Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

18

“மருமகளே, ஆடி சீர் வைக்க உங்க வீட்ல இருந்து எல்லோரும் வராங்க.”

“ம். அம்மா சொன்னாங்க.”

“நீ வரமாட்டேன் என்றாயாமே?”

“ஆமாம். இப்போதைக்கு என்னால் வரமுடியாது.”

“இப்போ வராட்டி உனக்காக ஆடி சீர் காத்திருக்குமா?”

“எதற்கு காத்திருக்கணும்? நீங்களே முடிச்சிருங்க”

“நீ இல்லாமல் எப்படி முடிப்பது?”

“நான் வந்தாக வேண்டியது கட்டாயம்னா இன்னொரு நாள் வெச்சிக்கோங்க”

“நாளைக்கு தான் நாள் நல்லா இருக்கு.”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு ரிபோர்ட் போடற வேலை இருக்கு. உங்க பையன் கிட்ட விளக்கமா சொல்லி இருக்கேன். அவனிடமே கேட்டுக்கோங்க”

“என்ன…? கட்டின புருஷனை அவன் இவன்னு பேசுவியா?”

“பாருங்க. எனக்கு இப்போ இதுக்கு நேரம் இல்லே. “

“ஆங், வேற எதுக்கு தான் நேரம் இருக்காம்?”

“நான் இந்த ரிபோர்ட் போடற வேலையை முடிக்கலைன்னா எனக்கு வேலை போய் விடும்.”

“போனால் போகட்டும். வேலையை விட்டு விட்டு வா.”

“ஐயோ பாவமே, உங்க பிள்ளை சம்பாதித்து போடுவது கெட்டு போச்சு. நான் வேலையை விட.”

“என்னடி, என் பிள்ளை சம்பாதிக்கவில்லை என்று குத்தி காட்டுகிறாயா?”

“குத்தி காட்டவே இல்லை. உண்மையை தான் சொல்றேன்”

“தெரிஞ்சி தானே கட்டிகிட்டே.”

“எத்தனையோ ஏமாற்றம். அதில் இது ஒன்னு”

“வேறு என்ன ஏமாந்தே?”

“உங்களுக்கு பதில் சொல்லி கொண்டிருக்க என்னால் ஆகாது.”

“என்னவோ அஞ்சும் மூனும் அடுக்கா அவனுக்கு சமச்சி போட்டவ மாதிரி அலுத்துகிறே”

“அது வேற குறையா?”

“ஆமாம், என் புள்ள எப்படி பாதியா வத்தி போயிட்டான்”

“போவுது. நானும் நல்ல காரியம் தான் செய்திருக்கிறேன்”

“சொல்லுவேடி, சொல்லுவே. அவனை நீ புருஷனாகவே மதிக்கலையாமே”

“யாரு சொன்னா?”

“வேறு யாரு. எம்புள்ள தான் சொன்னான்.”

அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான்? என்ன அர்த்தத்தில் இவள் கேட்கிறாள்? புரியவில்லை. அமைதியாக இருந்தாள்..ஆனால் அவள் விடுவதாக இல்லை.

“உங்களுக்குள் எதுவுமே இல்லையாமே .?”

“இதையும் உங்க பையன் தான் சொன்னானா?”

“பெத்தவளிடமே அவன் இவன் என்று சொல்றே”. 

“நாலு சுவற்றுக்குள் புருஷன் பொண்டாட்டிக்குள் நடந்ததை பெத்த தாயிடம் போய் சொல்பவனை பின்னே எப்படி கூப்பிடுவதாம்?”

அழுத்தம் திருத்தமாக நிதானமாக கேட்பவளுக்கு மறு உத்தரவு கொடுக்க அருளின் தாயால் முடியாமல் போனது ஜஸ்ட் ஒரு நிமிடம் தான். தன்னையும் தன் மகனையும் இவள் நொடி பொழுதில் மட்டம் தட்டி விட்டாளே. ஆங்காரம் மேலிட கூப்பாடு போட ஆரம்பித்தவளை இடையில் வெட்டினாள் நிவி. போனை டக்கென்று வைத்து.

எரிச்சல சற்றும் குறையாமல் ரிபோர்ட்டை போட்டு முடித்தாள். தலை நங் நங் என்று வலித்தது. எழுந்து போய் காப்பி போட்டு குடிக்க கூட முடியாமல் அலுப்பாக இருந்தது. கணக்கை முடிக்கலாம் என்றால் அவளுடைய மன உளைச்சலில் கணக்கு அவளுக்கு பிடிபடாமல் போக்கு காட்டியது.  

பழைய மாத கணக்குகளை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி கழுத்தெல்லாம் வலி  எடுத்தது.

மனதின் அடியில் அருளின் மேல் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. எவ்வளவு ஒரு நாகரிகம் கெட்ட ஜன்மம். எதை தாயிடம் சொல்வது என்ற விவஸ்தை கெட்டவன்.

ஒருவழியாக ரிபோர்ட் எல்லோருக்கும் அனுப்பி விட்டு படுக்கும் போது அதிகாலை ஆகி 

இருந்தது. எழுந்து உடல் கழுவி படுக்கையை சரி செய்து படுக்க கூட இயலாமல் அப்படியே பப்பர பரவென்று படுத்தாள்.

தூக்கத்தில் போன் அடிக்கும் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தவள் அழைத்தது அவளுடைய மாமியார் என்று டிஸ்பிளேயில்  பார்த்ததும் எங்கே இவள் மீண்டும் ஆரம்பித்து விடுவாளோ என்று போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு திரும்ப படுத்து உறங்கி விட்டாள்.

அவளுடைய தாயிற்கும் அருளுக்கும் அவன் தாய்க்கும் பயந்து போனை அவள் அன்றைய நாள் முழுவதும் ஆன் பண்ணவே இல்லை.

அது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது  என்பதை அறியாமலே திங்கள் கிழமை காலை எப்போதும் போல அலுவலகம் போனாள்.

மறுநாள் திங்கள் கிழமை காலை அவளுடைய அலுவலகம் இருக்கும் நான்காவது மாடிக்கு ஏற லிப்ட்டில் நுழையும் போது உள்ளே நின்று கொண்டிருந்த ராஜேஷ் இவளை கண்டதும் ஹாய் என்று சிநேகமாக முகமன் கூறினான்.

“என்ன நிவி, நேற்று நல்லா தூங்கினாயா?”

“எப்படி தெரியும்?”

“முகமே வீங்கி இருக்கே?”

உண்மை தான். நேற்று அதிகாலை படுத்தவள் மதியம் எழுந்து, இருந்ததை உண்டு விட்டு கழுத்து வலிக்கு ஒரு மாத்திரையை போட்டு கொண்டு  மீண்டும்  படுத்தவள் தான். இன்று அதிகாலை தான் எழுந்தாள்.

“உன் போன் நம்பரை மாற்றி விட்டாயா?”

“இல்லையே, ஏன்?”

“நேற்று  ரொம்ப நேரம் ட்ரை பண்ணினேன். சுவிட்ச் ஆப் என்று வந்தது.”

“அப்படியா. சார்ஜ் போயிருந்திருக்கும். அது சரி. எதுக்கு கூப்பிட்டே?”

“ராம் ரொம்ப நேரமா உனக்கு ட்ரை பண்ணினாராம். நீ எடுக்கவே இல்லை. அதனால் என்னிடம் கேட்டார்.”

“அடடா. எதற்கு கூப்பிட்டாரோ? தெரியவில்லையே.” என்றாள்  உண்மையான வருத்ததுடன்.

“திரும்ப திரும்ப கூப்பிட்டாராம்.”

“கோபப்பட்டாரா?”

“குழப்பமாக இருந்தது அவர் குரல். ஆனால் சிவா சார் தான் கோபப்பட்டார்”

“அவரும் போன் பண்ணினாரா?”

“உனக்கு பண்ணி பார்த்து விட்டு அவருக்கும் சுவிட்ச் ஆப் என்று வரவும் கோபமாக தான் எனக்கு பண்ணினார்”

“என்ன விஷயம் என்று கேட்டாயா?”

“உன்னிடம் பேசவென்று போன் பண்ணியவர்களிடம் நான் எப்படி என்ன விஷயம் என்று கேட்க முடியும்?”

“அதுவும் சரி தான். சிவா சார் வேறு என்ன சொன்னார்?”

“உன் வீடு தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று சொன்னேன்.”

“அப்படி என்ன எமர்ஜென்சியோ தெரியவில்லையே?”

“எனக்கு உன் வீடு தெரியாது. பழைய ஹாஸ்டல் தெரியும் என்றேன்.”

“உன்னை எப்படியாவது காண்டாக்ட் பண்ணனும் என்று கேட்டார்”

“என் பழைய ஹாஸ்டலில் என் பிரெண்ட் இருக்காளே.”

“எனக்கு தெரியும் அவளை.”

“பின் என்ன, அவளை போய் பார்த்திருந்தால் அவள் உன்னை என் வீட்டுக்கு கூட்டி வருவாளே”

“ஆனால் நான் நேற்று ஆவடியில் இருந்தேன். ஒரு கலெக்சன். ஓனர் வரும் வரை காத்திருந்தேன்.”

“என்னவோ தெரியவில்லையே.பதட்டமாக இருக்கிறது.”

அவள் அலுவலகத்தில் நுழையும் போதே ராம் மனோகரை பார்த்து விட்டாள். காலை வணக்கம் சொல்லும் போதே அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஒன்றும் பேசாமல் கான்பரேன்ஸ் ஹாலில் போய் உட்கார்ந்து விட்டாள். ரீஜனல் மேனேஜருடன் உள்ளே நுழைந்த சிவா சார் இவளை பார்த்து விட்டு சின்னதாக ஒரு புன்னகை கூட காட்டாமல் அவருடைய இருக்கையில் போய் அமர்ந்தார்.

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *