அத்தியாயம்-5
Thank you for reading this post, don't forget to subscribe!ஈஸ்வரன் புகைப்படத்தை சுட்டிக்காட்டி விஷ்ணு கேட்ட அதே கேள்வியை, இளங்கோ கேட்டு முடித்தார்.
“உங்க சின்ன பையனுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?” என்றார்.
“அட நீங்க வேற கல்யாணம் இன்னமும் ஆகலை. இதோ கமலியை தான் பொண்ணு பார்த்து முடிவு செய்தது. ஏதோ அவசரம்னு பேங்க்ல போஸ்டிங் போட்டு வெளியூர்ல மாத்திட்டாங்க. கல்யாணம் இடைப்பட்ட நாட்களில் செய்ய முடியாம போச்சு.
கமலியோட மாமா அக்கா கூட கல்யாணத்தை சிம்பிளா முடிச்சப் பிறகு போக சொன்னாங்க. ஈஸ்வரன் பிடிவாதமா ஆறு மாசம் கழிச்சு வருவதா சொல்லி கிளம்பிட்டான்
கல்யாணம் செய்தா நந்தினிக்கு நல்லதுன்னு சொல்லியதற்கு தான் இந்த பொண்ணையே நந்தினிக்கு கேர்டேக்கராக வச்சிட்டான். கமலி நர்சிங் முடிச்சதால கேர்டேக்கரா பார்த்துக்கறேன்னு அவளும் முன் வந்துட்டா.
சரி கல்யாணம் ஆனாலும் நம்ம வீட்டு மருமகளென நானும் விட்டுட்டேன்.
பாவம் இளங்கோ சார் இந்த பொண்ணு கமலியும், முகம் சுருங்காம நந்தினியை பார்த்துக்கறா. இந்த காலத்துல அக்கா மாமா சொன்னதற்காக யாரு இப்படி இருப்பாங்க? குழந்தையையும் அன்பா கவனிச்சுக்கறா.
அவங்க அக்காவோட சொந்தம் என்றதால் என்னையும் அவ அக்கா போல அத்தைனு வாய் நிறைய கூப்பிடறா. விரைவில் இந்த வீட்டு மருமகளா மாறுவா” என்றதும் விஷ்ணு பார்வை அவளை எடைப்போட கூனிகுறுகியது கமலி மட்டுமே.
‘என்னை விட்டு எவனோ ஒருவனை மணக்க, ஆயா வேலை செய்கின்றாயா?’ என்று விஷ்ணு ஏளனமாக காண்கின்றானோயென தலை நிமிர்த்தாது கிச்சனுக்குள் அடைக்காத்தாள் கமலி.
சற்று நேரம் கமலி ஈஸ்வரன் திருமண பற்றியே பேச்சு போக, விஷ்ணுவோ ”அப்பா தலைவலிக்குது.” என்றதும், வசுந்தரா எழுந்து திவ்யபாரதியிடம் “சரிக்கா நாங்க வீட்டுக்கு போறோம். விஷ்ணுவுக்கு டேப்லட் போடற நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்.” என்றதும் திவ்யபாரதியும் “சரிங்க அக்கா பார்த்துக்கோங்க” என்று விடைக்கொடுத்தார்.
வசுந்தரா விஷ்ணுவை பிடித்து கொள்ள, “அம்மா நானே நடப்பேன். ப்ளீஸ் என்னை குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதிங்க” என்று தோளில் பிடித்த கையை எடுத்து விட்டான்.
விஷ்ணு தலைவலி என்று முகம் சுணங்கி செல்ல, கமலிக்கு மனம் இருப்பு கொள்ளவில்லை.
அவன் செல்லும் திசையில் வெறித்தாள். ‘விச்சுவிற்கு என்ன ஆனது? என்று அத்தை திவ்யபாரதியிடம் கேட்க உள்ளம் உந்தியது.
யாரோ ஒருவனை பற்றி கேட்கின்றாய் என்று தவறாய் எடுத்துக் கொண்டால்…. கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
திவ்யபாரதி அவரது அறைக்கு சென்றதும், இதற்கு மேல் மனம் தாளாமல் அழுதாள்.
மேலே தலைவலி என்று வந்து மாத்திரையை விழுங்கிய விஷ்ணுவின் இமைக்குள் கமலி உருவம் இம்சித்தது.
அவள் கைப்பிடித்து, காதல் கதை பேசி, உள்ளங்கையில் முத்தமிடுவது என்று நெருக்கமாய் முகத்தருகே செல்வதென்று காட்சிகள் இமைக்குள் கண்ணாமூச்சி ஆட, அதனால் வலி மண்டையை பிளக்க, விஷ்ணுவோ மெத்தையில் தலையணையை இறுகி பிடித்து விழுந்தான்.
