Skip to content
64 / 100 SEO Score

The leader-23

அத்தியாயம்-23

 

காலை வெளிச்சம் மெதுவாக அந்த பிரம்மாண்ட வீட்டின் கண்ணாடி சுவர்களில் படர்ந்து கொண்டிருந்தது.

வெளியில் பசுமையாக பராமரிக்கப்பட்ட தோட்டம், நீரூற்று ஓசை, பாதுகாப்புக்காக சுற்றி நடமாடும் ஆட்கள், எல்லாமே அமைதியாக இருந்தாலும், அந்த வீட்டின் உள்ளே ஒரு பதட்டம் மறைந்து கிடந்தது.

 

ஷ்ரத்தாவுக்கு மட்டும் அது தெளிவாக உணரப்பட்டது.

அவள் தங்க வைத்திருந்த அறையின் பெரிய ஜன்னலை விலக்கி பார்த்தாள்.

 

கல்லூரிக்கு போக வேண்டும். சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். ஆனால் முடியவில்லை.

சத்ரியன் சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்தது.

 

ப்ரஷ் செய்து குளித்து முடித்து நேற்று வரிசையாக வந்திறங்கிய ஆடையில் ஒன்றை எடுத்தணிந்தாள்.

 

பொழுது போகாமல் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து போனை எடுத்தாள். உடனே கனிமொழிக்கு அழைத்தாள். “ஹலோ! எங்கடி இருக்க?” என்று கனி வழக்கம் போல சுறுசுறுப்பாக கேட்டதும், ஷ்ரத்தாவுக்கு மூச்சு தளர்ந்தது.

 

“நான்… இன்னிக்கு காலேஜிக்கு வரலை.” என்றாள் மெதுவாக.

 

“ஏன்? உடம்பு சரியில்லையா? இல்ல…” என்று கனி கேட்டதும், ஷ்ரத்தா உடனே அறை கதவை பார்த்தாள்.

 

வெளியே யாரும் இல்லை. நேற்று சத்ரியனுக்கு தோட்டா இறங்கியது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்க கூறியிருக்க, கனியிடம் கூட தெரிவிக்காமல் மறைக்க முயன்றாள்.

 

அதற்குப் பிறகும் குரலை குறைத்தாள். “கனி நான் சத்ரியன் கூட இருக்கேன் இப்ப எதுவும் கேட்காத. வந்ததும் எல்லாம் சொல்றேன்.” என்று தெரிவித்தாள்.

 

“ஏ.. ஏதோ பெரிய விஷயம் மாதிரி பேசற. அவர் கூடன்னா.. ஏதும் பயமில்லையே” என்று கனி கேட்டாள். ஒருவேளை தூக்கிக் கொண்டு போய் விட்டானா என்று தோழிக்காக பயந்தாள்.

 

ஷ்ரத்தா கண்களை மூடினாள்.

“என் உயிருக்கு ஆபத்துனு… சத்ரியன் சொல்லறான். முன்ன ஒருமுறை நாலு பேர் என்னை கொல்ல வந்ததா சொன்னேனே. அது போல ஏதோ மறுபடியும் ஆபத்து வரும்னு இருக்க சொல்லி பாதுகாப்பு தந்திருக்கார்.” என்று பாதி உண்மையை கூறினாள்.

 

அங்கிருந்தே கனிமொழி அதிர்ந்தது தெரிந்தது. “வாட்? என்னடி நடக்குது? உனக்கு சத்ரியன் கூட தங்க ஓகேவா? உன்னை தூக்கிட்டு போய் ஏதும் பண்ணலையே.” என்று கேட்டாள்.

 

ஷ்ரத்தா நகம் கடித்தபடி, “அவன் பாதுகாப்பா பார்த்துக்கறான். தவறா அணுகலை. ஆனா நான் ஓகே சொல்லாட்டியும் அவன் காலேஜிக்கு விடமாட்டான் ஏன்னு தான் தெரியலை. எனக்கு பயமில்லை‌”  என்று கூறிக் கொண்டிருந்தவளது காதில் திடீரென ஒரு அடக்கப்பட்ட அனத்தல் சத்தம் கேட்டது.

 

அது சத்ரியனின் அறை பக்கம் வந்த சத்தம். ஷ்ரத்தா உடனே எழுந்து நின்றாள்..

“கனி நான் அப்பறம் பேசறேன்.”  என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

அவசரமாக வெளியே வந்தாள்.

நீளமான வழித்தடம் முழுவதும் அமைதி. கருப்பு மார்பிள் தரை. சுவரில் விலையுயர்ந்த ஓவியங்கள். ஏசியின் குளிர், அந்த அமைதியை காணவே திகிலானது. மீண்டும் அந்த சத்தம் கேட்க ஷ்ரத்தா வேகமாக சத்ரியன் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவன் படுக்கையில் திரும்பி படுக்க முயன்று வலியில் புரண்டு கொண்டிருந்தான்.

வயிற்றில் கட்டியிருந்த பேண்டேஜ் காரணமாக சரியாக அசைய முடியவில்லை. நெற்றி சுருங்கி இருந்தது. மூச்சு சற்று வேகமாக இருந்தது.

“சத்ரியன்.” என்று மெதுவாக அழைத்தாள். அவன் கண்களை திறக்கவில்லை. ஷ்ரத்தா அருகே சென்றாள். தயக்கத்துடன் அவனது நெற்றியில் கை வைத்தாள். லேசாக

சூடாக இருந்தது. காய்ச்சலாக இருக்குமோ என்று அவளே முணுமுணுத்தாள்.

 

அவள் உடனே மாத்திரை எடுத்து வந்து, மாதுளை பிழிந்து ஜூஸும் ரெடி செய்து, பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து துணியை நனைத்தாள். மெதுவாக அவன் நெற்றியில் வைத்தாள்.

அந்த குளிர்ச்சியில் சத்ரியன் மெதுவாக கண் திறந்தான்.

 

மங்கலாக அவளை பார்த்தான்.

“நீயா?” என்றான் கரகரப்பான குரலில்.

 

“வேற யாராவது இருக்காங்களா?” என்று அவள் இயல்பாக சொல்லிவிட்டு, அவளுக்கு பின்னால் பார்த்து, பிறகு அமைதியானாள்.

 

சத்ரியன் லேசாக சிரித்தான்.

அந்த நிலையிலும் அவன் சிரிப்பது அவளுக்கு புரியவில்லை.

 

அங்கிருந்து வெளிவந்து மாதுளை முத்தை எடுத்து, ஜூஸ் போட்டு கொண்டு வந்தாள்.

 

“டாக்டர் சொன்னார்ல ஜூஸ் குடிக்கணும்னு. நிறைய பிளட் லாஸ். அதனால மாதுளையே கொண்டு வந்திருக்கேன்‌” என்று கூறி அவள் கண்ணாடி குடுவையில் உள்ள பழச்சாறை நீட்டினாள்.

 

எதையும் சாப்பிட குடிக்க பிடிக்காமல் “வேணாம்.” என்றான்.

 

“ட்ராமா பண்ணாத. நானே போட்டு கொண்டு வந்தேன்” என்று அவள் கடிந்து கொண்டு ஜூஸை நீட்டினாள். ஆனால் சத்ரியன் அப்பவும் வாங்கவில்லை.

 

அவளை கூர்ந்து ஆராயும் பார்வையை மட்டும் பார்த்தான்.

அந்த பார்வை, ஏதோ வேற மாதிரி இருந்தது.

 

ஷ்ரத்தாவுக்கு உடனே புரிந்தது. “அட… மறுபடியும் விஷம்னு நினைக்கறியா?” என்று எரிச்சலானாள்.

 

சத்ரியன் உதட்டை சற்றே சுழித்தான். அடுத்த நொடி ஷ்ரத்தாவே கண்ணாடியை எடுத்து பாதி பழச்சாறை குடித்தாள்.

“போதுமா.. போதுமா..? விஷமில்லை” என்று கடுப்பாக கேட்டாள்.

 

சத்ரியன் அவளை சில விநாடிகள் பார்த்தான். பிறகு மெதுவாக அவளிடமிருந்து ஜூஸை வாங்கி குடித்தான். அவன் குடிக்கும்போது ஷ்ரத்தா சுவைத்த அதே இடத்தில் வாயை வைத்து பருகினான்.

ஷ்ரத்தாவுக்கு தாமதமாக தான் புத்திக்கு புரிந்தது.

‘அச்சோ… நான் குடிச்ச அதே இடத்துல…’ என்று அவள் முகம் உடனே மாறியது.

 

சத்ரியன் அதையும் கவனித்தான்.

அவனது கண்களில் குறும்பு மின்னியது. ஷ்ரத்தா உடனே முகத்தை திருப்பி நகர முயன்றாள். இங்கிருந்தால் ஏதேனும் பேசி சீண்டுவானென.

 

“எங்க போற?” என்றவன் அவளது கையை பிடித்தான். என்னதான் குண்டு பாய்ந்த உடலென்றாலும் பிடி இரும்பாக தான் பிடித்தான்.

 

“விடு.” என்றாள் அவசரமாக.

சத்ரியன் அவளை இழுத்து படுக்கையின் ஓரத்தில் அமர வைத்தான்.

 

“சத்ரியன்!” என்று அவள் முனங்க, “ஷ்ஷ்..” என்று அவன் மெதுவாக கூறினான்.

 

அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஏனென்றால் அவன் முகம் அவள் அருகில் இருந்தது.

 

காய்ச்சலின் சூடு, மருந்தின் மணம். அவன் மூச்சு காற்று, அவளுக்கு ஏதோ சரியில்லாத உணர்வு உண்டானது.

 

“நீ பக்கத்துல இருந்தா…” என்று மெதுவாக ஆரம்பித்தான் சத்ரியன்.

ஷ்ரத்தா அவனை ஆரம்பிச்சிட்டான் என்று பார்த்தாள்.

 

“உன்னை பருகணும்னு மனசு அரக்கத்தனமா கத்துது.” என்றான்.

அவளது கண்கள் விரிந்தது.

“சத்ரியன்!” என்று அதிர்ச்சியடைந்தாள்.

 

அவன் சீண்டிவிட்ட ஜோரில் சிரித்தான். அவளோ ”அதெல்லாம் கனவுல தான் நடக்கும். இந்த ஷ்ரத்தாவை என்னனு நினைச்ச?” என்று அவள் உடனே எழ முயன்றாள்.

 

“நான் நிஜத்துல நடத்தி காட்ட ஆசைப்படறேன் ஷ்ரத்தா.” என்றான். அந்த குரலில் இருந்த தாழ்ந்த கரகரப்பு அவளது முதுகில் சிலிர்ப்பை ஓடவிட்டது.

 

“உனக்கு அசிங்கமாயில்லையா இந்த நேரம் கூட இப்படி பேச? உன் வயசென்ன என் வயசென்ன?” என்று கோபப்பட்டாள்.

 

சத்ரியன் சில நொடிகள் அவளை பார்த்தான். பிறகு மெதுவாக சிரித்தான்.

“எனக்கு முப்பது வயசு. உனக்கு பதினெட்டு ஆரம்பிச்சிடுச்சு. பன்னிரெண்டு வயசு இடைவெளி. அது பெரிய விஷயமா? அத்தோட.. நான் ரொம்ப ஏங்கி போயிருக்கேன் ஷ்ரத்தா.” என்றான். அவள் புரியாமல் பார்த்தாள்.

 

“சிங்கத்துக்கு பட்டினி போட்ட மாதிரி.” என்று கூறியவன், “நீ அன்னிக்கு பேச ஆரம்பிச்சதுல இருந்து… இந்த சிங்கம் எந்த மானையும் வேட்டை ஆடலை.” என்றான். ஷ்ரத்தாவுக்கு அவன் கூறவருவது புரிந்து விட்டது. இவள் பேசியதிலிருந்து எந்த பெண்ணிடமும் சல்லாபிக்கவில்லை என்று கூறுகின்றான்.

 

சத்ரியன் அவனது கையை மெதுவாக அவளது நெஞ்சின் இடது பக்கத்தை தொட்டு,

”இந்த மான் தான் வேணும்னு, என் மனசு மூளை இரண்டும் அடம்பிடிக்குது” என்றான் மெதுவாக.

 

ஷ்ரத்தாவுக்கு உடம்பே கூசிவிட்டது. சந்தடி சாக்கில் அவளது இடது மார்பில் ஆள்காட்டி விரலை வைத்து சுட்டிகாட்டி தீண்டினான்.

 

“ச்சீ… என்னை தொடாத.” என்றவள் உடனே அவனை விட்டு விலகி எழுந்தாள்.

 

“நீ தினமும் ஒருத்தி கூட வாழற ஆளு. என் நிழலை கூட தொட விடமாட்டேன். உன் பொய்யை கேட்க உன் அடியாளுங்க வருவாங்க.” என்று கடிந்து கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

 

சத்ரியனோ சிரித்தபடியே அவள் சென்ற திசையை பார்த்தான். அவனது ஆள்காட்டி விரலை பார்த்து மென்னகையுடன் முத்தமிட்டான்.

 

ஷ்ரத்தாவுக்கு ஏன் அங்கு போனோம், அவன் கைப்பிடித்து அமர வைத்து கதை பேச எப்படி விட்டோம். இதில் தன்னை தீண்டி, தன்னை புணர பேசியவனை அடிக்காமல் விட்டுவிட்டு வந்து இருப்பது அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

 

அவன் தீண்டிய இதயப்பகுதி வேறு குறுகுறுப்பை கூட்டியது. அதனால் அறையிலிருந்து வெளியே எட்டி கூட பார்க்கவில்லை.

 

மாலை நேரம்.

 

வீட்டின் கீழ்தளத்தில் மெதுவான பரபரப்பு கேட்டதும், ஷ்ரத்தா அறைக்குள் அடைந்து கிடக்க முடியாமல் வெளியே வந்தாள்.

 

அந்த வீட்டின் ஹாலே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல இருந்தது. உயரமான சுவர்கள், கிரிஸ்டல் விளக்குகள், கருப்பு மற்றும் தங்க நிற அலங்காரம். அரண்மனையில் இருப்பதை அடிக்கடி பறைச்சாற்றியது.

 

வினோத் அப்போது உள்ளே வந்தான்.

 

“பாஸ்…” என்று சத்ரியன் அருகே வந்து நின்றான். “எண்ணிக்கை ஆரம்பிச்சிட்டாங்க.” என்றான்.

சத்ரியன் சோபாவில் சாய்ந்து இருந்தான். வயிற்று வலி இன்னும் முகத்தில் தெரிந்தது.

 

“ம்ம்ம்.”

“புது கட்சி லீடிங்க்ல இருக்குனு தகவல்.” என்றான் வினோத்.

 

ஷ்ரத்தா அங்கேயே நின்று கேட்டாள். “பழைய கட்சி சார்புல பணத்தை வாரி வழங்கியிருக்கோம். நிறைய இடம் ஆல்ரெடி செட் ஆயிடுச்சு.” என்றான்.‌

 

சத்ரியன் அமைதியாக “என் கணிப்பு சரியாக இருந்தா புதுகட்சி தான் வின் பண்ணும் வினோத்.” என்றான்.

 

“மேபீ பாஸ்” என்றான் அடக்கத்துடன். அவனுக்கு முன்னால் ஆட்சியில் பணத்தை வாரி வழங்கியதற்கு சத்ரியனின் ஆள் பலம் துணை போனது. அதை அறிந்தும் புதுகட்சி ஆட்சி பிடிக்குமென கூறியதும் மண்டை கிறுகிறுத்தது.

 

“யார் ஆட்சி வந்தா நமக்கு கவலையில்லை வினோத். எந்த ஆட்சி வந்தாலும் நம்ம டீலிங் எதுவும் பாதிக்காது. அதுதான் முக்கியம்.” என்றான் சத்ரியன்.

 

அவன் பேசும் விதமே வேறு உலகம் போல இருந்தது. அரசியலும், பணமும், அதிகாரமும், உயிரும்…

அவனிடம் எல்லாமே விளையாட்டு போல மாயை தந்தது. இதில் தான் ஓட்டுப்போட்ட நபரே முன்னணியில் இருப்பதை அறிந்துக் கொண்டாள்.

 

அந்த நேரம் யோகேஷ் மருந்துகளுடன் மருத்துவருடனும் வந்தான். “வலி இருக்கா? ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ற மாதிரி இருக்கு. ரெஸ்ட் எடுப்பது ரொம்ப முக்கியம் சத்ரியன் சார்” என்று டாக்டர் கூறினார்.

 

ஷ்ரத்தா அமைதியாக அதை பார்த்தாள். சத்ரியன் காய்ச்சலோடு இருந்தும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். அவளெல்லாம் உடல்நிலை மோசமானால் சுருண்டு படுத்துக் கொள்வாள். தந்தை மாத்திரை கஞ்சி ஜூஸ் எது தந்தாலும் கண் திறக்க கூட முடியாது குடித்துவிடுபவள். அடுத்த நாள் திவாகர் சொன்னால் தான் நினைவுக்கே வரும். அந்தளவு மயக்கத்தில் சோர்ந்து இருப்பாள்.

இங்கு இவனோ கல்லை மென்று துப்பியது போல இருக்க வாய் பிளந்து நின்றாள். அவளுக்கு மட்டும் இன்னும் அந்த துப்பாக்கி சத்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அந்த குண்டு… உண்மையிலேயே யாருக்கானது? அந்த எக்ஸ் வேறு போனில் அழைத்திருப்பானா? இதுவொரு பக்கம் யோசனையில் வாட்டியது.

ஒருவேளை எக்ஸ் தான் சத்ரியனை சுட்டிருப்பானா? என்று கூட நினைத்தாள்.

 

முதலில் இந்த சத்ரியனை கண்டு பயந்து முழித்து ஒடுங்கி சண்டைக்கு போகாமல், அந்த வீடியோவை காட்டி தந்தை இறப்புக்கு நீ காரணமா என்று கேட்க வேண்டுமென்ற முடிவில் இருந்தாள்.

அதனால் டாக்டர் செல்வதற்காக காத்திருந்தாள். ஆனால் சத்ரியன் அறைக்கு அழைத்து சென்றப்பின், அந்த டாக்டர் பிணமாக தான் திரும்பினார்.

 

-தொடரும்.

 

 

2 thoughts on “The leader-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!