Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1

ஒரு ஊரில் ஒரு நிலவரசி

Thank you for reading this post, don't forget to subscribe!


நாம் எல்லோருமே சிறுவயதில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு நிலாவைப்
பார்த்தவாறு பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்திருப்போம். நமக்கு எத்தனை
வயதானால் தான் என்ன! நமக்குள் இருக்கும் சிறுமியோ சிறுவனோ எண்ணங்களால் இன்னும்
வளராமல் தான் இருப்பார்கள் இல்லையா! இன்றைக்கும் இரவில் வானத்தின் உச்சியில் அந்த
நிலைவைப் பார்க்கும் போதும் அந்த கதைகளினால் நமக்குள் விரிந்திருக்கும் கற்பனைகள்
சிறகடிக்கத் தொடங்கும் அல்லவா! நமக்குள் அத்தகைய ஒரு அனுபவம் இருக்கும் தானே.
அத்தகைய கற்பனையை விவரிக்கும் சிறு முயற்சி தான் இந்த கதை.
சிறுவர் கதைகள் எழுதுவது அத்தனை சுலபமானது அல்ல. நாமே அத்தகைய ஒரு
சிறுப்பிள்ளைத்தனமான கற்பனைக்குள் அமிழ்ந்தால் மட்டுமே அதேப் போல ஒரு கதையைக்
கொடுத்திட இயலும். ஆனால் இன்று வளர்ந்த பிள்ளைகளாகிய நமக்குள் இருக்கும் அந்த
சிறுமியையோ சிறுவனையோ வெளியே கொண்டு வந்து விடக்கூடிய ஒரு முயற்சியை
செய்திட எண்ணி இந்த கதையை எழுத தொடங்குகிறேன்.


நன்றி.
G. சியாமளா கோபு

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1


“டேய் ராஜு…………டேய். ராஜா……….எங்கேடா போயிட்டே?” எவ்வளவு நேரமா உன்னை
தேடறது? டேய் ராசு…..”
குடிசைக்குள் இருந்து வெளியே வந்த மாரியம்மா தன் பலம் கொண்ட மட்டும் கத்தினாள்.
“ராசு………..எங்கேடா போயிட்டே?”
குடிசையின் பக்கவாட்டிலிருந்து வந்தான் ராசு என்கின்ற ராஜேந்திரன். “அம்மா ஏன்மா
கத்தறே?” என்ற ராஜேந்திரன் இருபது வயதில் ஒல்லியாக உயரமாக முடி முகத்தில் புரள
வயதிற்கேற்ற மிடுக்கோடு திடகாத்திரமான தேகப் பொலிவோடு கண்களில் கூரான
பார்வைக்கும் கீழே சதா காலமும் கற்பனையில் மிதப்பதைப் போன்ற பாவனையில்
இருப்பவன்.

“எங்கே போயிருந்தே?”
“பின்னாடியிருக்கிற மல்லிக்கொடியிலே ஒரு சின்ன சிட்டுக்குருவி வந்து உக்காந்துச்சும்மா.
அதைப் பிடிக்கலாம்னு போனேன்”
“ஆளு தான் வளர்ந்திருக்கே” வார்த்தையை முடிக்கும் முன்,
“ஆமாம். ரொம்ப வளந்துட்டேன்” என்று எம்பிக் காண்பித்தான்.

“பார்த்து, ரொம்ப வளந்திடாம. வானத்தை முட்டப் போறே”
“நீ பாத்துக்கிட்டே இரு. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் நான் அந்த வானத்துக்கே ஏறிப் போய்
நிலாவைப் பிடிச்சிக்கிட்டு வந்து, இதா இந்த விளக்குப் பொறையில வைக்கிறேனா
இல்லையான்னு பாரு”
“தினமும் உனக்கு இதே பிழைப்பா போச்சு. எதையாவது பேசிக்கிட்டு ஏதும் பின்னாடியாவது
திரியறது. சோத்து வேலைக்காவது வீட்டுக்கு வரலாம் இல்லே”
“சரி. சரி. சாப்பாடு போடும்மா. பசிக்கிது”
“நான் சாப்பிடக் கூப்பிட்டாத் தான் உனக்கு பசியே தெரியும்”
“அம்மா, பேசிக்கிட்டே இருக்காதே. தட்டை வை”
“ஏண்டா இவ்வளவு நேரம் குருவி ஆடு மாடுன்னு ஏதும் பின்னாலே சுத்தும் போது உனக்கு பசி
தெரியலையா? வூட்டுக்குள்ள வந்தா தான் பசிக்கிதுன்னு வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பே”
சோறு போட்டு குழம்பை ஊற்றி தட்டை அவன் முன் வைத்தாள். தட்டில் இருந்த உணவை
பிசைந்து ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தான்.”அம்மா. நல்ல ருசிம்மா. இன்னும் ரெண்டு
மீன் போடும்மா”
அவன் உண்பதை அன்புடன் பார்த்தவாறே இன்னும் ரெண்டு மீன் துண்டுகளை அவன்
தட்டில் வைத்தாள். “நீ காலையிலே குளத்தில இருந்து பிடிச்சிக்கிட்டு வந்த மீனு தான்”
“அது தான் இத்தனை ருசியா இருக்கு”
“ஊரில இருக்கிறவங்க யாருக்குமே குளத்திலே ஒரு சின்ன மீனு கூட கிடைக்கலையாம்”
“யாரும்மா சொன்னா?”
“நம்ம சண்முகம் தான் சொன்னான். விடிய வெள்ளனே குளத்துக்குப் போயி தூண்டில் போட்டு
உக்காந்திருந்தேன். ஒரு மீன் குஞ்சு கூட கிடைக்கலை. ஆனால் உன் மவன் வந்த கொஞ்ச
நேரத்தில டக்குன்னு அவனுக்கு ஒரு மீன் கிடைச்சதுன்னான்”
“ஆமாம் நானும் சண்முகம் சித்தப்பாவை குளத்துல பாத்தேன். ஆனால் அவரும் மீன்
பிடிச்சிருப்பாருன்னு நெனச்சேன்”
“ஒரு மீன் கூட கிடைக்கலைன்னு அதுக்கு முன்னாடி உங்க தாத்தா சொல்லிட்டு போனாரு”
“யாருக்கும் கிடைக்கதும்மா”
“நீ பெரிய இவன். உனக்குத் தான் கெடைக்குமோ?”
“ஆமாம். நான் அந்த மீன் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அது இன்னைக்கு வரேன்னு
சொல்லிட்டுப் போச்சு”
“எது……! மீனு உன்னிட்ட சொல்லிட்டு போச்சா? என்னடா கதையான கதை விடறே”
“மெய்யாலுமே. நேத்திக்கு குளத்துலே குளிக்கப் போனப் போது ஒரு அழகான மீனு வந்து என்
காலைக் கடிச்சது. அதை விரட்டிக்கிட்டே நீஞ்சி போனேன். குளத்துக்கு அடியில அதை
பிடிச்சிட்டேன். அப்போது தான் இந்த மீனு வந்து என்னிட்ட சொல்லிச்சி. நீ இவளை விட்டுடு.
நான் நாளைக்கு உன்னிடம் வரேன்னு”
“எப்படிடா இப்படி எல்லாம் கதை விடுவே?”
“அய்யே. சொன்னா நம்ப மாட்டே. நேத்து நான் வெரட்டின மீனு அந்த குளத்துக்கு
இளவரசியாம். அதனால தான் அதை விட்டுட சொல்லிக் கெஞ்சியது இந்த மீனு”
“நீ இதுப்போல அப்பப்போ கதை விடுவது வாடிக்கையா போச்சு. ஆனாலும் வேடிக்கையாத்
தான் இருக்கு” விழுந்து விழுந்து சிரித்தாள்.
“என்னம்மா கதை விட்டாங்க?”
“ஏண்டா விடலை. போன வாரம் பக்கத்துக் கொல்லையில கட்டி வெச்சிருந்த அந்த பசுமாடு
உனக்கு பாலு கறந்து விட்டதுன்னு பாத்திரம் நெறைய பாலு கொண்டு வந்து கொடுத்தே”
“ஆங். பாலு கொண்டு வந்து கொடுத்தேன் இல்லே. எனக்கு யார் தந்துருப்பா? அந்த மாடு
தான்மா சொல்லிச்சி”
“சொல்லும். பின்னாடியே கொல்லைக்காரன் வந்தான் சண்டைக்கு. உன் மவன் என் வீட்டு
மாட்டைக் கறந்துட்டு வந்துட்டான்னு”
“அது என்னவோ தெரியாது எனக்கு. சொன்னா நீ நம்ப மாட்டே. என்னிட்ட அந்த மாடு தான்
பேசியது. பாலு கொடுத்தது”
“நான் நம்பத் தான் மாட்டேன். களவாணிப்பய நீ. என்னாலே என் புள்ளை
களவாணிப்பயன்னு வெளியே சொல்ல முடியுமா?”
“அந்த சண்முகம் அப்படியா சொன்னான்?”
“அதிர்ஷ்டக்காரப் பய உன் மவன் என்று சொல்லிட்டுப் போனான். நெசமாலுமே நீ ஆறுக்குப்
பொறகு ஏழாவதா பொறந்த அதிர்ஷ்டக்காரன் தான்”
“எனக்கு முன்னாலே பொறந்த ஆறு பேரும் என்ன ஆன்னாங்கம்மா?”
“எத்தனை தடவை கேப்பே? எல்லாரும் பொறந்து செத்தாங்க. செத்தும் பொறந்தாங்க”
“ஏனம்மா அப்படி?”
“என்னத்தை சொல்ல?”
“நான் பொறந்த கதையை சொல்லும்மா”
“எத்தனை தடவைடா சொல்றது?”
“சொன்னா என்னம்மா?”
“சரி போ சொல்றேன். இதுல ஒரு சந்தோஷம் உனக்கு” அவன் சாப்பிட்டு வைத்த தட்டை
எடுத்து உள்ளே கொண்டு கழுவி வைத்தவள் கையை புடவை தலைப்பில் துடைத்துக் கண்டு
வெளியே வந்தாள். அதே புடவையால் அவன் வாயை துடைத்து விட்டாள். அவனும் அவள்
மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
“நீ சொல்ற கதையே எனக்கு தலை சுத்துது. அத்தனை கதை விடறே நீ. இதுல என்கிட்டே
கதை கேட்டுப்புட்டு இன்னும் எத்தனை கதை விடுவியோ” சிரித்தாள்.
“நீ நம்பாட்டா போ. ஒருநாள் உனக்கே தெரியும்”
“தெரியற அன்னைக்குப் பார்த்துக்கலாம்”
“நீ கதையை சொல்லும்மா”
பழைய நினைவில் பெருமூச்சு விட்டாள். “அது ஒரு பெரிய கொடுமைடா ராசு. ஊரே
அல்லோலப்பட்டுச்சு. அப்படி ஒரு ராட்சசன் நம்ம ஊருக்கு வந்தான்” என்று தொடங்கினாள்.
“அவன் பேரு மகாசுரன்” என்று ராசுவும் உடன் தொடரவே
“அதான் உனக்கே தெரியுதுல்ல. நான் சொல்லலை போ” என்று எழுந்து போக முனைந்தாள்.
“அம்மாம்மா, இனி நான் குறுக்கே பேசலை. கதையை சொல்லு. ஆங். அந்த அரக்கன் பேரு
மகாசுரன்” என்று விட்ட இடத்தில் இருந்து கதையை எடுத்துக் கொடுத்தான்.
அவளுக்குமே அந்த ராட்சசன் நினைவு வந்து அவனால் இந்த ஊர் மக்கள் பட்ட கஷ்டம்
கண்முன் வந்தது போலும். “அதோ அங்கே தெரியுது பாரு மலைங்க. அதுல ஒன்னுத்தில தான்
அவன் இருந்தானாம்” என்று கதையை தொடர்ந்தாள்.
கதைக் கேட்கும் ஆர்வத்தில் படுத்திருந்த ராஜேந்திரன் எழுந்து உட்கார்ந்து அருகில் முறத்தில்
வைத்திருந்த வேர்கடலையை ஒவ்வொன்றாக உரித்து தின்ன தொடங்கினான்.

தொடரும்.

-ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *