ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்.. தனக்கே அவர் மீது கோபமும் பழி வெறியும் இருக்க அம்மா எப்படி அவருக்காக தன்னை திட்டிக் கொண்டு இருக்கிறார்…’ என்ற குழப்பத்தில் தான் இரவெல்லாம் உறங்காமல் அன்னை இருந்த அறையை தட்டிக் கொண்டே இருக்க பூரணி இவனோடு பேச விருப்பம் இல்லை என்பதை அறைக்குள் இருந்ததை கீழே போட்டு தன் கோபத்தை காட்ட அமைதி காத்தான் ஆதீரன்.
காலை குமார் வந்த பிறகு ரங்கநாதன் வீட்டிற்கு பூரணியும் குமாரும் கிளம்ப ரங்கநாதன் தோட்டத்தில் வேலை செய்யும் ஆள் வந்து ஒரு பையை தந்து விட்டு ரங்கநாதன் ஐய்யா வீட்ல யாரும் இல்ல என்று கூறிவிட்டு கிளம்ப அண்ணன் குடும்பத்தை நினைத்து கதறி அழ வந்தவன் கொடுத்து சென்ற பையை திறந்து பார்த்த குமார் கோபத்தோடு அதில் இருந்த காகிதங்களை ஆதீரன் முகத்தில் வீசி அடிக்க
தென்றல் எங்கே என்று கலக்கத்தில் இருந்த தீரன் முகத்தில் அடித்த காகிதங்களை எடுத்து பார்த்து அதிர்ந்தான்…
ரங்கநாதன் தன் தந்தையை ஏமாற்றி விட்டதாக கூறிய அனைத்து சொத்துக்களும் தீரன் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுவரை ரங்கநாதன் கூறியது போல அந்த நிலங்களில் குத்தகை எடுத்து விவசாயம் செய்தது போல தான் பத்திரங்கள் கூறியது… கூடுதலாக ஒரு கடிதம்…
“நான் யாரையும் ஏமாற்றவில்லை… என் தங்கை கணவன் ஏமாந்ததை மீட்டு என் தங்கை மகனிடம் ஒப்படைத்து விட்டேன்… “
என்று இப்போது எழுதப்பட்டது போல இருந்தது அந்த காகிதம்… நேற்று இந்த பத்திரங்களை கொடுத்து அனுப்பும் போது எழுதி வைத்திருப்பார் போல…
அந்த கடிதத்தை கையில் வைத்து நிலை குத்திய பார்வையோடு தீரன் அமர்ந்திருக்க அன்னபூரணியை தேற்றிய குமார்
“அம்மா… என்னமா நடந்தது… என்ன ஏது னு நீங்க சொன்னா தானே தெரியும்…” என்று குமார் கேட்க
கண்ணை அழுந்த துடைத்துக் கொண்ட பூரணி மகனை வெறுமையாக பார்த்து விட்டு “இந்த ஊர்ல எங்க அப்பா நல்ல உழைப்பாளி நிறைய நிலம் சொத்து இருந்தாலும் கடுமையா உழைச்சாரு… அதே மாதிரி தான் எங்க அண்ணன் படிச்சாலும் அப்பா கூட சேர்ந்து விவசாயம் பண்ணாரு… நிலம் சொத்து எல்லாம் இரண்டு மடங்கா அதிகரிச்சுது.. இவனோட அப்பா இந்த ஊர்ல பெருசா பொறுப்பு இல்லாட்டியும் நல்ல குடும்ப சுழல் இருக்கு நல்வர் னு நம்பி தான் என் அப்பா என்னை இவருக்கு கட்டி வச்சிட்டு கண்ணை மூடிட்டாரு…
எங்க அப்பா என் கல்யாணத்தை தடபுடலா பண்ணினாலும் என் அண்ணன் எனக்கும் சொத்துல சம உரிமை இருக்கு னு அவர் சம்பாதிச்ச சொத்தையும் சேர்த்து தான் எனக்கு சீரா தந்து கல்யாணம் பண்ணி வைச்சாங்க… ஆனா ஆதீயோட அப்பா பொறுப்பில்லாதவர் மட்டும் இல்ல அவருக்கு குடிப்பழக்கம் சீட்டு விளையாடுறது னு இந்த மாதிரி கெட்ட பழக்கம் இருக்கிறது யாருக்கும் தெரியாது.
நானும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் என் வீட்டு மனுஷங்க மனசு கஷ்டபடும் னு அமைதியா இருந்தேன். அப்பறம் ஆதீ என் வயித்துல இருக்கும் போது நான் சொல்றதை கேட்டு கொஞ்சம் மனசு மாறி நல்லபடியா வந்தாரு.
ஆனா ஆதீக்கு அஞ்சாறு வயசு இருக்கும் போது திரும்பவும் அவரோட கூட்டாளிங்க திரும்ப ஏதேதோ பேசி அவரை குடிக்க வச்சாங்க.. திரும்ப சூதாட ஆரம்பிச்சாரு. அப்படி தான் எனக்கு சீரா தந்த நிலம் நகை எல்லாம் சூதுல விட்டாரு… இந்த வீட்டை கூட அடகு வச்சிட்டாரு எனக்கே தெரியாம…. அப்போ என் அண்ணன் தான் அதையெல்லாம் பணம் கொடுத்து மீட்டெடுத்து இந்த வீட்டை ஆதீரன் பெயருக்கு மாத்திட்டாரு.
அப்போ ஆதீ ரொம்ப சின்ன பையன் அதனால அவனுக்கு வீட்ல நடக்குற பிரச்சினை எதையும் நான் சொல்லலை… என் புருஷன் வித்த சொத்து எல்லாம் என் அண்ணன் வாங்கினது எனக்கு தெரியாது. ஆனா அவரோட கடன் எல்லாம் என் அண்ணன் தான் அடைச்சாரு. தென்றலுக்கு மொட்டை எடுத்து காதுகுத்து வைச்சாங்க… பொன்னி மதினிக்கும் அண்ணன் தம்பி யாரும் இல்லை… தாய்மாமா முறையை என் வீட்டுக்காரர் செய்யனும்னு என் அண்ணன் கேட்டுக்கிச்சு… ஆனா மொறை செய்ய பணம் செலுத்த இல்லாம நாங்க முழிச்சிட்டு இருந்தப்போ தேவையான அளவு பணத்தை என் புருஷன் கையில கொடுத்து இதை வைச்சு முறை செய்ங்க னு என் அண்ணே சொன்னது அவருக்கு ரொம்ப அவமானமா போச்சு னு குடிச்சிட்டு பொழம்பிட்டு இருந்தாரு…
அப்போ தான் ஆதீயை கூப்பிட்டு ஏதேதோ சொல்லிட்டு இருந்தாரு. போதை தெளிஞ்சா சரியாகிடும் னு நான் விட்டேன். ஆனா எங்க அண்ணன் கொடுத்த பணத்தை ரெண்டு மடங்கு லாபம் பார்க்குறேன் னு சூதாட்டத்துல மொத்தமா தொலைச்சிட்டு முறை செய்ய ஒரு ரூபாய் கூட பணமே இல்லாம வந்து நின்னாரு என் புருஷன்…
அப்போ கூட வீட்ல ஏற்கனவே வாங்கி வைச்சிருந்த நகையை நான் வாங்கிட்டு வந்த மாதிரி என் அண்ணே சபைல அவர் மானத்தை காப்பாத்தினாரு… ஆனா தனியா கூப்பிட்டு ‘இந்த சூது குடி பழக்கம் எல்லாம் விட்டுடு அதனால தானே உனக்கு இவ்வளவு நஷ்டம்’ னு சொல்லி தன்மையா அறிவுரை சொன்னாரு…
ஆனா அதை தள்ளி இருந்து ஒட்டுக் கேட்ட அவரோட பங்காளிங்க கூட்டாளிங்க தான் ‘சீர் செய்யவே உன் மச்சான் தான் பணம் கொடுத்திருக்காரு… ஆனா நீ அதையும் குடிச்சு அழிச்சிட்ட’ னு கேலியா பேசுனதை தாங்கிக்க முடியல அவரால… நடந்த அவமானத்துக்கு என் அண்ணன் தான் காரணம் னு ராத்திரி எல்லாம் புலம்பிட்டே இருந்தவரு காலையில உத்திரத்துல தொங்கிட்டு இருந்தாரு…” என்று கண்ணீரோடு கேவிய பூரணி.
“ஆனா போன மனுஷன் தான் மட்டும் சாகாம தனக்குள்ள இருந்த நஞ்சை என் புள்ளை மனசுல விதைச்சிட்டு செத்துருக்காரு னு நேத்து இவன் பேசுற வரைக்கும் எனக்கு தெரியாதே…” என்று தலையில் அடித்து கொண்டு அழுதார் பூரணி.
அவரை தடுத்த குமார் “அம்மா… எனக்கு ஓரளவுக்கு இதெல்லாம் தெரியும் ம்மா… தென்றல் ரூபிகிட்ட இது பத்தி சொல்லிருக்கா.. ஆனா யார்க்கிட்டேயும் சொல்லக் கூடாது னு சொன்னதால ரூபிணி இதுவரை என்கிட்ட இதை பத்தி தெளிவா சொன்னது இல்ல…
தென்றலுக்கே தெரிஞ்சிருக்கு… நீங்க ஆதீரனுக்கும் இதெல்லாம் சொல்லி வளர்த்திருந்தா ரங்கநாதன் அப்பா பத்தி அவன் தப்பா நினைக்காம இருந்திருப்பானே…” என்று குமார் கேட்க இன்னும் அதிகமாக அழுத பூரணி
“நான் சொல்லிருக்கனும் தான் குமாரு… ஆனா, ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க அப்பா தான் முதல் நாயகன்… அவரை பத்தி தவறான விஷயங்கள் குழந்தை மனசுல பதிஞ்சா அதோட வாழ்க்கைக்கு நல்லது இல்லை னு என் அண்ணன் சொன்னாரு. அதோட சின்ன வயசுல இருந்தே இவனுக்கு தன்மானம் அதிகம்… யார்க்கிட்டேயும் உதவி னு கேட்டு நிக்க மாட்டான் னு தான் அவர் விலைக்கு வாங்கின நிலத்தை இவங்க அப்பா நிலம் குத்தகை எடுத்திருக்கேன் னு எல்லார்கிட்டயும் அண்ணா சொல்லிட்டு இருந்தாரு.
தனக்கு ஆண் வாரிசு இவன்னு நினைச்சு தான் அவரோட சொத்து எல்லாம் இவன் பெயர்ல எழுதிருப்பாரு னு நானே நினைக்கலை குமாரு…. ஆனா, இவன் அவருக்கு உயிரோட கொல்லி வைச்சிட்டான்…” என்று வேதனையில் பொருமினார் அன்னபூரணி.
அவர் சொன்ன அனைத்தும் கேட்ட ஆதீரன் எத்தனை பெரிய தவறு செய்து விட்டேன் என்று உள்ளுக்குள் நொந்து போனான். ஆனால் அவனின் முகத்தை திரும்பி பார்க்க கூட பூரணிக்கு விருப்பம் இல்லை…
“அம்மா…” என்று ஆதீரன் அவர் அருகில் வந்து கையை தொட தட்டி விட்டார் பூரணி… “தொடாதே டா… என் அண்ணனையும் அவர் குடும்பத்தையும் அசிங்கப் படுத்திட்டு எந்த முகத்தோட என்கிட்ட பேச வர?” பூரணி கோபம் கொள்ள
“அம்மா… மாமாவையும் அத்தையையும் தென்றலையும் நான் தேடி கூட்டிட்டு வரேன் மா… நான் அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறேன் மா… பேசு மா என்கூட…” இறைஞ்சினான் பாவமாக
“என் அண்ணன் குடும்பத்தை இங்க திரும்ப கூட்டிட்டு வா… அவங்க மன்னிச்சா உன்கூட நான் பேசுறேன்..” பூரணி உறுதியாக சொல்ல “சரிமா” என்று தலையை ஆட்டினான் தீரன்….
ஆனால் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு போன தன் உயிரை எங்கே என்று தேடுவான் ஆதீரன்….
- தொடரும்…