Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

அத்தியாயம்-3
ஏ. சி கம்பார்ட்மென்டில் இருந்து சுஜா இறங்கினாள். ரெயில் சரியான நேரத்துக்கு வந்து
விட்டிருந்தது. அதிசயம் தான். இருள் பிரியாத வானம் மென் காற்றை குளிர்ச்சியாக
அனுப்பியது. சுஜா எழும்பூர் ரெயில் நிலைய கூட்ட நெருக்கடி விட்டு வெளி வந்தாள். டாக்சி
பிடித்து தன் தங்கை வீட்டுக்கு வந்தாள். செல்போன் பட்டன தட்டி பேசினாள். “சுதா….அக்கா
வந்திட்டு இருக்கேன்..”
“சரிக்கா..வா… வா.”
சுஜா முகத்தில் பூவின் மலர்ச்சி வந்தது. ரொம்ப நாளைக்கப்புறம் அம்மாவையும் தங்கையையும்
பார்க்கப் போகிறாள்.!
அம்மாவிடம் சொன்னால் சுதா. “அத்தானை வழியனுப்ப வந்தது தான். அக்கா இப்ப தான்
வரா. அம்மா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”
தாயார் பார்வையற்ற கண்களில் கூட பிரகாசம் தெரிந்தது.
“சுதா….அக்காவுக்கு வெங்காய ஆடை பிடிக்கும். ரெடியா இருக்கில்லே.? அப்புறம் மதியம்
கூட்டாஞ்சோறு பண்ணிடு. சுஜா விரும்பி சாப்பிடுவா.”
“சரிம்மா. இதோ நொடியில் குளிச்சிட்டு வந்திடறேன்.”
சுதாவின் கணவன் ஆனந் ஷேவ் பண்ணிவிட்டு சுஜாவை வரவேற்க தயாராக இருந்தான்.
வாசலில் டாக்ஸி வந்து நின்றது. சுஜா மட்டும் இறங்கினாள். “ஆர்த்தி வரலியா அக்கா.?
அவளை ஏன் விட்டிட்டு வந்தே.?”
“முக்கியமான அலுவலக பணி நிமித்தம் வந்தேன். அதான் விட்டிட்டு வரவேண்டியதா போச்சு.”
“சுஜா கண்ணு. எப்படிம்மா இருக்கே.? கிட்டே வா.” என்றாள் அம்மா.
சுஜா….. அம்மா அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள். லட்சுமி தன் இரு கரங்களில் மகளைத்
தடவிப் பார்த்து ஆனந்தித்தாள். பேச்சு வரவில்லை. கண்களில் இளகலான நீர் முத்துக்கள்
இறங்கியது.
“நல்லாயிருக்கியா தங்கம்.?”
அந்த சின்ன வாக்கியத்தில் பெரும் புதயால் புதைந்து கித்யபாபது போல் தோன்றியது
சுஜாவுக்கு. “நல்லாயிருக்கேன்மா.”
சின்னச் சின்ன உரையாடல்கள், சந்தோஷமான உணவு பரிமாற்றங்கள், ஓயாமல் சளசளத்த
வாய்கள்….அந்தக் குடும்பத்தின் பரஸ்பர சந்திப்பில் பாசப் பூக்கள் உதிர்ந்த வண்ணம்
இருந்தது.
“மதனி..நான் அலுவலகம் கிளம்பறேன். அதுக்கு முன்னாடி உங்க கூட பேசணும்.” என்றான்
ஆனந்.
ஸ்ரீதரின் விசித்திர மிரட்டலையும் செயல்களையும் சொன்னாள் சுஜா.

Thank you for reading this post, don't forget to subscribe!

“அவன் ஒழிந்தான். பயித்தியம் என்று நினைத்தேன். மீண்டும் வந்து பிரச்சனை பண்ணறான்.
என்ன செய்யறதுன்னு தெரியலை ஆனந்.
“ஏதோ நோக்கத்தோடு தான், அவன் இப்படியெல்லாம் பண்ணறான். அது என்னன்னு
தெரிஞ்சுக்கிட்டா இவனை டீல் பண்ணுவது சுலபம். திருமணம் ஆன பெண்ணிடம், இப்படி
வந்து அபத்தமா பேசுவதென்றால், அதுக்கு பலமான காரணம் இருக்கும். அவன் நார்மல்
பர்சன் தானா மதனி.?”
