவும் எல்லாம் தயாராக இருந்தது.
முதலில் லெமன் பழச்சாறை அருந்தி புத்துணர்வு பெற்றதும் குளித்து முடித்து உடை மாற்றி சாப்பிட்டார்கள். குருபிரசாத் பத்மா இருவரும் எதுவும் கேட்காமல் மிருதுளாவையும் மற்ற பெண்களையும் உபசரித்தார்கள்.
மிருதுளாவே “நீங்களும் கிளம்புங்க. உங்க வீட்லயும் அர்ச்சனை வாங்கி ரொட்டீன் லைப் வாழணும்ல.” என்று மென்பனி சஹானாவையும் துரத்த பார்த்தாள்.
“இரும்மா. எங்க அண்ணா முன்னாடி போய் நின்றா நான் எப்படியிருக்கேன்? நல்லாயிருக்கேனா யோசிக்க மாட்டான். காருக்கு என்னாச்சுனு கேட்பான்.
அம்ரிஷ் நாம இங்க வர்றதுக்குள் கார் இங்க வரும்னு சொன்னார். யாரோ மெய்யப்பன் என்ற டிரைவர் கொண்டு வருவாராம்.” என்று வாய் மூடவில்லை.
மென்பனி கார் சத்தம் வாசலில் கேட்டது. நால்வரும் வெளியே வந்தார்கள். குருபிரசாத்தும் பத்மாவும் ‘யார் இந்த அம்ரிஷ்?’ என்று பார்த்து கொண்டார்கள்.
மெய்யப்பன் காரிலிருந்து இறங்கி “அம்ரிஷ் சார் சொன்ன நாலு பொண்ணுங்க நீங்களாம்மா?” என்று கேட்டார்.
“ஆமா அண்ணா” என்று சாக்ஷி வீட்டிற்குள் அழைத்தாள்.
முதலில் தயங்கி மறுத்தவர் பெண்கள் இயல்பாய் கூப்பிட்டு முடிக்க, இதில் யார் மிருதுளா என்றறிய ஆவலோடு வீட்டிற்குள் நுழைந்தார்.
அம்ரிஷ் விவாகரத்து என்று அறிவித்தப்பின் புதிதாக உச்சரித்த பெயர் மிருதுளா தான். அதுவும் மெய்யப்பன் இருக்கும் போது அம்ரிஷ் தாய் சௌந்தர்யா கணவர் சத்யதேவனிடம் பேசிய பெயரும் மிருதுளாவே.
அவருக்கும் பழச்சாறை கொடுத்திட, வாங்கி பருகினார்.
வீட்டை ஆராய்ந்து பார்த்தார். மிக கச்சிதமாக மூன்று படுக்கையறை கொண்ட வீடு ஹால் கிச்சன் அட்டாச் பாத்ரூம் கூடுதலாய் ஸ்டோர் ரூம் என்று ஹாலிலிருந்தே தெரிந்தது.
பழச்சாறை பருகி முடித்து “உங்கள்ல யார் மிருதுளா?” என்று கேட்டார்.
“நான் சாக்ஷி. இவ சஹானா, இவ மென்பனி, அப்படின்னா இவ தானே மிருதுளா” என்று அறிமுகப்படுத்த, மிருதுளாவுக்கு என்னவோ போன்றவுணர்வு.
மெய்யப்பன் வணக்கம் வைத்து விடைப்பெற்றார்.
மிருதுளா கைகள் தானாக வணக்கம் வைத்து விட்டது.
மென்பனியும் சஹானாவும் புறப்பட தயாரானார்கள். “ஓகே டி நான் சஹானாவை டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன்.” என்று டாட்டா காட்டவும், மிருதுளா தலையசைத்தாள்.
வாசல்வரை வந்த மிருதுளா இரும்பு கேட்டில் நின்றாள்.
சாக்ஷியோ கார் அருகே வந்து, “அவ ஏதோ முடிவோட இருக்கா. சம்திங் மனம் விட்டு பேச மாட்டேங்குறா. உங்களுக்கு தெரியுதா?” என்று கேட்டதும், மென்பனியோ “அவளா சொன்னா என்ன ஏதுனு ஷேர் பண்ணு. ஆங் அப்பறம் வாட் அபௌவுட் அம்ரிஷ் கேங்?” என்று விளிக்க, “இருக்கற பிரச்சனையில நோ ஐடியா டியர்.” என்று சாக்ஷி பதில் தந்தாள்.
“ஓகே அம்ரிஷ் ரியாக்ஷன், அண்ட் மத்த பாய்ஸ் பத்தி பிறகு பேசுவோம். வீட்டுக்கு போறேன்.” என்று காரை இயக்கினாள்.
சஹானா மென்பனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“நீ எப்படியோ நானும் அப்படி தான். உன் கதை கற்பனை திறனை வச்சி ஏதாவது யோசிக்காத. புதுசா சாக்ஷியிடம் சொல்லி குழப்பத்தை தரவேண்டாம்.
நீ தமிழிடம் பேசியது. நான் ஆதேஷிடம் பேசியது. ஜஸ்ட் பிரெண்ட்ஷிப்.” என்றுரைத்தாள் சஹானா.
“யா ஜஸ்ட் பிரெண்ட்ஷிப்” என்று மென்பனியும் விட்டால் போதுமென்று ஆமோதித்தாள்.
சஹானா வீடு வரவும் அவள் தாய் தந்தையர் சுகுமார் பாவனி வரவேற்றார்கள்.
மென்பனியை வீட்டுக்குள் அழைக்க, இப்ப தான் அம்மா அங்க சாப்பிட்டோம். முதல்ல நானும் எங்க வீட்டுக்கு போறேன். இன்னோர் நாள் வர்றேன்” என்று கூறி கிளம்பிவிட்டாள்.
மென்பனி அவளது வீட்டுக்கு சென்றிட, அவள் அண்ணன் கார்த்திக் வீட்டில் இல்லை. அண்ணி ரஞ்சனி தான் இருந்தார்.
“நீ பாட்டுக்கு காரை எடுத்துட்டு போயிட்ட. உங்கண்ணா எப்படி பயந்தார் தெரியுமா? இதுல அந்த அரசியல்வாதி ஆட்கள் வேற மிருதுளா எங்க எங்கனு?
இத்தனை நாள் எங்கிருந்திங்க?” என்று கேட்க, “கார்சாவி இந்தாங்க. பெட்ரோல் டேங்க் ஃபுல்லா அப்படியே இருக்கு. காருக்கு சின்ன அடி கூடயில்லை.” என்று பதில் தந்துவிட்டு அவளது அறைக்குள் கதவை சாற்றிக்கொண்டாள்.
ரஞ்சனி வெளியே புலம்புவது கேட்டாலும் யாரையோ திட்டுவதாக காது கேளாதவள் போல நடமாடினாள் மென்பனி.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Wowww oruvaliya miruthula ku dhairiam vanthuruchuu pola…. Very good improvement…. But boys gang yena pandraga nu amrish yenna panna poraanu therilaiye
Super😍