வசுந்தரா விஷ்ணுவின் தலைகோதி நிதானமாய் உறங்க வைக்க முயன்றார்.
என்ன முயன்றும் கண்கள் கரித்து கொண்டது.
மாத்திரையின் புண்ணியத்தில் விஷ்ணு கண்கள் உறங்குவதற்கு வழிவகுக்க, “நமக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்கணும்.
ஒரே பிள்ளைனு பொத்தி பொத்தி வளர்க்க, இளங்கலை படிக்கறப்ப பியூன் ஒரு பொண்ணிடம் வம்பு செய்தான்னு அடிக்க போய் படிப்பு போச்சு.
அந்த காலேஜ் கான்டெக் சர்டிபிகேட்ல, ‘இன்டீசன்ட் பிஹேவியர்’ என்று எழுதி அவன் படிப்பு ஆறுமாசம் சூனியம் ஆச்சு. அதுக்கு பிறகு காலேஜ்ல இவன் பின் வாங்காம வந்து இம்சை தர்றான்னு அவங்களா எக்ஸாம் எழுத விட்டாங்க.
சரி முதுகலை படிக்கிறான் அவனா படிச்சி முடிச்சி உத்தியோகத்துல இருப்பான். சந்தோஷமா ஒரு பொண்ணை கட்டி வச்சி கல்யாணம் செய்து பேரன் பேத்தினு அவன் வாழ்வு சுபிக்ஷமா இருக்கும்னா, இப்படி பைக் ஆக்சிடென்டாகி கோமால விழுந்து, சமீபத்துல நடந்த நிகழ்வை மறந்து இருக்கானே.
மாத்திரை மருந்தே எடுத்துக்காதவன், இப்ப தலைவலிக்கு அம்மான்னு மருந்து சாப்பிடும் போது என்னால் காண சகிக்கலைங்க.” என்று கதறினார்.
இளங்கோவோ “வீடு, வாசல், விற்று உயிரை மீட்டெடுத்ததே பெரிய விஷயம் வசுந்தரா. நம்ம பையன் உயிரோட நடமாடுவதே புண்ணியம். அதை தவிர இந்த கஷ்டம் எல்லாம் சின்னதா நினைச்சிக்கோ. கூடிய விரைவில் எல்லாம் சரியாகும். டாக்டர் தான் தலைவலி வராம நின்னுட்டு பழைய நினைவு வந்துட்டா எல்லாம் நல்லதா முடியும்னு சொன்னாரே. நம்பிக்கைவை வசுந்தரா.” என்று தட்டிக் கொடுத்தார்.
பெற்ற மனம் உண்மையை உணர்ந்து சமாதானம் அடைந்தது.
அதன் பின் அந்த வீட்டின் பொருட்கள் வந்து சேர அதனை எடுத்து ஒதுக்கி வைக்க நேரம் சரியாக இருந்தது.
—
விஷ்ணு கமலியின் மேல் வீட்டிற்கு வந்து இரண்டு தினம் கழிந்தது.
மொட்டை மாடியில் ரோஜா செடிகள் காய்ந்து போகவும் அதற்கெல்லாம் நீரை ஊற்றினான்.
அழகாய் வடிவமைக்கப்பட்டதில் வேடிக்கை பார்த்தவன் கொலுசு சத்தம் கேட்கவும் திரும்பி பார்க்க, நந்தினி அன்னநடையிட்டு வந்தாள்.
“பாட்டி ரோஜா செடி காய்ந்திருக்கும்னு சித்தி கவலைப்படறாங்க. அப்பறம் கூப்பிட்டா வரமாட்டறாங்க” என்று வர, ரோஜா செடிகள் மீது தண்ணீர் மழை பொழிந்திருக்க கண்டாள்.
“என்ன தம்பி ஈவினிங் வாக்கிங்கா?” என்று திவ்யபாரதி கேட்க ஆமோதித்தான் விஷ்ணு.
“ஹாய் நந்து. செடிக்கு தண்ணி ஊத்த வந்திங்களா? செடி காய்ந்து கிடக்கவும் நான் தான் தண்ணி ஊத்தினேன். ரோஸ் செடி உங்க ஃபேவரிட்டா?” என்று குழந்தையிடம் பேச்சை நீட்டித்தான் விஷ்ணு.
குழந்தை பாட்டியை கண்டு விஷ்ணுவை பார்த்தாள். பாட்டி பேசு என்பது போல இயக்கவும்,
“என்னோடது ரெட் கலர் ரோஸ் ஃபேவரிட். சித்தியோடாது வொயிட் கலர் ரோஸ் ஃபேவரிட். இரண்டு பேரும் வளர்க்கறோம்.” என்று உபரி தகவல் தெரிவித்தாள் மழலை மொட்டு.
“ஓ… அப்படியா?” என்றவன் நந்தினியை தூக்க முயல, பாட்டி பின்னால் அவசரமாய் மறைந்தாள்.
சாக்லேட் தருவதாகவும், டாய்ஸ் தருவதாகவும் கூப்பிட குழந்தை மறுத்தது.
“பாட்டி ரெயின் போ. நான் போய் சித்தியை கூட்டிட்டு வந்து காட்டறேன்” என்று ஓடினாள்.
“நந்து படிக்கட்டுல மெதுவா போகணும்” என்று கூற “சரிங்க பாட்டி” என்றாள்.
குழந்தை சென்றதும், “தப்பா நினைச்சிகாதிங்க தம்பி. நந்தினி அவ பெற்றவரோட இறப்பை நேர்ல பார்த்துட்டா. அதனால் இயல்பான பேச்சு முடங்கிடுச்சு. இப்ப தான் கமலி வந்ததும், கொஞ்சம் கொஞ்சமா குழந்தை அவ அம்மா அப்பாவை மறந்து சந்தோஷமா நடமாடறா. ஆனாலும் புதுசா பார்க்கறவங்க என்ன கூப்பிட்டும் சட்டுனு பேசமாட்டா.” என்று கூறவும், “புரியுது ஆன்ட்டி அதனால் தானே அந்த பொண்ணு கூட தியாகம் செய்து உங்க இளய மகனை மணக்கறதா கேள்விப்பட்டேன்.” என்று நிறுத்தினான்.
அதற்கு மேல் விஷ்ணுவிற்கு கமலியின் தியாக நடவடிக்கை எரிச்சலை தந்தது.
மேலோட்டமாக காணும் போது, ஒரு குழந்தைக்கு அம்மாவாக கடமையாற்றும் பெண்ணாக கமலியை கண்டு பெருமையாக நினைக்க வேண்டும். ஏனோ அவ்வாறு தோன்றாமல், கமலி மீது கோபம் உருவாகுவது தவிர்க்க முடிவில்லை.
படிக்கட்டில் “வாங்க சித்தி, ரெயின் போ அழகா லைட்டா தெரிந்தது.” என்று இழுத்தாள்.
“நந்து குட்டி, மெதுவா.. மெதுவா. நானே நடந்து வர்றேனே. ஏன் இழுக்கற?” என்று மெல்லிய குரல் விஷ்ணுவை வெகுவாய் ஈர்த்திட, தன்னிரு கைகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்து சுவரோடு நின்று ஒற்றை கால் மடக்கி அவளை ரசிக்க தயாரானான். திவ்யபாரதி மாடியில் மற்றொரு சுவர் முடிவு வரை நடக்க சென்றார்.
”பாருங்க சித்தி” என்று வானத்தை சுட்டி காட்ட, வானவில் நொடியில் மறைய ஆரம்பித்து.
“சித்தி நீங்க ரெயின்-போவை பார்க்கலை.” என்று கவலை கொள்ள, ”பரவாயில்லை மா.” என்று கீழே செல்வதில் குறியாய் இருந்தாள்.
“சித்தி செடியை பார்க்காம போறிங்க” என்று இழுக்க சுடிதார் ஷால் பறந்தது.
சரியாக நாயகன் விஷ்ணு நெஞ்சில் வந்து போர்த்திட, பதக்கம் வென்ற வீரனை போல பல்வரிசை காட்டி மகிழ்ந்தான்.
கமலி அருகே வந்து கேட்கட்டும் என்று காத்திருந்தான்.
திவ்யபாரதி பார்த்துவிட்டால் நன்றாக இருக்காதே என்று ஷாலை கேட்டு கையை நீட்டினாள்.
“என்ன வேண்டும்? வானவில்லா? மேகமா? நட்சத்திரமா? நிலாவா? என்ன கேட்டாலும் கொண்டு வர்றேன்” என்று அடுக்கினான்.
அவனை கோபமாய் முறைத்து “என் ஷால்” என்று கேட்டு அனல் பார்வை வீசினாள்.
“நானா தானா கொடுக்கணுமா? நீயா எடுத்துக்கோ” என்று பேசினான்.
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று ஷாலை எடுக்க, அவன் சுண்டு விரலில் ஷாலை சுற்றி நின்றான்.
”விளையாடத விச்சு. அத்தை பார்த்தாங்க பிரச்சனையாகும்” என்று குரலில், விஷ்ணு முகம் பேயறைந்தது போல மாறியது.
விஷ்ணுவை ‘விச்சு’ என்று கூப்பிடுவது இயல்பாக இருக்கலாம். ஆனால் இவளது குரலில் இவளது உரிமையான அழைப்பில், காதல் ஊடலில் கேட்பது விஷ்ணுவின் மனதை பிசைந்தது.
ஷாலை விடுவித்ததும், “நந்து நான் கீழே உனக்கு பால் ஆத்தறேன் பாட்டி கூட வா.” என படிக்கட்டில் தடதடவென ஓடிவிட்டாள் கமலி.
“பாட்டி சித்தி வந்துட்டு உடனே போயிட்டாங்க. நீங்களாவது ரெயின்போ பார்த்திங்களா?” என்று கேட்டாள் கிள்ளை மொழியில்.
“பார்த்தேன் டா நந்து.” என்று உச்சி முகர்ந்தார்.
விஷ்ணு கைகள் தானாக தலையை தாங்கிட, “என்ன தம்பி தலைவலியா? கீழே போகலாமா தம்பி” என்று பதறி கேட்டார்.
“யா ஆன்ட்டி” என்று நடந்தான். படிக்கட்டில் கால்கள் தள்ளாடியது.
திவ்யபாரதி பேத்தியை அழைத்து கீழே நடந்து முடிக்க, ஒவ்வோரு அடியாய் எடுத்து வைத்த விஷ்ணு கால் தடுக்கி விழுந்தான்.
லேசான காயத்தோடு அங்கிருந்த இளங்கோ, வசுந்தராவை திவ்யபாரதி பதற வைத்தே கூப்பிட்டார்.
இளங்கோ மகனை தோளில் தாங்கி வழி நடத்தி அழைத்து சென்றார்.
திவ்யபாரதியோ “ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம கேளுங்க சார்.” என்று கூறி தனது வீட்டுக்குள் வர, “யாருக்கு என்னாச்சு அத்தை? நந்து யாரோ விழுந்துட்டதா சொல்லறா?” என்று விஷ்ணு விழுந்தான் என தெரிந்து பதறி விசாரித்தாள்.
“என்னம்மா சொல்லறது. அந்த தம்பி தான் தள்ளாடி விழுந்துட்டார்.
கடவுள் இவங்களை இந்தளவு சோதிக்கறார்.” என்று பெருமூச்சை வெளியிட்டார்.
கமலிக்கு விஷ்ணுவிற்கு ஏதோ நடந்திருக்கின்றதோ என்று முதல் முறை யூகித்தாள்.
“அ..அவருக்கு என்னாச்சு அத்தை” என்று கேட்டாள்.
“மேல இருக்கற மனிதர்கள் ஓரளவு வசதியானவர்கள்மா. பங்களா போல வீடு, பூர்வீக நிலம், வீடுனு ஊர்லயும் பெயர் சொல்லற குடும்பம்.
சமீபத்துல ஒரு விபத்து. பெங்களூர்லயிருந்து சென்னை வரும் போது அந்த தம்பிக்கு ஏற்பட்டிருக்கு. அதுல உயிர் பிழைக்க போராடி சாகற அளவுக்கு போய், கோமால கிடந்து, உயிர் திரும்பியிருக்கார். சில நினைவுகள் மறந்திருக்கு. அதை ‘ரீ-கலெக்ட்’ பண்ணி ‘ஸ்டரெயின்’ செய்தா தலைவலிக்குதாம். சில நேரம் இப்படி தன்னிலை மறந்து தள்ளாடிடறார்.
சொத்து பத்து, வீடு வாசல், என்று எல்லாத்தையும் விற்று மருத்துவம் பார்த்திருக்காங்க. உயிருக்கு இனி ஆபத்தில்லை. ஆனா இப்படி அடிக்கடி தலைவலி பின்னியெடுக்கறதா வசுந்தரா அக்கா சொன்னாங்க” என்று கூறிவிட்டு டிவியில் செய்தியை பார்க்க ஆரம்பித்தார்.
கமலிக்கு இருப்பு கொள்ளவில்லை. இத்தனை நாள் விஷ்ணு தன்னை ஏளனம் செய்து, தவிர்ப்பதும், உதாசினப்படுத்தி, கோபத்தில் தெரிந்தவர் போல கண்டுக் கொள்ளாமல் நடிப்பதாக கமலி தவறாக எண்ணினாள்.
இன்று திவ்யபாரதி கூறவும், கமலிக்கு இதயம் தாளம் தப்பியது.
விஷ்ணுவை… ‘அவளது விச்சு’வை காண துடித்தது.
-தொடரும்,
Super