Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-15

அந்த வானம் எந்தன் வசம்-15

“அம்மா, உட்கார்ந்து ஒரே தடவையாக எல்லா விவரத்தையும் சொல்லு.”

Thank you for reading this post, don't forget to subscribe!

“இன்னும் என்ன விவரம்?”

“ஒன்னொன்னா குண்டு போடாமல் முழுவதும் சொல்லி விடு”

“என்ன குண்டு போட்டேன்?”

“அம்மா….”

“முறைக்காதே. என்ன விவரம் வேண்டும்?”

“முதலில் அவன் பிஹெடி முடித்திருக்கிறான் என்றாய். இப்போது படிப்பு முடிய இன்னும் ஆறு மாதம் இருக்கிறது என்கின்றாய்”

“ஆமாம்.”

“அவர்கள் பொய் சொன்னார்களா?”

“இல்லே, இல்லே. சம்பந்தம் பேசும் போதே சொல்லி விட்டார்கள்”

“அப்போ, நீ தான் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறே”

“இதுக்கு பேரு பொய் இல்லேம்மா.”

“அப்புறம்?”

“ஒரு சின்ன விஷயம். இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடிஞ்சிர போவுது”

“அதுவரைக்கும் வேலை?”

“இப்போதைக்கு வேலையில் இல்லை”

“ஓ.!”

மெல்லமாக சொன்னாள் நிவியின் அம்மா. “இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடிந்து விடும். அவர் வேலைக்கு போகணும்னு அவசியம் இல்லை. அத்தனை சொத்து இருக்கு”

அவள் அமைதியாக அம்மாவையே பார்த்து கொண்டு இருக்கவும் அந்த மௌனத்தையே அவளின் சம்மதமாக கொண்டு மேலே பேச்சை தொடர்ந்தாள் அம்மா.

“அவர்கள் விவசாய குடும்பம். உழைப்பாளிகள். பணம் காசை அவ்வளவு அனாவசியமாக செலவு செய்பவர்கள் இல்லை. சொத்தை விற்பது என்பது அவர்களால் கற்பனையிலும் இயலாத காரியம்.

அதனால் கல்யாண செலவை நம்மை செய்ய சொல்லி கேட்டார்கள். ஆனால் நம்மால் அத்தனை பெரிய தொகையை இப்போதைக்கு செலவிடுவது என்பது முடியாது. 

அடுத்த மாதமே சாருவிற்கு திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம். அதனால் கல்யாண செலவு நம்மால் செய்ய முடியாது என்று சொல்லி விட்டோம்.

அவர்களே அதை செய்வதாக ஒப்பு கொண்டார்கள். அதற்கு பதிலாக இந்த ஆறுமாதம் மாப்பிள்ளையின் படிப்பு முடியும் வரை குடும்ப செலவை நீ பார்த்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடாயிற்று”

“ஆக, இந்த அழகு மாப்பிள்ளைக்கு ஆறு மாதத்திற்கு நான் தான் தண்ட சோறு போட வேண்டுமாக்கும்”

“அப்படி எல்லாம் பேசாதே நிவி”

“அப்புறம் வேறு என்ன நிபந்தனை  எல்லாம் போட்டிருக்காங்க?”

“அவங்களா ஒன்னும் நிபந்தனை எல்லாம் போடலை.”

“சரி சரி. கேள்வியை மாற்றி கேட்கிறேன். நீ இன்னும் என்னென்ன கண்டிசனுக்கு ஒப்பு கொண்டிருக்கிரே?”

“நிபந்தனை என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே.”

“ஓஹோ, அப்படின்னா இதுக்கு பேரு என்னவாம்?”

“அது  ஒரு சின்ன அட்ஜச்மென்ட்”

“ஊஹூம். அப்படியா. சரி விசயத்துக்கு வா. இன்னும் என்னென்ன இருக்கு.”

“அது…..!”

“அட சொல்லும்மா”

“ஊஹும், சொன்னா நீ திட்டுவே”

“நீ ரொம்ப பயந்தவள் தான். சும்மா நடிக்காமல் சொல்லு”

“வீட்டு வாடகை நீ தான் தரனும்”

“ம். சரி, அட்வான்ஸ்….அட்வான்ஸ் யாரு தருவா?”

“உனக்கே புரியுது. அப்புறம் என்னை ஏன் போட்டு குடையரே?”

“தெளிவா சொல்லும்மா. அட்வான்ஸ் நான் தான் தரணுமா?”

“ஆமாம்.”

“சோழிங்கநல்லூர் ல வீட்டு அட்வான்ஸ் வாடகை எல்லாம் எவ்வளவுன்னு உனக்கு தெரியுமா?”

“எத்தனை இருந்தாலும் குடுத்து தானே ஆகணும்?”

“குடுக்கணும். எனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை அமைந்திருந்தால் நான் ஏன் இவ்வளவு சலிசிக்க போறேன்?”

“இவரையும் உனக்கு சீக்கிரமே பிடித்து விடும்”

“ஜோசியமா?”

“கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?. பையன் நல்ல பையன். ஒரு கெட்ட பழக்க வழக்கம்  இல்லை. இந்த காலத்தில் இப்படி ஒரு பையனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்குமா?”

“ஓஹோ, உனக்கு இப்படி ஒரு பெருமையா?”

“ஆமாம். ஏன் பெருமை பட்டு கொள்ள கூடாதா? ஒவ்வொரு வீட்டிலும் எப்படி எப்படியோ அராத்தல் எல்லாம் இருக்கு.“

“உன்னிடம் பேசி என்னால் முன்னுக்கு வரமுடியாது தாயே. ஆளை விடு”

“என்னை நம்பு. நல்ல பையன். உன்னை ராணி மாதிரி வைத்து கொள்வான். சந்தோஷமா இரு” வாழ்த்தியவள் அதையே மன விருப்பமாக கொண்டு அதுவே நடக்கும் என்று மனதார நம்பவும் செய்தாள்.   

4 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-15”

  1. Hi… கதை நல்லாயிருக்கு ஆனா ஒரே கோர்வையா இல்லை எல்லாம் பிச்சு பிச்சு போட்ட மாதிரி இருக்கு……

    எனக்கு அப்படி தோனுது தப்பா எடுத்துக்காதீங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *