Skip to content
Home » ஆலகால விஷம்-15

ஆலகால விஷம்-15

அத்தியாயம்-15

     சென்னை வந்திறங்கிய மும்பை போலீஸ் கைரவ் மற்றும் சமித் நேராக சென்றது கேசவன் ஸ்டூடியோவிற்கு தான். 

   சாஹிர் வநீஷா புகைப்படத்தை காட்டி விசாரிக்க, “இங்க தான் சார் கொஞ்ச மாசத்துக்கு முன்ன வந்தாங்க. கிட்டதட்ட பத்து மாசத்துக்கு மேல இருக்கும்.

  நம்ம நடராஜன் வீட்டு நிச்சயம் நடந்தப்ப வந்தாங்க சார். அதே மாதிரி வீடியோ கவரேஜ், எடுக்க ஆல்பம் எல்லாம் லேப்டாப்ல பார்த்தாங்க. ஏன் மோதிரம் கூட போட்டோ எடுத்து பார்த்தாங்க. அதுக்கு பிறகு ஆளே வரலை சார். இதெல்லாம் இரண்டு நாள் முன்ன போலீஸ் வந்து கேட்டப்பவே சொன்னேன்.” என்று கை விரித்தான்.‌

  அவங்க வந்த புட்டேஜ்ஜை கைரவ் கேட்க, “இப்படி தான் சார் ஒரு நாள் மகிழன் சாரும் ‘வநீஷாவா? அவயிருக்கற புட்டேஜ் பார்க்கணும்’னு கேட்டார் அவருக்கும் போட்டு காட்டினேன்.” என்று பேசிக்கொண்டே பழைய புட்டேஜை எடுத்து காட்டினான். மகிழன் நிச்சயம் நடந்த தேதியிலிருந்து சற்று கூடுதலான மாதத்தில் தேடி பிடித்து மும்பை போலீஸுக்கு காட்டினான் கேசவன்.

சென்னையில் மொழிப்பெயர்பிற்கு கைரவ் மற்றும் சமித்திற்கு உதவியாக ரவி என்ற காவலதிகாரி கூட வந்தார்.

   நடராஜன் என்று கூறியதால் மகிழன் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே நடராஜனும் ஷீலாவும் சாஹிர் வநீஷாவை கேட்க, வநீஷா பெயரை எடுத்ததும் கத்தி தீர்த்து விட்டார்கள்.‌

  “ஓடுகாலி… என்‌ பையனை வளைச்சி போட்டுட்டா. என் அண்ணன் மக வருணியோடு நடக்கவிருந்த கல்யாணத்துல மண் அள்ளி போட்டுட்டா’ என்று சபித்தார்.

  மும்பை அதிகாரி கைரவ்வோ, சாஹிரை பற்றி கேட்க, ‘எங்களுக்கு சாஹிர் என்ற பெயர்ல யாரையும் தெரியாது. அந்த நாய் எவனை உதவிக்கு கூட்டிட்டு வந்துச்சோ” என்று அதற்கும் ஷீலா கத்தினார்.

  நடராஜனோ, மனைவியை நிதானப்படுத்தி, போலீஸிடம், “சார் இங்க என்‌ மகனும் வநீஷாவும் காதலிச்சி ஓடிட்டாங்க.” என்று நடந்தவையாக அவர்களுக்கு தெரிந்த விவரத்தை உரைத்தனர்.‌

அதாவது வநீஷா தனக்கு தெரிந்த சாஹிரின் உதவியால் மகிழனை காதலித்து கைப்பிடித்து இப்பொழுது தலைமறைவாக வாழ்வதாக கூறினார்கள்.

  இதில் போலீஸ் வநீஷாவை ‘செக்ஸ் ஓர்க்கர்’ என்று கூறியதும், ஷீலாவோ “பகவானே… எங்க வீட்டு பையனுக்கு புத்தி இப்படியா போகணும். அச்சோ… நாளைப் பின்ன எங்க வீட்டு வாரிசு அவ வயித்துல உதிச்சிட்டா.” என்று தலையில் தலையில் அடித்து அழுதார். நடராஜன் வார்த்தையால் கத்தவில்லை ஷீலாவை போல…

  ஆனால் மனதிற்கு கேட்கும் விஷயங்கள் எல்லாம் உவப்பானதாக இல்லாமல் போகவும் துவண்டார்.

   போலீஸ் வநீஷாவின் வீட்டிற்கு செல்ல விலாசம் கேட்டது. மகேந்திரன் விலாசம் தந்துவிட்டு, “வாங்க நான் கூட்டுட்டு போறேன்” என்று நடராஜனும் வந்தார்.‌

  ஷீலாவும் இடுப்பில் முந்தானையை சொருகி, “கொஞ்சம் இருங்க நானும் வர்றேன். ரேணுகா அண்ணி பொண்ணை பத்தி கேட்டா அழுவா” என்று மூக்குறிந்து வந்தார்.

   நடராஜன் பைக்கில் ஷீலா அமர அவர்களை பின்‌ தொடர்ந்தனர் காவல் அதிகாரிகள்.

    வருணி இல்லாமல் வீடே களையிழந்து காணப்பட்டது வீடு. செடிகளுக்கு தண்ணீர் கூட விடாமல் எல்லாம் காய்ந்து வாடி வதங்கியிருந்தது.

   வாசல் கூட சில நாள் கூட்டி பெருக்காமல் இருந்தது.

  வாசலில் வண்டி சத்தம் அதை தாண்டி ஷீலாவின் குரல் என்றதும் மகேந்திரன் எட்டி பார்த்தார்.

   மச்சான் நடராஜன் தங்கை வரவும் ரேணுகாவை எழுப்பினார்.

  ரேணுகா அழுதழுது முகம் வீங்கி தலைவிரி கோலமாய் கிடந்தார்‌. சமீபத்தில் இந்த வீட்டு நிலைமை இது தான். வருணி இருந்தால் சற்று நிம்மதியிருந்திருக்கும். ஆனால் அவள் இல்லாதது வெறுமையை தந்தது.

   காவலதிகாரி உடையில் ரவியும் கைரவ் சமித் சாதாரண உடையில் வரவும் மகேந்திரன் மச்சானை பார்க்க, வநீஷாவை தேடி வந்ததை கூறினார்கள்.
  
  மகேந்திரனுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ, “அவளை பத்தி தெரிந்து என்ன பண்ண போறிங்க. அவயெல்லாம்  முன்னவே தொலைந்து போயிட்டா. இப்ப எங்க குடும்பத்துக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை.” என்று விரட்ட பார்த்தார்.

  அதன் பின் போலீஸ் தங்கள் கடமையாற்ற சில கேள்விகளையும், வநீஷா சாஹிரை பற்றி கூறி விசாரித்தனர்.

   மகேந்திரன் “எங்களுக்கு யாரை பத்தியும் தெரியாது சார். கிளம்புங்க.” என்று எரிந்து விழுந்தார்.

    போலீஸ் அதிகாரிக்கே என்னயிது என்ற குழப்பம். சாஹிர் வநீஷா, தற்போது மகிழன் மூவரை தேடிடும் வேலையாக நீள்கின்றதே?’ என்ற சலிப்பு.
 
  கிரணின் கொலையில் சாஹிருக்கு மட்டும் தான் வெறி ஆனால் இங்கே கதையே வேறாக உள்ளதே.

  அந்த கார் டிரைவர் கமல், சாஹிர் வநீஷாவை விரும்புவதாக அல்லவா வாக்குமூலம் தந்தான். இங்கே வநீஷா மகிழனை காதலித்து ஓடியதாக கூறுகின்றார்கள். யார் சொல்வது சரி? என்ன நடந்திருக்கும் என்று தவித்தனர்.

    இதில் வருணி ஊட்டியில் படிப்பதை கூறியதும், அவளிடமும் விசாரிக்க எண்ணினார்கள்.

  முதலில் மகேந்திரனிடம் இன்னமும் விசாரணையை நீட்டித்து பிறகு ஊட்டி செல்ல முடிவெடுத்தனர்.‌

   ஏனெனில் மகளை தொலைத்தப்பின்‌ பெரிதாக ஒரு புகாரை தவிர மகேந்திரன் வேறு எந்த நடவெடிக்கையும் கூடுதலாக எடுக்காததும், தாய் தந்தையை தாண்டி மகிழனை மட்டும் பார்த்து பழகிய வநீஷா, இந்த இரண்டிற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா?

  இதில் ரேணுகா இன்னமும் வாய் திறந்து பேசாமல் மௌனம் காப்பதும் அழுவதும் ரகசியம் மிச்சம் உள்ளதாகவே பறைசாற்றியது.

   அதனால் கூடுதலாக விசாரிக்க முடிவெடுத்து தங்கிய ஹோட்டலுக்கே சென்றனர்.. எல்லா உதவியும் சென்னை உதவி போலீஸ் அதிகாரி ரவியே எற்பாடு செய்தார்.

    இங்கே கலவரம் இப்படியிருக்க வருணியின் நிலவரமோ சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.

      அன்றாடம் ரஞ்சித் ஏதாவது பேசிக்கொண்டு அவளோடு நடக்க இரு தினம் முன் கோபத்தில் அறைந்தாள்.

   சாஹிர் கன்னத்தில் கை வைத்து, “உன்னை விரும்பறேன்னு உருகி உருகி வர்றேன். உனக்கு என்‌மேல ஒன் பிரசண்ட் கூட லவ் வரலையா வருணி ” என்று கேட்டு இம்சை தொடர்ந்தான்.‌

  காதல் தோல்வியை தாண்டி ஊட்டியில் மரணத்தை நேசித்தவள். பின் தற்கொலையை கூட தள்ளி வைத்து நிம்மதியாக படிக்க எண்ணியவளுக்கு ரஞ்சித் (சாஹிரின்) தொடர்ந்து வந்து காதலிக்க கேட்பது பிடிக்கவில்லை.
 
    அவனை அடித்தப் பின்னே குற்றவுணர்வு வருணியை வாட்டியது.

   இதில் தந்தை நண்பர் என்று ஜனர்த்தனன்‌ வீட்டுக்கு அவர் மகன் ஷங்கரே வந்து அழைத்து சென்றான். அன்றைய நாள் எல்லாம் அவன் உரசி நிற்க வருவதும், மணக்கும் ஆசையோடு ஷங்கர் நடப்பதும், ஷங்கரின் தாய் மாலாவோ “உனக்கு என்ன சமையல் பிடிக்கும்மா. என் பையனுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு பேசியது எல்லாம் கடுப்பின் உச்சம்.‌

  அங்கிருந்து கிளம்பி திரும்ப ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ரஞ்சித் நின்றிருந்தான்.

  தன் ஆதங்கத்தை எல்லாம் கோபத்தின் வெளிப்பாடாக அவள் கொட்டி தீர்த்து கத்தினாள்.

  ரஞ்சித்தோ, “நீ என்னை காதலிச்சா, அடுத்த நொடி நாம தனியா எங்கயாவது போய் வாழ்வோம் வருணி. எந்த பிரச்சனையும் வேண்டாம்‌” என்று விளக்கினான்.‌

   “என்னை பார்த்தா உனக்கு விபச்சாரியா இருக்கா? ஒருத்தரை விரும்பிட்டு இன்னொருத்தரை மணந்துக்க? என் மனசுல மகிழன் அத்தான் மட்டும் தான். அதை தாண்டி வேற எந்த ஆம்பளை மேலயும் எனக்கு ஈர்ப்பு வராது… வராது…  வராது…” என்றாள் வருணி. அவனை அடித்து விட்டு அறைக்கு வந்து மெத்தையில் விழுந்து அழுதாள்.

   அந்த கோபத்திலும் அழுத்தமாய் பேசியவளிடம் ரஞ்சித் சாஹிர் பதில் வாதம் செய்யாமல் கோபமாய் நகர்ந்தான்.

   தான் தங்கிருந்த அறைக்கு வந்தவன் படுத்திருந்த மகிழனை உலுக்கினான்.

“ஏன்டா நாயே. அவ மனசுல இந்தளவு ஆழமா இருக்க, உன்னை கொல்லணும்னு வந்தேன். கோமால இருப்பவனை கொல்லறதுல என்ன கிக்கு.” என்று ஓயர்களை பிய்த்து எறிந்தான் சாஹிர்.

     அன்று முழுவதும் வெறிப்பிடித்தவனாய் நடந்தான்.

    சாஹிருக்கு ஏற்கனவே பத்து நாளாக சற்று உடல்நலம் துவண்டது. தற்போதைய நிலை அவன் நலத்தில் பாதகமாய் அமைந்தது.

   உடல் வலியும் மனவலியும் ஆட்கொண்டு அவனை இரண்டு துண்டாக கூர்ப்போட்டது.

   அவனுமே மாத்திரை மருந்தை எடுத்து ஓய்வில் படுத்துறங்கினான்.

   அளவுக்கதிகமான வலி, எழுந்து நடமாட முடியாத வகையில் வாட்டி எடுத்தது.

    ஆனால் அடுத்த நாள் வருணிகாவை பின் தொடர்வதை கூட தவிர்த்தான். வருணிகாவோ அதிசயமாக ரஞ்சித்தை தேடினாள்.

  இங்கு வந்ததிலிருந்து எப்பொழுதும் தன் பின்னால் வந்தவன்.‌ அவன் கன்னத்தில் அறைந்து கத்தி விட்டபின், இவளை பின் தொடர்ந்து  வரவில்லை என்றதும் மகிழ்ச்சிக்கு பதிலாக சோகம் உருவானது.

   இந்நேரம் தொல்லை விட்டது என்று நிம்மதி வரவேண்டியது. ஆனால் ரஞ்சித் அமைதியாக செல்லவும் பெண் உள்ளம் உருகியது.

சாதாரணமே பெண் உள்ளம் பூஞ்சை கொண்டது. ஒன்று என்றால் துடித்திடும் ரகம்.

  அதுவும் வருணிகா மென்மை குணம் கொண்டவள்.‌ ரஞ்சித் வந்தால் மன்னிப்பு கேட்டிட முடிவெடுத்தாள்.

  ஆனால் அவளை தேடி மூன்று ஆண்கள் வந்தனர்.

  ஆம் அதே மூன்று போலீஸ். இரண்டு மும்பை போலீஸ், சென்னை போலீஸோடு கேஸ் விஷயமாக  வந்தனர்.

  பொதுவான அறிமுகம் தாண்டி, வருணிகாவை சந்திக்க டீ குடித்து அவள் வருகைக்கு காத்திருந்தனர்.

    வருணிகாவை கல்லூரியிலோ அல்லது தங்கியிருக்கும் அறைக்கும் சென்று விசாரிக்காமல் நடப்பாதையில் காத்திருந்தனர்.‌

  வருணி ஆர அமர நடந்து வந்தாள். அவளுக்கு பின்னால் காரில் வந்த ரஞ்சித் வருணியை தேடி சிலர் மொய்க்கவும், இறங்க பார்த்தான்.

    ஆனால் கையில் போலீஸ் அடையாள அட்டை எடுத்துக் காட்டி என்னவோ கேட்க, வருணிகா மறுப்பாய் தலையசைத்து, கேவலோடு, பேசுவது காட்சியாய் வேடிக்கை பார்த்தான்.‌

அருகே செல்ல முடியாது தன்னையே நொந்தபடி வேடிக்கை பார்த்தான்.‌

  ஏதேனும் மகிழனை தேடி வந்து விட்டார்களா? என்று பதறினான்.‌ இல்லையேல் இந்த வருணி மகிழனை கண்டுபிடிக்க இக்கட்டை உருவாக்கியிருப்பாளா? மேலும் வந்திருக்கும் காவல் அதிகாரியின் சாயல் வடயிந்திய முக அமைப்பு இருக்க நகம் கடித்தபடி காரில் இருந்தான்.

   வருணியை நெருங்கி போய் பேச மனதில் தள்ளட்டாம் வந்தது. வநீஷா விஷயம் தெரிந்து கிரணை பற்றி அறிந்து இங்கு வந்து விட்டார்களா? ஆனால் கிரண் இறப்பு யாருக்கும் சந்தேகம் தந்திருக்காதே?! எங்கு சறுக்கியது. நல்லவேளை இவளிடம் ரஞ்சித் என்று அறிமுகமாகியிருக்கின்றோம் என்று நிம்மதியடைந்தான்.

   காவல் அதிகாரி போனில் வீடியோ காட்டி கேட்க வநீஷாவை முதன் முதலில் போனில் கண்டதால் கண்ணீரை வழியவிட்டு அவளை பார்த்தாள்.

  அவளோடு ஒரு ஆண்மகன். சாஹிர் என்று கூற, திடுக்கிட்டு போனாள்.

   என்னவோ உறுத்த துவங்கியது. அதிகாரியின் போனை வாங்கி பார்த்து, அவரிடமே திருப்பி தந்துவிட்டு, “சார்… எனக்கு எங்க அக்காவை பார்த்தாச்சு. நன்றி… மத்த யாரை பற்றியும் எனக்கு தெரியாது. எங்க அக்கா மகிழ் அத்தானுக்காக வந்திருக்கா. அவரோட வாழட்டும். மத்த எதுவும் எனக்கு தெரியாது” என்று கூறியபின் அவள் செல்வதற்கு வழியை விடவும் வருணிகா கிட்டதட்ட ஓட்டமெடுத்தால் எனலாம்‌.

-தொடரும்.
  

5 thoughts on “ஆலகால விஷம்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *