Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-17

Hello Miss எதிர்கட்சி-17

அத்தியாயம்-17

  ஆரவமுதன் சுரபி இருவரின் ரகசிய சந்திப்பாக, அமுதனின் பீச் ஹவுஸில் சந்திப்பு நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.

  நட்ராஜ் செய்த அவமதிப்பால் ஆராவமுதன் இன்னமும் சூடாக தான் இருந்தான். என்ன தான் அங்கிருந்த நீச்சல் குளத்தில் நீச்சலிட்டித்து களைத்தாலும், அவன் நீச்சலை நிறுத்தவில்லை.
 
  சுரபியோ, அவன் நீந்தும் திசைக்கு ஏற்ப, நீச்சல்குளம் அருகே இருந்த பக்கம் வெளியே நடையோ நடையில் நடந்தாள்.

  “இங்க பார் அமுதா… அன்னைக்கு நடந்ததை சொல்லிட்டேன். உன்னிகிருஷ்ணா அப்பாயிமெண்ட் வாங்கிட்டு வந்து சந்திச்சிருக்கான். முன்ன சம்மதிச்சதால் அப்பாவுக்கு அவன் வர்றதே மறந்துப்போயிருக்கு. நிவாஸ் இருந்திருந்தா நினைவுப்படுத்தியிருப்பான். இப்ப இல்லாததால் மறந்துட்டார்.

  உங்களை அவமானப்படுத்தணும் என்பது அப்பா நோக்கமில்லை.  அப்பாவோட வாட்சப் எனக்கு காட்டினார். நான் வேண்டுமின்னா போட்டோ எடுத்துட்டு வந்து காட்டவா?” என்று கூற தண்ணீரில் மிதந்தவன் அவள் இருந்த பக்கம் நீந்தினான்.

  “உன்னை நம்பாம போவேன்னு நினைக்கறியா? எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க அப்பா மேல நம்பிக்கை இல்லை சுரபி. சான்ஸ் கிடைச்சா நம்மளை பிரிக்க தான் காத்திருப்பார்.

  ஏன்னா‌… சாதி மதம் எப்படி காதலர்களை தடுக்குமோ. அதுல எந்த விதத்திலும் ஆளுங்கட்சி எதிர்கட்சி விரும்பினாலும் தடையாகும்.

உனக்கு புரியலை… உன்னிகிருஷ்ணன் அன்னைக்கு வந்தது ஏற்கனவே சந்திப்பு நிகழ்வதாக கேட்டிருக்கலாம். அதுக்காக உன்னிகிருஷ்ணன் உன்னோட பரிசு கொடுக்கறதும் பேசியதுக்கும் உங்கப்பாவோட தந்திரம் இல்லைன்னு நினைக்கறியா?” என்றான். 

   இந்த குற்றத்தை ஏற்க வேண்டும்‌. வேறு வழியில்லை. உன்னிகிருஷ்ணன் பார்வையும், பரிசும் அதை தான் எடுத்துரைத்தது.

  அந்த பரிசை வாங்கிவிட்டு ஆராவமுதனிடம் இந்த நிமிடம் வரை அர்ச்சனை வாங்கிக்கொண்டு இருக்கின்றாள் சுரபி.

இதே உன்னிகிருஷ்ணன் நட்புரீதியாக தந்திருந்தால் ‘என்னை சந்தேகப்படுகின்றாயா?’ என்று சுரபி கேட்பாள். ஆனால் அவன் பார்வை நட்புரீதியில்லை என்ற விஷயம் சுரபி அறிந்தப்பின், ‘நான் உன்னிகிருஷ்ணாவை விரும்பலையே’ என்று அமுதனிடம் ஆயிரம் முறை உரைத்தாயிற்று.

   ‘பரிசை வாங்கி பிரிச்சியே அவனுக்கு அது கிக்கா இருக்கும்’ என்று கர்ஜித்து விட்டான்.

  “ரொம்ப முடியலை அமுதா. இப்ப தண்ணிலயே இருந்து வெளியே வர்றியா இல்லையா? எவன் நமக்குள்ள வந்தா என்ன? கல்யாண தேதி தான் பேசியாச்சே. தேர்தல் முடியவும் கல்யாணம் பண்ண போறோம்‌. இதுல எந்த கிருஷ்ணன் வந்தா நமக்கு என்ன” என்று கேட்டதும், நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்தான்.

இடையில் உடலை தழுவிய நீச்சல் உடை, அதற்கு மேல் ஈரத்தை உறியும் உடையை அணிந்து முடிச்சிட்டு, “கடைசியா சொன்ன பாரு. இதுக்காக உங்க அப்பாவை சும்மா விடறேன்.
பழிக்கு பழின்னு நானும் யோசித்தா, நீ எனக்கு கிடைக்க மாட்ட சுரபி. அந்த ஒரு காரணத்தால் அமைதியா நிற்கறேன்” என்றதும் அவனை கட்டியணைத்து கொண்டாள்.
 
  “ஏ.. வாட்ஸ் ஹாப்பனிங்” என்றான்.

   “எனக்காக நீ நிறைய சாக்கரெஸ் பண்ணிட்ட. கண்டிஷனால் நீ  அரசியலில் நிற்க போவதில்லை.
  இப்ப அப்பா உன் இடத்துல எவனையோ அழைச்சிட்டு வந்தப்பிறகும் எனக்காக உன் கோபத்தை அடக்கிட்டு இருக்க.
  எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அமுதன் கிடைக்க மாட்டாங்க.” என்று நெஞ்சில் சாய்ந்து கூற, ‘இதை தான் எதிர்பார்த்தேன்” என்னும் விதமாக, அவளை அணைத்து கொண்டான்.

எப்படியும் ஆராவமுதன் சுரபியை பற்றி செய்தி சென்று கொண்டிருக்க, உன்னிகிருஷ்ணன் அதையெல்லாம் பாராக்காமல் இருப்பானா? தந்தை நட்ராஜனே உன்னிகிருஷ்ணனிடம் ஆராவமுதன் சுரபி காதலை பகிர்ந்து மறுப்பதாக வாக்கு தந்துள்ளாரே.

    எதற்கும் ஆராவமுதனையும், இலக்கியன் அங்கிளையும் அரசியலை தாண்டி பெர்சனலாக சந்தித்து பேசினால், பழிவாங்காமல் சம்பந்தியாக பேச உரைத்திடவும் கூற முடிவெடுத்தாள்.

   இலக்கியனே இரண்டு மூன்று முறை தமிழக சட்டமன்ற இடத்தில் அரசியல் பேசி கடக்கும் போது, லேசான முறுவலை உதிர்க்க, தந்தை இன்னமும் பழி வாங்க துடிப்பது சரியா தவறா என்று சிந்தித்தாள்.

  இதில் நிவாஸால் தனியாக சென்ற கூட்டம், வேறொரு கட்சி பெயரை வைத்து புதிதாக வந்து நின்றது. கூடுதல் தலைவலியே.

    அப்பொழுது கூட “நான் உங்களை கிட்னாப் பண்ணலை மேம்” என்று தான் கூறி பேசுவான். எதுக்கும் உங்களுக்கு கிட்னாப் செய்த ஆட்கள் யாருனு யோசிங்க’ என்று இவளை சிந்திக்க வைத்தே சென்றான்.

   ஆணித்தரமாக நிவாஸ் உரைத்திட, மீண்டும் பழைய பிரச்சனையா என்று சலிப்படைந்தாள்.

  இவ்வாறு நாட்கள் நகர, நட்ராஜ் அதிருப்தியாக காணப்பட்டார்.

  சுரபி கட்சி அலுவலகத்தில் தந்தையின் அதிருப்தியான முகத்திற்கு காரணம் கேட்க, நட்ராஜோ “கட்சி நாளுக்கு நாள் தொண்டர்களோட நம்பிக்கையை இழக்கற மாதிரி இருக்கு சுரபி.
    இப்பவே சிலர் நிவாஸோட புதுக்கட்சிக்கு ஆதரவு தர கிளம்பறாங்க. இங்க நம்மளோட இருக்கறவங்களும் சதா முனங்கிட்டே இருக்காங்க.

    இதுல உன்னிகிருஷ்ணன் வேற. அங்கிள் சுரபி கல்யாணத்தை பத்தி என்ன முடிவெடுத்திருக்கானு கேட்டு தொல்லைப்படுத்தறார்.

   நான் உன் காதலை சொன்னேன். அதுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி எப்படி அங்கிள் சம்பந்தி ஆவாங்க. இந்த கல்யாணம் நடந்தா நம்மஅரசியல் வாழ்க்கை மூடுவிழாவா அமையும்னு சுட்டிகாட்டறார்.
   அரசியலில் நம்மளோட ஜனநாயக கட்சி சரியாம இருக்கணும்னா ஆராவமுதனோட கல்யாண பேச்சை ஒழிக்கணும்னு சொல்லறான்.

  பேசாம என்னை கல்யாணம் செய்ய சொல்லுங்க அங்கிள். அதான் சுரபிக்கும் கட்சிக்கும் நல்லதுன்று அறிவுறுத்தறான்.” என்று பேசவும் சுரபிக்கு உள்ளுக்குள் எரிமலை விழுங்கிய நிலை.

  “நீங்க உன்னிகிருஷ்ணனிடம் என்ன சொன்னிங்கப்பா? நம்ம வீட்டு விஷயம் அவனிடம் கலந்து ஆலோசிக்க என்ன காரணம்? இது என் வாழ்க்கை. உங்க மனசுல என்னை ஆராவமுதனுக்கு கல்யாணம் செய்து தர விருப்பமில்லைன்னு தெரியுது” என்றாள்.

   நட்ராஜனோ ”நான் என்ன சொல்லறது தெரியலைம்மா. கட்சியில் அவப்பெயர் நாளுக்கு நாள் உண்டாகுது. கட்சி தொண்டர்கள் எல்லாம் இந்த கல்யாணம் தேவையானு முகத்துக்கு நேரா கேட்க ஆரம்பிக்கறாங்க” என்று மட்டும் உரைத்தார்.

  சுரபிக்கு தந்தையின் பேச்சு கசந்தது. தந்தை மீது தன் வெறுப்பை காட்டிவிட்டு அவ்விடமிருந்து நகர்ந்தாள்.

அவளுக்கு ஆராவமுதனை அந்தளவு பிடிக்கும். என்ன தான் அவனால் இந்த நிலையில் முன்னேறினாலும், ஆசைப்பட்ட மனம் இன்னமும் அவன் புறம் சாய்ந்துள்ளதே.

   அவன் மட்டும் இவள் மனதில் இல்லையென்றால் முடிவுகளை மடமடவென எடுத்திருப்பாள். அவன் தான் இம்சை அரசனாக இதயத்தில் சிம்மாசனமிட்டு கெக்கரிக்கின்றானே.

  இதே தலைவலியுடன், அங்கிருந்து நகர்ந்து நடந்தவளுக்கு தலை சுற்றியது.

  ஓரிடமாக உட்கார்ந்து விட்டாள். அங்கிருந்த நீரை பருகியவள்  ‘எனக்கு என் காதலை நினைச்சாளே பக்குனு இருக்கு. இந்த ஆராவமுதனால் அப்பாவோட வாதம் நிகழுது. இவன் ஏன் மாநாடு நடந்த இடத்துக்கு வந்தான். வராம இருந்தா பழைய காதலை உள்ளுக்குள் வச்சிட்டு இருந்தாலும் நான் நிம்மதியா இருந்து இருப்பேன்.” என்றவள் வயிற்றை தொட்டு முடித்தாள். 

காலையில் சாப்பிடாமல் வந்ததில் பசி உயிரை வாட்டியது. தந்தையிடம் பேசியதை அன்னையிடம் பகிர்ந்தாலாவது மனம் ஆறும். அதோடு வீட்டுக்கு சென்று சாப்பிட வேண்டும் என, நேராக வீட்டுக்கு வந்து, உணவை உண்ண தயாரானாள். 

“என்ன நேரம் கெட்ட நேரத்துக்கு சாப்பிட்டு மயங்கி சரியணும்.” என்று பரிமாறினார் பல்லவி.

“அப்பா மனசுல எங்களை பிரிக்க நினைக்கறார்னு சொல்லறேன்” என்று சுரபி கோபமாக பேசினாள்.

பல்லவியோ “இங்க பாருடிம்மா… இந்த அரசியலை பத்தி அ-னா ஆ-வன்னா கூட எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் வீட்ல புருஷனையும், எனக்கு பிறந்த உன்னையும் நல்லா பார்த்துக்கணும். வீட்டை சுத்தப்பத்தமா வச்சிக்கணும்.
இந்த அரசியல் போட்டி பொறாமை எதுவும் தெரியாது. தெரியவும் வேண்டாம்.
ஊருக்கு நல்லது செய்யணும்னு முடிவுப்பண்ணிட்டா அரசியலில் இருந்து தான் செய்யணும்னு அவசியமில்லை. தோற்றாலும் ஜெயித்தாலும் நம்ம உதவி செய்யறது செய்துட்டா மக்கள் மனசுல இடம் பிடிக்கலாம்.
இந்த சதுரங்க ஆட்டம் ஆடுறவங்க கூட பாரு, எதிராளியிடம் கைகுலுக்கி வாழ்த்து கூறி சந்தோஷமா தான் ஆட்டம் ஆடறாங்க. அவங்களுக்கு வெற்றி தோல்வி தான் குறிக்கோள்.
நம்ம எதிர்ல ஆடறவன் இவனுக்கு எதுக்கு கைகுலுக்கணும்னு வஞ்சமிருக்காது.” என்றவர் பெருமூச்சை விடுத்து, “உங்க அப்பாவுக்கு எப்படியோ, நீ மக்களுக்கு உதவி செய்வது மனசார செய்யறன்னு அந்த நிலசரிவுல பார்த்ததும் தெரிந்துக்கிட்டேன்.
உன் அளவுல நீ சரியா இரு. உங்கப்பா அன்னைக்கு கட்சி தொண்டர் கூட்டத்துல உனக்கு ஆதரவாக சீட்டு குலுக்கி முடிவு எடுக்கற நிலையில் இருந்தப்ப, உனக்கு பாதகமான முடிவு வந்திருந்தா. அப்பவே உன்னை கட்சிலயிருந்து நீக்கியிருப்பார். ஏன்னா… அவருக்கு கட்சி தான் முக்கியம்.” என்று வருத்தமாய் உரைத்தார்.

“ம்ம்மா…. அதெல்லாம் இல்லை. கட்சியா நானானு கேள்வி எழுந்தா அப்பா எனக்காக நிற்பார்.” என்று கூறினாள்.

“எனக்கு நம்பிக்கை இல்லைடி. பதினேழு வயசுல நீ சபதமிட்ட. பதினெட்டுல கட்சில சேர போனப்ப, நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.
பொம்பளை பிள்ளைக்கு அரசியல் எதுக்குனு. நிம்மதியா ஒரு டிரஸ் போடமுடியுதா? இது சரிவருமா? எத்தனை ஆபத்து இருக்கும்னு சொன்னேன். உங்கப்பா அதுக்கு என்ன பதில் தந்தார் தெரியுமா?
இந்த அரசியல்ல பெண்களுக்குன்னு ஒதுக்கீடு செய்யற தொகுதில நம்ம சுரபி இருந்தா எனக்கு வசதியே தவிர கஷ்டமில்லை.
அதோட இலக்கியனை எதிர்த்து பேச நம்ம கட்சில எந்த ஆட்களுக்கும் தில்லு இல்லை. என்‌ மக எதிர்த்து பேசும் பொழுது எனக்கு சந்தோஷமா இருக்கு. இதுக்காகவே சுரபி இருக்கட்டும்னு சொன்னார்.

சாதாரணமா அப்பான்னா பொண்ணு கல்யாணம் குழந்தை குட்டின்னு முன்னேறுவதை பார்க்க விரும்புவார். ஆனா உங்கப்பா இதுக்கு முன்ன, உன்னோட கல்யாணத்தை பத்தி மூச்சு விடறதா தெரியலை.
ஆராவமுதனை நீ சந்திக்கவும் தான் உனக்கு வேறொருத்தனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு யோசிக்கறார்.” என்று கோபமாக மொழிந்தார்.

“அம்மா… அப்பாவை ஏதாவது சொல்லிட்டு இருக்காத. சில நேரம் நமக்கு பாதகமா விஷயங்கள் நடக்கும் போது நம்மளை சுற்றி இருக்கறவங்க மேல நம்பிக்கை இல்லாத மாதிரி தோன்றலாம். ஆனா அவர் என்‌ அப்பா. எனக்கு கெடுதல் செய்ய மாட்டார். அவருக்கு இலக்கியன் மாமாவை பிடிக்காது அதனால் ஆராவமுதனையும் பிடிக்காது. என் மனசுல ஆராவமுதனை தவிர யாரும் நுழைய முடியாதுன்னு புரிந்தா பிறகு சரியாகிடுவார்” என்றாள்.

பல்லவியோ மெதுவாக முறுவலித்து “பரவாயில்லை… எனக்கு அரசியல் தெரியலைன்னு நினைச்சேன். நீயே இன்னமும் அரசியலில் கத்துக்குட்டினு தெரியது.” என்று அவர் வேலையை கவனிக்க சென்றார்.

சுரபிக்கு அன்னையின் பேச்சு அதிருப்தி தரவும் அவளது அறைக்கு சென்றாள்.

ஏசியை ஆன் செய்து, மெத்தையில் படுத்து மேலே தெரிந்த சுவரில் பூவேலைப்பாட்டை கண்டு தந்தை பேசிதையும் தாய் பேசியதையும் மனதில் ஓடவிட்டாள். 

ஏதோ தனக்குள் குமட்ட, வேகவேகமாய் எழுந்து குளியலறையில் வாஷ்பேஷன் நேக்கி ஓடி வாந்தியை எடுத்தாள். சாப்பிட்டதில் கொஞ்சம் போல ஒவ்வாமை ஏற்பட, வாந்தி எடுத்து முடித்து வாய் கொப்பளித்து, அங்கிருந்த கப்போர்டில் துண்டை எடுத்தாள்.

குளிர்ந்த நீரால் முகத்தை துடைத்து முடிக்க, அவள் கண்ணில் தென்பட்ட மாதவிடாயுக்கு உபயோகப்படுத்தும் நாப்கின்கள் தெரிய, நாட்களை எண்ணினாள்.
அடுத்த நிமிடம் வயிற்றில் கையை வைத்து, காலையில் ஏற்பட்ட தலைசுற்றலுக்கும், தற்பொழுது எடுத்த வாந்திக்கும் அர்த்தம் புரிய, தலையில் கைவைத்தவளாக, “அமுதா” என்று பல்லைக் கடித்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

12 thoughts on “Hello Miss எதிர்கட்சி-17”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 amudhan plan dhan kadaisila nadaka pogudhu🙄 aaga motham surabi dhan ellarkitaium yemara pora😢🤧

  2. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    எனக்கென்னவோ, இந்த ஆராவமுதன் திட்டம் போட்டே காயை நகர்த்துற மாதிரி தெரியுது. அவனோட சதுரங்க ஆட்டத்துல நட்ராஜ்க்கும் சுரபிக்கும் ஒரே நேரத்துல செக்மேட் வைக்குறது தான் அவனோட எண்ணமே. அன்னைக்கு கடத்தல் மாதிரி காட்சி உண்டாக்குனது கூட இவனோட திட்டமா இருக்குமோன்னு தோணுது.
    அந்த நேரத்துல காப்பாத்தற மாதிரி வந்து, காப்பாத்தி அழகா அவ மனசுல இடம் பிடிச்சதோட அவ வயித்துலயும் அமுதனோட அரசியல் வாரிசை கொடுத்துட்டான்.

    ஆனா, இது எதையுமே சுரபி உணராத வண்ணம் அவன் நினைச்ச மாதிரியே நடத்திட்டு வரான். கரெக்ட்டா…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Surabi pallavi avanga sollurathu pola ne innum arasiyal la kathu kutti thano nu thonuthu nivas andha kidnapp ku pinnadi illa na yen ithu natraj avar oda plan ah kooda irukalam yae and surabi ne amutha nu kathurathu na la mattum ethachum mara poguthu ah enna

  4. Kalidevi

    ITHA VACHI THA UNA ETHO PANA PAKURAN SURABI ETHO MUDIVU EDUTHAVANA IRUKAN CRT AH YOSICHI PANNU UN APPA VA ROMBA NAMBURA NEE AANA AVAR UNA USE PANITU IRUKARU NEE ENA PANA PORANU PAKANUM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *