ருத்ரமாதேவி - 24
அத்தியாயம் 24
பகலில் எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார் சங்கரேஷ்வரின் தாய். ஆனால் இரவில் அவளைப்படுத்தி எடுத்து விடுவான் சங்கரேஷவர்.
நாட்கள் கடக்க உமாவிற்கு ஏழு மாதங்கள் ஆகியது. அவர்கள் வீட்டில் அவர்களுக்கு வளைகாப்பு செய்வது பற்றி பேச, சங்கரேஷ்வர் அவளுக்கு எதுவும் செய்ய கூடாது என்றும் அவளை அவளின் வீட்டிற்கு அனுப்பவும் மறுத்து விட்டான்.
அப்பொழுது அந்த சமயம் தான் மகாதேவி காதலித்து திருமணம் செய்யவில்லை. அவர்களின் எதிரி ஒருவன் தான் கடத்திருக்கிறான். அவர்களிடமிருந்து காப்பாற்றி தான் இருக்கிறான் அவளின் கணவன் என்பதை கண்டுபிடித்தனர்.
தன் தங்கையை கடத்தியவர்களை எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் வீட்டு பெண் மேலேயே கை வைப்பீர்கள் என்று அடித்து துவம்சம் செய்து விட்டான்.
தவறு செய்யாத தங்கையின் மேல் கோபம் கொண்டு, நடக்காத தவறுக்கு உறுதுணையாக இருந்திருப்பாலோ என்று தன் மனைவியின் மேல் வெறுப்பு என்று இவ்வளவு நாள் வாழ்ந்த சங்கரேஷ்வருக்கு இந்த நிகழ்வு பேரடியாக இருந்தது. அதன் பிறகு அவன் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் ஆண் என்ற எண்ணம் அவனை மாற்ற விடவில்லை.
ஆனாலும் அவன் செய்கையில் சிறிது சிறிதாக மாற்றம் வர, அவளுக்கு பிரசவ நாளும் நெருங்கியது. ஒரு நாள் உமாவிற்கு வலி வர, வலியில் துடிக்கும் தன் மனைவியை கையில் ஏந்தி கொண்டு மருத்துவமனையில் சேர்த்தான்.
குழந்தை வரவுக்காக வெளியே காத்திருக்கும் அந்த நேரம் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போனான். எந்த குரல் அவனுக்கு போதை தந்ததோ அந்த குரல் இன்று அவனுக்கு வலியை தந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அடங்கியது அவனின் மனைவியின் சத்தம்.
சிறிது நேரம் அவனுக்கு பயம் வந்தது. அதற்குள் செவிலி பெண் பஞ்சுப்பொதி போல் ஆண் குழந்தை என்று அவன் கைகளில் கொடுத்தார். ரோஜா வண்ணத்தில் இருக்கும் தன் குழந்தையைக் கண்டு அவன் உடல் சிலிர்த்தது. மென்மையாக குழந்தையின் நெற்றியில் முத்தமிட அவனின் மீசை குறுகுறுப்பில் குழந்தை சிணுங்கியது.
செவிலியிடம் தன் மனைவி பற்றி கேட்க, அவரும் அறைக்கு மாற்றியதும் சென்று பார்க்கலாம் என்று கூறி குழந்தையுடன் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தனி அறைக்கு மாற்றிய உமாவை காண அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் சங்கடேஷ்வர். வாடிய கொடியாய் கட்டிலில் கிடந்த தன் மனைவியைக் காண முதல்முறையாக அவன் கண்களில் காதல் வந்தது.
மென்னகையுடன் அவனைப் பார்த்த உமாவிற்கு அவனின் கண்களில் உள்ள மாற்றம் அவளுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவளின் முகம் சோர்வையும் மீறி புன்னகைத்தது. விரைவாய் தன் மனைவியின் அருகில் வந்து அமர்ந்து அவள் தலையை தடவி அவள் நெற்றியில் இதமாக இதழ் பதித்தான்.
காதலுடன் அவன் கொடுக்கும் முதல் முத்தம். இருவரின் உடலுமே சிலிர்த்தது. அந்த காதல் முத்தத்தில் அவளின் கண்கள் கலங்கியது. அவனுக்குமே அம்முத்தம் இனிமையான உணர்வை தந்தது.
மருமகளை காண அறைக்குள் வந்த சங்கரேஷ்வரின் தாயின் கண்களில் இக்காட்சி பட அவருக்கும் ஆனந்த கண்ணீர் வடிந்தது. இனிமேலாவது என் மருமகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.
அருகே வந்து இருவரையும் ஆசீர்வதிப்பது போல் தலை கோதி விட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்து விட்டார். சிறு நேரத்தில் குழந்தை பசியால் அழ, செவிலியரும் மாமியாரும் ஒத்துழைக்க குழந்தைக்கு அமுதூட்ட கற்றுக் கொண்டாள் உமா மகேஸ்வரி.
தன் மகனுக்கு தமிழ் வேந்தன் என்று பெயர் சூட்டி, கண்ணும் கருத்துமாக வளர்த்தான். அதன் பிறகு முற்றிலும் மாறி விட்டான் சங்கரேஷ்வர். சதா சர்வ காலமும் தன் சகாக்களுடன் சுற்றியவன், இப்போதெல்லாம் பொறுப்பாக தன் தந்தைக்கு துணையாக நின்று வேலை செய்தான்.
இருந்தும் இருவரும் ஜாதி, கௌரவம் என்பதில் சிறிதும் மாறாமல் இருந்தார்கள்.
குடும்பத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டான். நாட்கள் மகிழ்ச்சியாக கடக்க, அந்த மகிழ்ச்சி நிரந்தரம் இல்லாதது போல் அவன் தாயின் உடல் நிலை சீர்கெட ஆரம்பித்தது. உடல் சுகவீனத்துடன் மகளின் நினைவும் அவரை வாட்ட உடல்நலம் மோசமாகி விட்டது.
எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அவரது மனம் ஒத்துழைப்பு தராததால் ஒரு நாள் உடல் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
அவரின் இறப்பு அந்த குடும்பத்தை மிகவும் பாதித்தது. அனைவரும் கலங்கி நிற்கையில் அவர்களை தேற்றியது உமாவின் வயிற்றில் இருந்த ஐந்து மாத குழந்தை. நாட்கள் கடக்க கொஞ்சம் கொஞ்சமாக கவலை மறக்க முயல, பெண் குழந்தையை ஈன்றாள் உமா.
தன் தாயே தனக்கு மகளாக பிறந்துள்ளார் என்று அகம் மகிழ்ந்தான் சங்கரேஷ்வர். மீண்டும் அக்குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தது.
இரு குழந்தைகளும் பள்ளி செல்ல தொடங்கினர். தமிழ் வேந்தனுக்கு ஐந்து வயது இருக்கும் போது தான் சதாசிவம் மனைவியின் குடும்பத்தை காண வர, அவர்களின் பணம், ஜாதி, கௌரவம் என்ற அகந்தை அவர்களை ஏற்க மறுத்து, அவனை வீட்டை விட்டு வெளியே விரட்டியது.
அப்படியே நாட்கள் கடந்து வருடங்கள் ஆனது. தமிழ் வேந்தன் கல்லூரி இரண்டாம் ஆண்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க, அவனின் தங்கை தமிழரசி பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஒரு நாள் தமிழரசி காணாமல் போனாள். தமிழ் வேந்தனுக்கும் தகவல் தெரிவிக்க, அவனும் ஊருக்கு விரைந்து வந்து தங்கையை தேடினான்.
ஊர் முழுவதும் வலை போட்டு தேடியும் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் தெரிவித்தும் பயன் இல்லை. மூன்று நாட்கள் கழித்து அவர்கள் ஊர் பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தாள் தமிழரசி.
தமிழரசியின் மரணம் அவர்கள் குடும்பத்தை மட்டும் அல்ல அந்த ஊரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிரேத பரிசோதனை செய்து தமிழரசியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. பரிசோதனை முடிவு அனைவரையும் பேரதிர்ச்சி ஆக்கியது. அந்த சிறு பெண்ணை நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் மரணம் அடைந்து விட்டாள்.
இச் செய்தியை கேட்டதும் சங்கரேஷ்வரின் தந்தை நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தார். அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க, சிகிச்சை பலனின்றி அன்றே உயிரிழந்தார்.
ஒரே நாளில் வாழ வேண்டிய பெண்ணையும் வாழ்ந்து முடித்த தந்தையையும் இழந்தது அக்குடும்பம்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 4 Online
- 2,141 Members
