அத்தியாயம்-24
சற்று முன்…
மருத்துவர் எப்பவும் போல பரிசோதனை முடித்து எழுந்தார்.
“ட்ரெஸ்ஸிங் தினமும் மிஸ் ஆகக்கூடாது. காய்ச்சல் அதிகமானா உடனே சொல்லணும். புல்லட் காயம் சாதாரணமில்லை.” என்று கூறியபடி கையுறையை கழற்றினார்.
சத்ரியன் சோபாவில் சாய்ந்து இருந்தான். வயிற்று தையல் இழுக்கும் வலி இருந்தாலும் முகத்தில் எதுவும் காட்டவில்லை.
ஷ்ரத்தா தூரத்தில் நின்றபடி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். எப்படி தான் மலையை முழுங்குகின்றானோ என்ற ஆச்சரியத்துடன் அவன் முகத்தை பார்வையிட்டாள்.
அந்த நேரம் சத்ரியன் திடீரென மருத்துவரை பார்த்தான். தையலுக்கு மேல் போடும் பேண்ட்ஏஜை போடும் சமயம்,
“டாக்டர்… உள்ள ரூம்ல வந்து பண்ணுங்க.” என்றான் அமைதியாக. ஷ்ரத்தா முகம் அச்சத்தில் இருப்பதால் அவ்வாறு கூறுகின்றான் என்று மருத்துவர் தயங்காமல் அவன் பின்னால் சென்றார்.
அறை கதவு மூடப்பட்டது.
வினோத், யோகேஷ் இருவரும் ஹாலில் அமைதியாக நின்றனர். ஷ்ரத்தாவும் சுவரோரமாக நின்றாள். சில விநாடிகள் விரைந்தது. அதற்குப் பிறகு
“அவுச். அஅஅ” என்று டாக்டரின் திடீர் அலறல்.
ஷ்ரத்தா உடம்பே அதிர்ந்து திரும்பினாள். சத்ரியனுக்கு ஏதேனும் ஆபத்தோ என்று கதவை யோகேஷ் வினோத் மற்றும் சில பாடிகார்ட்ஸ் முற்றுகையிட்டனர்.
அடுத்த நொடி அறை கதவு திறந்தது. வெளியேயிருந்த இரண்டு பாடிகார்ட்ஸ் அவசரமாக உள்ளே சென்று ஒரு உடலை இழுத்துக்கொண்டு வந்தனர்.
ஷ்ரத்தாவின் கண்கள் விரிந்தது.
அது அந்த மருத்துவர். ஆனால் முகத்தில் ஏதோ மாஸ்க் அணிந்து அது கழட்டப்பட்டு வேறொரு நபராக இருந்தார்.
அவன் கழுத்து முழுவதும் ஆழமாக அறுக்கப்பட்டிருந்தது. செங்குருதி கழுத்திலிருந்து வெள்ளமாக வழிந்தது. வெள்ளை கோட் முழுவதும் சிவப்பாக நனைந்திருந்தது. அந்த நபரின் கண்கள் திறந்தபடியே உறைந்திருக்க, தரையில் இழுத்துச் செல்லும் போது கூட, கழுத்திலிருந்து ரத்தம் சொட்டிச்சொட்டி கருப்பு மார்பிள் தரையில் சிவப்பு கோடு வரைந்தது.
ஷ்ரத்தாவின் மூச்சே நின்றது.
“அய்யோ…” என்று உதடு மட்டும் அசைந்தது.
யோகேஷ் முகம் பேய் அறைந்தது போல வெளிறியிருந்தது. வினோத் கூட பதட்டமாக நின்றான்.
அவர்களுக்கே இது எதிர்பாராதது போல. அந்த அறைக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தான் சத்ரியன்.
அவனது கையில் இன்னும் ரத்தம் வழிந்தது. முழுக்க மருத்துவரின் முகத்தை அணிந்து வந்தவனின் ரத்தம். அவன் அருகில் இருந்த ட்ரேயில் கத்தியை போட்டான்.
“துடைச்சு கழுவி வை. மீண்டும் தேவைப்படலாம்.” என்றான் குளிர்ந்த குரலில்.
ஒருவன் நடுங்கிக்கொண்டே கத்தியை எடுத்தான். சத்ரியன் முகம் மெதுவாக இருண்டது.
“வர வர படுக்கையறை வரைக்கும் கொலையாளியை விட்டுட்டு வேடிக்கை பார்க்கறிங்க.” என்று கர்ஜித்தான்.
யோகேஷ் உடனே தலையை குனிந்தான்.
“சாரி பாஸ்..”
“சாரியா? இதே தவறு மீண்டும் நடந்தா உங்களுக்கும் இதே நிலைமை தான்” என்று சத்ரியன் சீறினான்.
“இவன் டாக்டர்னு நம்பிட்டீங்களா இது என்னை கொல்ல யாமினியோட கூட்டு வச்ச ஆள் மைக்கேல்.” என்றவன், வினோத் உடனே, “பாஸ்… நாங்க” என்று கூற
“ஷட் அப்!” என்று அவன் கர்ஜித்தான்.
அந்த குரல் முழு வீட்டையும் அதிர வைத்தது. ஷ்ரத்தாவோ அங்கேயே உறைந்து நின்றாள்.
இன்று காலை தன் இதயத்தின் மீது ஆள்காட்டி விரல் வைத்து சீண்டியவன். அதே கையால் இப்போது ஒருவரின் கழுத்தை அறுத்திருக்கிறான்.
அவளது உடம்பே நடுங்கியது.
தரையில் வழியும் ரத்தத்தை பார்த்ததும் வயிறு புரண்டது.
மருத்துவரின் உடலை இழுத்துச் செல்லும் போது, கழுத்திலிருந்து மீண்டும் ரத்தம் சொட்டியது.
அந்த காட்சி ஷ்ரத்தாவின் கண் முன்னே இருள் சூழ்ந்தது.
“அப்பா..” என்று மெல்ல முணுமுணுத்தவள் மயங்கி சரிந்தாள்.
“ஷ்ரத்தா” என்று அழைத்தவாறு சத்ரியன் வேகமாக அவளை தாங்கினான். அவளது உடல் முழுவதும் நடுங்கியது.
சத்ரியன் அவளை தூக்கிக்கொண்டு அவளிருந்த அறைக்குள் சென்றான்.
பின்னால் யோகேஷ், வினோத் இருவரும் பதட்டமாக பார்த்தனர்.
அவன் அறைக்குள் நுழைந்து கதவை உள்ளிருந்து பூட்டினான்.
“பாஸ்..” என்று வினோத் கதவின் அருகே வந்தான். பதில் இல்லை.
யோகேஷ் மெதுவாக, ”பாஸ் அவங்க பயந்துட்டாங்க..” என்றான்.
“தெரியும்” என்ற சத்ரியனின் குரல் உள்ளிருந்து வந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஷ்ரத்தாவை அவன் ஏதாவது செய்வானோ என்ற பயம் இருவருக்குமே இருந்தது.
ஆனால் சத்ரியனை தடுக்க முடியாது. தடுக்க நினைக்க கூட முடியாது. அறைக்குள் சத்ரியன் அவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்தான்.
அவளது முகம் வெண்மையாகி இருந்தது. அவன் தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்தான். “ஷ்ரத்தா..” என்று மெதுவாக அழைத்தான்.
அவள் புருவம் சுருங்கியது.
மெதுவாக கண் திறந்தாள்.
முதல் பார்வையில் சத்ரியன். அடுத்த நொடி “ஆஆ” என்று அலறி பின்னே தள்ளிச் சென்றாள்.
சத்ரியனை கண்டு பேயை பார்த்தது போல “என்னை விட்டுடு. கதவை திற… நான் போறேன்… இங்க இருக்க மாட்டேன்..” என்று பதறினாள். அவள் கதவை நோக்கி ஓடவும் முயன்றாள்.
“ஷ்ரத்தா… அமைதியா இரு.” என்று அவன் நெருங்கினான்.
“தொடாத என்னை தொடாத.” என்று அவள் மேலும் கத்தினாள்.
“நீ இப்ப அமைதியாயிருனு சொன்னேன்.” என்றான்
“மாட்டேன்… கதவை திறடா. நான் இங்கிருந்து போகணும்” என்று
ஷ்ரத்தா ஹிஸ்டீரியா பேஷண்ட் போல அலற ஆரம்பித்தாள்.
சத்ரியன் முகம் இறுகியது. “ஷ்ரத்தா” என்று சற்று கூடுதலாக அதட்டினான். ஆனால் ஷ்ரத்தா செவியில் ஏறவில்லை.
“நீ ஒரு கொலைகாரன், சைக்கோ, என்னையும் கொன்றுடுவ” என்று கத்தினாள்.
அடுத்த நொடி அவளை அமைதியாக்க வழி தெரியாமல், பளாரென அறைந்தான்.
ஒரு அறை விடுத்ததும் அறை முழுக்க அமைதி. ஷ்ரத்தா அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.
கன்னம் சிவந்து காந்தியது.
அவளது கண்களில் நீர் நிரம்பியது.
சில விநாடிகளில் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“அ..அப்..அப்பா…” என்று உடைந்து போனாள். சத்ரியன் அவளை பார்த்தான். அவன் நெருங்க, அவள் பின்னே நகர்ந்தாள்.
அவனை பார்த்தாலே பயம்.
அந்த பார்வை சத்ரியனுக்கு ஏதோ செய்தது. அவன் மெதுவாக அருகே வர முயன்றான்.
உடனே ஷ்ரத்தா தனது போனை எடுத்தாள். கைகள் நடுங்க,
“இது… நீ.. நீ தானே…” என்று அழுதபடி வீடியோவை திறந்தாள்.
“நீ தானே எங்கப்பாவை கொல்ல திட்டமிட்டது?” என்று அவள் போனை அவன் முன்னே நீட்டினாள். “நீ தானே அப்பாவை கொன்ற?” என்றவள் கையிலிருந்த போனை வாங்கினான் சத்ரியன்.
வீடியோ ஓடியது அதிலிருந்த இடம். அவனது பார். சத்ரியன் வினோத்திடம் பேசும் காட்சி.
சத்ரியன் கண்கள் மெதுவாக சுருங்கியது. அவன் மீண்டும் ரீபிளே செய்தான்.
அந்த நொடி அவனுக்கு புரிந்தது.
யாரோ தன் பாரில் தனக்கு தெரியாமல் திவாகரை பற்றி முதல் முதலில் பேசிய வீடியோவை எடுத்து ஷ்ரத்தாவிடம் காட்டியுள்ளார்கள் என்று.
அந்த வீடியோவில் திவாகரை சாகடிக்க கூறுவது அவன் தான்.
சத்ரியன் முகம் மெதுவாக இருண்டது. “யாருடி இது உனக்கு தந்தது?” என்று கேட்டான். ஷ்ரத்தா அமைதியாக பின்னே நின்றாள். அவளிடம் பதில் இல்லை என்றதும், “இது நான் தான் பேசினேன். உங்கப்பா என்னோட கேஸை எடுத்து வாதாடறதுக்கு முன்ன பணிய வைக்க பேசியது. இது ஏஐயோ, எடிட்டிங் மார்பிக் எதுவும் இல்லை. இது நான் பேசியது தான். உங்கப்பாவை கொல்ல நினைச்சு பேசியது தான். இதை யார் உனக்கு தந்தா?” என்று அவளது அலைப்பேசியில் யார் அனுப்பியது என்று வாட்சப் மெயில் என்று தோண்டி பார்த்தான்.
அதை மற்றொரு போனிலிருந்து இந்த போனில் வீடியோ எடுத்திருந்தாள்.
சத்ரியனுக்கு ஏதோ புரிந்து விட்டது. யாரோ அவனை மாட்டிட ஒன்று கூடி வலை வீசுகிறார்கள்.
அடுத்த நொடி சத்ரியன் வேகமாக எழுந்தான். சத்ரியன் மேல்சட்டை கூட அணியவில்லை, வயிற்றில் பேண்டேஜ் மட்டும்.
“காரை எடு.” என்றான்.
“பாஸ் இப்ப உங்க கண்டீஷன் இருக்கற நிலைமைக்கு?” என்று வினோத் இழுக்க, “காரை எடுனு சொன்னேன்.” என்று கர்ஜித்தான்.
யோகேஷ் உடனே கூடவர, “நீ அவளை நகர விடாம பார்த்துக்கோ” என்று வேலைக் கொடுத்து சென்றான்.
சத்ரியன் திரும்பி ஒருமுறை ஷ்ரத்தாவை பார்த்தான்.
அவள் இன்னும் பயத்தில் நடுங்கிக்கொண்டே நின்றாள். வீடியோவை அவள் அவசரப்பட்டு தான் காட்டினாள். அவனுமே தந்தையை கொல்ல திட்டமிட்டதாக உரைத்தான். ஆனால் அவன் தான் கொன்றதாக கூறவில்லை. இப்பொழுது எங்கே செல்கின்றான்?
சத்ரியன் நொடியும் தாமதிக்காமல் நேராக வெளியேறினான்.
துப்பாக்கி குண்டு துளைத்த உடலோடு, மேல்சட்டை கூட இல்லாமல், அப்படியே காரில் ஏறி தனது பாரை நோக்கி புறப்பட்டான்.
கூடவே அந்த மைக்கேல் டெட் பாடியும் டிஸ்போஸ் செய்ய கூறிவிட்டு சென்றான்.
நேராக பாருக்கு வந்து நிற்க, அங்கே சிலர் வழமையாக பொழுதை கழிக்க வந்தவர்கள் சத்ரியன் ஆவேசமாக கடந்து செல்வதை கவனித்தனர்.
ரிதுராஜும் அங்கே இருந்திட, ‘பெருசா டாக்டர் வேஷம் போட்டு போய் பேண்ட்ஏஜ் போட்டு சத்தமேயில்லாம வந்துடுவேன். பிறகு கொஞ்ச நேரத்துல அவனே செத்துடுவான்னு சொன்னான். இப்ப செத்துட்டான் போலயே. ஆனா இவன் எதுக்கு பேண்ட்ஏஜ் போட்டிருக்கான். மைக்கேல் ஏதாவது செய்திருப்பானா?’ என்று மனதிற்குள் திட்டி பார்வையிட, மற்றவர்களோ கருப்பு நிற பேண்ட் மட்டும் அணிந்து சிக்ஸ் பேக் உடலில் சட்டையின்றி வந்த சத்ரியனின் வயிற்றில் கட்டுகட்டியிருக்க, அதை தான் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.
சத்ரியன் இந்த கிங்பின் ஆட்டத்திற்குள் இருபது வயதில் வெறிக்கெண்டு நுழைந்தான். தற்போது முப்பது வயது. இந்த பத்து வருடத்தில் துளி காயமும் அவனிடம் கண்டதில்லை. நெருங்க நினைத்தாலே கொன்று போட்டுவிடும் எமபாதகன். இன்றும் யாரையோ கொன்று போட்டுவிட்டு வந்திருக்கும் தோரணை தெரிய, வேடிக்கை பார்த்தனர்.
வினோத்தை ரிதுராஜ் அழைத்து, “சத்ரியனுக்கு என்னாச்சு?” என்றான்.
இனிமேலும் மறைக்க என்ன உண்டு. யாரோ முகம் தெரியாத நபர் துப்பாக்கி தோட்டாவை இறக்கியதாக தெரிவித்தான். கூடவே இன்று மைக்கேல் என்பவன் இறந்த விவகாரத்தை கூறினான்.
“துப்பாக்கியை இறக்கின ஆளு யாரு?” என்று கேட்க வினோத்தோ எச்சியை விழுங்கி “தெரியலை சார். பாஸுக்கு பலதரப்புல எனிமி இருக்காங்க. யாருனு தெரியலை. சார் தான் விவரம் கேட்டு தெரிந்துக்கறதுக்கு முன்னவே கொன்னு புதைச்சிடறாரே” என்று கூற, சிசிடிவி அறையில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது.
ரிதுராஜ் வினோத் மற்றும் பலரும் சுத்தி நிற்க சிசிடிவியை மெயின்டெயின் செய்யும் ஆள் இறந்துகிடக்க அவனை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர் சத்ரியனின் பாடிகார்ட்ஸ்.
சத்ரியன் பார்வை மற்றவர்களை ஆராய, ரிதுராஜோ, “துப்பாக்கி தோட்டாவுக்கு எல்லாம் உன் உடம்புல இடம் கொடுத்துயிருக்க? யாருனு கண்டுபிடிச்சிட்டியா?” என்று கேட்க, சத்ரியனோ “என்னை கொன்று என் இடத்துல வர்ற துடிக்கறவன் ஒருத்தன். என்னை கொல்ல முயற்சிக்கறான்.
இன்னொருத்தன் என்னை கொல்ல கோழைத்தனமா திவாகரோட பொண்ணை வச்சி மிரட்ட முயற்சிக்கறான். யாருனு தெரிந்தும் இந்த விளையாட்டுல சுவாரசியத்துக்காக உயிரை பணயம் வச்சியிருக்கேன்.” என்று பீடிகைப்போட்டான்.
ரிதுராஜுக்கு லேசாக அல்லுவிட்டது. அப்படியென்றால் தன்னை அறிந்திருக்கின்றான் என்று உதறல் எடுத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதே போல அங்கே மற்றொரு நபரும் தன்னை சத்ரியன் அடையாளம் கண்டுவிட்டானா என்று உதறலுடன் நின்றான்.
இதில் சத்ரியனோ ‘என்னை கொல்ல இரண்டு எதிரி ஆட்டத்தில் இருக்காங்க. ஆனா கண்ணுக்கு தெரியாத அந்த மூனாவது எதிரி ஏன் என் ஷ்ரத்தாவை கொல்ல நினைக்கறாங்க? எனக்கு அவங்க யாருனு தெரியலையே.’ என்று வினோத்தை அழைத்து வீடு திரும்பினான். சத்ரியன் எண்ணமெல்லாம் அந்த மூன்றாவது எதிரி யார் என்றதில் தான் இருந்தது.
-தொடரும்.

Interesting waiting for nxt epi
Wow super super. Sema twist. Very intresting. Who.is that another enemy?