Skip to content
Home » MM 7

MM 7

நீங்க பிரபலமாகணும்னு ஆசைப்படுறிங்களா? அதுக்கு ஒரு விலை உண்டு… அந்த விலை உங்களோட ப்ரைவேசி அண்ட் மனநிம்மதி… இந்த ரெண்டையும் அதீத புகழ் ஏதோ ஒரு கட்டத்துல பறிச்சிடும்… இயல்பான அமைதியான ஒரு வாழ்க்கைய அப்ப நம்ம மனசு தேடும்… ஆனா அது ரொம்ப தூரமா போயிடும்… காரணம் நம்ம நிக்குற புகழோட உயரம் நம்மளை இயல்பான வாழ்க்கைல இருந்து தூரமா அழைச்சிட்டு வந்திருக்கும்… திரும்பிப் பாக்குறப்ப தான் இந்த உண்மை நமக்குப் புரியும்… இந்த உலகத்துல ஒன்னை இழந்தா தான் இன்னொன்னு கிடைக்கும்… மறந்துடாதீங்க..

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

முகிலன் ஃப்ரண்ட்வுட் யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்க்காணல் ஒரு நாள் இடைவெளியில் சமூக வலைதளங்களில் வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங்களில் முகிலன் கண் கலங்கும் க்ளிப்களோடு சேர்த்து இணைக்கப்பட்ட மேகவர்ஷிணியின் காதல் அறிவிப்பு வீடியோ வைரல் ஆனது.

வழக்கம் போல சிலரின் கண்ணுக்கு அவள் ‘கோல்ட்-டிக்கர்’. சிலரோ வழக்கம் போல ‘வளர்ப்பு சரியில்ல, ஃபெமினிஷம் பேசி பொண்ணுங்க இப்ப வெக்கமில்லாம திரியுதுங்க’ என்று தத்துப்பித்தென்று உளறினார்கள்.

இன்னும் சில பெண் கிடைக்காத தொண்ணூறுகளின் ஆண்குழந்தைகள் “இவளுங்களுக்குக் காதல் கூட காசுள்ளவன் மேல தான் வரும்… அதுலயும் இன்னொருத்தி கூட ஜல்சா பண்ணுனான்னு தெரிஞ்சும் வருது பாரு… சீ இதுல்லாம் என்ன ஜென்மம்” என்று தங்களது வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தார்கள்.

சில பூமர் அங்கிள் வகையறாக்களோ “பெண் பிள்ளைகளுக்கு அடக்கம் ஒடுக்கத்தைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்ட தாய்மார்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்” என்று சொல்லி தங்களது அன்றாட கடமையை ஆற்றினார்கள்.

சில பெண்கள் “அவ்வ்! ஹவ் க்யூட்” என்று கண்களில் இதயங்களைப் பறக்கவிட அதன் கீழே சில ஜொள்ளு பார்ட்டிகள் “ஹாய் யூ பியூட்டிஃபுல்… மை நம்பர்… கால் மீ” என்று வழிந்திருந்தார்கள்.

மிகவும் சென்சிடிவாக கமெண்ட் செய்தவர்கள் குறைவு. அதிலும் பெண்கள் நியாயமாகக் கமெண்ட் செய்திருந்தால் அவர்களது நடத்தையைக் கேவலப்படுத்தும் விதத்தில் ஏதோ ஒரு வக்கிரம் பிடித்தவன் பதில் கூறியிருந்தான்.

இதெல்லாம் வழக்கமாக ஒரு சமூக வலைதள பதிவின் கீழே நடக்கும் கூத்துகள் தான்! இதை அறியாதவர்கள் இல்லை முகிலனும் மேகவர்ஷிணியும்.

ஆனால் முந்தையவன் பிந்தையவளைக் காட்டிலும் அதிகம் வருந்தினான்.

“இந்தப் பொண்ணை அசிங்கமா திட்டுறானுங்க.. இதுல்லாம் தேவையா இவளுக்கு? ஃப்ரண்ட்வுட்காரன் அவன் புத்திய காட்டிட்டான்… அவ ஃபேஸை ப்ளர் பண்ணி போட்டிருக்கலாம்… பத்திரிக்கை தர்மம் இல்லாதவன்” என்று ராமிடம் பொருமித் தீர்த்தான்.

ஆனால் மேகவர்ஷிணியோ தன்னிடம் மன்னிப்பு கேட்ட ரம்யாவின் தோளில் சினேகமாகத் தட்டிக்கொடுத்தாள்.

“விடுடி! நான் சாவையே கண்ணு முன்னாடி பாத்துட்டேன்… இதுல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்ல… அடுத்த கண்டெண்ட் வர்ற வரைக்கும் இவனுங்க என்னைத் திட்டித் தீர்ப்பானுங்க… அப்புறம் வேற யாரோ ஒருத்தி சிக்குவா… விட்டுத் தள்ளு… போய் உன் வேலைய பாரு”

“அதில்லடி நான் உன் ஃபேஸை ப்ளர் பண்ணுவாங்கனு நினைச்சேன்” என்றாள் ரம்யா உண்மையான கவலையுடன்.

“ப்ளர் பண்ணாததும் நல்லது தான்… இங்க பாரு… இந்த வீடியோக்குக் கீழ நிறைய பேர் என்னோட இன்ஸ்டா ஐடி கேட்டிருக்கானுங்க… எப்பிடியும் என் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் கவுண்டிங் கூடும்… கொஞ்சநாள்ல நானும் டான்ஸ், காமெடி, கார்டனிங்னு ஏதோ ஒன்னு செஞ்சு இன்ஃப்ளூயன்சர் ஆகி சம்பாதிப்பேன்… யாருக்குத் தெரியும்? நான் ஃபேமஸ் இன்ஃப்ளுயன்சர் ஆனதும் நீயே கூட என்னை உங்க சேனலுக்காக இண்டர்வியூ எடுக்கலம… இந்தப் புகழ் எல்லாம் உன்னையும் உன் ஃப்ரண்ட்வுட் சேனலையும் தான் சேரும்னு அந்த இண்டர்வியூல நான் சொல்லுவேன்”

மேகவர்ஷிணி கவலையின்றி பேசுவதைக் கேட்ட ரம்யாவுக்கு ஆச்சரியம்.

“இவ்ளோ மோசமா பேசுறானுங்களேடி?”

“சோ வாட்? இவனுங்க யாருனே எனக்குத் தெரியாது… இவனுங்க பேசுறது உண்மையும் கிடையாது… அப்ப நான் ஏன் இவனுங்க கக்குற வன்மத்தை நினைச்சு கவலைப்படணும்? இந்த வன்மம் பிடிச்சவனுங்க இப்பிடி பேசுறானுங்களேனு நான் சாப்பிடாம இருக்கப்போறேனா?”

“இல்ல”

“இதால எங்க வீட்டுல அடுப்பு எரியாம நிக்க போகுதா?”

“இல்லடி”

“இந்த முகரைக்கட்டைகளை நான் என்னைக்காச்சும் பாக்க போறேனா?”

“வாய்ப்பே இல்ல”

“அப்புறம் எதுக்குடி இவனுங்கல்லாம் ஒரு ஆளு, இவனுங்க சொல்லுறதுலாம் ஒரு விசயம்னு நினைச்சு நான் கவலைப்படணும்? உண்மைய சொல்லணும்னா நான் கவலைப்பட எனக்கே எனக்குனு ஆயிரம் விசயம் இருக்கு… அந்த லிஸ்டுலயே இந்த கேவலவாதிகள் இல்ல… முகில் கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணிருக்கேன்… அவன் மனசை மாத்தணும்… அப்பா கிட்ட இதைச் சொல்லி புரியவைக்கணும்… அது போக என்னால தான இப்பிடியாச்சுனு கண்ணைக் கசக்குற உனக்குக் கேண்டீன்ல இருந்து சூடா சமோசா வாங்கி தரணும்… இப்பிடி ஏகப்பட்ட கடமைகள் எனக்காக வெயிட்டிங் ரம்ஸ் பேபி… ஜஸ்ட் ஃபர்கெட் தோஸ் மீடியோகோர் பீபிள்… வா சமோசா நமக்காகக் காத்திருக்கிறது”

ரம்யாவை இழுத்துக்கொண்டு கேன்டீனை நோக்கி ஓடினாள் மேகவர்ஷிணி.

மெய்யாகவே அவள் இந்த ஆன்லைன் வன்மங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ரம்யாவிடம் சொன்னது போல சாவின் விளிம்புக்குப் போய்விட்டு வந்தவள் அவள்! கிட்டத்தட்ட இது அவளுக்கு மறுபிறப்பு! இந்த மறுபிறப்பை நல்ல விதமாக வாழ விரும்பினாள் அவள்.

பிடித்தவர்களைச் சந்தோசப்படுத்துவது, தனக்குப் பிடித்ததை எவ்வித தயக்கமும் யோசனையுமின்றி செய்து முடிப்பது இதெல்லாம் அந்த பட்டியலில் அடக்கம்.

அப்படியிருக்கையில் அவ்வளவு மதிப்பான நேரத்தை ஏன் முகந்தெரியாத இழிபிறவிகளின் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பற்றி யோசித்து வீணடிக்க வேண்டும்?

இந்த வன்மவாதிகளுக்கு தங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தைக் கக்குவதற்கு மிஞ்சி மிஞ்சி போனால் முகம் தெரியாது என்ற தைரியம் மட்டும் தானே காரணமாக இருக்கமுடியும்.

ஆனால் அவர்கள் கக்கிய அருவருப்பான வன்மத்தைக் குப்பையென ஒதுக்கித் தள்ள மேகவர்ஷிணியிடம் ஆயிரம் அற்புதமான காரணங்கள் இருக்கின்றன. அழகான தருணங்கள், அருமையான மனிதர்களுக்கு மட்டுமே இனி என் நேரம் என பிடிவாதமாக இருப்பவளின் மனம் தந்தையிடம் முகிலனைக் காதலிக்கும் விவரத்தை எப்படி சொல்வது என்ற கேள்வியை மட்டும் தான் மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்த மகளிடம் மோகனரங்கம் பொறுமையாக என்ன நடந்ததென விசாரித்தார். எங்கிருந்து ஆரம்பிப்பதென தெரியாமல் விழித்தவள் காஷ்மீரிலில் செனாப் நதிக்கரையிலிருந்தே தொடங்கினாள்.

தன்னைத் தற்கொலை செய்யவிடாமல் தடுத்தவனின் மீது நன்றியுணர்ச்சி வந்ததையும், அவனது ரசிகையாகி அவன் மீது அபிமானம் கொண்டவளுக்கு இப்போது அவனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் கரிசனம் பிறந்து அது காதலாக மாறிப்போனது வரை அனைத்தையும் மோகனரங்கத்திடம் ஒப்பித்தாள் அவள்.

இத்தனை நாட்கள் சிறுபெண் என நினைத்த மகள் ஒரே நாளில் வளர்ந்துவிட்டதாக அவருக்குத் தோன்றியது.

“நான் தப்பு எதுவும் பண்ணலையேப்பா?”

தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கேட்டாள் அவள்.

மோகனரங்கம் மென்மையாகப் புன்னகைத்தார். பின்னர் இல்லையெனத் தலையாட்டி மறுத்தார்.

“நீ சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேருக்குமே இது மறுபிறப்பு மாதிரி தான்… உனக்கு என்ன பிடிக்குதோ அதை செய்… நான் உனக்குத் துணையா இருப்பேன்” என்று மகளின் சிகை வருடி ஆசிர்வதிப்பது போல உறுதியளித்தார்.

மேகவர்ஷிணியின் கண்கள் கலங்கிப் போயின.

“எனக்கு முகிலை ரொம்ப பிடிச்சிருக்குப்பா… நடந்த பிரச்சனையால இயல்பான காதலுக்குத் தகுதியானவன் இல்லனு அவனே அவனை மட்டம் தட்டிக்குறான்… எல்லாரை மாதிரி அவனும் காதலிக்கவும் காதலிக்கப்படவும் தகுதியானவன்னு அவன் கூடவே இருந்து புரியவைக்கணும்னு ஆசையா இருக்கு… நான் ஒன்னும் குடிகாரனையோ, ஸ்திரிலோலனையோ திருத்துறதுக்காக காதலிக்கலையே… உனக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதுல்லப்பா?”

எவ்வித கண்டிப்புமின்றி ஆண் என்றே ஒரே காரணத்தால் ஆடக்கூடாத ஆட்டம் எல்லாம் ஆடி கெட்டுச் சீரழிந்த ஆண்களைத் திருத்தும் மறுவாழ்வு மையம் இல்லை பெண்கள் என்று அடிக்கடி கூறுவார் அவளது அன்னை சரஸ்வதி.

அது மேகவர்ஷிணியின் மனதில் பதிந்து போன விசயம். முகிலனை அவள் காதலிப்பது மேற்சொன்ன காரணத்தால் அல்லவெனத் தந்தைக்குப் புரியவைத்துவிடும் ஆர்வம்!

மகளின் மனம் என்னவென புரிந்துவிட்டது அவருக்கும். அவள் என்ன செய்தாலும் அதற்கு உறுதுணையாக நிற்பேனென உறுதியளித்தார்.

மேகவர்ஷிணி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு முறை முகிலனைச் சந்தித்து தனது காதலை அவனுக்குப் புரியவைக்கவேண்டுமென மட்டும் எண்ணிக்கொண்டாள்.

அதே நேரம் முகிலனின் வீட்டிலோ பாரிவேந்தன் உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தார்.

“உன்னால இப்ப அந்தப் பொண்ணை எல்லாரும் கேவலமா பேசுறாங்க பாரு… பொண்ணுங்க கூட அளவா பேசுனு சொன்னப்ப நக்கலா சிரிச்சியே… இப்ப பாரு, பிரச்சனை எங்க வந்து நிக்குது”

“அந்தப் பொண்ணு திடுதிடுப்புனு லவ்வை சொல்லுவானு நான் என்ன கனவா கண்டேன்பா?” என முகிலன் அங்கலாய்த்ததும் பாரிவேந்தனின் கோபம் இன்னும் அதிகமானது.

“ஆமாடா! உனக்கு எதுவுமே தெரியாது… உன்னை நம்பி என் ஃப்ரெண்ட் மகளைப் பொண்ணு பாக்க இன்னைக்குச் சாயங்காலம் குன்னூர் போகலாம்னு முடிவு பண்ணிருந்தேன்… இந்த வீடியோவை பாத்ததும் அந்தப் பொண்ணு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாளாம்… அவளைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் இன்னொருத்தி கூட நீ இப்பிடி பேசுனா அவளால அதை தாங்கிக்க முடியாதுனு சொல்லிருக்கா”

“என்னங்க, எதுக்கு இப்பிடிலாம்?” என்று குறுக்கிட்டார் ரஞ்சனா. உடனே மனைவியின் பக்கம் திரும்பினார் பாரிவேந்தன்.

“அந்தப் பொண்ணு சொன்னதுல என்ன தப்பு இருக்கு? நேத்து ஹிந்தி பிக்பாஸ் பாத்தல்ல… அதுல ஒருத்தன் தன் பொண்டாட்டியோட ஃப்ரெண்டை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பொண்டாட்டிங்களோட ஒரே வீட்டுல வாழுறதா சொன்னான்… அவனும் உன் மகனை மாதிரி யூடியூபர் தான்… ரொம்ப சுலபமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா அன்பு காதல்லாம் இவங்களுக்கு அல்பமா தோண ஆரம்பிச்சிடுது ரஞ்சி… இவனும் அந்த மாதிரி ஆகிடக்கூடாதேனு என் மனசு கிடந்து அடிக்குது”

“நான் ஏன்பா ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம் பண்ணப்போறேன்?”

மகனைத் தீயாய் முறைத்த பாரிவேந்தன் “உனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடக்குமாங்கிறது தான் என் பயமே” என்க அன்னையும் மகனும் அவரை எப்படி சமாளிப்பதென தெரியாமல் திகைத்துப் போயினர்.

இதே மனநிலை இரண்டு நாட்கள் நீடித்தது. மூன்றாம் நாள் காலையில் வீட்டின் அழைப்புமணி அடிக்கவும் ரஞ்சனா போய்த் திறந்தார்.

“யாரும்மா நீ? என்ன வேணும்?”

“என்னைத் தெரியலையா ஆன்ட்டி? நான் தான் முகிலுக்கு ஃப்ரண்ட்வுட் இண்டர்வியூல ப்ரபோஸ் பண்ணுன பொண்ணு… ஐ அம் மேகவர்ஷிணி… இஃப் யூ டோண்ட் மைண்ட், நம்ம உள்ள போய் பேசலாமா? குடும்ப விவகாரத்தை வெளிய நின்னு பேசுனா நல்லா இருக்காதுல்ல?”

பளீர் புன்னகையோடு சொன்ன மேகவர்ஷிணியைப் பார்த்ததும் ரஞ்சனாவுக்கு மயக்கம் வராத குறை!

மஞ்சள் வண்ண ஜெய்ப்பூர் எம்ப்ராய்டரி போட்ட குர்தி, ஜீன்சில் பார்க்க சிறுபெண்ணாகத் தெரிந்தாள். அழகி தான்! உடனே அவளையும் முகிலனையும் மனக்கண்ணில் அருகருகே நிற்க வைத்து ரசித்தவருக்கு “ஜோடி பொருத்தம் அபாரம்” என்ற எண்ணம் வராவிட்டால் தான் ஆச்சரியம்!

அடுத்த நொடியே “யார் வந்திருக்காங்க ரஞ்சு?” என்ற பாரிவேந்தனின் குரல் கேட்க தூக்கிவாரிப்போட்டது அவருக்கு.

தன்னை ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்குள் வர முயன்ற மேகவர்ஷிணியோ அவரது இரத்த அழுத்தத்தை உயர வைத்தாள்.

பலமான காலடிச்சத்தம் அருகே கேட்டதும் “சோலி முடிஞ்சுது… இனி இந்த மனுசன் சலங்கை கட்டாத குறையா ஆடுவாரே” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார் ரஞ்சனா.

வீட்டின் வாயிலுக்கு வந்த பாரிவேந்தன் பார்த்த மாத்திரத்தில் மேகவர்ஷிணி யாரெனக் கண்டுகொண்டார்.

“நீ எங்கம்மா இங்க?” என்றவரிடம்

“நான் முகிலை லவ் பண்ணுறேன் அங்கிள்… ஆனா அவன் என் லவ்வைப் புரிஞ்சிக்க மாட்றான்… இப்ப சோசியல் மீடியால என்னைக் கழுவி ஊத்துறாங்க… அதை பத்தி எனக்குக் கவலை இல்ல… என் லவ் ஒன்னும் சின்னக்குழந்தைங்க விளையாட்டு இல்லனு முகிலுக்குப் புரியவைக்கணும்… அதான் நானே நேர்ல வந்திருக்கேன்” என்றாள் அவள் தயக்கமின்றி.

பாரிவேந்தன் அவளை ஒன்றும் சொல்லவில்லை. ரஞ்சனாவை வஞ்சகமின்றி முறைத்தார்.

“அது… வந்துங்க…” எனக் கையைப் பிசைந்தவரிடம்

“ஏன் மசமசனு நிக்குற? உன் மருமக வந்திருக்கா… ஆரத்தி சுத்தி வீட்டுக்குள்ள அழைச்சிக்க… இப்பிடி ஒருத்தனைப் பெத்ததுக்கு டெய்லி இனிமே உனக்கு ஆரத்தி சுத்துற வேலை தான்” என்று உறுமிய பாரிவேந்தன் வீட்டுக்குள் போக எத்தனிக்கையில் தந்தையின் வெண்கலக்குரலால் உலுக்கப்பட்டு பாலி ஹவுசிலிருந்து வீட்டு வாயிலை நோக்கி வந்த முகிலன் ட்ரெக்கிங் பேக் சகிதம் நின்ற மேகவர்ஷிணியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.

“வாங்க துரை… இவுங்க உங்களைக் காதலிக்குறாங்களாம்… என்ன பதில் சொல்லப்போறிங்க?” என்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பாரிவேந்தன் எகத்தாளமாகக் கேட்க தலையிலடித்துக்கொண்டு மேகாவின் பக்கம் திரும்பினான் அவன்.

“ஹாய் முகில்! நீ என்னை இந்த ரெண்டு நாளா மிஸ் பண்ணுனியா?” என்று கேட்டுவிட்டுத் தோளைக் குலுக்கியவளோ அவனை அயர்ந்து போக வைத்தாள்.

21 thoughts on “MM 7”

  1. Avatar

    Wow super sis semma epi 👍👌😍 mega semma shock kuduthama mugil ku chummave avanga appa kovakararu edhula salangaiya vera katti vidra enna aga pogudho 🤔

  2. Kalidevi

    Super super meha veedu thedi vanthuta love solla ithuku ena pathil solla poran therilaye erkanave thititan vera una ipo avanga appa vera irukanga avar vera mugil mela semma kovathula irukaru . Papom ena pathil nu

  3. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 7)

    அடியாத்தி…ஆத்தி..!
    எங்கிருந்து இந்த மேகா பொண்ணுக்கு இம்புட்டு தைரியம் வந்துச்சுனு தெரியலையே..! ஆனாலும், புள்ளை உன்னோட இந்த அதிரடி ஆக்சன் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குதுன்னா
    அப்ப, நம்ம முகிலனுக்கு பிடிக்காத என்ன….???

    ஆனா, எத்தனை பேரு இப்படி இருப்பாங்கன்னு நிசமாவே புரியலை…? தான் சூசைட் பண்ணிக்க போன சூழ்நிலையில், ஒரு சில நல்ல வார்த்தைகளை மறைமுகமா சொல்லி, தன் சாவையே தடுத்த ஒரு பர்ஸனுக்காக, இந்தளவுக்கா ஒரு பொண்ணு மெனக்கெடுவா… அதுவும் அவன் நல்லா இருக்கணும்ன்னு. இட் இஸ் மைண்ட் ப்ளோயிங். இந்தளவுக்கு காதலும், நல்லெண்ணமும், துணிச்சலும்
    உள்ள பெண்ணை கட்டிக்கிட்டா…. டேய் முகில்..!
    என்னோட லைஃப் ரொம்ப ஸ்மூத்தாவே போகும். அதுக்கு நான் கியாரண்ட்டி…!

    ஆனாலும் இந்த முகிலோட அப்பாவுக்கு இம்புட்டு கோபம் ஆகாது. அவனே நொந்து நூடூல்ஸாகி, வெந்து வெண்கொங்கலாகி இருக்கான்… அவனைப்போய்
    இன்னும், இன்னும் கரிச்சுக் கொட்டிட்டே இருந்தா என்ன அர்த்தம். இதோ, பெண் பிள்ளையை பெத்து வைச்ச
    மேகா அப்பாவும் இருக்கிறாரு,
    அவரு இப்படியா கால்ல சுடு தண்ணியை கொட்டிக்கிட்ட மாதிரி தையாத்தக்கான்னு
    குதிக்கிறாரு… இல்லை தானே..!
    எத்தனை நிதானமா, மகளை உட்டகார வைச்சுப் பேசி அவளோட மனநிலையைத்
    தெரிஞ்விக்கிட்டதும் இல்லாம,
    எத்தனை அழகா அவ ஆசைக்கு பக்த்துணையாவும் இருப்பேன்னு வாக்கு கொடுக்கிறாரு…! அவர் மனுசனா…? இல்லை இந்த பாரிவேந்தன் மனுசனா…?

    எம்மாடியோ…! இந்த சோசியல் மீடியாவை நினைச்சாலே….
    பேஸ்மெண்ட்டே நிலை குலையுது. போதும் டா சாமி !
    நிழல்களைத் தேடி நிசங்களை
    தொலைச்ச கதையாயில்லை
    இருக்குது.
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    மேகா வீடு தேடி வந்தாச்சு, முகில் இனி என்ன பண்ணப் போறான்?

  5. Avatar

    சத்தியமா இப்படி வந்து நிப்பான்னு எதிர்பார்க்கலை!!… முகில் எப்படி சமாளிக்கப் போறானோ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *