Skip to content

The leader-50

18 / 100 SEO Score

அத்தியாயம்-50

 

செய்தி சேனல்கள் அனைத்தும் ஒரே செய்தியை மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

 

“தென்னிந்தியாவின் முக்கிய தொழிலதிபர் சத்ரியன் சுட்டுக் கொலை!தலைப்பு தந்துவிட்டு, கீழே வாசிக்கும் நேரம் இவரை பலர் கிங்பின் என்று கூறுவதும் உண்டு. ஆனால் அதற்கான நிரூபணம் இல்லாததால் தொழிலதிபர் என்ற போர்வையில் இருந்தார்.

 

“ஆசை நாயகியின் கையால் சாம்ராஜ்யம் சரிந்த

சத்ரியன் வாழ்க்கை!”

 

“தொழிலதிபர் சத்ரியன் இறப்பால் பலரும் வருத்தம் கொண்டனர்.”

 

ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சேனலும்…

ஒவ்வொரு பத்திரிக்கையும்… சத்ரியனின் மரணத்தை விதவிதமாக பேசிக் கொண்டிருந்தது.

 

அதே செய்தியை ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி, கடலுக்கு அப்பால் இருந்த சில முகங்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஒருவன் சிகாரை பற்றவைத்து. “சே… இந்த சத்ரியன் இறந்துட்டான்” என்று நாற்காலியில் சாய்ந்தான்.

 

“அந்த பொண்ணு அவனை முன்னாடியே போட்டுத் தள்ளியிருக்கலாம். இப்ப சாகடிச்சுட்டா… ஏன் நம்ம வட்டத்துல வந்தான்னு ஒன்னும் புரியலை.” என்றான்.

 

அவன் அருகில் இருந்த மற்றொருவன் பற்களை கடித்தான். “சத்ரியன் ஏன் வந்தான் ஏன் இப்ப செத்துட்டான். அதை விட அந்த நூற்றி இருபத்தி ஆறு குழந்தைகளும் எங்க போனாங்கன்னு இன்னும் தெரியலை.” அவர்களின் முகத்தில் கோபம் இருந்தது.

 

ஏனெனில்… அவர்கள் இழந்தது ஒரு வியாபாரம் அல்ல. பல வருடங்களாக கட்டியெழுப்பிய ஒரு இருண்ட நெட்வொர்க்கின் பகுதியை அல்லவா?!

 

“அந்த பொண்ணுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்க, “அப்படி தெரியலை அவ அப்பா இறப்புக்கும் சத்ரியன் காரணம் என்றதாலும், இப்ப அவ அப்பா ஆசைப்பட்ட டாக்டர் படிப்பு படிக்க முடியலை என்றதாலும் ரொம்ப உடைந்து போயிருக்கா. இதுல குழந்தை வேற… டாக்டர் படிக்கற பொண்ணு என்பதால உயிரை கொல்ல முடியாம அதையும் சுமக்கற கட்டாயத்துல இருக்கா. அவங்க அப்பா கனவை சிதைச்சிட்டதா அவ பிரெண்ட்ஸ் இரண்டு பேர்.. யாரோ மீடியா முன்ன வருத்தப்பட்டு பேசினாங்க. அதுலயும் கனிமொழினு ஒருத்தி, கொஞ்ச நாளாவே ஷ்ரத்தா சத்ரியன் கூட அதிகமா பேசலை. சண்டைனு தெரிந்தது. ஆனா சத்ரியனை கொல்லும் அளவுக்கு போவானு எதிர்பார்க்கலை. ஆரம்பத்துல சத்ரியனை கொல்ல அவ நினைச்சா… அதையே இப்ப நடத்திக் காட்டிட்டா.’ என்று சொன்னா” என்றான்.

 

“ஆசை நாயகியா வச்சிருக்கலாம். ஆனா நம்ம தொழிலை சரிய வச்சிட்டு செத்துட்டான். அதுக்கான காரணம் தெரியலை. நம்ம கூட்டத்துல எத்தனை பேர் இறந்திருக்காங்க தெரியுமா‌ கூண்டோட முடிச்சிட்டு போயிருக்கானா இல்லை அந்த கூண்டில அந்த குழந்தைகளும் இறந்துட்டாங்களா ஒன்னும் புரியலை.” என்றான்.

 

“அவன் குழந்தைகளை காப்பாத்தி கொண்டா போற அளவுக்கு நல்லவனும் இல்லை. கொலை பாவம் செய்யறவன்.” என்று குழம்பினார்கள்.

 

“எதுக்கும் சிலரை அங்க கொஞ்ச நாளைக்கு நிழல் போல தொடர விடு. இத்தனை குழந்தைகளை இங்கயிருந்து அழைச்சிட்டு போய் அவன் எங்க வச்சான் என்ற டீட்டெயில் எதுலயும் இல்லை. போலீஸுக்கு இதை பத்தி தெரியாவிட்டாலும், மத்த யாருக்கும் தெரியலை. நாம இதை தெரிந்து விட்ட அடிமைகளை மீட்க முடியாமானு பார்க்கணும்” என்று பேசிவிட்டு கூட்டத்தை கலைத்தனர். அத்துடன் 126 குழந்தைகளை தேடும் வேட்டையிலும் ஆரம்பித்தனர். பரிதாபமான நிலை.. சத்ரியன் அவர்களை நெருங்க விடாமல் காத்துவிட்டே சென்றதை அறியாதவர்களாக இருந்தனர்.

 

 

மத்திய சிறைச்சாலை. இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் அமைதியாக அமர்ந்திருந்தாள் ஷ்ரத்தா.

 

அவள் கையில் அன்றைய செய்தித்தாள். முதல் பக்கத்திலேயே சத்ரியனின் புகைப்படம் இருந்தாலும் முழுதாக முகத்தை பதிவிடாமல் முன்பு கோர்டிற்கு வந்த அன்று எடுத்த புகைப்படம் இருந்தது. அதில் பாதி மாஸ்க் இருந்தது. இரண்டாம் பக்கம் அவனது விதவிதமான ஸ்டில். அதெல்லாம் கூட, அரை முகம் மீதி மறுபக்கம் காணாத வகையில் நேர்த்தியாக புகைப்படம் எடுப்பவனிடம் தவிர்த்திருப்பதை கவனித்தாள்.

சத்ரியனின் புகைப்படம்.

 

மூன்றாம் பக்கம். அவளது புகைப்படம். ”காதலனைக் கொன்ற காதலி.” “அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க எடுத்த முடிவு.”

“கர்ப்பிணி பெண்ணின் அதிரடி செயல்.” ஒவ்வொரு பத்திரிக்கையின் எடிட்டரும் ஒவ்வொரு கதையை எழுதியிருந்தனர்.

 

ஆனால்… உண்மை என்னவென்று தெரிந்தது அவளுக்கும்… சத்ரியனுக்கும் மட்டும்.

 

கண்ணீர் மெதுவாக செய்தித்தாளின் மீது சொட்டியது. அடிவயிற்றை வருடினாள்.

 

“உன் அப்பா… இன்னிக்கு டாக் ஆப் தி டவுன்” என்று தொடங்கி நிறுத்தினாள். அவளால் வேறென்ன குழந்தைக்கு கதைக்கூற முடியும். அவள் மனதில் ஆயிரமாயிரம் வலியும் வேதனையும் அடக்கிக் கொண்டுயிருக்கின்றாள்.

 

அன்றைய இரவு, சத்ரியன் அவள் கையில் இருந்த துப்பாக்கியை தன் மார்பில் அழுத்திய காட்சி மீண்டும் நினைவிற்கு வந்தது.

 

“நீ சுடலன்னா… நாளைக்கு நீயும்… நம்ம குழந்தையும்… நிச்சயமா உயிரோட இருக்க முடியாது.” என்ற குரல் காதுகளில் ஒலித்தது.

 

ஷ்ரத்தா இமை மூட கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. அதை தவிர சிறைக்குள் அவளால் எந்த துரும்பையும் அசைக்க முடியாது.

 

நான்கு நாட்கள் கழித்து மனிஷாவும் கனிமொழியும் பார்க்க வந்தனர்.

 

ஷ்ரத்தாவை பார்த்ததும் இருவரின் கண்களும் கலங்கியது.

 

“ஏன்டி இப்படி பண்ணிட்ட?” என்று கனிமொழி அழுதாள்.

 

“உனக்கு அவரை முதல்ல இருந்தே பிடிக்காம போயிடுச்சு. அப்பவே கொல்லணும்னு நினைச்ச. ஆனா… நீ டாக்டரா ஆகணும்னு கனவு கண்டவ. இப்படி ஜெயில்ல உட்கார்ந்திருக்கணுமா?” என்று மனிஷா கையை பிடித்தாள்.

 

ஷ்ரத்தாவோ தலையை குனிந்தாள். அவளிடம் பதில் இல்லை. கண்ணீர் மட்டும் இருந்தது. “நீங்களாம் நல்லா படிங்க. எப்பவாது நேரம் கிடைக்கறப்ப பார்ப்போம். சத்ரியனை பத்தி இனி என்னிடம் பேச என்னயிருக்கு” என்று அழுது கூறி வழியனுப்பி வைத்தாள்.

 

அவர்கள் சென்றதும் வினோத்தும் ஹரிணியும் கூட வந்தனர். வினோத் ஷ்ரத்தாவை பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டான்.

 

“மனிஷா கனிமொழி வந்துட்டு போறாங்க போல” என்று கேட்டான்.

“லீவுல சேர்ந்து வர நினைச்சிருக்கலாம் அண்ணா. எனக்குன்னு இருந்தது அவங்க தானே.” என்றாள்.

ஹரிணியோ உடல்நிலையை பற்றி விசாரிக்க, அவளுக்கு புரியும் விதமாகவே ஷ்ரத்தாவும் நலம் உரைத்தாள்.

 

“சாப்பாடு ஒத்துக்குதா மா? மருந்தெல்லாம் சாப்பிடறியா?” என்று கேட்டான் வினோத்.

 

ஷ்ரத்தாவோ “அதெல்லாம் யோசிக்கற நிலைமையில் இல்லைன்னா. எங்க திரும்பினாலும் சத்ரியன் நினைவா வருது. நான் அவசரப்பட்டுட்டேன் அண்ணா…” என்று உடைந்து அழுதாள்.

 

“நான் இதுக்கு சம்மதிச்சிருக்க கூடாது.” என்று தேம்பினாள்.

 

வினோத் மெதுவாக மறுப்பாய் தலையசைத்தான்.

 

“இல்லம்மா. சத்ரியன் பாஸ் உங்களுக்கு ஓய்வும் அமைதியும் தேவைன்னு தான் இந்த முடிவு எடுத்திருப்பார். அவரில்லை என்றாலும் உங்களுக்கு பாதுகாப்பு வேணும். குழந்தை பாதுகாப்பா பிறக்கணும். இந்த ஜெயிலர் சலீம் நமக்கு வேண்டப்பட்டவன் தான். பயப்படாதிங்க.. நீங்க திரும்பி வந்து டாக்டர் படிக்கணும். அதுக்கான ஏற்பாடும் பண்ணிட்டுதான் போயிருக்கார். நாளைக்கு விசாரணை இருக்குல்லம்மா?” அந்த வார்த்தையில் ஷ்ரத்தா மீண்டும் அழுதாள்.

 

சத்ரியன் எல்லா நேரத்திலும் தன்னை பாதுகாத்திடும் திட்டத்துடன் கையாண்டு இருப்பதை அறிந்து, துடித்தாள்.

 

ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் நெஞ்சித் அவன் கை வளைவில் இருக்கும் தைரியம் மன அமைதி கிடைக்காதே! ஷ்ரத்தாவுக்கு அது தான் தோன்றும்.

 

ஹரிணியோ விசாரணையில் சொல்ல வந்ததை சொல்லிவிட பாடம் புகட்டினாள்.

 

ஷ்ரத்தாவும் அவ்வாறே சொல்கின்றேன் என்று வயிற்றை தொட்டாள்.

 

ஹரிணி வினோத் கோர்ட்டில் எப்படி நடத்துக் கொள்ள வேண்டுமென சொல்லிவிட்டு அகலவும் அங்கே ருத்ரன் போலீஸ் அதிகாரியாக நின்றுயிருந்தான்.

 

“நாளைக்கு கோர்ட்ல விசாரணை இருக்கு போலீஸ் நான் ஏதாவது கேட்டா வாயை திறக்கறது இல்லை. ஆனா உன்னை தேடி வர்றவங்களிடம் நல்லா தான் வாயாடற” என்றான் இடக்காக.

 

ருத்ரன் இவளை கைது செய்து இங்கே கொண்டு வந்ததிலிருந்து, இப்படி தான் ஏதோ புதிர் போல ஏடாகூடமாக பார்வையால் நோட்டமிட்டு பேசுகின்றான்.

 

அவன் ஏதோ பூடகமாக கேட்க வருவதால் ஷ்ரத்தா அமைதியாக நின்றுவிட்டாள்‌.

 

இன்றும் அதே அமைதி. இவன் ஏன் தன்னை நோண்டி நோண்டி பேச முயல்கின்றானென அறியாது அவனை மீறி நடக்க முற்பட்டாள்.

 

‘விசாரணை முடிந்து இங்கதானே நடமாடணும். அப்ப வச்சிக்கறேன்.’ என்று மனதிலேயே உருமினான்.

 

ஷ்ரத்தாவின் வழக்கு விசாரணையும் அதற்கடுத்த நாளில் தொடங்கியது.

 

சத்ரியனையே கொன்றதால் ஷ்ரத்தாவை காணவே மக்கள் கூட்டம் அந்த நீதிமன்றத்தில் நிரம்பியிருந்தது.

 

அதிலும் மீடியா ஆட்கள், போலீஸ் அதிகாரிகள், செய்தியாளர், பொதுமக்கள் என்று அனைவரின் பார்வையும் ஷ்ரத்தாவின் மீது பதிந்தது..

 

அவளை கைது செய்து அழைத்து வந்த இளம் போலீஸ் அதிகாரி ருத்ரனும் அங்கே நின்றிருந்தான்.

 

அவன்… இன்ஸ்பெக்டர் ராகவனின் மகன். தந்தையை இழந்த குடும்பத்தின் வாரிசு. ஆனால்… அவள் மீது தனிப்பட்ட கோபம் கூடவே கடமையை மட்டும் செய்தான்.

 

மறுபுறம்… தந்தை திவாகரின் ஜூனியர் யதுநந்தன் வழக்கறிஞராக எழுந்து நின்றார்.

 

“மை லார்டு…” என்று தொடங்கியவர், ஷ்ரத்தாவின் சூழ்நிலையை விளக்கினார். மன அழுத்தம், உயிர் அச்சுறுத்தல், கர்ப்ப நிலை. தற்காப்பு சூழ்நிலை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துரைத்தார்.

 

இறுதியாக… “என் கட்சிக்காரர் ஷ்ரத்தா தற்காப்புக்காக மட்டுமே சத்ரியனை கொன்றதாக கோர்ட்டிற்கு தெரிவித்து கொண்டு, குறைந்தபட்ச தண்டனையை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறிட, ஷ்ரத்தா சாட்சிக்கூண்டில் நின்றாள்.

 

நீதிமன்றம் முழுவதும் அமைதியானது. எதிர்தரப்பில் கேட்ட கேள்விக்கு “சத்ரியன் மூலம் நான் கர்ப்பமானேன். அவரோட வாழ்க்கை முறைக்கு, குழந்தையை கலைக்க சொன்னார். ஆனா…  நான் ஒரு டாக்டர் படிக்கற சாதாரண பெண். என்ன நடந்தாலும்… ஒரு உயிரை நான் அழிக்க விரும்பலைனு சொல்லிட்டேன். அதைமீறி என்னை அபார்ஷன் செய்யவும் முடிவெடுத்தார்.” என்றதும் கண்ணீர் வழிந்தது.

 

“என் உயிரைக் காப்பாத்திக்க… நான் சத்ரியனை சு..சு..சுட்டேன்.” என்றவள் தலையை குனிந்தாள்.

 

முழு நீதிமன்றமும் அமைதியாக இருந்தது. ஷ்ரத்தாவின் அழுகை மட்டுமே அவ்விடம் நிறைந்தது.

 

சில நிமிடங்கள் கழித்து… நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

 

சட்டத்தின் பார்வையில் குற்றம் இருந்தது. ஆனால்… சூழ்நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டது.

 

தண்டனை அறிவிக்கப்படும் நேரம் வரவும், ஷ்ரத்தா கண்களை மூடிக் கொண்டாள்.

“மரணமடைந்த சத்ரியன், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் நிருபிக்கப்படவில்லை. ஆனால் அவர் தனது காதலியை கர்ப்பமாக்கி குழந்தையை கலைத்திட கூறியதால், காதலி கைகளாலே சுடப்பட்டு இறந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் உரைத்திருக்கின்றாள். சுட்டதற்கான செயலை முழுமையாக நியாயப்படுத்தவும் முடியாது.”

ஷ்ரத்தாவின் விழிகள் மெதுவாக மூடியது.

 

நீதிபதியோ “குற்றம் சாட்டப்பட்ட ஷ்ரத்தா, பயத்திலும் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த சூழ்நிலையில் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இந்நீதிமன்றத்திற்கு உள்ளது. இருப்பினும், ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டிருப்பதால் முழுமையான விடுதலையை வழங்க இயலாது.”

 

சில நொடிகள் அமைதி நிலவியது. நீதிபதி தொடர்ந்தார்

 

“எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷ்ரத்தாவிற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.”

 

அந்த வார்த்தை நீதிமன்றம் முழுவதும் எதிரொலித்தது.

 

ஷ்ரத்தா மெதுவாக கண்களை மூடினாள்.

 

மூன்று ஆண்டுகள்… அவளது வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் தொடங்கப் போகிறதோ முடிய போகின்றதோ?!

 

“மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாலும், முன்பு எந்த குற்றப் பதிவும் இல்லாதவராக இருப்பதாலும், சிறை விதிகளின்படி கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட சலுகைகளையும் பெற உரிமையுடையவர்.” என்று நீதிபதி இறுதியாக கூறினார்.

 

“வழக்கு முடிக்கப்பட்டது.”

சுத்தியல் மேசையில் விழுந்த சத்தம் கேட்டது.

 

ஷ்ரத்தா வயிற்றில் கை வைத்து மெதுவாக நடந்தாள்.

 

“சாமர்த்தியமா கொலைகள் செய்துட்டு தப்பிச்சிடற யுக்தியை உன் காதலனிடம் கத்துக்கிட்ட போலயே?” என்று ருத்ரன் பேசி செல்ல, அவன் தன்னை பார்த்ததிலிருந்து வினோதமாக பேசுவதை கண்டாள்.

 

வினோத் வந்ததும் அதை தெரிவித்தாள்.

 

“அண்ணா… அந்த போலீஸ்காரன் ஏதோ உள்குத்து வச்சி பேசற மாதிரி இருக்கு.” என்று சத்ரியன் காதலி என்று கூறியதை தெரிவித்தாள்.

வினோத் எட்டி பார்த்து ருத்ரனை கண்டு “அவனா… பெயர் ருத்ரன்… முன்ன சத்ரியனை பிடிச்சி கோர்டில் நிறுத்திய ராகவனோட பையன். ராகவன் அப்பவே இறந்துட்டார். சத்ரியன் பாஸ் தான்…. ‘கொல்ல சொல்லியிருந்தார்.’ என்றதை நாசூக்காக தவிர்த்திருந்தான். ஆனாலும் ஷ்ரத்தாவுக்கு புரிந்துவிட்டது.

”அந்த கடுப்பு… உன்னை பார்த்ததும் பேசறான் போல” என்று அவனை ஒரு கண் நோட்டமிட்டான்.

 

ஹரிணி வினோத்தின் தோளை தட்டி, இவளுக்காக பேசிய வழக்கறிஞரை சுட்டி காட்டினாள்.

 

“ஆங்.. ஷ்ரத்தா… இது யதுநந்தன் உங்கப்பாவோட ஜீனியர். உனக்காக வாதாட நியமிக்க யோசித்தப்ப, இவரே வந்து ஆஜராகறதா சொல்லிட்டார்.” என்று அறிமுகப்படுத்தினான்.

 

“தேங்க்ஸ் சார்” என்றாள்.

 

“நான் திவாகர் சாரோட ஜீனியர். எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கார். அவரோட பொண்ணுக்கு வாதாடறது. எனக்கு கிடைச்ச வாய்ப்பா நினைச்சேன்.” என்றவன் ஷ்ரத்தாவின் விழிகளில், “லாயர் திவாகர் சார் என்னை பத்தி ஏதாவது முன்ன சொன்னாரா? பேசியிருக்காரா” என்று கேட்டான்.

 

ஷ்ரத்தா இல்லை என்று மறுத்தாள். “இட்ஸ் ஓகே.. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா இமிடியட்டா என்னை கூப்பிடலாம்‌ ஷ்ரத்தா.” என்றான்.

 

ஷ்ரத்தா நன்றி நல்கி முடித்தாள்.

 

அன்று இரவு சிறைச்சாலைக்கு வந்தடைந்தாள். இனி இது தான் அவளது வாசம் செய்யும் வீடு.

 

“கையில இருக்கற மோதிரத்தை கழட்டுங்க.” என்று பெண் காவலர் கூறியதும், ஷ்ரத்தா ஒரு நொடி திடுக்கிட்டாள்.

 

அவளது பார்வை விரலில் இருந்த வைர மோதிரத்தின் மீது விழுந்தது. சத்ரியன் அணிவித்த மோதிரம். அவன் வாங்கித் தந்த முதல் பரிசு.

அவன் தன் காதலை வார்த்தையால் சொல்லும் முன்னரே, உரிமையோடு அவள் விரலில் அணிவித்த தாலிக்கு நிகரான அடையாளம்.

 

“இதையும் கழட்டணுமா?” என்று மெதுவாக உடைந்துவிடும் குரலில் கேட்டாள்.

 

“ரூல்ஸ் மேடம்.” என்றார் பெண்காவலர். ஷ்ரத்தாவின் விரல்கள் நடுங்கின.

எத்தனையோ முறை அந்த மோதிரத்தை கழற்ற நினைத்திருக்கிறாள்.

 

ஐரினை கண்டறிய மறுத்ததும், கோபத்தில்… சண்டையில்… அவன் மீது வெறுப்பு வந்த நாட்களில்… ஆனால் அப்போதெல்லாம் முடியவில்லை.

 

இன்று… அவன் இல்லாத நாளில்… அவனுடைய நினைவாக மீதமிருந்த ஒன்றையும் கழற்றச் சொல்கிறார்கள்.

 

மெதுவாக மோதிரத்தை இழுத்தாள். அது விரலை விட்டு நகரும் ஒவ்வொரு நொடியும், சத்ரியன் தன்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது போல இருந்தது.

 

மோதிரம் கைக்கு வந்ததும், அதை உள்ளங்கையில் மூடிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நிரம்பியது.

 

மனசாட்சியோ ‘என்ன ஷ்ரத்தா… தந்தை இழந்த பொழுது சத்ரியனை அப்படி திட்டினாய். இன்று அவன் அணிவித்த மோதிரத்தை கூட உன்னால விட முடியலையே’ என்று கேலி செய்ய சிரிக்க முயன்றாள்.

ஆனால் அழுகை தான் வந்தது.

 

அவன் அணிந்திருந்த சாப்ட் சில்க் பட்டு சேரியும் கழட்டிட கூறினார்கள். இதுவுமே கப்பலில் சத்ரியனிடம் கேட்ட சேலை. குழந்தை வயிற்றில் உள்ளதை அவனிடம் தெரிவிக்க நினைத்து, கட்டியது. அதைகூட அழகாக சொல்லாமலையே புரிந்துக்கொண்டவன்.

 

இறப்பதற்கு முடிவெடுத்தப்பின்‌ பட்டு சேலையில் தன்னை அழகு பார்த்தவனும் இந்த சத்ரியனாக தான் இருக்க முடியும். அதெல்லாம் நினைத்து பார்த்து, சில்க் சேரியை அழுதவாறு கழட்டி கைதிக்கான சீருடையை அணிந்தாள் ஷ்ரத்தா.

 

இருண்ட அறையில் தனியாக தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள் ஷ்ரத்தா.

 

வெளியே பெருமழை பெய்தது.

 

சத்ரியன் இறந்துவிட்டார். உலகம் அதைத்தான் நம்பியது.

ஷ்ரத்தாவும்… அதை நம்ப…. முயன்றாள்.

 

~முதல் பாகம் முடிவடைந்தது.~

-பிரவீணா தங்கராஜ்.

 

(தொடரும்… பாகம் இரண்டு *தகிக்கும் நிலவொன்று*)

 

ருத்ரன்-ஷ்ரத்தா-யதுநந்தன் மூவரோடு நம்ம லீடர்… குட்டி லீடர்.

புதுதளத்தில் இனிதாக தொடரும். படிக்கறவங்க யாரும் ரெஜிஸ்டர் பண்ண மாட்டேங்கறிங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. இலவசமாக தளத்தில் வாசிக்க வர்றவங்க அட்லீஸ்ட் ரெஜிஸ்டர் செய்து உங்க ஆதரவை தரலாமே…

 

புதுக்கதை மதுர ஜில்லா மச்சானே முடிவுற்றதும் தகிக்கும் நிலவொ

ன்று கதை பதிவிடப்படும்.

 

அப்பறம் மொஹபத் முதல் நிகாகாஹ் வரை கதையும் வாரத்திற்கு மூன்று நாள் பதிவாகும். வெள்ளி சனி ஞாயிறு மட்டும் வெளிவரும்‌ என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

கீப் சப்போர்டிங் காயிஸ்.

 

 

 

5 thoughts on “The leader-50”

  1. அச்சோ சத்ரியன் திருப்பி கொண்டுவாங்க…. ஓருவேல யதுநந்தன் தான் சத்ரியன்னா இருப்பானோ

  2. Superb👌👌👌👌👌👌👌👌
    Nice story👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    Sathriyan ❤️ Shrattha

    Waiting for part 2

  3. Superb👌👌👌👌👌👌👌👌
    Nice story👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    Sathriyan ❤️ Shrattha

    Waiting for part 2

  4. Omg chatriyian died. Not able to.digest. but that is the truth. Sharadha how will survive now? Fantastic narration sis. Eagerly waiting for next part sis. Super super excellent kingpin story sis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!