தென்றல் பேச்சை கேட்டு ரங்கநாதன் திருமணம் குறித்து பேச ஆதீரன் வீட்டிற்கு வந்திருக்க என்றுமில்லாத அலட்சிய பாவம் தீரனிடம்…
“வாண்ணே… வா மதினி…” இவர்கள் வந்த காரணத்தை யூகித்து பூரணி மகிழ்வோடு வரவேற்றவர் “தென்றல் குட்டி… சீக்கிரம் நம்ம வீட்ல நீ விளக்கேத்தனும்” என்று தாடை பிடித்து வாழ்த்தினார்.
“வாங்க மாமா…” தீரன் சொன்னதிலேயே ஏதோ இறுக்கம் குரலில் தெரிய தென்றல் அவனை ஆராய்ச்சியாக பார்க்க திருமணம் பேச வேண்டிய இடத்தில் தென்றல் இருப்பது பொன்னிக்கு சற்று உறுத்தலாக தோன்ற
“அடியே இது உன் வீடு இந்த வீட்டுக்கு மருமகளாக ஆசை னு சொன்ன ல… போ.. போய் எங்க எல்லாருக்கும் டீ காப்பி போடு…” என்று விரட்ட அவரை முறைத்த தென்றல்
“அத்த… எங்க ஆத்தாளுக்கு மசாலா டீ போடனுமாம்… அந்த மொளகா பொடி டப்பா எங்க இருக்கு…” என்று ஓரக்கண்ணால் ஏற இறங்க பார்த்து கேலியாக கேட்ட படி உள்ளே சென்று விட்டாள் தென்றல்.
“உட்காருங்க மாமா… என்ன விஷயம்?” நாசுக்காக தீரன் தொடங்க
“மாப்ளை.. நான்…” என்று ரங்கநாதன் தொடங்கும் முன்
“ச்ச்… என்னடா ஒன்னும் தெரியாத மாதிரி… எல்லாம் உனக்கும் தென்றலுக்கும் கல்யாணம் பேச தான் அண்ணனும் மதினியும் வந்துருக்காங்க…” பூரணி வெளிப்படையாக கூற
“ஓ…” என்று சாதாரணமாக தீரன் சொல்ல சமையல் அறையில் இருந்தாலும் காதை வெளியே கொடுத்திருந்த தென்றலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னடா இப்படி சாதாரணமாக ஓ.. னு சொல்ற.. டேய் ஆதீரா நீயும் தென்றல் பிள்ளையும் பேசுறது பழகுறது எல்லாம் எனக்கு நல்லா தெரியும். அதான் அண்ணனை பேச வரச் சொல்லி சொல்லிட்டே இருந்தேன். அண்ணே இவன் கிட்ட என்ன கேட்டுகிட்டு… தேதியை முடிவு பண்ணி கட்டுடா தாலியை னு சொன்னா வந்து மனையில உட்கார்ந்து கட்டப் போறான்…” அன்னபூரணி சொல்ல
“அம்மா கொஞ்சம் பொறு… நான் பேசனும்…” என்று தாயிடம் சொல்லி விட்டு
“சொல்லுங்க மாமா… உங்க பொண்ணு… உங்க பொண்ணு” என்று அந்த வார்த்தையை இரண்டு முறை அழுத்தி கூற பொன்னி ரங்கநாதன் இருவரும் ஒருசேர அதிர “தென்றலை நான் கல்யாணம் பண்ணிக்க எனக்கு என்ன கொடுப்பீங்க?” என்று மார்பின் குறுக்கே கை கட்டி நின்று கேட்க ரங்கநாதன் விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க
“டேய்… என்ன பேசுற? எங்க அண்ணன் எதுக்குடா கொடுக்கனும்? இல்ல.. அண்ணனுக்கு என்ன நாலஞ்சு பிள்ளையா இருக்கு… இருக்குறது ஒத்த பொண்ணு தென்றல்… எல்லாம் அவளுக்கு தான் டா…” பூரணி பேச
“எப்படி எப்படி…? என் அப்பாகிட்ட இருந்து திருடுன சொத்தை அவரோட பொண்ணுக்கு வரதட்சணையா எனக்கே கொடுப்பாரா?” என்று நக்கலாக கேட்க தட்டில் டீயோடு வந்த தென்றல் அதிர்ந்து போய் நின்றாள்.
“ஆதீ… என்னடா பேசுற?” பூரணி கோபமாக கேட்க
“அம்மா… எனக்கு தெரியாது னு நினைக்காத… அப்பா சொத்தை எல்லாம் இவர் ஏமாத்தி அவர் பேருக்கு மாத்தி வச்சிருக்காரு… ஆனா எல்லாம் நம்ம பெயர் ல இருக்க மாதிரியும் நமக்கு குத்தகை பணம் தரது மாதிரியும் நம்மளை ஏமாத்திட்டு இருந்திருக்காரு…” கோபமாக தீரன் சொல்ல
“ஆதீ… எதுவும் புரியாம பேசாதே…” பூரணி அடக்க முற்பட
“விடு மா… மாப்ளை மனசுல இருக்க எல்லாம் வரட்டும்…” கூறிய ரங்கநாதன் மனதளவில் தளர்த்திருந்தார்.
“ம்கூம்…” என்று ஆதீரன் அலட்சியமாக தோளை குலுக்கி கொள்ள தென்றல் முழுவதும் அதிர்ந்து தட்டை ஓரமாக வைத்து விட்டு அருகில் வந்தவள்
“தீரா… என்ன இது? உன் பேச்சே வித்யாசமா இருக்கு… அப்பாகிட்ட ஏன் இப்படி பேசுற?” அதிர்ச்சி மாறாமல் கேட்க விரக்தியாக சிரித்த ஆதீரன்
“அப்பா… அப்பா… உன் அப்பா இல்ல… ஆனா எனக்கு இப்போ அப்பா இல்லை… தெரியும் ல… அதுக்கு காரணம் உன் அப்பா தென்றல்…” சத்தமாக தீரன் சொல்ல மூர்ச்சையாகி பார்த்தாள் தென்றல்.
“ஆமா தென்றல்… என் அப்பாக்கு குடி பழக்கம் இருந்தது… ஆனா.. ஆனா அதை பயன்படுத்தி என் அப்பா சொத்து எல்லாம் உங்கப்பா அவர் பெயருக்கு மாத்தி எழுதிகிட்டாரு… அதுமட்டுமில்ல… உனக்கு காது குத்தும் போது என் அப்பாகிட்ட சீர் செய்ய பணம் இல்ல. அதுக்காக அவரை அவமானப் படுத்தி திருட்டு பட்டம் கட்டி அவரு… அவரு தற்கொலை பண்ணிகிட்டு சாக காரணமே உன் அப்பா தான் தென்றல்…” கோபமாய் ஆரம்பித்தவன் முடிக்கும் போது கலங்கி இருந்தது தீரனின் குரல்.
“என் அப்பாவை கொன்ன உன் அப்பாவை பழி வாங்க தான் நான் இத்தனை வருஷம் காத்திட்டு இருக்கேன் தென்றல்…” பழிவெறியோடு சொன்ன தீரன் அங்கிருந்த அனைவருக்கும் மிகவும் புதியவன்… அவனை பெற்ற தாயே என்ன நடந்தது என்று விளக்கி சொல்லாமல் போனதன் விளைவை எண்ணி இவனா நான் பெற்று வளர்த்த மகன் என்று அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“தீரா.. வேண்டாம்” என்று தென்றலும்
“நடந்தது தெரியாம பேசாதே ஆதீரா என்று கண்டித்த தென்றலையும் அடக்கினார் ரங்கநாதன்.
“விடுங்க மா… எந்த குழந்தைக்கும் அதோட அப்பா தான் முதல் நாயகன்… ஆனா ஆதீக்கு அப்படி ஒரு உறவு இழக்க நான் காரணம் னு நினைச்சு பேசுது… விடுங்க” என்று சொன்னவர் ஆதீரன் பக்கம் திரும்பி
“சரிப்பா… நான் தப்பு பண்ணினேன் தான்… அப்படியே நீ வச்சுக்கோ… ஆனா, தென்றலும் நீயும் பழகினது உண்மை தானே…” என்று பொறுமையாக கேட்க
“அதை எப்போ நான் மறுத்தேன்.. தென்றல் எனக்கானவ… உங்களை மாதிரி ஏமாத்து புத்தி எனக்கு கிடையாது… நான் அவளை கை விட மாட்டேன்…” என்று தன் தந்தையை தரக்குறைவாக பேசிய ஆதீரனை வெற்று பார்வை பார்த்து வைத்தாள் தென்றல்.
“ஆனா ஒரு கண்டிஷன்…” என்று ஆதீரன் ஒரு நிமிடம் நிறுத்தி அனைவர் முகமும் பார்க்க “எதுவா இருந்தாலும் சொல்லுப்பா…” ரங்கநாதன் சொல்ல “ஏங்க எதுவும் வேண்டாம் வாங்க…” என்று இழுத்தார் பொன்னி..
அதை ஏளனமாக பார்த்த ஆதீரன் “தென்றலை நான் கல்யாணம் பண்ணிக்க தயார்… ஆனா… என் அப்பா அவமானப்பட்ட அதே சொந்தங்கள் நிறைஞ்ச சபையில நீங்க தான் தப்பு பண்ணீங்க.. என் அப்பாவை ஏமாத்துனீங்க னு ஒத்துக்கிட்டு என் கால்லையும் என் அம்மா கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்கனும்..” என்று தீரன் முடித்த நொடி
“என்னடா சொன்ன?” என்று அவன் காலரை பிடித்திருந்தாள் தென்றல்.
“தென்றல் மா… வேண்டாம் விடு…” ரங்கநாதனை தவிர யாரும் தடுக்கவில்லை…
“டேய் என் அப்பா உன் கால்ல விழனுமா? ம்ம்… சாமிடா என் அப்பா…. என் அப்பா உனக்கும் உன் குடும்பத்துக்கும் சாமி மாதிரி இருந்து காப்பாத்திருக்காரு…. அப்போ… அப்போ என் அப்பாவை இப்படி இக்கட்டுல மாட்டி விட்டு பழி வாங்க தான் என்னை காதலிச்சியா நீ? ச்சீ… இல்ல இல்லவே இல்லை காதலிக்கிற மாதிரி நடிச்சிருக்க… இல்லையா தீரா…” ஆக்ரோஷம் அழுகையோடு கேட்டாள் தென்றல்
“ச்சே…” என்று சட்டையை விட்ட தென்றல் “உன்னைப் போய்… உன் அழுக்கு புத்தியை உணராம உன்னைப் போய் காதலிச்சு.. நீயே வாழ்க்கை னு உன்னை கல்யாணம் பண்ணிக்க பேச சொல்லி என் அப்பாவை நான் கூட்டிட்டு வந்து நானே இப்படி அசிங்கப் படுத்திட்டேனே…” என்று வேதனையில் அழுது புலம்ப பொன்னியும் ரங்கநாதனும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து கொண்டனர் அவளை…
பூரணி அருகில் வர “நில்லு அத்தை.. உன் புள்ளை பேசுனதே போதும்… நீயும் இதே எண்ணத்தோட இருக்கிறதா சொல்லிடாதே…” என்று தென்றல் அவரை கை நீட்டி தடுக்க உடைந்து அழுதார் அன்னபூரணி.
சற்று நிதானித்து கண்ணீரை துடைத்த தென்றல் “என் அப்பா அவமானப்பட்டு தான் எனக்கு உன்கூட கல்யாணம் நடக்கனும் னா எனக்கு அப்படி ஒரு கல்யாணம் தேவையே இல்லை… அப்பா வாப்பா போகலாம்…” தெளிவான குரலில் தென்றல் கூற அதிர்ந்து பார்த்தான் ஆதீரன்.
“இத்தனை வருஷம் உன்னை உயிரா நினைச்சு உன் பின்னாடி சுத்தி சுத்தி காதலிச்ச தென்றல் இங்கேயே இந்த நிமிஷமே செத்துப் போய்ட்டா.. இனி என் முகத்துலயே முழிக்காதே..” என்று கூறிவிட்டு தென்றல் திரும்பி தன் வீட்டை பார்த்து நடை போட பொன்னி ரங்கநாதன் இருவரும் அவள் பின்னால் சென்று விட “அண்ணே… மதினி…” என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் வந்த அன்னபூரணி சோர்வாக மீண்டும் இல்லம் திரும்பி தான் பெற்ற மகனை வெறுப்பாக பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.
எந்த நிலையிலும் உன்னை பிரிய மாட்டேன் உன்னை தவறாக நினைக்க மாட்டேன் என்று வாக்கு தந்த தென்றல் இன்று தன்னை வெறுத்து பேசி விட்டு செல்ல மூர்ச்சையாகி நின்றிருந்தான் ஆதீரன்.
இரவெல்லாம் ஆதீரன் உறங்கவில்லை.. பூரணி அறையை விட்டு வெளியே வரவும் இல்லை… நள்ளிரவு வரை அதைப் பற்றி சுவாதீனம் இல்லாமல் போன ஆதீரன் தெளிந்து கதவை தட்ட உள்ளே எதையோ போட்டு உடைத்து தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று உணர்த்தினார் அன்னபூரணி.
அதிகாலை பொழுது விடியும் நேரம் அவசரமாக ஆதீரன் வீட்டிற்குள் நுழைந்தான் குமார். நடந்ததை ஃபோனில் கூறி அன்னபூரணி தான் இவனை வரவைத்திருக்கிறார் என்று அவன் வந்ததும் அன்னையின் அறையை தட்டி ‘நான் தான் வந்திருக்கேன்’ என்று கூறியதில் தெரிந்து கொண்டான் ஆதீரன்.
பூரணி வெளியே வர ஆதீரனை கோபமாக பார்த்த குமார் அவனிடம் பேச பிடிக்காமல் “அம்மா.. வாங்க நீங்களும் நானும் போய் ரங்கநாதன் அப்பாகிட்ட பேசலாம்…” என்று அழைக்க
“அம்மா…” என்று குரல் கேட்டது வெளியே…. ரங்கநாதன் நிலத்தில் மேற்பார்வை செய்யும் நபர் வந்திருக்க அவரை கேள்வியாக பார்த்த பூரணி
“வாப்பா… அண்ணே எதாவது தகவல் சொல்லி விட்டுச்சா?” ஆர்வமாக கேட்க தலையை குனிந்தான் அவன்.
“அம்மா… அதுவந்து ங்க ஐய்யா இந்த கவரை நேத்து மதியத்துக்கு மேல என் கைல கொடுத்து ‘இதை நாளைக்கு காலையில என் தங்கச்சி புள்ளை ஆதீரன் கிட்ட கொடுத்திடு… தப்பி தவறி கூட இப்போ கொடுக்காதே.. நாளைக்கு காலையில கொடு’ னு சொல்லி இருந்தாரு. நான் காலையில வயல்காட்டு சோலியா அய்யாவை பார்க்க வீட்டுக்கு போனேன் அங்கே யாருமே இல்லைங்க
சாவி மட்டும் எப்பவும் அவங்க வெளியே போனா வைக்குற இடத்துல இருந்தது. அதான் பையோட சாவியும் சேர்த்தே கொண்டு வந்துட்டேன்…” என்று வந்தவன் ஒரு கவரையும் சாவியையும் கொடுத்து விட்டு செல்ல அண்ணனும் அவர் குடும்பமும் எங்கே என்று புரியாமல் அன்னபூரணி கண்ணீர் வடிக்க அந்த பையில் இருந்ததை எடுத்து பார்த்த குமார் அந்த அனைத்து பேப்பர் அனைத்தையும் கோபமாக ஆதீரன் முகத்தில் விட்டெறிந்து இருந்தான்.
- தொடரும்….
- நன்றியுடன் DP ✍️
😳😳😳😳😲😲😲😲dheerana yara ipdi pesa vechathu…. Paavam antha periyamanushan….. Yevlo odanju poi eruparu….
Omg. So sad. Thendral u R right. But…..intresting