“இன்னும் ஏதும் பிடிபடலை ஆனந். பேரும் மன உளச்சலா இருக்கு.”
“சுஜா….மனசை போட்டு குழப்பிக்காதே. இவன் எப்படிபட்டவன்னு ஆராய்ச்சி எதுக்கு?
பேசாம நீ இங்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிடு.” என்றாள் அம்மா விவேகத்துடன்.
“ஆமாக்கா. அதான் சரியான அடுத்த ஸ்டெப்பா எனக்குத் தோணுது. இது மார்ச் மாதம்
தானே.? ஏப்ரலில் தெரிவு முடிந்ததும் ஆர்த்திக்கு டி. சி வாங்கிடு. இங்கு பள்ளியில்
சேர்த்திடலாம். மாடி பவர்ஷன் காலி தான்.”
பெரும் பாரம் மனதிலிருந்து இறங்கியது போல் இருந்தது.
“சரிம்மா. அப்படியே செய்கிறேன். சுதா தேங்க்ஸ். ஆனந் உங்களுக்கும் தான்.” சுஜா
நன்றியுடன் சொன்னாள்.
“மதனி….டோன்ட் பி சில்லி. ஒரு வாரம் இருப்பீங்க இல்லே.” என்றான் ஆனந். சுஜா மெதுவாக
தலை அசைத்தாள்.
“இல்லே ஆனந். இரவே கிளம்பறேன். சின்னையில் செயல்படும் எங்கள் மொபைல்
அலுவலகத்துக்கு வெளிநாட்டவர் வருகிறார்கள். அவர்களை வரவேற்று ஆர்டர் பிடிக்கும்
வேலை என்னோடது. அதான் வந்தேன்.”
வேலை விஷயமாக சுஜா பத்து மணிக்கு கிளம்பிப் போனாள். விமான நிலையத்தில் அவள்
லண்டனிலிருந்து வரும் டெலிகேட்சை வரவேற்க காத்திருந்தாள். அட்டை பிடித்து நின்றாள்.
ஐ ஆம் மிஸ்டர் ஹட்சன். கிளாட் டூ மீட் யூ.” என்று அவளிடம் வந்தார் ஒருவர். நீலக்
கண்களும். நல்ல உயரமுமாக கூட வந்து மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
சிரித்து வரவேற்று, காரில் டிரைவர் சீட்டில் அவள் அமர எத்தனித்த போது, வேகமாக சென்ற
எதிர் காரில் அவள் தன் கணவன் ரமேஷை பார்த்தாள். அருகில் ஒரு பெண். அரை நொடியில்
மறைந்தனர். திடுக்கிட்டு தடுமாறினாள்.
“கேன் வீ கோ.?..” என்றார் ஹட்சன்.
“எஸ்….எஸ் ஷுர்….” என்றாள். அதற்க்கு மேல் தாமதிக்கவோ யோசிக்கவோ நேரமில்லை.
காரை ஸ்டாரட் செய்தாள்.
மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் சுஜா. அவளுக்காக அம்மாவும் தங்கையும்
சாப்பிடாமல் உட்காரந்திருந்தார்கள்.
“என்னம்மா நீயாவது சீக்கிரம் சாப்பிட வேண்டியது தானே.? சுகர் பேஷண்ட் வேற…என்ன
சுதா நீயாவது சொல்லக் கூடாதா.?”
“சொன்னேன் கா. கேட்டா தானே.?”

“அம்மா உருட்டித் தர அவள் சாப்பிட்டு முடித்தாள். அம்மா முகத்தில் அலாதியான திருப்தி
தெரிந்தது. அவள் தளர்ந்த முகத்தில் தாய்மையின் கம்பீரம் சுடர் விட்டது. “ரெஸ்ட் எடு சுஜா.”
“இன்று தான் அம்மா முகத்தில் பெருமிதமும் முழுமையும் தெரியுதுக்கா. ஆமா நீ ஏன் டல்லா
இருக்கே.? வேலை சக்சஸ் ஆகலையா?”
“சுதா ஏர்போர்டில் டெலிகேட்சை வரவேற்க்க போனபோது ஒரு பாசிங் காரில் ரமேஷை
பார்த்தேன். பக்கத்தில் ஒரு பெண் வேறு. எப்போ துபையிலிருந்து வந்தார்.? என்னிடம் ஒரு
வார்த்தை கூட சொல்லலை. எனக்கு பயமாயிருக்கு சுதா. “ என்றாள் சுஜா.
“நீ ரொம்ப அப்செட்டா இருக்கே. அதான் உனக்கு இப்படியெல்லாம் தோணுது. அதுவும் அவர்
ஒரு பெண்ணுடன். நோ சான்ஸ். அத்தான் உன் மேல் உயிரையே வச்சிருக்கார் உனக்கே
தெரியும். உனக்கு சொல்லாமல் அவர் சென்னை வருவாரா.? அது அசப்பிலே அவர் மாதிரி
இருந்திருக்கும். நீ அவர்ன்னு நினச்சுட்டே..”
அப்படியொரு சாத்தியக்கூறு இருக்கலாம் என்று சுதா சொன்ன பிறகு சுஜாவிற்கு
தோன்றியது.
“அக்கா….மனசை போட்டி உளப்பிக்காதே. வெள்ளிக்கிழமை அத்தான் ஃபோன்
பண்ணும்போது விவரம் தெரிந்துவிடும். நீ முதல்லே இங்கே வந்து செட்டில் ஆகிற வழியைப்
பார்.” என்றாள் தங்கை.
மறுநாள் மதுரை கிளம்பும்போது சுஜா குழப்பத்துடனும் வருத்தத்துடனும் சென்றாள். மனம்
திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அந்தக் காட்சி பொய்யாக இருக்க வேண்டும் என்று
பிரார்த்தித்தாள்.

வெள்ளிக்கிழமை ரமேஷ் போன் செய்தான். அவன் குரல் தெளிவாக இருந்தது.
“சுஜா….பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் நன்றாக முடிந்தது..?”
“நீங்க எங்கிருந்து பேசறீங்க.?” கோபத்துடன் கேட்டாள்.
“ஏன் துபாயிலிருந்து தான் பேசறேன். ஏன் அப்படி கேக்கற. சுஜா.?”
“நேத்து பூரா தூக்கமில்லை தெரியுமா?”
“சுஜா….என்னாச்சு.?”
“நான் சென்னையில் கான்பரன்சுக்கு வந்த பாரின் டெலிகேட்ஸ் வரவேற்க்க ஏர்போர்ட்
போயிருந்தேன். அங்கே…. ஒரு பாசிங் காரில் உங்க மாதிரி ஒருத்தரை பார்த்தேன். நீங்கன்னே
அந்த நிமிஷம் நினைச்சு தடுமாறிட்டேன். பக்கத்தில் அழகான பொண்ணு வேறே.”
“ஸாரிடா தங்கம். வரேன் வரேன்னு சொல்லி மூணு வருஷம் தான் வராம ஏமாத்திட்டேன்.
இங்கே வேலை அப்படி. அதான் யாரையோ பார்த்திட்டு அசப்பிலே என் மாதிரி
இருந்திருப்பதாலே, நான்னு கிளம்பிட்டே சண்டைக்கு. பொண்ணு வேறையா? ம்ம்….அப்படி
ஏது எனக்கு லக்கு.?”
“ஓ….அப்படி ஒரு நினைப்பிருக்கா? வாங்க ஊருக்கு, வச்சுக்கிறேன்.”

அவன் வாய் விட்டுச் சிரித்தான். பிறகு நெகிழ்ந்த சோகக் குரலில் கூறினான். “நான் கூட
இங்கே ஷாப்பிங் காம்பிளக்சில்…..உன் மாதிரி தெரிந்த பென் பின்னாடி ஓடி….முகம் பார்த்து
ஏமாந்தேன்.. நீ இங்கு இல்லை என்கிற விஷயத்தை சடாரென்று நினைத்து வருத்தமாச்சு.
இந்த பிரிவு வலி கொடுமையானது சுஜா.”
இதைக் கேட்டு சத்தம் வராமல் கண்ணீர் விட்டாள் அவள். ச்சே….இவரை தப்பாக நினைக்க
எப்படி மனசு வந்தது.? எல்லாம் அந்த ஸ்ரீதர் தடியனால் வந்த வினை. மனசை ரொம்பவே
குழப்பி விட்டிருக்கான். ப்பா….இனி அவன் தொல்லை இல்லை….நிம்மதியாக சென்னையில்
அம்மா தங்கையுடன் செட்டில் ஆகிவிடலாம். சுஜா தவறு புரிந்ததும் மன அமைதி
அடைந்தாள். அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“சீக்கிரம் வாங்க ரமேஷ். நானும் குழந்தையும் ஏங்கிப் போயிருக்கோம்.”
“கண்டிப்பா….கலங்காதே நம்மை யாரும் பிரிக்க முடியாது.”
காவிரி ஆறு மனசுக்குள் பாய்ந்தது. போல் குளிர்ந்து போனாள்.
நாட்கள் வேகமாக பறந்தன. பந்தயக் குதிரையின் வேகத்தில் சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து
கொண்டிருந்தன. ஆர்த்திக்கு தெரிவு முடியப் போகிறது. டி. சி க்கு சொல்லிவிட்டாள். ஆரதிக்கு
அவ்வளவாக இஷ்டமில்லை.
“போம்மா என் பிரெண்ட்ஸ் எல்லாம் விட்டுவிட்டு புதுப் பள்ளியில்….போம்மா.”
“பழகிடும் செல்லம். அம்மாவுக்காக. சித்தி….சித்தப்பா. பாட்டி சூடா இருக்கலாமில்லே.”
ரமேஷ் கூட கேட்டான் “அந்த கிறுக்கனுக்காகவா ஊரையே மாத்தறே? என்னாச்சு சுஜா?
இவ்வளவு தான் உன் தைரியமா?”
“அப்படியில்லை….மூணு வருஷம் தனியாயிருந்து மனசு தெம்பிழந்திடுச்சு. இதில் இவன்
தொல்லை வேறே. அதான்……”
“ஓகே ஓகே….உனக்கு ஆறுதலா இருக்கும்னா மாத்திக்கோ. நீ பாதுகாப்பா இருக்கறது தான்
முக்கியம். உனக்கு எல்லா உதவியும் ஷிப்டிங் பண்ணும் போது செய்ய பரமேஸ்வரன்
வருவான்.”
“யாரு சிவபெருமானா……அவருக்கு வேறு வேலையே இல்லையா.?”
“பரவாயில்லையே டைமலி ஜோக்.” வாய் விட்டு சிரித்தான். “பரமேஸ்வரன் எனக்குத் தெரிந்த
எலக்ட்ரீஷியன். அவன் மகனுக்கு இங்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். அந்த நன்றிக்கு
என்ன வேணா செய்வான்….சரி ஜாக்கிரதையா இரு. பை….”
“ஃபோன் வைக்கப்பட்டு விட்டது. சுஜா உற்சாகமாக இருந்தாள். அம்மாவோடவும்
தங்கையோடும் இருக்கப் போகிறோம் என்பதே மிகப் பெரிய பலமாக இருந்தது. ஆர்த்தி
இன்னும் பள்ளி விட்டு வரவில்லை.
வேண்டாத சாமான்களை முட்டை கட்டி கழித்து விட்டால், கொண்டு போகும் சாமான்கள்
குறையும். சின்னதாக போய்விட்ட ஆர்த்தியின் கிழியாத பழைய உடைகளை ஆயாவை
கூப்பிட்டு எடுத்துப்போகச் சொன்னால். ஆயாவின் பேத்திக்கு சரியாக இருக்கும்.
கல்யாணமான புதிதில் ஒரு சின்ன மர பீரோ மூன்றடி உயரம், வாங்கி இருந்தாள். அதை
இப்போது பயன்படுத்துவதே இல்லை. அதையும் ஆயாவிடம் கொடுத்து விடலாமே.!

மண்டியிட்டு அமர்ந்து அந்த பீரோவை திறந்தாள். எல்லாம் காலியாக இருந்தது.
பக்காகவாத்தில் ஒரு சின்ன இழுப்பறை இருந்தது. இழுத்துப் பார்த்தாள். ஏதேதோ பேப்பர்கள்.
எடுத்து பார்த்தாள். எல்லாம் வேண்டாதவை. குப்பையில் போட வேண்டியது தான். பீரோவை
மூடப் போனாள். இழுப்பறை அடியில் ஏதோ ஓவியம் போல் தெரிந்தது. எடுத்துப்
பார்த்தாள்….பார்த்தாள்….பார்த்துக் கொண்டே இருந்தாள். இதயம் துடிப்பு நிறுத்தி மீண்டும்
வேகமெடுத்து அடித்தது. பந்தயத்தில் ஓடும் வீராங்கனை போல் அத்தனை வேகமாக
அடித்தது.
சந்தேகமே இல்லை……இந்த ஓவியத்தில் இருகக்கும் பென், அன்று ஏர்போர்டில் காரில்
பார்த்தப் பேன் தான். அப்படியானால் அவள் உணர்வு தப்பு செய்யவில்லை. கண்டிப்பாக அது
ரமேஷ் தான். திடுதிப்பென்று தாலி மேல் வானம் இடிந்து விழுந்தது போல் இருந்தது. ஸ்ரீதர்
ஒரு பயித்தியக்காரன் என்றால், ரமேஷ் ஒரு ஏமாற்றுக்காரனா.? யாரிந்தப் பெண்.? இவளை
ஓவியமாக வரைந்து வைத்துக் கொண்டாட ரமேஷுக்கு என்ன வந்தது.? ஓவியத்தின்
அடியில்..
பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா?
பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா?’
இரவல் வரிகளுடன் என் அன்பு முத்தங்கள்….ஸ்ரீதர் என்று போட்டிருந்தது. இதை பார்த்து
மேலும் குழப்பமான அதிர்ச்சிக்கு ஆளானாள் சுஜா.
இவள் ரமேஷ் கூட சுற்றுபவள் என்று நினைத்தால், ஸ்ரீதர் இவளைக் காதலிப்பதாக அல்லவா
இந்தக் கவிதை சொல்கிறது. அப்புறம் அதை ஏன் ரமேஷ் எடுத்து வந்து இங்கு
வைத்திருக்கிறான்.? தன் வாழ்க்கையே ஏதோ மர்மட் திரைப்படம் போல் ஆகிவிட்டதை
உணர்ந்தாள். அவளுக்கு மிகவும் குழப்பமான விஷயம் இந்தப் பெண்ணுடன் ரமேஷ் காரில்
பவனி வரக் காரணம் என்ன? மனசு சட்டென்று நின்று போனது.
ரமேஷ், ஸ்ரீதர் ஆகிய இரு ஆடவர்களும் அவளிடம் நாடகம் ஆடுகிறார்கள். உண்மையை
புரிந்து கொள்கிற சாமர்த்தியம் அவளுக்கில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுபவர் இடத்தில் வாதிடல் என்பது காகிதத்தில் கப்பல் செய்து, கடலில் விடுவது போலத்
தான். அவளுக்கு மனசும் கண்ணும் இருத்திக் கொண்டு வந்தது. சக்தியெல்லாம் வடிந்தது.
இவர்கள் எதற்கு அவளிடம் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்?
பிறகு மெள்ள நிமிர்ந்தாள். தன்னை சேகரம் பண்ணிக் கொண்டாள். பிரிட்ஜ் திறந்து தண்ணீர்
குடித்தாள். திணறலான வாழ்க்கையில் புத்துயிர் பெற அவள் என்ன செய்ய வேண்டும்?
நிதானமாக சிந்திக்கத் தொடங்கினாள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தனர்
சுஜாவும் ஸ்ரீதரும். மாலை நேர வானம் சரிகை துகள்களின் மினுமினுப்புடன்
பொற்தாமரையைத் தொட்டு தகதகக்க வைத்தது. அழகான நேரம்….ஆனால் அழகற்ற
சந்திப்பு.
“ஸ்ரீதர்……என் கயில் சாவி இருக்கு. பூட்டிய பெட்டியை தேடுகிறேன். பதில் சொல்லுங்க.
பெட்டியை திறக்கக் உதவுங்க.”

ஸ்ரீதர் ஓவியத்தை வாங்கிப் பார்த்தான். அஞ்சு நிமிடம் போல் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
அவன் கண்களில் நீர் பளபளத்தது.
“இந்த ஓவியம் என் வீட்டின் மரபீரோவுக்குள் எப்படி வந்தது.? இவள் ஏன் என் கணவருடன்
சுற்றுகிறாள்.? இதில் உங்க பங்கு என்ன.? துயர் என்ன.?”
ஸ்ரீதர் நிமிர்ந்து அவள் கங்காளி சந்தித்தான். திறந்து விடுகிறேன் திரையை, என்கிற
மனோபாவம் அவன் முகத்தில் தெரிந்தது. அப்பொழுது அவள் செல்போன் அடித்தது. சுஜா
எடுத்தாள்.
“சொல்லுங்க ரமேஷ்.”
“சுஜா….உன் கூட பேசணும் போல் இருந்துச்சு. அதான் கூபிட்டேன். அந்த ரவுடி தொல்லை
இப்ப இல்லையே.?”
“அந்த ரவுடி இங்கே தான் உக்காந்து இருக்கான். அவன் கூட பேசுங்க. தரட்டுமா.?”. ஃபோன்
வைக்கபட்டுவிட்டது. சுஜா முறுவலித்தாள். அந்த முறுவல் அழுகை போல் துடித்து
அடங்கியதை ஸ்ரீதர் கவனித்தான்.
“சொல்லுங்க. அவர் போனை கட் பண்ணிட்டார். நீங்க என்ன செய்யப் போறீங்க.? எழுந்து
ஓடப் போறீங்களா.? பொம்பளை மனசுன்னா உங்களுக்கெல்லாம் அவ்வளவு சீப்பா இருக்கு
இல்லே.? மிரட்டறதும் நடிக்கறதும்……எங்க கத்துக்கிட்டீங்க? வெட்கமா இல்லே?.”
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். செக்கர் வானம் கருகத் தொடங்கியது.
தன்மானஸின் இருள் தான் வெளியில் வானத்தில் பரவிவிட்டதோ என்று சுஜா எண்ணினாள்.
“ஒரு பொண்ணோட வாழ்க்கையிலே இஷ்டத்துக்கு புகுந்து விளையாடறது தான் இப்போ
உங்க மாதிரி ஆண்களுக்கு பேஷனா போச்சில்லே.? என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு
என்னை சுத்தி சுத்தி வரீங்க? என்னைக் கொல்லணுமா? சித்திரத்து சித்ராங்கி உங்களுக்கு
என்ன கட்டளை இட்டிருக்கா.? நீங்க என் கணவரோட கூட்டா? இல்லே தனி வில்லனா.?
சொல்லுங்க. என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.? சுஜா கடுகாக பொரிந்து தள்ளினாள்.
ஸ்ரீதர் பதில் சொல்ல தயாராவது போல் உதட்டை
கூட்டி எச்சி விழுங்கினான். சுஜா அவனையே பார்த்தாள்.
“சுஜா….உண்மையை சொல்லும் நேரம் வந்துவிட்டது. உங்களை நான் மனசார நேசிக்கிறேன்.
உங்க கூட வாழ விரும்பறேன். அது தவிர வேறெதுவும் இல்லை. சுஜா என்னை நம்புங்க.”
சுஜாவிற்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
“என்ன பேசறீங்க நீங்க.? புரிஞ்சு தா பேசறீங்களா.? பயித்தியமா நீங்க.? இனி என் கூட பேச
வேண்டாம். நான் என் கணவரை நேசிக்கிறேன். அது உங்களுக்கு புரியுதா இல்லையா.?”
‘அவன் ஒரு அயோக்கியன். அது புரியலையா உங்களுக்கு.?’
“திஸ் இஸ் த லிமிட்.” பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். மனசு சற்று திருப்தி
அடைந்தது. அவள் ஓங்கி அடித்த நேரம் சடாரென்று மின்சாரம் உயிரை விட்டது.
பொற்றாமரை குளம் இருளில் மூழ்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *