அத்தியாயம்-43
அடுத்த சில நாட்கள்… சத்ரியன் ஷ்ரத்தாவை வெளியே அனுப்பவே இல்லை. மருந்து, உணவு, ஓய்வு, எல்லாமே நேரத்திற்கு நடந்தது. உடல் மெதுவாக தேறியது. ஆனால் மனம்? அது இன்னும் தேறவில்லை.
சத்ரியனாக ஒரு முறை, “நான் தாலி கட்டி மனைவி என்ற அங்கீகாரத்தை எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது ஷ்ரத்தா. அப்படி தாலினு போட்டு அடையாளப்படுத்திட்டா, என்னை சார்ந்த எதிரிகளுக்கு என் பெர்சனல் லைப்பை வச்சி, என்னை தொட தைரியம் வந்துடும். எனக்கு அது பிடிக்காது. அத்தோட தாலி என்ற அங்கீகாரத்தை வச்சி நான் உன்னை தொடலை.” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு அது உறுத்தியது. இத்தனை பேசியவன் தாலியை கட்டி மனைவியாக நிற்க வைத்து உலகுக்கு அறிவிப்பான் என்று. அதெல்லாம் செய்ய மறுத்தான்.
அதைப்பற்றி கேட்டு சத்ரியனை கஷ்டப்படுத்தவும் ஷ்ரத்தா விரும்பவில்லை.
தன்னை கொல்ல வந்தவர்களுக்கு பயந்து, அக்கம் பக்கத்தில் உதவி கேட்டப் பொழுது யார் உதவினார்கள்? ரோட்டில் செருப்பின்றி ஓடிவந்து மூச்சிரைக்கும் நேரம், ரோட்டில் யாராவது நிறுத்தி என்னானது என்றாரா? எவ்வித பாதுகாப்பும் இல்லை.
இந்த வீட்டில் அடியெடுத்து வைத்த போது பாதுகாப்பு கிடைத்தது. உயிர் காப்பாற்றப்பட்டது.
அப்படியிருக்க உலகத்தில் உள்ளவர்களுக்காக அங்கீகாரம் வேண்டுமென ஷ்ரத்தா நினைக்கவில்லை.
அதே நேரம் சத்ரியனை முழுதாக விரும்பவும், வெறுக்கவும் முடியாமல் துடித்தாள்.
இரவு நேரங்களில் தனியாக அமர்ந்திருந்தால்… ஷ்ரத்தாவின் நினைவில் சில முகங்கள் பெயர்கள் வந்தன.
டிரைவர் பைரவ், பார்ட்னர் மல்கோத்ரா. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவன்,
மருத்துவ வேடமிட்டு வந்த மைக்கேல், காரியதரிசியாக வந்த யாமினி, ஹாஸ்பிடல் அட்மினிஸ்ரேட் ஆதிகேசவ், நிர்மல், பார்டனர் ரிதுராஜ், வினோத் அண்ணா, ஒரு பட்டியல் போல சத்ரியன் உயிரை எடுத்த மனிதர்களின் பெயர்கள்.
ஒவ்வொரு முகமும் நினைவுக்கு வரும் போது அவள் உள்ளம் கனத்தது.
இதில் ஊமைப்பெண்ணான ஹரிணி. எத்தனை முறை மென்மையாக சத்ரியன் மெத்தையில் கையாண்டானோ, அதே அளவு சில நேரம் வன்மையாகவும் கையாண்டதுண்டு. அப்படி நிகழ்ந்தவையை எண்ணி, அதை விட கோரமாக ஹரிணியிடம் நடந்திருந்தால், என்று கலங்குவாள்.
“இவர் நல்லவரா மட்டும் இருக்க கூடாதா?” என்று சில நேரம் தோன்றும். ஆனால்… அடுத்த நொடியே வேறொரு உலகம் அவள் கண்முன் திறக்கும்.
டிரக் டீலிங், மாபியா கணக்குகள், துறைமுக சரக்குகள், ரியல் எஸ்டேட் பிரச்சனைகள், கோடிக்கணக்கில் பணம் கைமாறும் ரகசிய சந்திப்புகள். அதில் ரகரகமான துப்பாக்கி, கத்தி, குண்டு, என்ற அபாயமும், அரசியல், போலீஸ் அதற்கும் மேலான அதிகார வர்க்கத்துடன் பயணம் செய்வதெல்லாம் அவன் வாழும் உலகமே தனி. அங்கே நல்லவனாக இருப்பதற்கு இடமே இல்லையோ என்று தோன்றியது.
ஷ்ரத்தாவின் எண்ணங்கள் முன்னுக்கு பின் முரணாக அதற்குள்ளே சிக்கி நகரமால் இருந்தது. ஆனால் காலம் நகர, உடல்நிலை சரியானதும், கல்லூரிக்கும் பயில அடியெடுத்து வைத்தாள்.
ஜானோ வகுப்பில் வந்து, “ஷ்ரத்தா.. உனக்கு ஒன்னு தெரியுமா? நான் நிரோஷ் ஹாஸ்பிடல்ல இருந்தப்பவே சொல்ல நினைச்சேன். நீ என்னோட பேச விரும்பலை.
நான் முன்ன சொன்னேனே. எங்க ரிலேட்டிவ்ல ஒரு பையன் மெடிக்கல் சீட் கேட்டு, அந்த கடைசி நொடி உனக்கு கிடைச்சதுனு. அந்த நிர்மல் அடிக்கடி இங்க வந்தான்.
உன்னை வன்மத்தோட பார்ப்பான். பட்… ஆதிகேசவ் சார் பணம் வாங்கி, சீட் தராத இஸ்ஸுல அவனுக்கும் அவருக்கும் பிரச்சனை வந்து இரண்டு பேரும் இறந்துட்டாங்க. உன்னிடம் நிர்மல் உன்னை கோபமா பார்க்கறானு சொல்ல நினைச்சேன்.” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு இறந்து புதைந்த செய்தியை கொண்டு வந்திருந்த ஜானை கண்டு “நியூஸ்ல பார்த்தேன்.” என்றாள்.
ஜானோ தயங்கியபடி, நான் லாஸ்ட் இயர் என்பதால இப்பவே இனி இங்க வர்றது ரேர். எனிவே டாக்டர் படிப்பை நல்லபடியா முடி” என்று வாழ்த்திவிட்டு சென்றான்.
எக்ஸாமும் வர பரீட்சைக்கு தயாராகி எழுதி முடித்தாள்.
காலம் வேகமாக தான் முன்னேறியது. கல்லூரியின் முதலாண்டு முடிந்தது. தேர்வுகளும் முடிந்தன. நீண்ட விடுமுறை ஆரம்பித்தது.
ஒரு மாலை வேளை ஷ்ரத்தா பால்கனியில் நின்றிருந்தாள்.
பின்னால் வந்து நின்ற சத்ரியன் கேட்டான். ”காலேஜ் லீவு விட்டாச்சு போல… எத்தனை நாள்?” என்றான்.
“கிட்டத்தட்ட இரண்டு மாதம்.” என்றாள். “ம்ம்ம்…” அவன் ஏதோ யோசித்தான். ஷ்ரத்தா இருந்த நிலையில் எதையும் ஆர்வமாக கேட்கவில்லை.
மறுநாள் காலை ஷ்ரத்தா கண் விழித்தபோது..
அவள் முன் கடல் மட்டுமே இருந்தது. நீல நிற கடல் எல்லையில்லாமல் பரந்து விரிந்திருந்தது. அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தாள். அப்போது தான் புரிந்தது.
அவள் ஒரு பிரம்மாண்டமான சொகுசு கப்பலில் இருந்தாள்.
அது சாதாரண கப்பல் இல்லை.
கடலில் மிதக்கும் ஐந்து நட்சத்திர நகரம் போல இருந்தது.
பத்து மாடிகளுக்கு மேல் உயரம்.
கண்ணாடியால் மூடப்பட்ட பிரம்மாண்ட நடைபாதைகள், தங்க நிற விளக்குகள், விலையுயர்ந்த மர வேலைப்பாடுகள், பளிங்கு தரைகள் என்றியிருந்தது.
“குட் மார்னிங்” என்றான்.
ஷ்ரத்தாவோ “இங்க எப்படி வந்தேன்?” என்றாள்.
“பூ மாதிரி அள்ளிட்டு வந்துட்டேன்.” என்றான்.
தன்னை சத்ரியன் தொட்டு தூக்கியது கூட தெரியாமல் வந்ததை நினைத்து வெட்கம் கொண்டாள்.
“லீவை என்ஜாய் பண்ண வேண்டாமா? நீ பாரு நடந்ததை நினைச்சி உம்முனு இருந்த. எனக்கு பிடிக்கலை. சோ.. இந்த ட்ரிப் ஏற்பாடு பண்ணிட்டேன்.” என்றான்.
ஷ்ரத்தா சுற்றி சுற்றி பார்வையிட்டாள். அங்கும் இங்கும் ஓடி கப்பலின் சில அமைப்பை பார்க்க விரும்பினாள்.
“ஏ… கப்பல்ல என்னமாதிரி இருக்குனு பார்க்கறியா?” என்று கேட்க, ஆமென்றதும் ஒரு அறையில் அவளை அழைத்து சென்று சுட்டி காட்டினான். அங்கே கப்பலின் அமைப்பை வடிவமைத்து பார்வைக்கு ஒரு பெரிய டெபிளில் அமைத்திருந்தனர்.
“வாவ்.. இந்த கப்பலிலா இருக்கோம்” என்றாள்.
“ஆமா… இது மினி வெர்ஷன். இதுல நீ பார்ப்பது எல்லாம் இந்த கப்பலில் இருக்கும்” என்றான்.
கப்பலின் மினி வெர்ஷன் பார்வைக்கு இருக்க அதை கவனித்தாள். நடுவே… நீல நிற நீச்சல் குளம். அதை சுற்றி சாய்வு இருக்கைகள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருப்பது போல மனித பொம்மைகள்.
மெல்லிய இசை வேறு அறையில் கேட்டது. கடற்காற்று சில்லென்று முகத்தில் தீண்டியது.
மினிவெர்ஷனில் அடுத்த தளத்தில்… பெரிய விளையாட்டு பகுதி. பூப்பந்து மைதானம், டேபிள் டென்னிஸ், விர்ச்சுவல் கேமிங் அரங்கம், மினி தியேட்டர், உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உலகம் எல்லாம் இருப்பதை கவனித்தாள்.
“நிஜமா இந்த இடமெல்லாம் கப்பலில் இருக்கா?” என்று கேட்க இமை மூடி ஆமென்றான்.
இன்னொரு தளத்தில்… உலகத் தர உணவகங்கள். கண்ணாடி சுவர்களின் வழியே கடலை பார்த்தபடி சாப்பிடும் வசதி ஷ்ரத்தா வியப்பில் சுற்றிப் பார்த்தாள்.
“சத்ரியா… இங்கயெல்லாம் போகலாமா?” என்றாள். “அதுக்கும் தானே வந்திருக்கோம்?” சத்ரியன் சிரித்தான். “அதுக்கும் தான்னா? வேற எதுக்கு வந்தோம் சத்ரியா…. ஏதாவது பிசினஸ் டீலும் இருக்கா?” என்றாள்.
“நோநோ இது பெர்சனல் பயணம் மட்டும் தான். அதுக்கும்னு சொன்னது ஹனிமூன்.” என்றதும் ஷ்ரத்தா கண்களை பெரிதாக்கினாள்.
“இப்பவா?” என்று கேட்க,
“சரி… அப்போ எப்ப? நீயே சொல்லு” என்று தோளை குலுக்கினான்.
ஷ்ரத்தாவை அவன் இம்முறை வற்புறுத்தப் போவதில்லை என்றது அவன் பேச்சில் தெரிந்தது.
ஷ்ர்ததா குழந்தை போல “சத்ரியன் இந்த ஷிப்… உன்னோடதா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
சத்ரியன் சிரித்தான். “என்னோடது இல்லை.” சிறு இடைவெளி. “நம்மளோடது.” ஷ்ரத்தா வாயை திறந்து பார்த்தாள்.
நம்மளோடது என்றால் அவனுடையது தானே என்று வியந்தாள்.
உண்மையில்… இது அவனது தனிப்பட்ட சொகுசு கப்பல். வெளிநாட்டு தொழில் சந்திப்புகள். ரகசிய பேச்சுவார்த்தைகள். சில நேரங்களில் உலகத்திலிருந்து விலகி இருக்க. அதற்காக வாங்கப்பட்ட ஒன்று. இது பெரும்பாலும் கடலிலேயே சுற்றி வந்து வட்டமிட்டு இருக்கும்.
இதில் உலக அழகியோ மற்ற பெண்களை கூட அழைத்து வந்ததில்லை.
பொதுவாக… சத்ரியன் மட்டும்.
அல்லது அதிகபட்சம் பாடிகார்ட்ஸுடன் இங்கே தனிமை தேடி வருவான். அவ்வளவுதான். ஆனால் இப்போது முதன்முறையாக அவன் ஷ்ரத்தாவை அழைத்து வந்திருந்தான். கடற்காற்று அவளது முடியை கலைத்தது.
ஷ்ரத்தா சந்தோஷமாக சிரித்தாள்.
பல மாதங்களுக்கு பிறகு… மனதார சிரித்தாள். சத்ரியன் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மானசீகமாக, ‘லாயர் சார்… என்னை காப்பாற்றி பெரிய பொறுப்பை தந்துட்டிங்க. உங்க பொண்ணுக்கு மெடிக்கல் சீட் தானேனு அசால்டா இருந்துட்டேன். ஆனா நீங்க இறந்தப்பிறகு பதிலுக்கு உங்க பொண்ணை பார்த்துக்க ஆரம்பிச்ச நான்… அவளை முழுதாக எடுத்துக்கிட்டேன். சாரி… நீங்க இருந்தா.. இப்படியொருவனான என்னை ஜோடியா இமேஜின் பண்ணிருக்க மாட்டிங்க.
உங்க பொண்ணு இப்படியொரு வாழ்க்கையை வாழவும் விரும்பியிருக்க மாட்டிங்க. எஸ்.. கடைசிவரை தாலி என்றதை பகிரங்கமா அணிவித்து இந்த உலகத்துக்கு என்னால சொல்ல முடியாது.’ என்று எண்ணினான்.
திவாகர் இருந்தால் நிச்சயம் மகள் இப்படி ஊரார் பார்வைக்கு சத்ரியனின் ஆசை நாயகியாக நிறுத்தியிருக்க மாட்டார். கிளியை வளரத்து குரங்கிடம் ஒப்படைக்க மறுத்திருப்பார். இல்லை சத்ரியன் பார்வைக்குள் மகள் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் சத்ரியனுக்கு சாகும் பொழுது திவாகர் தன்னை அழைத்தது ஏனோ மனதை நிறைத்தது. ஏதோவொரு புள்ளியில் ஷ்ரத்தாவை இணைக்க அது தான் ஆரம்பமான விஷயமும் கூட.
திவாகரை நினைத்தது போதுமென, ஒரு வைர மோதிரத்தை எடுத்தான். அது சூரியன் போல தான் இருந்தது.
மெதுவாக ஷ்ரத்தா கையைப் பிடித்து, அதை அணிவித்தான். வேடிக்கை பார்த்தவளுக்கு திடீரென தன் கையை இழுத்து எதையோ மாட்ட, கவனிக்காமல் திரும்பினாள்.
மோதிரம் என்றதும், அவனை கண்டு திகைக்க, விரலில் அணிவித்த பிறகு அதற்கு முத்தத்தை வழங்கிவிட்டு, இதழ்முத்தத்தையும் விதைத்தான்.
இது அவளிடம் அவனுக்கான இடத்தை பறைச்சாற்றியது போல இருந்தது.
அவள் சத்ரியன் நெஞ்சில் புதைத்து கொண்டாள். மற்ற நினைவுகளை மறந்திருந்தாள். ஹரிணியை, வினோத்தை, அபார்ஷன் ஆன நிகழ்வை, கல்லூரியை, எல்லாவற்றையும் மறந்திருக்க முயன்றாள்.
அந்த நொடி… அவள் வெறும் இருபது வயது பெண். கடலின் நடுவே. தனக்கு பிடித்த மனிதனுடன். அவன் அணிவித்த மோதிரத்துடன், ஏதோ மணநாள் கொண்டாட்டத்துடன் சந்தோஷமாக நின்றிருந்தாள்.
அவளுக்கு தெரியவில்லை… கடல் எவ்வளவு அமைதியாக இருந்தாலும்… சத்ரியன் வாழ்க்கையில் அமைதி நீண்ட நாட்கள் தங்குவதில்லை என்பதை.
அது சத்ரியன் அறிவான். ஆனால் இந்த பந்தத்தை அவனால் உதறி எறியவும் முடியாத வகையில் சிக்கிக் கொண்டான்.
– தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

Wow suwpr charities married sharadha. Excellent. Ship is very super sis. Intresting sis.
Very interesting
Avlo periya aala irunthalum chathriyaunnala shradhava vida mudila ipo ivala vachi unaku ethana aga potho
Super sis nice epi 👍👌 shratha voda happiness thirumba kedachadhu romba happy pa🥰