Skip to content
Home » எந்தன் உயிரமுதே-8

எந்தன் உயிரமுதே-8

அத்தியாயம்-8

Thank you for reading this post, don't forget to subscribe!

   வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிக்க வேண்டாமென்று ஈஸ்வரன் கமலியை தூரமிருந்து ரசித்தான்.

   கமலிக்கு அது எரிச்சலை தந்திருக்க வேண்டும். ஆனால் இங்கிருந்து சென்றால் விஷ்ணுவின் முகதரிசனம் தடைப்படுமே என்று பொறுத்து கொண்டாள்.

   அது ஈஸ்வரனுக்கு வசதியாக போனது. தன் நேசத்தை கமலி ஏற்பாளென்று துளிர் விட்டது.

    மேலே குலோப்ஜாமூன் விழுங்கிய விஷ்ணுவோ ஆனந்த் முன் வீற்றிருந்தான்.

   “நான் யாரையாவது விரும்பினேனடா? சொல்லு ஆனந்த் நான் யாரையாவது காதலிச்சேனா?” என்று கேட்க, ஆனந்த் தலைகுனிந்து, “நான்‌ உன் பிரெண்ட் என்னோட பழகிய நாள் நினைவிருக்காடா? அதை சொல்லு” என்று ஆனந்த் கேட்டான்.

  “என் பொறுமையை சோதிக்காதடா. ஒரு லெவல் தான். பிறகு அடிச்சி பல்லை உடைப்பேன். நான் காதலிச்சேனா அதை சொல்லுடான்னா, உன்னோட பழகியது தான் தெரியுதே. என் உயிரை காப்பாத்தி கொடுத்திட்டியே. நீ உயிர் நண்பன் தான். என் இதயத்தை நான் வாடகைக்கு விட்டிருக்கேனானு எனக்கு தெரியணும்” என்று குரல் உயர்த்தினான் விஷ்ணு.‌

  இளங்கோ அருகே வந்து, “அந்த தம்பியை எதுக்குடா மிரட்டற? காதலிச்சா காதலி போன் பண்ணிருக்க மாட்டாளா?” என்று சிடுசிடுத்தார்.

  தந்தையை ஒரு அனல் பார்வை வீசி “சொல்லு ஆனந்த்’ என்றான்.‌

   “டேய் நீ யாரையும் காதலிக்கலை.” என்று கறாராக கூற அடுத்த நொடி பளீரென்ற அறையை தாங்கி சோஃபாவில் சரிந்தான்.

   ஆனந்த அதிர்ச்சியாக விஷ்ணுவை பார்க்க, தன் முழங்கை சட்டையை மடித்து “நர்ஸ் எவளாவது முதலுதவி பண்ணணுமா? யோசிச்சு சொல்லு கூட்டிட்டு போறேன்” என்று கர்ஜித்து பைக் சாவியை எடுத்தான்.‌

   “இப்ப எதுக்கு ஆனந்தை அடிக்கிற? டேய் அவன் உயிரை காப்பாத்தியவன் டா.

  விஷ்ணு பைக் எதுக்கு எடுக்குற? கொஞ்ச நாள் கார் மட்டும் ஓட்டு” என்று தான் பேசவும் கிளம்பும் மகனை இளங்கோ வழிமறைக்க, “எமனுக்கே டஃப் கொடுத்து உயிர்‌ பிழைச்சி வந்திருக்கேன் அப்பா. இந்த விஷ்ணுவுக்கு ஒன்னும் ஆகாது.” என்று தந்தை வார்த்தையை தாண்டி வெளியேறினான்.
  
    விஷ்ணு சென்றதும் “அங்கிள் அவனுக்கு நினைவு திரும்பிடுச்சு.” என்று ஆனந்த் தாடை பிடித்து வாயை சரிப்படுத்தி கூறினான்.

“என்னை தம்பி சொல்லற” என்று இளங்கோ விழிக்க, “புரியலையா அங்கிள், இந்த ஒரடி எனக்கு விழுந்ததே தெரியலை, விஷ்ணுவுக்கு நினைவு திரும்பிடுச்சு” என்று கூறினான்.‌

   “அப்படின்னா விஷ்ணு காதலிச்சிருக்கானா? அவன் நேர அந்த பொண்ணை தேடி போயிருக்கணும் இல்லையா. அப்படி யாரையும் தேடி போகலையே. ஒரு வேளை இப்ப போறது அவளை பார்க்கவா?” என்று எழுந்தார்.

  “தெரியலை அங்கிள்‌. நான் அந்த பொண்ணிடம் பேசியதில்லை. அவபிரெண்ட் கார்த்திகா மட்டும் தான் என்னிடம் டீட்டெயில் கேட்டா. முன்னவே ஏதாவது அந்த பொண்ணை பத்தி பேசினா விஷ்ணு விடமாட்டான்.
  கார்த்திகாவிடம் விஷ்ணு உயிர் பிழைக்க மாட்டான்னு சொல்லியிருந்தேன். அது அப்ப விஷ்ணு கோமால இருந்தப்ப, அதுக்கு பிறகு அவளுக்கு யாரோடவோ திருமணம் முடிவாகுது இனி‌ விஷ்ணு பத்தி பேசாதேனு சொல்லிட்டா. நானும் தவிர்த்துட்டேன். அந்த பொண்ணு பெயரை கூட என் வாய்ல வராது அங்கிள்‌. இவன் மனசை எப்படியாவது மாத்துங்க” என்று கிளம்ப தயாரானான்.

  “ஆன்ட்டி எங்க அங்கிள்?” என்று ஆனந்த் தேட, “அவ கீழ் வீட்டுக்கு போயிருக்கா. அந்த பொண்ணு குலோப்ஜாமூன் கொடுத்திருந்தா. அந்த பௌவுலை திருப்பி கொடுக்க போனா” என்று பேசியபடி படிக்கட்டில் இறங்கினார்கள்.

கமலி வசுந்தராவிடம், “தப்பு ஆன்ட்டி அவருக்கு உடல்நிலை சரியில்லாதப்ப தனியா பைக்ல அனுப்ப கூடாது. தயவு செய்து இனி அனுப்பாதிங்க” என்று வாசலில் எட்டி எட்டி பார்த்தாள்.

  “இங்க வருவதற்குள்ள போயிருக்கான். எனக்குமே அவன் போனது மனசுக்கு சரியாபடலை‌” என்று கூற, கணவர் இளங்கோவை கண்டு, “அவன் எங்க போனாங்க? பைக்ல ஏன் அனுப்பினிங்க?” என்று வினாத்தொடுத்தார்.‌

   “ஆமா… உன் பையன் நான் சொல்றதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்க்கறான்.

   இங்க பாரு ஆனந்த் தம்பியை அடிச்சிட்டான்.” என்று மகனின் தோழனை முன்னே நகர்த்தினார்.

  ஆனந்தை பார்த்து கமலி அதிர, கமலியை கண்டு ஆனந்த் அதிர்ந்தான்.

  ‘நீ இங்க தான் இருக்கியா?’ என்று ஆனந்த் ஆச்சரியமாக மாறி இளங்கோவிடம் பேச எத்தனிக்கும் நேரம்.

கமலியின் அக்கா சுதா, ரங்கநாதன் ஐஸூ வந்திருந்தார்கள்.

   “கமலி” என்று வாறி அணைத்து கொள்ள, வசுந்தரா இருக்கவும், ஒரு நாகரிகத்தின் பொருட்டு வசுந்தராவிடம் தன் அக்கா மாமாவை அறிமுகப்படுத்தினாள்.

   “ஆன்ட்டி இவங்க என் அக்கா. அவர் என்‌ மாமா.” என்று கூற, வணக்கம் கூறி நலம் விசாரிக்க, கமலி பார்வை ஆனந்தை ஏறிட்டது.

   சுதாவோ “அட கல்யாண வீட்ல பார்த்தேனே‌. நல்லாயிருக்கிங்களா?

  ஊர்லயிருந்து ஈஸ்வரன் வந்திருப்பதா திவ்யபாரதி அத்தை சொன்னாங்க. அதான்.. அவரை பார்க்க வந்தது.

   கமலி கல்யாணமாகாம இங்க இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது. முன்ன தான் கல்யாணம் இரண்டு மாசம் போகட்டும்னு சொன்னார். இப்ப கல்யாணம் வைக்கலாமானு கேட்க வந்தோம்.” என்று கூற, கமலி சட்டென்று முறைக்க, ஆனந்தோ அப்ப கமலிக்கு கல்யாணமாகலையா? இந்த விஷ்ணு இங்க தான் இருக்கான்னா? ஓ மை காட். விஷ்ணுவுக்கு ஏன் இரண்டு மூன்று மாசம் வராத தலைவலி இப்ப வருதுன்னு புரியுது.

  கமலின்னு பெயரையே சுவாசிச்சு வாழ்ந்தவனாச்சே. கீழ் வீட்ல இருக்கா. அவ நினைப்பு திரும்ப வந்திருக்கும். அவனா எனக்கு போன் போட்டு வரச்சொல்லி காலேஜ் பிளாஷ்பேக் கேட்டு காதலிச்சிருக்கேனாடானு கேட்டப்பவே உஷாராகி இருக்கணும்‌. இதுல இவ கீழ் போர்ஷன் வேற விளங்கிடும்.

  அவனுக்கு எல்லாம் நினைவு வந்து கமலியை தெரிந்து வச்சிருக்கான்.” என்று பேச, பைக்கில் ஹாரன் சத்தம் செவியை கிழித்தது.

   அனைவரது பார்வை வாசலை ஏறிட, ஈஸ்வரன் கார் வீட்டிற்குள் வருவதற்கு தடையாக குறுக்கே நின்றிருந்தது.

  ஈஸ்வரன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, போனில் பேசிக்கொண்டு இருந்தான்.

   விஷ்ணுவின் பைக் ஹாரன் சப்தத்தில் ஈஸ்வரன் என்ன என்பதாக கேட்க, விஷ்ணுவோ மாடியை நோக்கி ஆள்காட்டி விரலை காட்டினான்.

‘ஒன்செகண்ட்’ என்று ஈஸ்வரன் காரை எடுத்து வழிவிட, விஷ்ணு உள்நுழைந்தான்.

   கேட்டிற்குள் நுழையவும் கமலி ஆனந்த் பார்வை விஷ்ணுவை தரிசிக்க, “கிளம்பறியா?” என்று கேட்டான் விஷ்ணு.‌

   “ஆ… ஆமா டா” என்று ஆனந்த் கூறவும், ”என்னோட பழைய நம்பரையே கஷ்டப்பட்டு திரும்ப வாங்கியிருக்கேன். அதுல கால் பண்ணுவேன். உன்கிட்ட நிறைய பேசணும்” என்று ஆனந்திடம் கூறுவது போல கமலியிடம் கூற, கமலிக்கு நெஞ்சில் தாளம் தப்பியது.

   “சரிங்க நீங்க வந்தவங்களை பாருங்க. நான் பையனிடம் பேசிட்டு பிறகு பார்க்கறேன்” என்று வசுந்தரா கூறி சுதாவை வீட்டுக்குள் போக கூறினார்.

  சுதாவோ போகும் போது கமலியை தள்ளி சென்றார்.

  ஆனந்த் வாசலையும் மாடியையும் பார்த்து நண்பனை பின் தொடர்ந்தான்.

    “விஷ்ணு விஷ்ணு விஷ்ணு” என்று பின் தொடர, விஷ்ணுவோ கோபமாய் அறைக்குள் சென்று முடங்க, “நீ போறதா சொன்னியே ஆனந்த்” என்று இளங்கோ கேட்க, “என்ன உங்க பையன் ஒரேடியா அனுப்பிடுவான் அங்கிள்.” என்றவன் விஷ்ணு அறைக்குள் வந்தான்.

  இளங்கோவிற்கு பழைய நம்பரை ஏன் வாங்கினான். அதிலிருந்து அழைப்பேன் பேசு என்று கட்டளையிடுகின்றான்.‌ ஆனந்த் அருகேயிருக்க நேரிலே பேசலாமே. விஷ்ணுவுக்கு என்னானது? என குழம்பினார்.

   விஷ்ணுவோ “டோரை லாக் பண்ணு” என்றான் கர்ஜினையாக.

   “ஏன்டா கதவை தாழ் போட்டு மொத்தி எடுக்கப்போறியா?” என்று சோகமாக அருகே வர, புது சிம்மை உடைத்து போனில் சொருகி, மடமடவென சில நேரத்தில் ‘My Love’ என்ற பெயரில், கமலியின் எண்ணையும் பதிவு செய்தான்.

    ஆனந்த் அடுத்த நிமிடமே, “மச்சான் ஆக்சிடென்ட்டாகி நீ பைக்ல இருந்து தூக்கியெறியப்படவும், உன்னை தூக்கிட்டு ஹாஸ்பிடல்ல தேடி ஓடி வந்தவன்டா நான்.

   என்கிட்ட கமலி நம்பர் இல்லை. இளங்கோ அப்பா நம்பர் மட்டும் இருக்கவும் அவருக்கு போன் பண்ணிட்டேன்‌.

  நீயா கண் விழிச்சு கமலியிடம் பேசிப்பன்னு நினைச்சேன்.‌ ஆனா நீ உயிர் பிழைக்கறதே அபூர்வமா இருந்துச்சு‌. இதுல கோமாவுல வேற போயிட்ட.

  கமலிக்கு விஷயம் சொல்ல முடியாம இருந்தப்ப கார்த்திகா தான் என் நம்பருக்கு போன் செய்தாடா. அவ நான் நெற்றியில் அடிப்பட்டு சேர்ந்தப்ப என்‌ பெயர் நம்பர் கொடுத்தேனே அதுலயிருந்து என் நம்பரை கஷ்டப்பட்டு எடுத்திருக்கா.

கார்த்திகாவா உன்னை விசாரிச்சா. நான் நிலவரத்தை சொன்னேன். கமலிக்கு பொண்ணு பார்க்க வந்துயிருக்காங்க‌, இந்த நேரத்துல இப்படி நடந்திருக்கு. நீங்க வேற விஷ்ணுவுக்கு இப்படி உயிருக்கு ஆபத்துன்னு சொல்றிங்க.

கமலியிடம் விவரத்தை சொல்ல முடியாது. அவங்க சண்டைப்போட்டு பிரேக்கப் ஆனதாகவே இருக்கட்டும்னு சொல்லிட்டா. பொண்ணு பார்த்துட்டு போனவர் ரொம்ப நல்லவர் கல்யாணம் பண்ணிக்க போறா. இனி எனக்கும் போன் போடாதனு என்னை கட் பண்ணி விட்டுட்டா‌.

   நீ உயிர் பிழைத்து கோமால போய் திரும்பி வந்து நான் யார்னு கேட்ட.

   உனக்கே தெரியும். அப்ப நான் என்னை பத்தி சொல்ல சொல்ல, சலிப்பா திரும்பின.

   அப்படியிருக்க காதலியை பத்தி சொல்ல வாய் வரலைடா. நீயா நினைவு திரும்பி கேட்டா சொல்லிப்போம்னு இருந்தேன்.
 
    இப்படி கமலியை சந்திச்சிருப்பன்னு தெரியாது. அவளுக்கு கல்யாணமாகிடுச்சாடா” என்று கேட்பவனை அடிக்க ஏதாவது இருக்கின்றதா என்று தேடினான்.

ஆனந்த் அதிர்ஷ்டம் பக்கத்தில் எந்த ஆயுதமும் இல்லை. 
    அதனால் தலையணையை தூக்கி எறிந்தான்.

  விஷ்ணு மறுபக்கம் அவனது பழைய எண்ணிலிருந்து கமலிக்கு அழைக்க, அவளது தொலைப்பேசி ‘Vicchu Calling’ என்று காட்டியது.

   அக்கா மாமா இருவரும் எதிரே அமர்ந்து ஈஸ்வரனை மணக்க சம்மதம் கேட்டனர்.

   “என்னை எதுக்கு படிக்க வச்சிங்க? இப்படி கல்யாணம் செய்து முடிக்கறது மட்டும் தான் கடமையா?

    எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் நந்தினிக்கு கேர்டேக்கரா கூட இருக்கேன். ஆனா…  கல்யாணம் வேண்டாம்.” என்று உடைந்து அழுதாள்.

    ரங்கநாதனோ “உன் தங்கச்சி என்ன நினைச்சிட்டு இருக்கா. பொண்ணு பார்க்க வந்தவங்களை இப்படி தான் அலையவிடறதா? கல்யாணம் பண்ண சந்திக்க வச்சா, குழந்தையை பார்த்துக்கற ஆயா வேலையை பார்க்கறேன்னு பேசறா.

  நான் என்னவோ நாலு மாசம் கழிச்சு கல்யாணம் நடக்கும். அதுக்கு ஏத்த மாதிரி தான் இந்த வீட்ல இவளை பார்த்துக்கறாங்கனு இருந்தேன். இவ என்ன இப்படி பேசறா? இதெல்லாம் சரிவராது ” என்று கோபம் கொப்பளிக்க பேசினார்.‌

ரங்கநாதனுக்கு இன்றுடன் சம்பந்தம் பேசி திருமணம் முடித்து ஒரு பொறுப்பை நிறைவேற்றும் அவசரம்.

   “அச்சோ சத்தம் போடாதிங்க. அந்த தம்பி ஈஸ்வரன் வந்துடப்போறார். நான் என் தங்கையிடம் பேசறேன்” என்று சமாதானம் செய்ய, ரங்கநாதன் ‘இது வேலைக்கு ஆகாது’ என்று வெளியேற, சுதா பின்னாடியே சென்றாள்.

   கமலி போன் அடிக்க, கைகள் நடுங்கியது. பழைய எண்ணை வாங்கிவிட்டு போன் போடுவேன் நிறைய பேசணும் என்று மறைமுகமாக பேசியதிலேயே விஷ்ணுவுக்கு நினைவு திரும்பியதை அறிந்து மகிழ்ந்தாள். அடுத்த நிமிடமே அவன் கோபமுகமும் அச்சுறுத்தியது.

   போன் விடாது அழைக்க ‘விச்சு’ என்ற அழைப்பை எடுத்தாள்.

   “விச்சு” என்று கூப்பிட, “செத்துட்டேன்னு நினைச்சியா?” என்று ஆக்ரோஷமாய் கேட்க, “விச்சு… உனக்கு ஆக்சிடென்ட் ஆனது எனக்கு தெரியாது விச்சு” என்று கதறுவதை புறம் தள்ளினான்.

  “உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும்டி. என்னை பார்த்ததும் ஏன்டி பேச வரலை” என்றான்.‌

   “விச்சு… நீ என்‌மேல கோபமா இருக்கேன்னு தப்பா நினைச்சேன். ரீசண்டா தான் உனக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரியும்.” என்று கூற, நிதானமான விஷ்ணுவோ “சரி நம்ம வீட்டுக்கு வா” என்றான்.‌

   “விச்சு ஆன்ட்டி அங்கிள் இருப்பாங்க” என்று மறுக்க, “உனக்கு நான் முக்கியமா இல்லையா?” என்று வீம்பு பிடித்தான்.

   “விச்சு‌” என்றிட, “உன் விச்சுக்கு உன்னை பார்க்கணும். மேல வா” என்றான்.‌

‌    சாத்தானின் குரலுக்கு ஆட்டுபடும் ஆன்மா போல, விஷ்ணுவின் குரலுக்கு கட்டுப்பட்டு கமலி கதவை திறந்து ஓடினாள். கிட்டதட்ட சாத்தானாக கோபத்தை அணிந்திருந்தான்.

   வேறொரு அறையில் சுதா ஈஸ்வரன் ரங்கநாதன் பேசிக்கொண்டிருக்க, கமலி மாடிக்கு போகவும், நந்தினி பாட்டி திவ்யபாரதியை சுரண்டி, “சித்தி மாடிக்கு போறாங்க” என்றாள்.

   மாடியில் விஷ்ணு வீட்டில் கதவை திறந்து உள்ளே செல்ல, இளங்கோ வசுந்தரா பார்க்கும் நேரம், விஷ்ணு கதவை திறந்து ஆனந்தை வெளியே தள்ளி, கமலியின் கையை பிடித்து உள்ளே இழுத்தான்.

‌ மகன் கீழ் வீட்டில் இருக்கும், ஈஸ்வரனை மணக்க போகும் பெண்ணை, அறைக்குள் இழுக்கின்றான்‌. அவளும் செல்கின்றாளே என்று ஆவென பார்க்க, அறைக்குள் இழுத்து சென்றதும் “விச்சு சாரிடா” என்று அழுதவளின் குரல் நடுக்கத்தில் இத்தனை நாள் அவள்பட்ட வேதனை புரிய, தன் ஒட்டுமொத்த கோபத்தை மென்று முழுங்கினான்.

விஷ்ணுவோ “ஐ ரியலி சாரி கமலி” என்று இறுக அணைத்து அவளை நெஞ்சோடு கட்டிக் கொண்டான்.

   அவளது முகம் முழுக்க மூச்சுவாங்க முத்தங்களை விதைத்தான் விஷ்ணு.

‌‌தொடரும்

பிரவீணா தங்கராஜ்

1 thought on “எந்தன் உயிரமுதே-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *