Skip to content
Home » தென்றல் நீ தானே-5

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5

   ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.

   “இங்க ஒரு மனுஷன் இருக்கானே. அவனை கவனிக்கறது.” என்று கூறவும் கட்டுப்படுத்த இயலாது சிரித்தாள் துஷாரா.

  “நீங்க எங்கப்பா இருக்கறப்ப இப்படி வாயாடணும் அப்ப தெரிந்திருக்கும்” என்றவள் பேச்சு இயல்பாய் நகைச்சுவையாக வந்தது.

  “அதெப்படிங்க அவர் என் மேல மரியாதை வச்சியிருக்கார்.” என்றான்‌.

   “அந்த மரியாதை அப்படியே இருக்கணும்னா சமத்தா இருக்கணும். என்னிடம் பிளார்ட் பண்ண கூடாது” என்றாள்.
 
  லேசான முகவாட்டத்துடன் சற்று விளையாட்டை ஏறக்கட்டி “துஷாரா நிஜமா நமக்குள்ள என்னவோ ‘வேவ்லென்த்’ இருக்கு.” என்றான்‌.

  பெயர் சொல்லி அழைக்கவும் தித்திப்பாய் இருந்தது துஷாராவுக்கு, அதற்காக அவனிடம் மெழுகாக கனிந்திடும் பாவை அவள் இல்லையே.

  “இங்க பாருங்க… ஒரு சில ஆண்கள் பஸ்ல ஏறியதும், கண்கள் பரபரன்னு இருக்கும். அதுவும் ஒரு பொண்ணு அங்கயிருந்தா, அவ தான் தன் காதலி, மனைவி என்பது போல இல்லாத காவியத்தை கண்ணுல வடிப்பாங்க‌. மேபீ பொண்ணும் நல்லா சைட் அடிப்பா. ஆனா அந்த அமரக்காதல் பஸ் ஸ்டாப் இறங்கி அந்த பொண்ணு போகவும் முடிஞ்சிடும்‌.

  கல்யாண வீட்ல கூட இது போல நடக்கும். அது போல தான், இப்ப நீங்க என்னை பார்த்து மனசு தடுமாறுறீங்க.

இங்க நீங்களும் நானும் சந்திக்கிற வாய்ப்பு அமையவும் நீங்க இது காதலா? இது தான் காதலானு குழம்பறிங்க. எனக்கு அந்த குழப்பம் இல்லை. நீங்க வெளிநாட்டுல வாழற தமிழ் வாழ் இந்தியர். உங்களுக்கு கால் சரியாகி பாஸ்போர்ட், பர்ஸ் கைக்கு வந்துட்டா நீங்க உங்க வேலையை பார்த்துட்டு பறந்து போறவர்.
   இதுக்கு நடுவுல என்னை ரசிக்கலாம், பார்க்கலாம், பேச ப்ரியபடலாம், அதெல்லாம் ஒருவிதமான பரவசத்தை உங்கள் உடலுக்குள் உற்பத்தி செய்யும். அந்த ஹார்மோன் உங்க நாட்டுக்கு போனதும் உங்களை இயல்புப்படுத்தும்.” என்றாள்  துஷாரா.
   
   ஹர்ஷாவோ “இந்த அழகான உணர்வை கொச்சைப்படுத்தாத துஷாரா” என்று சோகமாய் உரைத்தான். தன் நேசத்தை காதலை அழகாக விளக்க போராடினால், நொடியில் இனகவர்ச்சியாக, அதுவும் எப்படியெல்லாம் சொல்லி நியாயப்படுத்தி பேசுகின்றாள்.

  “கேட்கறதுக்கே கொச்சப்படுத்தற மாதிரி இருக்கா ஹர்ஷா. நீங்க என்னை உத்துஉத்து பார்க்கறிங்க. எனக்கு எப்படியிருக்கும்?” என்றதும் பார்வையை இயல்புக்கு மாற்றினான்.
 
   அதன் பின் மீண்டும் மௌனத்தை கடத்திட, துஷாரா அவன் இருந்த அறையில், அமர்ந்து, போனில் தன் தோழி நளினியிடம் குறுஞ்செய்தியில் பேசினாள்.

  அவளுமே ஹர்ஷனின் நண்பன் ராம்கி பேசியது போலவே தட்டச்சு செய்து அனுப்பினாள்.
‘லூசு மாதிரி பேசாத நளினி’ என்று குறுஞ்செய்தியில் திட்டினாள்‌ துஷாரா.

  ‘நான் எங்கடி லூசா பேசறேன், உண்மையை செல்லறேன். உனக்கு இருபத்தி மூன்று வயசாகுது. உங்கப்பா கல்யாணம் என்ற பேச்சை இருபத்தி ஒன்னுலயிருந்தே ஆரம்பிக்கலாமே. ஏன் இந்த வருஷம், இந்த பிறந்த நாள் அப்ப பேசினார். நீ வெட்டினியே கேக் அவருக்கு எப்படி சரியா போய் சேர்ந்தது. எனக்கு கூட நீ கேக் தரலை. சரியா அவருக்கு உங்கப்பா மூலமா கேக் போயிருக்கு.

ஏன் எங்கப்பாவிடம் ஹர்ஷா பிரெண்ட் ஆகியிருக்கலாம்ல? உங்கப்பா தான் அந்த பாரின் பார்ட்டிகு அறிமுகமாயிருக்கார். சரி நான் அந்த கூட்டத்துல தள்ளாடி அவர் காலை மிதிக்கலாம்ல. நீ தான் பக்கத்துலயிருந்தே மிதிச்ச.

   உன் பக்கத்துல தான் அவர் உட்கார்ந்தார்‌. இப்ப கூட பாரு. வள்ளி ஆன்ட்டி உன்னை அனுப்பிட்டு அங்கயிருக்கலாம். ஆனா அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க’ என்று வரிசைக்கட்டி  அனுப்பவும், துஷாரா அவசரமாய் ”எங்கம்மாவுக்கு அவங்க கையால சமையல் செய்து அப்பாவுக்கு கொடுத்தா தான் திருப்தி. அதனால போனாங்க” என்றாள்.

‘பேச்சை மாற்றாத துஷாரா’ என்று நளினி அனுப்ப, “ஏதாவது உலறாத” என்றாள் பதிலுக்கு.

  “நான் உலறுறேன் இருக்கட்டும். நீ உலறிட்டு வந்துடாத. அந்த பாரின் பார்ட்டியை உன்னிடம் காதல் அம்பு விட்டா சொல்லு. இது காதல்னு அடிச்சி சொல்லுறேன். எனக்கு கருநாக்கு டி. சொன்னா அப்படியே பலிக்கும். எனக்கு என்னவோ நீயும், அந்த சிவப்பு நிற ஆளும் நல்லா தான் இருக்கிங்க’ என்று ஜோடி பொருத்தம் வேறு கூறினாள்.

“என்னங்க… ஏங்க இது அநியாயம்‌. என்னிடம் பேசாம போன்ல பேசிட்டு இருக்கிங்க. ஒருத்தன் தெரியாத நாட்டுக்கு வந்தா இப்படியா நடத்தறது” என்றதும், நிமிர்ந்தாள்.

   “பிரேக்பாஸ்ட் வாங்க போறேன். உங்களுக்கு என்ன வேண்டும்.” என்று சூடாக கேட்டாள். அவளுக்கு நளினி வேறு பேசியது எரிச்சலை தந்தது.
 
  இந்த ஹர்ஷாவை பேசி சமாளித்தவளால், நளினியிடம் வாதட முடியவில்லை. ஒருவேளை நேரிலோ அல்லது போனில் ஒலி வாயிலாகவோ என்றால் மறுத்து பேசி நீண்ட பதிலை சூடாக தந்திருப்பாள். எதிரே ஹர்ஷாவை வைத்து அவன் நண்பன் சொன்னதை போல தன் தோழியும் பேசுவதாக சொன்னால், இது காதல் என்று மீண்டும் ஆரம்பிப்பான்.
 
  எதற்கு வம்பு?

    “பொங்கல் சாம்பார் வாங்குங்க. சாப்பிட்டு தூங்கவாது செய்யறேன்” என்று மெனுவை கூற, அடுத்த நொடி சிட்டாக விரைந்தாள்.

   தன் தலைக்கோதி, ‘நிஜமா இது என்ன விதமான உணர்வு என்று இனி தான் ஆராயணும். அடி மனசு வரை அவ நினைப்பு நங்கூரமா இறங்கினா?’ என்றவன் பாதம் விண்ணென்று வலிக்க துவங்கியது. இதுவரை வலிநிவாரணியாக ஊசி மூலம் மருந்தேற்றியிருக்க, வலி மட்டுபட்டிருந்தது. மருந்து வீரியம் குறைய கால் விண்ணென்று வலித்தது.

   ‘இந்த கால் வலி, நடக்கற அளவு நடமாடற வரை இந்த உணர்வு இந்த பெயர் சொல்லாத அழகான வட்டத்துல இருக்கட்டும். இங்கிருந்து போகற வரை கடவுள் ஆடுற விளையாட்டை நான் மனசார ஏத்துக்கறேன். இந்த விளையாட்டில் கடைசியா வலியும் வேதனையும் வந்தாலும் பார்த்துக்கலாம்‌. அதை தாண்டி வெற்றி வந்தா கொண்டாடலாம். எதுனாலும் இந்த நாட்டில் இருக்கற வரை தெரிந்திட போகுது.’ என்று தன் மனதை சாந்தப்படுத்தி கொண்டு, துஷாரா வருகைக்கு கால் வலியோடு இதயவலியும் சேர்த்து தவமிருந்தான்.

    பொங்கல் சாம்பார் என்று குட்டி பௌலில் வாங்கி சுவைத்தவன் மாத்திரையை போட்டான்‌.
  
   “ஏன் முகம் சோகமா இருக்கு” என்று அருகே வந்தாள் துஷாரா.

“கால் வலிக்குதுங்க” என்று கட்டு போட்ட இடத்தை தொட்டு கூறினான்.

  “மாத்திரை சாப்பிட்டு தூங்குங்க. இதுல பெயின் கில்லர் மாத்திரையும் இருக்கு.” என்றதும் மாத்திரை வாங்கி விழுங்கி நீரை குடித்தான்.
  
   சிறிது நேரத்தில் படுத்துக்கொண்டவன் மாத்திரை உதவியால் உறங்கினான்.

  தன் போனின் சத்தம் அவன் தூக்கத்தை கெடுக்காமல் வால்யூமை குறைத்து, பொழுது போக்கும் விதமாக கேன்டி க்ரஸ் விளையாடி, நேரம் கடத்தினாள்.

   அப்பொழுது “எந்நேரம் போன் போன் போன். ப்ப்ப்பா இங்க அந்த தம்பி படுத்திருக்க, போன்ல விளையாடற?” என்று வள்ளி அதட்டவும், நிமிர்ந்து நெஞ்சில் கைவைத்தாள்‌.

  “ஏன்மா இப்படி வந்து பயமுறுத்தற? கதவு தட்டாம வந்திருக்க” என்று போனில் விளையாடியவள் விளையாட்டில் தோற்ற வருத்தத்தில் பேசினாள்.

   “ம்கூம்… எதையாவது விளையாடிட்டுயிருக்க. இங்க ஒரு தம்பி அடிப்பட்டு ஹாஸ்பத்திரியில் இருக்க என்ன விளையாட்டு வேண்டியிருக்கு?” என்றார். உண்மையில் வள்ளி இந்த அறைக்கதவை தட்டாமல், மகள் என்ன செய்கின்றாளென ஆராய சத்தமின்றி வந்தார். என்னயிருந்தாலும் பெண் பிள்ளை பெற்றவர். மகளை வயசு பையன் இருக்குமிடம் அனுப்பிவிட்டு பயத்தில் வந்தார்.

   நம்பிக்கை நாணயம் என்பதை தாண்டி, பெத்த மனமாக யோசித்தார்.
 
  இப்படி ஹர்ஷா உறங்க, மகள் போனில் விளையாடவும் திருப்தி அடைந்தார். ஆனாலும் மகள் போனில் விளையாடி பொழுதை கழிக்க, கல்யாண வயசுல சின்ன பிள்ளை போல விளையாட்டா, என்று அதற்கும் திட்டினார்.

  “போம்மா.. எது செய்தாலும் திட்டற” என்று கூடையை பிரித்து பார்த்தாள். வத்தகுழம்பும், அவியலும் கொண்டு வர, வாசம் பிடித்தாள். அப்பறம் பழம் கூடவே ஜாமூனும் மிக்சரும் எடுத்து வந்தார்.

   “எப்போ டி இந்த தம்பி தூங்கினார்” என்று வள்ளி கேட்க, “ம்ம்ம் தெரியலை.” என்று துஷாரா கூறி முடிக்க, “பாவம் இந்த தம்பி இங்க வந்து கஷ்டப்படுது. நாளைக்கு டிஸ்சார்ஜ். என்ன செய்ய போறாரோ? இங்கேயே இருக்கறதா? இல்லை என்ன பண்ணப் போறாரோ?” என்று புலம்ப, துஷாராவுக்கும் ‘என்ன முடிவு எடுப்பார்.’ என்று கவலைக் கொண்டாள்‌.

  அதன் பின் நேரமாகின்றது என்று ஹர்ஷாவை எழுப்ப நினைக்க, அவனே கால் மணி நேரத்தில் எழுந்தான்.
அண்ணாமலை வந்து சேர முதலில் உணவில் கூட கை வைக்காமல் பர்ஸ் தொலைந்ததை எழுதி கையெழுத்து போட்டு வாங்கி பைலில் சேகரித்தார்.

நலன் விசாரிப்போடு அண்ணாமலை ஹர்ஷாவோடு உணவருந்தினார்.
  
  “ஹாஸ்பிடல்ல இருக்க பைத்தியமே பிடிக்குது அங்கிள். நாளையிலிருந்து ஏதாவது தங்கயிடமும் கேர்டேக்கரும், சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடு கிடைக்குமா அங்கிள். எனக்கு இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் இன்னிக்கே பயமுறுத்துது” என்று உரிமையாக கேட்டான்.

   “தெரிந்தவங்க என்றால் உங்களை தவிர யாருமில்லை. மதுரைன்னா ராம்கி இருப்பான்‌. அவன் குடும்பம் பார்த்துப்பாங்க” என உச்சு கொட்டும் விதமாக பேசினான். அவன் பேச்சை கேட்டு ‘அடப்பாவி உண்மை அது தான் என்றாலும் நீ நடிக்கறியேடா’ என்று துஷாரா மனதில் நினைத்தாள்‌.

“நீங்க ஏன் தம்பி யோசிக்கறிங்க. நம்ம வீட்டு முன்‌பக்கம் கடை வைக்க சின்னதா இடமிருக்கு. அங்க தங்கி பாருங்க” என்று ஹர்ஷா-துஷாரா இடையே நடக்கும் பேச்சு வார்த்தை தெரியாது பேசினார் அண்ணாமலை.
 
  “உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா நான் தங்கறேன் அங்கிள்” என்று அதே உற்சாகத்தோடு பதில் தந்தான்.

  அண்ணாமலையோ, “அப்பறம் என்ன வள்ளி நம்ம வீட்டு முன்பக்கம் இருக்கற ஸ்டோர் ரூமை சுத்தம் செய். நாளைக்கு பெட் மட்டும் வாங்கி போடலாம்.” என்றார்.

  துஷாராவோ ‘வீட்டுக்கு வேறயா? இந்தப்பா சுயநினைவோட பேசராரா? என்னவோ பண்ணட்டும்‌ இந்த ஹர்ஷா அதை டிஸ்அட்வான்டேஜ் எடுக்காமல் இருந்தால் சரி’ என்றது அவள் மனம்.

  நாயகன் ஹர்ஷாவுக்கு எதுவரை இந்த உறவு கொண்டு செல்கின்றதென்ற ஆவலில், துஷாரா வீட்டுக்கு செல்ல தயாராய் இருந்தான். அவனுக்கு பாஸ்போர்ட் விசா கிடைக்காவிட்டால் கூட நல்லதென்று நினைத்தான்.‌

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

இந்த கதை 13 அத்தியாயம். இது முடியவும் ஐயங்காரு வீட்டு அழகோ பதிவிடப்படும். நேத்து முகநூல்ல நம்ம குரூப்ல ஷேர் பண்ணா யாரும் விஷ் பண்ணலை. முன்ன எல்லாம் டைட்டில் ரீஸர்வுக்கு அத்தனை வாழ்த்து மழை வரும். 🤧🤧🤧 எங்கயா போனிங்க நம்ம ரீடர்ஸ்.

11 thoughts on “தென்றல் நீ தானே-5”

  1. M. Sarathi Rio

    தென்றல் நீ தானே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    இந்த உறவு எது வரை போகும்ன்னு ரொம்பத்தான் ஃபீல் பண்றான் போல நம்ம ஃபாரின் மாப்பிள்ளை. அதெல்லாம் கல்யாணம், குடும்பம்ன்னு நல்லாவே போகும்.. டோன்ட் வொர்ரி
    பீ ஹேப்பி.

    அதான் ராம்கி, நளினி சொல்ற மாதிரி எல்லாமே விதிச்சபடி தானே நடந்திட்டிருக்கு… அதன் போக்குலயே போகவிடு ஹர்ஷா.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. ஹர்ஷா மைண்ட் வாய்ஸ் “கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா”😝😝😝😝

  3. கால் வலியோடு
    காதல் வலியும்…..
    கண்ணால் பார்க்க
    காதலியின் முறைப்பு
    காதல் இல்லை என்கிறாள்…
    கடல் கடந்து வந்து
    காலம் எதற்கு இந்த
    கண்ணில் நீ பட வேண்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *