Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-11

ஐயங்காரு வீட்டு அழகே-11

அத்தியாயம்-11

Thank you for reading this post, don't forget to subscribe!

    காருண்யாவின் வீடு குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருந்தது.

  ராவணன் அவனது பெற்றோருடன் அங்கே வந்திருந்தான். அவனாக இங்கே அவன் தந்தை தாயாரை அழைத்து வரவில்லை. சிவராமன் தான் ராவணனை அழைத்து வந்தார்.
 
   ராவணன் வந்ததும் கூடத்தில் அழுதுக்கொண்டிருந்த காருண்யா கண்ணீரை துடைத்து எழுந்தாள். சீனிவாசன் வரவேற்று அமரவைக்க, அறைக்குள் செல்ல போனவளை ரோகிணி “நல்லாயிருக்கியா காருண்யா” என்றதும் “நன்னாயிருக்கேன் மாமி” என்று பதில் தந்தாள்.

  ரோகிணி காருண்யா கையை பிடித்துக் கொண்டு, “அதை ஏன்டிம்மா அழுதுட்டு சொல்லற” என்றதும் இவர்களிடம் தான் அமிர்தம் பாட்டி எல்லாவற்றையும் ஒப்பித்திருந்தாரே என்று தோளில் சாய்ந்தாள்.

  சிவராமன் சீனிவாசனிடம் “என்ன சீனு ஆச்சு? பக்கத்துல வீடு என்பதால் நீங்க பேசுவது ஒன்னும் பாதியுமா காதுல விழுது. சரியா புரிந்துக்காம எங்களுக்கு பதட்டமா இருக்கு.

  ஒளிச்சு மறைச்சு பேச என்னயிருக்கு. ஆல்ரெடி ஏதோ ராவணனால காருண்யா கல்யாணம் தடைப்படுவதா மாமி ரோகிணியிடம் சொன்னாங்க. அவங்க கஷ்டத்தை புலம்பியிருக்கலாம்.
ஒரே ஆபிஸ் வேலையில் கூடுதலா ஒன்னா இருந்ததை தப்பா பேசியதை, நீங்க போய் தெளிவாக்கிட்டா போதும்னு இருந்தோம். ஆனா இன்னிக்கு வந்ததும் பிரச்சனையா மாறியதா உங்க பேச்சில தெரிந்தது.

  நாங்க வேண்டுமின்னா மாப்பிள்ளை வீட்டாளிடம் போய் தெளிவா சொல்லறோம். ராவணன் சின்ன வயசு பிரெண்ட் அதை தாண்டி இப்ப தான் அவங்க வேலை விஷயமா சந்திப்பு அமைந்ததே. மத்தபடி பழக்கமில்லைனு எடுத்து சொல்லறோம்” என்று கூற, சீனிவாசன் மறுப்பாய் தலையாட்டி அழுதார்.

  ரோகிணி அமிர்தாவிடம் “என்னாச்சு மாமி?” என்று பரிவாய் தீண்ட, “எல்லாம் முடிஞ்சிடுச்சுடிம்மா… முடிஞ்சிடுச்சு. நேக்கு பொண்ணை நன்னா வளர்க்க தெரியலையாம். அம்மா இருந்து வளர்த்தா நன்னா இருந்திருக்குமாம்.
  வேலைக்குனு தனியா அனுப்பி பொண்ணை இஷ்டத்துக்கு வளர்த்ததா வாய்க்கு வந்ததை  பேசறா.
   மாப்பிள்ளையோட பெரிப்பாவை கலந்து ஆலோசிக்காம நம்ம காருண்யாவை அவா ஆத்துல முடிவு பண்ணிருப்பா போல. அதுல அவா ஈகோ அடிப்பட்டதுன்னு முதல்ல நம்ம காருண்யாவையும் ராவணனையும் இணைத்து பேசினா.
 
அதை சீனிவாசன் சொல்லி புரிய வச்சான். காருண்யாவுமே ஹரிஹரனிடம் எடுத்து சொல்லி சுமூகமா தான் போகுதுன்னு நினைச்சோம். ஆனா அவா வீட்ல அவங்க மாமா இந்த பொண்ணை விவாஹம் பண்ணவே கூடாது. நான் ஒரு வரன் பார்த்து தகைச்சி தர்றேனு முடிவா சொல்லியிருப்பார் போல. காருண்யாவை காட்டிலும் விரசா இன்னொரு பொண்ணும் பார்க்க ஹரிஹரனும் போயிருக்கார்.

    ஹரிஹரனுக்கு காருண்யாவை விடவும் மனசில்லாம இருந்தார். நேத்து ராவணனும் காருண்யாவும் ஒன்னா ஒரே பஸ்ல வந்தாளாம். அதுவும் பக்கத்து பக்கத்துல ஈசிண்டு பேசி சிரிச்சு வந்ததாகவும், காதலிக்கறவன் ஒருத்தன், கட்டிக்க எங்காண்ட பையனானு, ஹரிஹரனோட அப்பா போன்ல அசிங்கமா பேசிட்டா.” என்று தோளிலில் இருந்த துண்டில் கண்ணீரை துடைத்தார்.

ராவணனோ கொதித்து போய் “அங்கிள் தெரிந்தவங்க ஒரே ஆபிஸ்ல இருந்தா பேசிக்க கூடாதா? ஒரே பஸ்ல நானும் அவளும் சிரிச்சு பேசினோமா? பொய் சொல்ல அடுக்குமா அங்கிள். நான் பாட்டுக்கு ஐ-மாஸ்க் போட்டுட்டு ஒதுங்கினேன். அவ பாட்டுக்கு வாந்தி எடுத்த அசதியில ஜன்னலாண்ட சாய்ந்துக்கிட்டா. மனசாட்சி இல்லாம அசிங்கமா மூளையை கழட்டி வச்சிட்டு பேசுவாங்களா?” என்று உறும, சிவராமனோ, “ராவணா” என்று அதட்டினார்.

  “இல்லைப்பா… கோஇன்சிடெண்ட் எல்லாம் தப்பா புரிஞ்சுண்டா நான் என்ன செய்யறது. ஏதாவது நானும் காருண்யாவும் ஆபிஸ்ல கூட அதிகம் பேசிக்கறதில்லை” என்று மெய்யாகவே வருந்தினான்.‌

  அமிர்தம் எப்பொழுதும் ஒரு ஆண் பேசும் பொழுது பேசமாட்டார். சிவராமன் ராவணன் இருக்க பேச தயங்கினார்.

    ரோகிணியோ “இந்த வரன் இல்லைன்னா வேற நல்ல வரன் பாருங்க அண்ணா. அதை விட்டுட்டு அழுதுட்டு, அதோட கண்ணுல கருப்பு கண்ணாடி போட்டுட்டு நம்ம பிள்ளையை கோளாறு சொன்னா சரியா?” என்றார்.

  இம்முறை அமிர்தமோ, “அப்படி சொல்லி தான், அவா இல்லைன்னா என்ன வேற வரன் பார்க்க உடனே சேஷூவை வரச் சொன்னோம்.
  எங்க நிலவரத்தை சொல்லி, வேற வரன் இருக்கான்னு பார்க்க சொல்ல, எங்க எதிர்லயே எங்க இனத்துல ஒருத்தருக்கு போனை போட்டு ஒரு பொண்ணு இருக்கு காஞ்சிபுரத்துல என்று ஆரம்பிச்சா, அந்த பக்கமிருந்தவாளோ ‘யோவ் சேஷூ காருண்யானு சொல்லிடாதேள். அந்த பொண்ணு பத்தி நல்லதா எதுவும் செவிக்கு வந்து சேரலைனு எடுத்தும் சொல்லறா. வீடு நிசப்தமா இருந்ததோனோ, அவா பேசறது அட்சு பிசகாம நேக்கும் கேட்டுடுச்சு, சீனிவாசனும் கேட்டுட்டான். அப்பறம் போறச்ச, பொண்ணு காதலிச்சா கூட ஏத்துப்பா மாமா. இப்படின்னா யோசிப்பானு வேற யாரிடமாவது பேசி பாருங்கோனு சொல்லிட்டு, பொண்ணை நன்னா வளர்க்க பாருங்கோனு அட்வைஸ் வேற  பண்ணிட்டு போனான்.
   பத்திரமாத்து தங்கமா எங்க சொல்படி நாங்க பார்த்த வரனுக்கு தலையாட்டி சிவனேனு இருந்தா காருண்யா. இப்ப… இப்படி ரோட்ல போறவாளாம் பேசறப்ப என்‌ பிராணம் போகக்கூடாதானு இருக்கு” என்று சேலை முந்தானையால் வாயை பொத்தி அழுதார்.

     காருண்யாவோ “என்னால தானே நம்மாத்து மானம் போகுது என் பிராணம் போகட்டும்” என்று தலையில் அடித்து அழுதாள்.

ராவணனோ ‘லூசாடி நீ’ என்று கடிய நினைத்தான். ஆனால் அவளை  தடுக்க இயலாதென வேடிக்கை பார்த்தான்.‌

  சிவராமனோ, காருண்யாவை பார்த்து ராவணனையும் பார்வையிட்டார். “சீனிவாசன்… கேட்கறேன்னு தப்பா நினைக்காதிங்க. எனக்கு இதை தவிர வேற யோசிக்க முடியலை.
  இந்தளவு காருண்யாவை பேசிட்டு திரும்ப அவங்களையே கல்யாணம் செய்ய கன்வின்ஸ் பண்ணினா நல்லா இருக்காது.
  ஏதோ உறுத்தலாவே வாழ்க்கை அமையும். வேற வரணும் பார்த்தா இப்படி பேசி சிதைப்பாளோனு உங்களுக்கு பயமாயிருந்தா… நான் ஒரு ஐடியா சொல்லறேன்.
  ஆனா நீங்க அதுக்கு உங்க சாதி சம்பிரதாயம் எல்லாம் தூக்கிப் போட்டு காருண்யாவுக்காக யோசிக்கணும்.” என்றார்.

   “எங்களுக்குன்னு இருக்கற சொசைட்டில போனா, இரண்டு நாளா நக்கலாய் பார்க்கறாங்க. கோவிலில் தீபாராதனை செய்துட்டு வந்து பிரசாதம் தந்தா, மறுத்துட்டு போறா, இப்பவே கொலை குத்தம் பண்ணறதா என்னை சாவடிக்கறா. நேக்கு இந்த குறிப்பிட்ட நாட்களில் சாதி சம்பிரதாயம் எல்லாம் மண்ணா தான் நினைக்க வச்சிட்டா. நீங்க என்ன சொல்லறேளோ சொல்லுங்கோ. என்‌ மக மனசு சந்தோஷமாயிருக்கணும். சாந்தப்படுத்தி அவளுக்குன்னு ஒருத்தனை கட்டி வைக்கணும்.” என்றார்.

  சிவராமன் ரோகிணியை பார்த்து ”நேத்து நைட் பேசியது சம்மதம் தானே? அதை சீனிவாசனிடம் சொல்லவா?” என்று கேட்டார்.
  “வேற ஆப்ஷன் இல்லைன்னா, இவங்களுக்கு சம்மதம்னா பேசுங்க” என்று ஊக்கினார்.
 
  “என்ன முடிவும்மா?” என்று ராவணன் கேட்க, சிவராமனோ, “இவ்ளோ பிரச்சனையும் ராவணன் காருண்யா வச்சி தான். பேசாம காருண்யாவை எங்க ராவணனுக்கு கட்டி வையுங்க. காருண்யாவோட சின்ன வயசுல இருந்து ராவணன் பழகிட்டு இருக்கான். அவனுக்கு காருண்யாவோட விருப்பு வெறுப்பு தெரியாதா?
   நேத்து கூட ஏன்டா இளைச்சிட்ட அசைவம் சாப்பிடலையான்னு கேட்டேன்.
   ‘எங்கப்பா காருண்யா பக்கத்து பிளேஸ், நான்வெஜ் சாப்பிட்டா அவளுக்கு பிடிக்காதுனு தெரிஞ்சே எப்படினு சொன்னான்.
   இது எதுக்கு சொல்லறேன்னா, இவங்களுக்குள் நட்புரீதியா புரிதல் இருக்கு. கல்யாணம் செய்து வைத்தாலும் நல்லா கணவன் மனைவியா இருப்பாங்க. ராவணனிடம் கூட நான் அபிப்ராயம் கேட்கலை. நீங்க சம்மதிச்சா அவனை தாலி கட்ட வைக்கறது என் பொறுப்பு. இனி நீங்க தான் உங்க முடிவை சொல்லணும்.” என்று கேட்க ராவணன் திகைத்தவனாக நின்றான்.

  அவனது பார்வையே விழித்து நிற்கும் நிலையை உரைத்தது. காருண்யா தலைகுணிந்து நின்றாளே தவிர தந்தை பாட்டி இருக்கும் நேரம் தலையை கூட நிமிர்த்தவில்லை.

   அமிர்தமோ சீனிவாசனை காண, “கொஞ்சம் அவகாசம் கொடுங்கோ. யோசிக்கறோம். ஏன்னா… எண்ணெய் சட்டிக்கு பயந்து எரியுற நெருப்புல விழுந்த கதையா இருக்க கூடாது பாருங்கோ” என்று கூறினார்.
“கண்டிப்பா… நீங்க இப்ப அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு பயப்படலாம். ஆனா பாருங்க, தெரியாத பேயுக்கு தெரிந்த பிசாசு பெட்டர். உங்களுக்கும் ராவணனை சின்னதுலயிருந்து தெரியும்‌. ஏன் எங்களையும் நல்லா தெரியும். எங்க பழக்கவழக்கம், சுபாவம், பழகற விதம் இதெல்லாம் யோசித்து தெளிவா சொல்லுங்க.
   இந்த ஹரிஹரன் விஷயம் எல்லாம் நினைச்சு அழாதிங்க. ஏன் நாங்களே இல்லைன்னாலும் காருண்யா மனசுக்கு நல்லவங்க வீடு தேடி வருவாங்க.” என்று கூறவும் சீனிவாசன் மனம் தெளிவானது.
  அமிர்தமோ நன்றி கூறும் விதமாக இரு கரத்தை குவித்தார்.

   “எதுக்கும் கலங்காதிங்க அமிர்தா மாமி.” என்று ரோகிணி கூற, தலையாட்டினார்.
“காருண்யா… நல்லா சாப்பிடு. உங்க அப்பா பாட்டியையும் நல்லா கவனிச்சிக்கோ. கொஞ்ச நாளா ஒழுங்கா சாப்பிடுவதில்லை. நாங்க வரட்டா” என்று கேட்க தலையசைத்திட, ரோகிணி சிவராமன் ராவணனை அழைத்து புறப்பட்டனர்.

    மூவரும் சென்றப்பின், சீனிவாசன் மகளருகே வந்தார்.
   “ராவணன் உன்னிடம் விரும்பறதா சொல்லியிருக்காரா காருண்யா? இல்லை உனக்கு அவனை பிடிச்சிருக்கா?” என்று தந்தை கேட்க, “அப்பா… ஏன்‌ இப்படி கேட்கறேள். ராவணன் ஹயர் ஸ்கூல், காலேஜ் படிக்கறச்சவே பேசி பழகியது குறைஞ்சிடுச்சு. பெங்களூரில் இருக்கான் என்பதே பாட்டி தான் நேக்கு சொன்னது.
     அப்படியிருக்கச்ச, அவனும் நானும்  எப்படி விரும்பியிருப்போம். இந்த வேலைக்குன்னு சென்னை வந்ததிலிருந்து பழைய நட்போட பேசறோம். அது கூட வேலை விஷயம் தாண்டி எதுவும் பேசியதில்லை. அப்படி ஏதாவது ஆசையிருந்தா, நான் ஹரனிடம் கல்யாணம் செய்ய கேட்டப்ப சந்தோஷமா தலையாட்டியிருப்பேனா? இப்ப கூட கல்யாணம் நின்றதில் கஷ்டப்படறேன். தவிர சந்தோஷப்படலையே” என்று சங்கடமாய் உரைத்தாள்.

  “அது தெரியும்மா. ஒரு வார்த்தை கேட்டேன்.” என்றவர் மகளிடம் “சிவராமன் பேசியதை கேட்டியே என்ன சொல்ல?” என்று மெதுவாய் கேட்டார்.

  காருண்யாவோ குனிந்த தலை நிமிராது, “நேக்கு எது நல்லது எது கெட்டதுன்னு சின்னதுலயிருந்து பார்த்து பார்த்து வளர்த்தவா நீங்க இரண்டு பேரும். அதுவும் தாயில்லா குழந்தைன்னு எந்தளவு மத்தவா என்னை ஏசிட கூடாதுன்னு பார்த்து நல்லது கெட்டது சொல்லி வளரத்திங்க. அப்படியிருக்க, எனக்கு விவாஹம் பண்ணற பெரிய பொறுப்புக்கும், நீங்க எடுக்கற முடிவு தான் கட்டுப்படுவேன். விவாஹம் பொருத்தவரை நேக்குன்னு எந்த தனிப்பட்ட மனுஷாளையும் நேசித்தது இல்லை.” என்றுரைத்தாள்.

  அமிர்தமோ, “நம்மாத்து குழந்தையை, நாக்குல நரம்பில்லாம பேசிட்டாளே. அவாயெல்லாம் நன்னாயிருக்க மாட்டா” என்று அமிர்தம் சாபம் தருமா விதமாக பேச, சீனிவாசனோ “அம்மா… நீங்க நல்லவா உங்க வாயிலருந்து எந்த சாபமும் யாருக்கும் தராதேள்” என்று கூறியவர், “குழந்தைக்கு நாக்குக்கு ருசியா வத்தக்குழம்பு மோர்குழம்பு வையுங்கம்மா. மத்ததை யோசிப்பும் உங்க அபிப்ராயமும் சொல்லுங்க” என்று சீனிவாசன் கூறினார்.

  “இதுல என்னடா யோசிக்கறது. எப்பவும் சாஸ்திரம் சம்பிரதாயம், நம்மவா, என்று பார்த்து பேசறது நான் தான். இன்னிக்கு சொல்லறேன்டா. நம்மவா வேண்டாம். நம்ம காருண்யாவுக்கு அந்த ராவணன் ஒருத்தன் போதும் டா. அவன் நன்னா புரிஞ்சுப்பான். நேக்கு ஏதோ இதான் நல்லதுன்னு மனுசுக்குபடுது.” என்றுரைத்தார்.
  எப்படியும் அமிர்தம் தான் மடி ஆச்சாரம் சுத்தபத்தம், என்று இல்லாத குறை சொல்லி மனுஷாளை தள்ளி நிறுத்துவார்.

பார்ஷியாலிட்டி அனகோண்டா போல ஆள் பார்த்து செய்வது அமிர்தம் அம்மாளுக்கு கை வந்த கலை.

அவர்களே காருண்யாவை ராவணனுக்கு மணக்க சம்மதம் என்பதாக சொல்ல, சீனிவாசனுக்கும் ஒரு இதம் உண்டானது.

  இத்தனை நாட்கள் ஹரன் வீட்டில் பேசியதை எல்லாம் காது கொடுத்து கேட்டு பொறுத்து கொண்டவருக்கு, சிவராமன்-ரோகிணி போன்றவர்கள் சம்பந்தியாக எண்ணி பார்க்கவே ஒரு பாஸிடிவ் வைப்ஸ் கிடைத்தது.

  இத்தனை ஆண்டுகாலமாக பக்கத்து வீட்டில் இருந்தாலும் எந்த வம்பு தும்பிற்கும் செல்லாதவர்கள். இதுவரை எந்த மனிதரையும் தப்பாய் கூட பேசியதில்லை. ராவணன் தான் கொஞ்சம்… பெயருக்கு ஏற்றவனாக சில நேரம்.
   அதெல்லாம் யோசித்தால் இந்த நல்ல வரன் காருண்யாவுக்கு அமையாது.
  என்ன தங்கள் இனமில்லை. சைவம் சாப்பிடும் தங்களுக்கு அசைவம் உண்ணும் மாப்பிள்ளையா என்ற மலைப்பு வந்தது. ஆனால் ராவணனை பற்றி சற்று முன் சொன்ன விஷயமோ, காருண்யா பக்கத்தில் வேலை செய்வதால் அசைவம் கொண்டு வந்து சாப்பிடாதவன், அவள் மனைவியாக வந்தால் கூடுதலாக தவிர்த்து கொள்வான் என்று எண்ணினார்.

அதனால் மகளின் வாழ்வு ராவணனின் கையில் ஒப்படைக்க முடிவெடுத்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-11”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    அட… இது என்ன சட்டென முடிவெடுத்திட்டாங்க. ஆனா, இது ரொம்பவே கஷ்டம். ஏன்னா, ஹரிஹரனுக்கு பேசினவுடனே, காருண்யா ராவணனை விட்டு ஒதுங்கினா தானே, யாரோ ஒைு முன்பின் தெரியாதவனுக்காக, வின்ன வயசு நண்பனை கூட ஹரிஹரனுக்காக விட்டுக் கொடுத்தவ தானே…? நாளை வேற யாருக்காகவாவது, எடுக்காகவாவது திரும்பவும் ராவணனை விட்டுத்தர மாட்டான்னு என்ன நிச்சயம்..?
    ராவணன் ரொம்ப ரொம்ப நல்லவன், வெளிப்படை ஆனவன், ஈகோ பார்க்காதவன். ஆனா, காருண்யா அப்படி கிடையாதுன்னு தோணுது அவ கொஞ்சம் செல்ஃபீஷ்.

    பரவாயில்லையே.. இத்தனை சீக்கிரமா, அத்தனை பெரிய முடிவெடுத்துட்டாங்களே…
    ஆனா, இது இன்னைக்கோ, நாளைக்கோ முடியற விஷயமில்லை, காலம் முழுக்க தொடருற விஷயம், நிறைய காம்ப்ரமைஸ் அண்ட் விட்டுக் கொடுத்தல், அதிகமா புரிந்துக் கொள்ளுதல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

    ஏன்னா, காருண்யா கிட்டவே அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாதப்பா, வயசுல பெரியவங்களான சீனிவாசன அண்ட் அமிர்தம் பாட்டிக்கு மட்டும் இருந்திடுமா என்ன..? ம்ஹூம்… இட் இஸ் நாட் பாஸிபிள்…! காருண்யாவே தான்தான் உசத்தி, மத்தவா எல்லாம் தாழ்த்தின்னு நிறைய விஷயத்துல நடந்துக்கிறா, இது ராவணன் புருசனா அமைஞ்சிட்டா நிதைக்கும் அவன் தான் போராடணும், கண்ணை கசக்கிட்டு வேற நிப்பான்.

    ஸோ… சட்டுன்னு முடிவெடுக்காம கொஞ்சம் பழகி பார்த்துட்டு, சரி வந்தா தாராளமா மணமுடிக்கலாம். பேசறது வேற, ப்ராக்டிக்கல் லைஃப்ங்கிறது வேற தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Karunya first ivan ah partha appo vae avoid pannitu than pona andha haran kooda marriage proposal la prachanai varum pothum ivan ah than blame panna ah apadi irukum pothu ivan kooda marriage num pothu konjam yosanai ah than iruku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *