Skip to content
Home » தீரனின் தென்றல்-32

தீரனின் தென்றல்-32

தீரனின் தென்றல் – 32

Thank you for reading this post, don't forget to subscribe!

“ச்சூப்பர் மேன் எங்க போன நீ…” அபூர்வாவிற்கு இனிப்பு பிடிக்கும் ஆனால் அவளின் உடல் நிலை கருதி தென்றல் இனிப்பு சாப்பிட விடுவதில்லை என்று ரூபிணி மூலம் தெரிந்து வைத்திருந்த தீரன் அவளுக்காக அவளுக்கு பிடித்த மில்க் ஸ்வீட் வாங்கி வருவதற்காக பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றிருக்க அந்த அரைமணி நேரப் பிரிவை தாங்காமல் அவனிடம் கோபமாக கேட்டாள் ஆதீரனின் செல்ல மகள்..

ஆசையாக மகளின் கோபத்தை ரசித்த தீரன் “உனக்கு பிடிக்கும் னு ஸ்வீட் வாங்க போனேன் பூர்வி குட்டி…” தீரன் சொல்ல “ஹை…” என்று விழி விரித்த அபூர்வா

“சுவ்ட் (ஸ்வீட்) சாப்புத்தா காச்ச வரு ச்சூப்பர் மேன்… வேணாம் தெட்டு அழுவா…” தனக்கு முடியாது போனால் தாய் அழுவாள் என்று புரிந்து வைத்திருக்கும் மகளின் புரிந்துணர்வை வியந்த தீரன்

“அதிகம் வேண்டாம் குட்டிமா… உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தேன் கொஞ்சமா சாப்பிடு ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கிறேன்…” என்று தீரன் சொல்ல

“ம்ம்… சரி…” என்று அவன் மடியில் ஏறி அமர்ந்தாள் அபூர்வா. தீரனுக்கு டீ கொண்டு வந்த பொன்னி பார்த்து விட்டு “ஐயோ இனிப்பு எதுக்கு தம்பி வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்க

“இல்ல அத்தை கொஞ்சமா சாப்பிடட்டும்… எத்தனை நாள் தான் குழந்தையை இனிப்புகிட்ட இருந்து பிரிச்சு வைக்க முடியும்?” என்று தீரன் கேட்க

“ஐயோ தம்பி இவளை பத்தி தெரியாது உங்களுக்கு… கொஞ்சமா கேட்பா ஆனா கொஞ்சி கொஞ்சி மொத்தத்தையும் சாப்பிட்டு தான் மறுவேலையே இவளுக்கு அதான் தென்றல் வீட்ல கூட எந்த ஸ்வீட்டும் வாங்கி வைக்கிறதே இல்ல…” என்று பொன்னி கூற பாவமாய் முகத்தை வைத்து பொன்னியை முறைத்தாள் அபூர்வா.

“இப்போ நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிய ஆதீரன் “செல்லம்… சூப்பர் மேனை உனக்கு பிடிக்கும் ல அப்போ நான் கொடுக்கிற அளவு மட்டும் தான் சாப்பிடனும்… அப்போ தான் நான் தினமும் பூர்வி கூட விளையாடுவேன்…” என்று ஆதீரன் சொல்ல

“இல்லாட்டி?” என்று இன்னொரு ஆப்ஷன் அபூர்வா வைக்க

“ம்ம்… நான் உன் கூட விளையாட வரமாட்டேன்…” என்று சொல்ல

“நோ நோ… நான் நீ தருத மத்தும் (மட்டும்) சாப்பிதுறேன்… நீ என் கூட அளாட வா…” என்று ஒப்பந்த உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த

“ம்ம்… இப்போ விளையாடுவ சரி… அடுத்த வாரம் இருந்து எப்படி விளையாடுவ..?” பொன்னி அபூர்வாவை கேட்க திருதிருவென விழித்தாள் அபூர்வா.

“ஏன் அத்தை?” தீரன் கேட்க

“இவளை ஸ்கூல் சேர்க்க தென்றல் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டா தம்பி… இவளுக்கு நாலு வயசு ஆகப்போகுது ல…” என்று பொன்னி கூற

“ஓ… அதனால என்ன? பூர்வி குட்டி ஸ்கூல் போய்ட்டு வந்ததுல இருந்து நாங்க ரெண்டு பேரும் விளையாடுவோம்… இல்லையா பூர்வி குட்டி?” தீரன் கேட்க

“ஆமா… சத்தியும் சேர்த்து அளாடுவோம்… அம்மம்மா க்கு இதுவே தெர்ல…” என்று சொல்லி அபூர்வா சிரிக்க தீரனும் இணைந்து கொண்டான்.

“ஆமா பூர்வி குட்டி… நீங்க ஏன் என்னை சூப்பர் மேன் னு கூப்பிடறீங்க?” என்று அனைவர் சந்தேகத்தையும் சேர்த்து ஆதீரன் கேட்க

“ம்ம்.. அதா?” என்று பெரிதாக யோசித்த அபூர்வா “எனக்கு.. உன் பேரு மாந்து ( மறந்து) போச்சு… அதா…” என்று கூறிவிட்டு ஆதீரன் தந்த இனிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கடித்து பொறுமையாக விழுங்க

“நல்லவேளை மறந்துச்சு… இல்லாட்டி இவ அம்மா பேய் புடிச்ச மாதிரி ஆடிருப்பா..” என்று முணுமுணுத்த பொன்னியின் பேச்சை உண்மை தான் என்று தன் மனதிடம் சொல்லிக் கொண்டான் ஆதீரன்.

கார்ட்டூன் பார்த்து கொண்டே ஆதீரன் மடியில் அபூர்வா தூங்கி விட “நான் தூக்கி உள்ளே படுக்க வைச்சிடுறேன் தம்பி…” என்று பொன்னி தூக்கப் போக

“வேண்டாம் அத்தை என் பொண்ணு பிறந்தது ல இருந்து நான் தொட்டு தூக்கினதே இல்ல… கொஞ்ச நேரம் அவ என் மடியிலயே இருக்கட்டும்…” என்று வைத்துக் கொண்டான் ஆதீரன்.

“அத்தை… பாப்பாக்கு இந்த வயசுலயே எப்படி வீசீங் ப்ராப்ளம்? என்னாச்சு அத்தை..?” ஆதீரன் கேட்க

“எப்படி இல்லாம போகும் மாப்ளை… இவ வயித்துல இருக்கும் போதே இவ அம்மா கொஞ்சமாவது அமைதியா இருந்தா தானே.. அவ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்ச அன்னைக்கு இருந்து போராட்டம் தான்… ஒவ்வொரு நாளும் தன்னால அவ அப்பா அவமானப்பட்டதை சொல்லி சொல்லி அழுவா…

தென்றல் கர்ப்பமா இருக்கா அதனால எப்படியாவது உங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைக்கனும் னு தான் அவ அப்பா உங்களை பார்த்து பேசி சமாதானம் பண்ணிறேன் னு சொல்லி ஊருக்கு கிளம்பினாரு.

ஆனா போற வழியில அவருக்கு நெஞ்சுல அடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயும் பலனில்லாம போச்சு.. அப்பா சாவுக்கு நான் தான் காரணம் னு அழுத தென்றல் கொஞ்ச நாள்ல பூரணி மதினி முடியாம போனது நீங்க வந்து சொல்லி தெரிஞ்சப்போ வரமாட்டேன் னு சொன்னவ நீங்க போனதும் என்னை அத்தையை பார்க்க கூட்டிட்டு போ ம்மா னு அழுகை… நான் தான் தேதி நெருங்குது வேண்டாம் னு தடுத்திட்டேன்.

பூரணி மதினி இறந்தது தெரிஞ்சு ரொம்ப உடைஞ்சு போய் நொடிப்பொழுது ஓயாம அழுதிட்டே இருந்தா… அதுல தான் அவளுக்கு வலி வந்ததே பிரசவத்துல நிறைய சிக்கல் இருந்து குழந்தை உயிர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் னு சொல்லிட்டாங்க… ஆனா எப்படியோ ஆண்டவன் புண்ணியத்துல குழந்தை பிழைச்சது. அந்த நேரத்துல குமாரும் ரூபியும் கூட இருந்ததால தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு…

அடுத்து தென்றல் கொஞ்சம் குணமான உடனே நான் உங்களோட சேர்ந்து வாழ்றதை பத்தி பேசுனேன். ரொம்ப கோபப்பட்டு கத்த ஆரம்பிச்சிட்டா… அதனால அவளுக்கோ இல்ல குழந்தைக்கோ முடியாம போயிடும் னு குமார் அவளை சமாதானம் பண்ண அப்போ நானும் அம்மாவும் குழந்தையை தூக்கிட்டு எங்கயாவது போறோம் எங்களை பத்தி உங்க ஃப்ரண்டுக்கு தகவல் சொல்லக்கூடாது னு நிபந்தனை போட்டாள்.

ஆனா குமாரு எங்களை தனியா அனுப்ப முடியாது நானும் கூட வருவேன் னு சொன்னதும் அப்போ நீங்க உங்க ஃப்ரண்ட் கூட பேச கூடாது என்னை பத்தி எதுவும் சொல்ல கூடாது னு சொல்லவும் தான் அப்போ இருந்த அவளோட உடல்நிலை மனநிலையை நினைச்சு பயந்து குமாரும் சென்னையில அவனுக்கு ஒரு வேலை தேடிட்டு இங்க ரூபியையும் குழந்தையும் கூட்டிட்டு வந்துட்டான்.

பாப்பாக்கு இரண்டு வயசு இருக்கும் போது ஒரு முறை ஐஸ்கிரீம் சாப்பிட்டு ராத்திரி மூச்சு திணறல் வந்து முடியாம போச்சு. அடிச்சு பிடிச்சு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனோம்… அப்போ தான் குழந்தைக்கு இப்படி ஒரு நோய் இருக்கு அதனால இனிமே குளிர்ச்சியா தண்ணீ கூட குடிக்கக்கூடாது னு சொல்லிட்டாங்க” என்று பொன்னி சொல்லி முடிக்க

“எல்லாமே என்னால தான்… நான் மாமாவை சரியா புரிஞ்சுக்காம அவரை அவமானப்படுத்தாம இருந்திருந்தா என் தென்றல் என்னை பிரிஞ்சிருக்க மாட்டா.. என் குழந்தையும் தென்றலும் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க…” என்று ஆதீரன் கண் கலங்க

“ஐயோ போனது போகட்டும் விடுங்க தம்பி…” பொன்னி சொல்ல

“இல்ல அத்தை… என்னால தான்… மாமாக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும் நான் பண்ண தப்பை நினைச்சு நொந்தே தான் மாமாக்கு அப்படி ஆகிடுச்சு…” என்று வேதனை கொள்ள

“இல்ல தம்பி உங்க மாமாவுக்கு ஏற்கனவே இதயத்துல பிரச்சினை இருந்திருக்கு ஆனா நாம பயந்துடுவோம் னு அந்த மனுஷன் நம்மகிட்ட மறைச்சிருந்துருக்காரு… அவரு அப்பப்போ மதுரைக்கு போறேன் னு சொல்லி போனது எல்லாம் ஆஸ்பத்திரியில அவரோட சிகிச்சைக்காக தான்…

திருச்சில நாங்க தங்குறதுக்கு உதவி பண்ணாரே சேகரன் அண்ணே… அவர் ஏதோ வேலையா மதுரை வந்தப்போ பார்த்து பேசினதா உங்க மாமா கடைசியா ஆஸ்பத்திரியில இருந்தப்போ தான் சொன்னாரு. உங்களை மாதிரி தான் தென்றலும் அப்பாவோட சாவுக்கும் அத்தையோட சாவுக்கும் தான் தான் காரணம் னு சொல்லி அந்த வருத்ததுல தான் இருக்கா… யாரை சொல்லி என்ன பண்ண முடியும்? எல்லாம் விதி னு கடந்து போறதை தவிர..” பொன்னி சொல்ல அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதீரன்.

வார நாட்களில் எல்லாம் தென்றல் அலுவலகம் சென்றுவிட ஆதீரன் தன் மகளோடு நேரத்தை கழிக்க சக்திக்கு பள்ளி முடிந்த உடனேயே நேராக தென்றல் வீட்டிற்கு ரூபிணி அழைத்து வந்து ஆதீரன் அபூர்வாவோடு விளையாட விட தன் அலுவலகம் முடிந்து நேராக இங்கு வந்து மனைவி மகளை அழைத்துக் கொள்வான் குமார்.

வார நாட்கள் எளிதாக கடக்க சனிக்கிழமை மாலை சீக்கிரம் அலுவலகம் விட்டு தென்றல் வந்து விட அவள் கண்ணில் இருந்து மறைய ஆதீரன் தன் இல்லத்திற்கு சென்று விட்டான்.

“ச்சூப்பர் மேன் எங்க? ச்சூப்பர் மேன் கூட நான் அளாடனும்…” என்று அபூர்வா அடம் பிடிக்க அபூர்வாவின் சூப்பர் மேனை தேடி மதன் வீட்டிற்கு சென்றாள் தென்றல்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *