Skip to content
58 / 100 SEO Score

அத்தியாயம்-37

அறை முழுவதும் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் அடங்கி, இப்போது அமைதி மட்டும் நிலவியது.

ஷ்ரத்தா சத்ரியனின் மார்பில் சாய்ந்தபடி அமைதியாக படுத்திருந்தாள்.

சத்ரியனோ சீலிங்கை பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தான்.

திடீரென்று அவளது முகத்தை திருப்பிப் பார்த்தான். “ஏய்…” என்று அதட்ட, “ம்ம்…” என்று கண்களை உயர்த்தினாள்.
பெரும்பாலும் ஷ்ரத்தாவை ஒரு அழைப்பிற்கே ‘ம்ம்’ கொட்ட வைத்திருந்தான் ஜாலக்காரன்.

“ஒரு விஷயம் கவனிச்சியா?” என்றான். “என்ன?” என்றாள் ஷ்ரத்தா. “முன்னாடி என்னை பார்க்கும் போது உன் கண்ணுல வெறுப்பு தெரியும். கோபம் தெரியும். பயம் தெரியும்.” அவன் மெதுவாக அவளது கன்னத்தை வருடினான். “இப்போ…” சிறிது இடைவெளி விட்டான்.

“நான் தினமும் உன்னை என் இஷ்டத்துக்கு இழுத்துட்டு வர்றேன். உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, என் விருப்பத்தை திணிக்கிறேன்.” ஷ்ரத்தாவின் பார்வை மெதுவாக மாறியது. “ஆனா அந்த பழைய கோபம், பயம், வெறுப்பான பார்வை இல்லயே ஏன்?” என்றான்.

சத்ரியனின் கண்கள் அவளை ஊடுருவிப் பார்த்தது. அவள் என்ன கூறப்போகின்றாளென்ற வார்த்தைக்காக. “ஏன்னா?” என்று அவன் கேட்கவரும் சாரம்சம் புரியாது இருந்தாள் பேதை.

“என்னிடம் ஏதாவது கேம் ஆடுறியா?” நேரடியான சந்தேகத்தை கேட்டிருந்தான் நாயகன். ஷ்ரத்தா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக தலையசைத்தாள்.

“கேமும் ஆடலை ஒன்னும் ஆடலை. முன்னாடி உன்னை பார்த்து பயமிருந்தது, கோபம் வெறுப்பு இருந்தது. பிடிக்காத உணர்வால பார்த்தேன்.”

“இப்ப அதெல்லாம் இல்லையா?” என்றான்.

“பயம் இருக்கு ஆனா உன்னை பார்த்து இல்லை. உன் செயலை பார்த்து. கோபம் இருந்தது… ஆனா அது அப்பா உன்னால இறந்தார் என்ற கோபம். இப்ப தான் அப்பா உன்னால சாகலை என்று தெரிந்துக்கிட்டேனே. அந்த விஷயம் எல்லாம் தெரியவும் வெறுப்பு போயிடுச்சு.” என்றாள். அவள் சொன்ன பதிலில் சத்ரியனின் புருவம் உயர்ந்தது.

“நீ நல்லவன்னு நான் சொல்ல மாட்டேன்.” ஷ்ரத்தா நேராக அவன் கண்களை பார்த்தாள். “இப்பவும் நீ கெட்டவன் தான்.” அந்த வார்த்தைக்கு கூட சத்ரியன் சிரித்தான்.

“நான் செத்திருக்க வேண்டிய இடத்துல பலமுறை காப்பாத்தியிருக்க. அதனால முன்ன இருந்த வெறுப்பு இல்ல.” என்றாள்.

“சோ… முன்ன பிடிக்கலை… இப்ப பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

“தெ..தெரியலை‌. எனக்குள்ள என்ன நடக்குதுன்னு புரியாம இருக்கேன்.
நான் உன்னை பிடிச்சி என்னை இழந்தேனானு கேட்டா சத்தியமா இல்லை. இப்ப நீ தொட்டா என் உடல் அதுக்கு பழகிடுச்சு. இதுக்கு சைக்காலஜி பிரகாரம் இரண்டு விதமான காரணமா இப்படி சொல்வாங்க.

ஒன்னு மியர் எக்ஸ்போஷர் எஃபெக்ட். ஒருவரை அடிக்கடி பார்த்தாலோ, அவரோடு தொடர்ந்து பழகினாலோ, ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் மெதுவாக பரிச்சயம் அதிகரித்து பிடிக்க ஆரம்பிக்கும்.
இது மனவியலில் நன்றாக அறியப்பட்ட ஒரு கருத்து. இது போல தான் பெரும்பாலான கல்யாணம் நடக்கும். பையனை பிடிக்கலைனு சொல்லற பொண்ணு இருப்பாங்க. ஆனா ஆப்டர் மேரேஜ் ஆனதும் அந்த பையன் தான் உலகம்னு பொண்ணு சொல்லற அளவுக்கு இருக்கும். ஏன்னா தினமும் அதே முகத்தை பார்த்து பார்த்து காதல் வந்திடும்.” என்று சிரித்தாள்.

இரண்டாவது ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இது ஒன்னு. தன்னை கட்டுப்படுத்துபவர், கடத்துபவர் அல்லது துன்புறுத்துபவரிடம் உணர்ச்சி ரீதியான பிணைப்பு உருவாகும் நிலை.

உன்னை தினமும் பார்க்கறேன், பேசறேன், என்னை காப்பாற்றிய சம்பவங்கள் தினமும் நினைவில் இருக்கு, பழைய தவறான புரிதல்கள் உடையுது.

அதோட உன்னை வெறுக்கிறதுக்கு கூட காரணம் வேண்டும். ஆனா தினம் தினம் உன்னை பார்த்து பழகின பிறகு, அதுவும் பிஸிக்கலா நெருங்கியப்பிறகு முன்னிருந்த வெறுப்பு எங்கேயோ கரைந்து போச்சு.

இந்த நேசத்துக்கு நானும் பழக்கிட்டேனா என்று கூட என்னால சொல்ல தெரியலை” என்று அவள் மருத்துவபாடம் படித்த விஷயத்தை வைத்தும் தன்‌மனதில் தோன்றிய உணர்வையும் அழகாக கோர்த்து கூறினாள்.

அவள் பேசி முடிப்பதற்குள் சத்ரியன் அவளது இதழ்களை முற்றுகையிட்டான். அந்த முத்தம் நீண்டது. ஷ்ரத்தாவின் மூச்சே நின்றிடும் போல நேரத்தை கூட்டினான். சில நிமிடங்கள் கழித்து அவனாக விலகினான்.

இருவரும் மீண்டும் மெத்தையில் அமைதியாக படுத்திருந்தனர்.

சில நேரம் கழித்து  தான் பேசினான். “ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்று பீடிகை போட்டான்.

“கேளு.” என்றாள்‌. அவன் முத்தமிட்டு கடித்து வைத்திருக்க உதட்டில் ரத்தம் கசிய அதை ஈரப்படுத்தி விழுங்கினாள்.

“இப்போ யாராவது என்னை கொல்ல வந்தா என்ன செய்வ?” என்றான்.

ஷ்ரத்தா உடனே பதில் சொல்லவில்லை. அவளுக்கு நினைவு வந்து சென்றது வினோத் தான். ஆனால் வினோத்திற்கு அந்த தைரியம் உண்டா என்று யோசித்தால் குறைவு தான்.
அவனால் சத்ரியனை திட்டும் பொழுது கூட, ‘பாஸ்’ என்று கூறாமல் வெறுமையாக ஒருமையாக பேச முடியவில்லை.

இன்னொரு விஷயம் சத்ரியனுக்கு நாலாபக்கமும் கண்கள் உண்டு. அவன் நிழலையும் அவன் நம்பமாட்டான். அப்படியிருக்க வினோத் மீது சந்தேகம் முளைத்தால், வினோத்தின் காலடி எங்கெல்லாம் செல்லும் வரை கணித்திருந்து அவனை மீறி காரியம் செல்லாமல் பார்த்துக் கொள்வான். அதனால் ஷ்ரத்தா உதட்டை பிதுக்கினாள்.

“தெரியல… அப்படி எதையும் நீ கேர்லஸா விடமாட்ட. உனக்கு நாலாப்பக்கமும் கண்ணு இருக்கு. உனக்கு என் மேல கூட நம்பிக்கை முழுசா வரலைனு தெரியும்.” என்றாள்.

ஆனால் அந்த ஒரு வார்த்தை சத்ரியனை யோசிக்க வைத்தது. அவன் பார்வை மெதுவாக அவளது முகத்தில் நிலைத்தது. உண்மை தான் அவள் மீது துளி சந்தேகம் இந்த வினோத்தால் நிகழ்கின்றதே.

வினோத் தன்னை கொல்ல முயற்சிக்கிறான். ஷ்ரத்தாவுக்கு அது தெரியும். ஆனாலும் அவள் இன்னும் அமைதியாக இருக்கிறாள். இன்னும் பெரிய விளையாட்டு அவள் மனதில் ஓடுகிறதா?

முதல் முறையாக… ஷ்ரத்தாவை முழுமையாக கணிக்க முடியாமல் சத்ரியன் நின்றான். எதிரிகளை அவன் படித்துவிடுவான். துரோகிகளின் மனதை பிடித்துவிடுவான். ஆனால்… இந்த பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் புதிய புதிராக மாறிக் கொண்டிருந்தாள்.

அந்த புதிரை உடைக்க வேண்டும் என்ற அடங்காத திமிர் அரசனாக சத்ரியன் இருந்தான். உடைக்காமல் ரசிக்க வேண்டும் என்ற விசித்திரமான ஆசையும், ஒரே நேரத்தில் சத்ரியனுக்குள் எழுந்தது.

இவர்கள் இங்கே காதல் ரசம் பொழிய பேசி பகிர, அங்கே ரிதுராஜ் நாற்காலியில் சாய்ந்தபடி அமைதியாக இருந்தான். எதிரே வினோத் புதிதான திட்டத்தை கேட்டு நின்றான்.

உணவில் விஷம் கலந்திட முடியாது. உணவை ருசி பார்ப்பதே பாடிகார்ட்ஸ் தான். அதனால் வேறொரு வழிமுறை தேடி நின்றான்.‌ இன்று இங்கு தான் தொழில் ரீதியாக சந்திப்பு அமைந்தது. அதனால் சத்ரியனுக்கு சந்தேகமின்றி பேசும் வாய்ப்பும் அமைந்தது.

ரிதுராஜோ “சத்ரியனை அழிக்கணும்னா அவன் உடம்பை தாக்க வேண்டியதில்லை.” என்றதும் வினோத் புரியாமல் பார்த்தான்.
“அவனோட பலம் என்ன? என்று கேட்டான்.
“சத்ரியனுக்கு ஆள்பலம்…” என்று வினோத் கூறினான்.  “தப்பு.” என்று ரிதுராஜ் சிரித்தான். “இவ்ளோ நாள் கூடயிருந்தும் சத்ரியனை பத்தி தவறா கணிச்சிட்ட வினோத். அவனுக்கு ஆள்பலம் இருப்பதால தான் அவன் இப்படி துள்ளிட்டு இருக்கான்னு நினைச்சியா? அவன் தனியா வேட்டையாடற மிருகம்.” என்று கூறினான்.
எப்பொழுதும் எதிராளி நம் பலம் பலவீனத்தை துல்லியமாக கவனிப்பார். அதில் ரிதுராஜ் சரியான எதிரியே‌!

“அவனோட பலம் ஷ்ரத்தா.”
வினோத்தின் கண்கள் சுருங்கின.
“ஷ்ரத்தாவா அவ சாதாரணமா பிஸிகல் ரிலேஷன்ஷிப்காக கூட வச்சிட்டு இருக்கான். அதர்வைஸ் நோ யூஸ்” என்றான்.‌

“வினோத்… உன் மூளை சத்ரியன் என்ற பெயர்ல ஸ்டக் ஆகியிருக்கு. பயத்துல யோசிக்க மறந்துடற.  முன்னாடி யாரு செத்தாலும் அவன் சிரிச்சுட்டு நடந்தவன். இப்ப அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆனா உலகத்தையே எரிக்க தயாரா இருக்கான். அவளுக்காக அந்த பையன் யாரோ சீனியரை வெறித்தனமா அடிச்சதை கேள்விப்பட்டேன்.‌

நீ வேண்டுமின்னா அவன் பிம்பத்தை உடைக்காம இருக்க பயத்தை உருவாக்குவதா நம்பு. நான் நம்ப மாட்டேன். அவன் வெறித்தனமா அடிச்சது ஷ்ரத்தாவுக்காக.” என்று கூறினான்.

வினோத் அமைதியாக இருந்தான். உண்மை தான் ஷ்ரத்தாவுக்கு தான் எக்ஸ் என்று தெரிந்ததும் பயத்திலேயே இருப்பதால் சரியாக சித்திக்க மறந்திருப்பதை ஏற்றுக் கொண்டான்.

“அப்ப ஷ்ரத்தாவை சாகடிக்க போறியா? அவ ரொம்ப நல்லப்பொண்ணு. நம்ம பக்கம் இருப்பா” என்றான்.

“நல்லப்பொண்ணா… எதை வச்சி? நம்ம பக்கம்னு சொல்லற? சத்ரியனை கொல்லுனு சொன்னா கொல்வாளா?” என்றான் ரிதுராஜ்.

வினோத்தோ, “ஷ்ரத்தா கொல்ல மாட்டா… பட் என்னை சத்ரியனிடம் காட்டிக் கொடுக்க மாட்டா.” என்றுரைத்தான்.

ரிதுராஜோ “யூ ஃபுல்.. இன்னிக்கு உன்னை காப்பாத்துறா. நாளை சத்ரியன் உயிருக்கு ஆபத்துனா யார் பக்கம் நிற்பா? முன்ன அவ அப்பாவை கொன்றவன் அவன்னு தெரிந்தும் அவனோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இல்லை அவன் கைக்குள்ள தான் இருந்தா. இப்ப பிஸிகல் பாண்டிங் வேற இருக்குனு சொல்லற. எந்த நேரம் எப்ப வேண்டுமென்றாலும் அவ உன்னை போட்டுக் கொடுக்கலாம். உன்னை நான் நம்புறேன் வினோத். ஆனா அந்த பொண்ணை நம்ப மாட்டேன்.

ஏன்னா பயத்துல இருக்கிற பொண்ணு ஒரு மாதிரி முடிவு எடுப்பா. காதலிக்க ஆரம்பிச்ச பொண்ணு வேற மாதிரி முடிவு எடுப்பா. அவளும் சத்ரியனை விரும்ப ஆரம்பிச்சா.. அப்ப தெரியும்.” என்றதற்கு வினோத் “ஷ்ரத்தா அப்படிப்பட்டவ இல்ல. அவ நீதி நியாயம் பார்க்கறவ. சத்ரியன் மாதிரி அநியாயம் செய்பவனை காதலிக்க மாட்டா. அவனோட ஒரு இக்கட்டில் தான் இப்பவும் இருக்கா” என்று மறுக்க பார்த்தான்.

ரிதுராஜோ பருகிக்கொண்டிருந்த மதுவை மேஜையில் வைத்து, “நீ அப்படி நினைக்கிறயா? ஆனா சத்ரியன் அவளுக்காக கொலை பண்ணான். அவளுக்காக உலகத்தையே எதிர்க்கிறான். தினமும் அவளோட இருக்கான்.
நாளைக்கு அவன் உயிருக்கும், உன் உயிருக்கும் நடுவுல அந்த பொண்ணை தேர்வு பண்ண சொன்னா… அவ யாரை தேர்வு பண்ணுவா?” என்றதும் வினோத் தடுமாறினான்.

இதுவரை ஷ்ரத்தா சத்ரியனை விரும்புவதாக கவனித்தது இல்லை. ஆனால் சத்ரியன் போன்றவனை எந்த பெண்ணும் பார்த்ததும் ரசிப்பாள். அவன் முகவசீகரம் அப்படி. யாராக இருந்தாலும் சத்ரியன் கெட்டவனாகவே இருந்தாலும், அவன் யாரையும் அதிகாரத்துடன், ஆதிக்கம் செய்யும் குணம், யாருக்கும் அடங்காத குணம், எவரையும் அடங்கும் குணம், கனவு நாயகன் போன்ற தோற்றம், இதெல்லாம் பார்த்தால் கல்லூரி பெண் ஷ்ரத்தாவுக்கு காதல் அரும்பாதா? என்று குழம்பினான்.

ரிதுராஜோ, “பயப்படாத ஷ்ரத்தாவையோ சத்ரியனையோ நேரா தாக்குற திட்டம் வேண்டாம்.” என்று திட்டத்தை ஆரம்பித்தான்.

“அப்போ?” என்று வினோத் கேட்க, “அவனையே அவ சந்தேகத்தால சாகடிக்கணும்.” ரிதுராஜின் குரல் மெதுவானது.

“அவனுக்கு ஏற்கனவே உன் மேல சந்தேகம் இருக்கும். ஷ்ரத்தா மேலயும் முழு நம்பிக்கைனு சொல்ல முடியாது.. அதனால்? அந்த சந்தேகத்தை வளர்க்கணும்.” என்றதும் வினோத் திடுக்கிட்டான்.

“ஷ்ரத்தாவை அவனுக்கு எதிரியா காட்டணுமா?” என்றான் வினோத்.

“இல்ல ஆட்டத்தை திசைத்திருப்ப பயன்படுத்திக்கோ. நேரம் பார்த்து ஷ்ரத்தாவுக்கே தெரியாம அவ மூலமா சத்ரியனை சாகடிக்க முயற்சி செய்.” என்றான்.

“என்ன சொல்ல வர்ற?” என்றான்.
“யூ இடியட்… இந்த பெண்கள் கூந்தலில் உதட்டில் விஷத்தன்மை கொண்டதை உபயோகிச்சு கூட எதிரியை கொன்றதா கேள்விப்பட்டதில்லை” என்றான்.

வினோத் அதற்கு “ஒ…. அந்த மாடல் அழகி பாய்ஸன் தடவிய லிப்ஸ்டிக் உபயோகித்து சத்ரியனை கொல்ல ஏற்பாடு செய்தது நீ தானா? அதெல்லாம் சத்ரியன் அப்பவே கவனிச்சிட்டான்.” என்று கூற இம்முறை ரிதுராஜ் தலைகுனிந்தான். அவன் அனுப்பிய மாடல் அழகி இறந்த செய்தி தான் வந்து சேர்ந்ததே.

ரிதுராஜ் தோல்வியை மறைத்து, “முதல்ல ஷ்ரத்தாவை சந்தேகிக்க வை. ஷ்ரத்தாவை காப்பாத்தணுமா? சந்தேகப்படணுமா? காதலிக்கணுமா? தண்டிக்கணுமா? என்ற குழப்பத்தில சத்ரியன் தள்ளாடணும். அப்ப தான் அவன் முதல் முறையா தவறு செய்வான்.”
வினோத் அமைதியாக இருந்தான்.

ரிதுராஜ் கடைசியாக “ஒரு ராஜாவை தோற்கடிக்க, சில நேரம் வாள் தேவையில்லை வினோத். அவன் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் தவறாக மாறினாலே போதும். அதுக்குள்ள நம்ம ஆட்களில் சிலரை உனக்கு கீழேயிருக்கற பாடிகார்ட்ஸா நியமிச்சிக்கோ ” என்று எழுந்தான்.

தற்போது தனது உயிரை பாதுகாக்க சிலரை அழைத்து சென்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

 

2 thoughts on “The leader-37”

  1. Super sis nice epi 👌👍 endha Vinoth en evan kooda poi serndhan edhanala shratha ku dhan yetho nadakka pogudhu nu nenaikuren 🙄😐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!